துன்முகனுக்கு உண்டோ சுகம்? (Post No.4112)

Written by London Swaminathan
Date: 25 July 2017
Time uploaded in London-17-21
Post No. 4112
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

‘இடும்பைக்கு  இடும்பை படுப்பர்’ — துன்பத்துக்கு துன்பம் செய்வர் என்று வள்ளுவனும் நெப்போலியனும் சொன்னார்கள். அதாவது அறிவில் சிறந்தவர்கள் துன்பத்தையே திணறடித்துவிடுவார்கள்; அது பயந்துகொண்டு ஓடிவிடும்!

 

நீதி வெண்பா என்னும் நூலில் ஒரு அழகான செய்யுள்:-

 

தூய அறிவினர் முன் சூழ்துன்ப மில்லையாம்

காயும் விடங்கருடற் கில்லையாம் — ஆயுங்காற்

பன்முகஞ்சேர் தீமுன் பயில் சீத மில்லையாம்

துன்முகனுக்  குண்டோ சுகம்

 

பொருள்:-

ஆயுங்கால் = ஆராய்ந்து பார்க்குமிடத்து

காயும் விடம் கருடற்கு இல்லை = கொல்லுகின்ற விஷம் கருடனுக்கு ஒன்றும் செய்வதில்லை

(அது போல)

தூய அறிவினர் முன் சூழ் துன்பம் இல்லை = நல்ல அறிவினர்க்கு வரும் துன்பம் அவருக்கு ஒரு தீங்கும் செய்யாது

பன் முகம் சேர் தீ முன் = நாலா பக்கங்களிலும் பற்றி எரியும் தீக்கு முன்னால்

பயில் சீதம் இல்லை = குளிர் என்பது நெருங்காது.

(அது போல)

துன்முகனுக்கு உண்டோ சுகம் = தீயோருக்கு சுகம் என்பது உண்டோ (கட்டாயம் இல்லை)

 

திருக்குறளில் இடுக்கண் அழியாமை என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் அழகான பத்து குறள்களை அமைத்து இருக்கிறார்.

இடுக்கண் வருங்கால் நகுக (621)

இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் (622)

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு

இடும்பை படா அதவர் (623)

இப்படி அடுக்கிக் கொண்டே போவார்.

சுருக்கமாகச் சொன்னால் அறிவுடையோர் துன்பத்துக்கே துன்பம் செய்வர்!

 

பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் ஞானிகளை இன்பமும் துன்பமும் ஒன்றும் செய்யாது  என்பார். இதைப் பல இடங்களில் திரும்பத் திரும்ப உரைப்பார்.

 

 

ஆத்திச் சூடி பாடிய அவ்வையோ மனந்தடுமாறேல், “துன்பத்திற்கிடங்கொடேல் என்கிறார்.

 

கேட்டிலுறுதி கூட்டுமுடைமை — என்று கொன்றை வேந்தன் செப்பும்

 

கேட்டில் உறுதி = கைப்பொருளை இழந்த காலத்தில் மனம் தளராமல் இருப்பது

உடைமை கூட்டும் = இழந்த அப்பொருளை உண்டாக்கும் அல்லது ஈடு செய்யும். அதாவது அதை இழந்த உணர்வே இல்லாமற் செய்துவிடும்.

 

போனால் போகட்டும் போடா’— என்ற தத்துவ உணர்வு பிறந்து விடும்!

துன்பம் வெய்யோர்க்கு இன்பம் எளிது என்று முதுமொழிக் காஞ்சி சொல்லும்

துன்பம் வெய்யோர்க்கு = துன்பத்தை விரும்பி பொறுத்துக் கொள்ளுவோருக்கு

இன்பம் எளிது = இன்பம் எளிதாகும்

 

ஒரு காரியத்தைச் செய்வோருக்கு அப்படிச் செய்யும்போது வரும் துன்பங்களை விரும்பி ஏற்கும் பக்குவம் வந்துவிட்டால் அந்தக் காரியம் எளிதில் முடியும்; சந்தோஷமும் ஏற்படும் என்பது பொருளாம்.

TAGS:–துன்பம், இடும்பை, குறள், அவ்வை, இன்பம்

 

–SUBHAM–