“அன்னையின் உருவில் இறைவனைக் காண்போம்!” (9876)

WRITTEN BY B.KANNAN, DELHI

Post No. 9876

Date uploaded in London –20 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து திங்கள் தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 19-7-2021 அன்று ஒளிபரப்பான உரை!

பா.கண்ணன், புது தில்லி

“அன்னையின் உருவில் இறைவனைக் காண்போம்!”

சமீபத்தில் ஶ்ரீநாகராஜன் அவர்கள் ஒரு வலைப்பதிவில் “கடவுள் எங்கே?” என்ற தலைப்பில் ஒரு கட்டுரைப் பதிவிட்டிருந்தார். அதில் அவர், கடலில் உப்பு பரவியிருப்பது போல, கடவுள் இந்தப் பிரபஞ்சம்
முழுவதும் நிரம்பி இருக்கிறான். எப்படி விதைக்குள் மரமானது ஒளிந்திருக்கிறதோ, அதே போல் ஒவ்வொருவரிடமும் பரமன் மறைந்திருக்கிறான் எனக் குறிப்பிடிருந்தார். அதைப் படித்த போது சிலஆண்டுகளுக்கு முன்பு கன்னிமேரா பொதுநூலகத்தில் 

இ ருந்து படிக்க எடுத்து வந்த “YOUR SACRED SELF”என்ற நிர்வாகம்-மேலாண்மையைப் போதிப்பதுடன் ஆன்மிகப் புரிதலையும் விளக்கும் புத்தகம் தான் நினைவுக்கு வந்தது. அதைப் பற்றிதான் இப்போது பார்க்கப் போகிறோம்.

டாக்டர் வேய்ன் வால்டர் டையர் (Dr. Wayne W. Dyer,1940-2015) ஓர் அமெரிக்க தத்துவ ஞானி, வேதாந்தி, சுய சிந்தனை, சுய முன்னேற் றத்தை ஊக்குவிக்கும் விரிவுரையாளர், வாழ்வில் வெற்றிபெறஉதவும் வழிமுறைகளைப் போதிப்பவர். அத்துவைத சித்தாந்தத்தில் ஈடுபாடு கொண்டவர். லிங்காயத் சைவ மரபைச் சார்ந்த மராத்திய தத்துவ மேதை மாருதி ஷிவராம்பந்த் காம்லி எனும் பூர்வாஸ்ரமப் பெயர் கொண்ட ஸ்ரீநிசர்கதத்தா மகராஜைத் தன் ஆதர்ச ஆசானாக ஏற்றுக் கொண்டவர். ‘நீங்கள் இறைவனைப் போற்றி, அவருக்குச் சேவையாற்றுபவராக இருக்கலாம் அல்லது, தற்பெருமை, சுய நலத்துக்கு அடிமையாகி, அதன்பிணைக் கைதியாகவும் மாறி விடலாம். எல்லாமே உங்கள் கையில் தான் உள்ளது!’ என்று மகராஜ் அடிக்கடி கூறுவார். தன் ஆசானின் அருளால் ஆன்மிக விஷயத்தில் ஈடுபாடு கொண்டு சில புத்தகங்களும் எழுதியுள்ளார்.‘நிதர்சன மாயாஜாலம்’ (REAL MAGIC), உயர்மட்ட இறையுணர்வு நிலையை விவரிக்கும் ‘உன் தூய உள்ளம்’ (YOUR SACRED SELF), ஆகிய அவரது இருபுத்தகங்களும் ஆன்மிக விஷயத்தில் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. இரண்டாவதில், முன்னுரையில் அவர் கையாளும் ஓர் உருவகக் கதையின் மூலம், பக்த பிரகலாதனின் ‘தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்!’என்ற வாதமும், தாயின் கருப்பையில் இருந்தவாறே அபிமன்யு கற்றறிந்தப் போர்க்கள ஞானமும், பஞ்சபூதங்களில் உறைந்திருக்கும் இறைவனைப் பூடகமாக உணர்த்தும் தாயின் கருப்பையும் எவ்வளவு உண்மை என்பதை அறிய முடிகிறது! இதோ அதன் சுருக்கம்……

ஒரு தாயின் கருவில் முழுவளர்ச்சி அடைந்த இரட்டைச் சிசுக்கள்(IDENTICAL TWINS) இருந்தன.கூடிய விரைவில் பிரசவம் ஆகிவிடலாம் என்ற நிலை. அச்சமயம் அவையிரண்டும் தங்களுக்குள் ‘மானசீகமாக’ப் பேசிக்கொண்டன.

“நாம் பிறந்த பிறகு நமக்கு நடக்கப் போகும் விஷயங்களில் உனக்கு நம்பிக்கை இருக்கிறதா?” என்று கேட்டது முதல் சிசு. எதிர்மறை சிந்தனை உடையது, போலும்! அதாவது  நாத்திகவாத எண்ணம் கொண்டது!

“நிறையவே இருக்கு! ஏதாவது நிச்சயம் நடக்கும். அதை எதிர்கொள்ள வேண்டியத் தயார் நிலைக்கு நாம் இருக்கும் இச்சூழலே கொண்டுச் செல்லக் கூடும், அல்லவா?” என்றது இரண்டாவது சிசு. இது நேர்மறை (அதாவது ஆத்திகவாத)எண்ணம் கொண்டது, போலும்!

“அசடு, அசடு! பிறப்புக்குப் பின் வாழ்வு என்பதே கிடையாது. அப்படியே இருந்தாலும் அது எப்படிப்பட்டதாக இருக்கும்?”

“அவ்வளவாகத் தெரியாது! ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், இங்கிருப்பதை விட அங்கு ஒலியும், வெளிச்சமும் அதிகமிருக்கலாம். இதோ நம் கால்களால் நடக்கலாம், வாயினால் சாப்பிடலாம். வேறு ஏதாவது புலன்களால் ஆட்டுவிக்கப்படலாம். இப்போதே அதைத் தெரிந்துக் கொள்ள முடியாதே!”

“ஹோ,ஹோ! சுருண்டு, முடங்கிக் கிடக்கும் நாம் நடப்பதா, அடி முட்டாள்தனம்! வாயால் சாப்பிடுவதா, நல்ல வேடிக்கை, கேலிக்கூத்து! இந்தத் தொப்புள்கொடி தான் நமக்கு எல்லாவற் றையும் தருகிறதே? ஆனால் அது சிறியதாக இருப்பது தான் சங்கடம். பிறப்புக்குப் பின் அதால் என்ன உபயோகம் இருக்கப் போகிறது? உயிரில்லா நிலையே நிலவும் என்பதே உண்மை!”

“இல்லை,அப்பனே! என் மனதில் வேறு மாதிரி தோன்றுகிறது. அங்கு நிலைமையே வேறு மாதிரி இருக்கலாமே! இந்தத் தொப்புள்கொடிக்கே அவசியம் இல்லாமல் போகலாம், அல்லவா?”

“நிறுத்து, நிறுத்து! பிறப்புக்குப் பின் வாழ்வு உண்டென்றால், ஏன் யாரும் இங்குத் திரும்பி வரவேயில்லை? என்னைப் பொறுத்த வரை பிறப்பு என்பது உயிரின் முடிவு. பிறப்புக்குப் பின்னால் நாம் உணரப் போவது ஒரே அந்தகாரம், ஆழ்ந்த மௌனம் மற்றும் ஒருவித மயக்க நிலையே நிறைந்திருக்கும். வேறு வழி ஒன்றும் புலப்படாது!”

“எனக்கும் புரியவில்லைதான்! ஆனால் நம்மைப் பராமரிக்கப் போகும் ஒரு புனித நபரைச்  சந்திப்போம் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை! அந்த நபர்  நம்மைப் பேணி, பாதுகாப்பார் என்பதும் உறுதி!”

“அப்படி ஒருவர் இருப்பாரா, என்ன, எனக்கு நம்பிக்கை இல்லை!”

“நிச்சயம் இருப்பார். ஏன், நம்மை வெளியுலகத்துக்கு அறிமுகப் படுத்தப் போகும் இந்த ‘அறை’ யின் சொந்தக்காரராகவும், ‘அன்னை’ யாகவும் ஒரு பொருப்புள்ள ‘அம்மா’ வாக இருக்கலாமே!”

“உன் பேச்சைக் கேட்டால் சிரிப்புதான் வருகிறது. ‘அம்மா’, ‘அன்னை’ என்று சொல்கிறாயே, அப்படி ஒருவள் உண்டா? நீ நம்புகிறாயா? அப்படி இருப்பாளேயானால் இப்போது அவள்எங்கே?”

“நம்மைச் சுற்றி அவள் வியாபித்து இருக்கிறாள். அவளுள் கட்டுண்டுக் கிடக்கிறோம். நம் ஒவ் வொரு அசைவும் அவள் விருப்பப்படியே நடக்கிறது. அவளுடைய ஓர் அங்கம் நாம்.அவளின்றி ஓர் அணுவும் அசையாது,அப்பனே!”

“சுத்த அபத்தம்! என்னால் அவளைப் பார்க்க முடியவில்லையே? ஆகையால், தருக்கப்படி ‘அன்னை’  என்ற அவள் இல்லவே, இல்லை என்பதே சரி!”

“நிதானமாக யோசித்துப் பார்! எந்த இடையூறுமின்றி மனதை ஒருமுனைப் படுத்தி, மோன நிலையில் தியானம் செய். அவள் உன்னைச் சுற்றி இருப்பதை உணருவாய். அங்கிருந்து எழும் இனம்புரியாத ஒலி உன் மனதில் பரவும். எங்கிருந்தோ அவள் அன்புடன் பேசுவதையும், பிறருடன்  உரையாடுவதையும் உற்றுக் கேட்டுப் பரவசமடைவாய்!”

“………………………………………………….!”

“என்ன, பேச்சே எழும்பவில்லை? யோசிக்கிறாயா, யோசி, யோசி!” என்றது இரண்டாம் சிசு. முதல் சிசு மேலும் யோசிக்க ஆரம்பிக்கையில் பிரசவம் நேர ஆரம்பித்துவிட்டது….!

அன்பர்களே, நாமும் யோசித்துப் பார்ப்போம். அந்தத் தாய் நமக்கு அளித்துள்ளப் புகலிடம்  கருப்பை (பூமி), மேற்கூறை வேய்ந்து (ஆகாயம்) பாதுகாப்பாக வைத்துள்ளாள், அவள் கொடுத்துள்ளத் தொப்புள்கொடியே நம் உயிர் மூச்சு ( வாயு ), நம்மைச் சுற்றி இருக்கும் சவ்வுத் திரவம் —பனிக்குடம்),(நீர்) சீரான வெப்பநிலையை ( அக்னி ) நமக்குத் தந்துக் காக்கிறது. இவையெல்லாமே அந்தப் பரம்பொருள், கருணையே வடிவான
அன்னை நம்மீது காட்டியுள்ள அருட்செயல், அளப்பறியக் கருணை. அப்படிப்பட்டவள் பிறப்புக்குப் பின்பும் நம்மை உணர்வுகளுக்கு அப்பாலிருந்துக் காத்தருளுவாள் என்பதில் சிறிதளவும் ஐயமேயில்லை! இன்னும் யோசிக்கிறீர்களா, யோசியுங்கள், விடாமல் யோசியுங்கள்! நீங்களே புரிந்துகொள்வீர்கள்!

அன்னை,பகவான்,இறைவன் என்ற பல்வேறு சொற்களுக்கு வேறு என்ன விளக்கம் வேண்டும்?!

நன்றி, வணக்கம்.

வாழ்க பாரதம். ஜெய் ஹிந்த்!

tags- அன்னை, இறைவன்

இறைவன் பற்றிய இரகசியங்கள்! (Post No.5626)

WRITTEN BY S NAGARAJAN

Date: 5 November 2018

Time uploaded in London – 6-17 AM (GMT)

Post No. 5626

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

இறைவன் பற்றிய இரகசியங்கள்!

ச.நாகராஜன்

1

இறைவனை எப்படிக் கண்டறிவது? அவன் எங்கு உள்ளான், எப்படி உள்ளான் என்பதை மகான்கள் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் உரைத்து வைத்திருப்பதைத் தொகுத்துப் படித்தால் பல உண்மைகள் தெளிவாகப் புலப்படும். சிலவற்றை இங்கே தொகுத்துப் பார்க்கலாம்.

2

திருமூலர் கடவுளை நடமாடும் கோயில் நம்பனில் காண்கிறார்.

கோயிலில் உறைந்திருக்கும் பகவானுக்கு ஒன்று நைவேத்யமாகத் தந்தாய் எனில் அது நிச்சயமாக பசியினால் வாடி வதங்கும் ஏழைக்குச் சென்று சேராது; சில சமயம் சேரலாம். அல்லது நைவேத்யம் செய்தவரே வீட்டிற்குக் கொண்டு செல்லக் கூடும். ஆனால் நடமாடும் கோயிலாக இருக்கும் நம்பர்க்கு ஒன்று கொடுத்தால் அதில் இரட்டைப் பலன். அவனுக்கும் அது சேரும், அத்துடன் அது தானாகவே இறைவனையும் சேரும் என்கிறார் அவர். அற்புதமான இந்தக் கருத்து பெரிய உண்மையைப் புலப்படுத்துகிறது. இல்லாதவனுக்கு ஒன்று ஈயில், அதுவும் உண்ணுவதற்கு ஒன்று கொடுத்தால் அதில் மகிழ்வான் இறைவன், அது அவனைச் சேரும் என்பது தான் அது. வள்ளலார் அனைவருக்கும் அன்ன தானம் செய்யச் சொன்னதன் முழு ரகசியமும் இப்போது புரியும்.

 

திருமூலரின் திருமந்திரப் பாடலைப் பார்ப்போம்:

படமாடும் கோயில் பகவர்க்கு ஒன்று ஈயில்
நடமாடும் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடும் கோயில் பகவர்க்கு ஆது ஆமே!

3

அவன் அணோர் அணீயான், மஹதோ மஹீயான் என்று அறைகின்றது வேதம்.

அணுவிற்கும் அணுவானவன். பிரம்மாண்டத்திற்கும் பெரிதான மஹத்துக்கும் மஹத்தானவன்! பெரிதுக்கும் பெரிது. சிறிதுக்கும் சிறிது!

அணுவில் அசைவாய் என்றார் (அடாமிக் தியரி தெரிந்த) அருணகிரிநாதர்.

அணுவாய் இருப்பவனும் அவனே; அணுவிற்குள் அசைவாய் இருந்து உலகத்தை இயக்குபவனும் அவனே!

என்ன அற்புதமான கருத்து!

4

திருமந்திரப் பாடல் இன்னொன்று இறைவனின் இயல்பை விளக்குகிறது.

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே    (திருமந்திரம் பாடல் 270)

இறைவன் எண்குணத்தான் என்பது ஒரு புறம் இருக்கட்டும். அன்பே சிவம் என்கிறார் திருமூலர்.

குணம் பற்றியதான இந்த விளக்கமும் அற்புதமான விளக்கம் தான்.

அன்பே சிவம்; தூய அன்பின் திருவுரு கடவுள்!

GOD IS LOVE!

பக்திக்கு இலக்கணமாய் விளங்கும் நாரதர் இறைவனை, ‘அவன் உன்னுள்ளே பரம ப்ரேம ரூபமாய் இருக்கிறான்’ என்கிறார்.

ஸா த்வஸ்மின் பரம ப்ரேம ரூபா (நாரத பக்தி சூத்ரம் – 2)

Sa tvasmin Parama-prema-rupa (Narda Bhakthi Sutra -2)

5

GOD IS NO WHERE  என்றான் ஒரு நாத்திகன்.

அதைக் கேட்ட ஞானி சிரித்தார். நீ சொன்ன சொல்லிலேயே உள்ளானே; இதோ பார் W NOவுடன் சேர்த்துப் படி

GOD IS NOW HERE என்று ஆகி விட்டதே! என்றார் அவர்.

6

இரணியன் நாத்திகர்க்குத் தலைவன்.

அவன் உன் கடவுள் இந்தத் தூணில் இருக்கிறானா? என்று தன் மகனை நோக்கிக் கேட்ட போது, பிரகலாதன், “அவன் தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான் என்கிறான்.

கம்பர் சித்தரிக்கும் காட்சியோ அற்புதக் காட்சி.

கம்பரின் பாடல் இது:

சாணிலும் உளன்,ஓர் தன்மை அணுவினைச் சத கூறு இட்ட

கோணினும் உளன், மா மேருக் குன்றினும் உளன்; இந் நின்ற

தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன், இத்தன்மை

காணுதி விரைவின் என்றான்; நன்று எனக் கனகன் நக்கான்!

அடேய்! எங்கிருக்கிறான் உன் இறைவன்?

அவன் சாணிலும் இருப்பான்; அணுவை நூறு துகள்களாகச் செய்த போது வருமே அந்தக் கோணிலும் இருப்பான்; நீ எங்கே இருக்கிறான் என்று கேட்டாயே, அந்தச் சொல்லிலும் இருப்பான்.

அருமையான இந்தச் சொற்களில் வாக்கில் இருப்பவன் அவனே; வாக்கைத் தருவபவனும் அவனே; அனைத்திலும் பரந்திருந்து உறையும் சர்வ வியாபியும் அவனே என்பதைப் புலப்படுத்துகிறான் கவிச் சக்கரவர்த்தி கம்பன்!

7

சரி, அவனை எப்படி அறிவது? வழி சொல்கிறார் அப்பர்:

அவன்,

விறகில் தீயினன், பாலில் படு நெய் போல்

மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்

உறவு கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்

முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே

இரகசியத்தைப் பிட்டுப் பிட்டு வைத்து விடுகிறார் அப்பர். நாவுக்கு அரசர் ஆயிற்றே! அவர் சொற்களில் உண்மை நர்த்தனமாடுகிறது!

விறகில் தீ இருப்பது போல, பாலில் உள்ளே நெய் மறைந்திருப்பது போல மாமணி ஜோதி மறைந்திருக்கிறான்.

உறவு கோலை நடு

உணர்வுக் கயிறை எடு

முறுக வாங்கிக் கடை

மேலே வந்து உன் முன்னே மிதப்பான்.

8

‘உள்ளத்தில் உள்ளான் என்கின்றனர் சமயக் குரவர்கள். ஆனால் கள்ளர்க்குப் புலப்படான்; மெய்யன்பர்க்குப் புலப்படுவான் என்கின்றனர் அவர்கள்! இறைவன் ஒரு இரகசியம்! அவனை முழுதுமாக அறிய முடியாது.

அநிர்வசனீயம் – பேச்சுக்கு அப்பாற்பட்டவன்.

Egoless, Everlasting, Eternal, Omnipotent, Omniscient என்று இப்படி வர்ணித்துக் கொண்டே போகலாம்!

9

ஆதி பகவன்

வாலறிவன்

மலர்மிசை ஏகினான்

வேண்டுதல் வேண்டாமை இலான்

எண்குணத்தான்

பொறிவாயில் ஐந்தவித்தான்

அறவாழி அந்தணன்

என்று இறைவனை ‘தனக்கு உவமை இல்லாதான் என்று கூறும் வள்ளுவர்

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது என்று சுருக்கமாகக் கூறி விடுகிறார்.

ஓர் நாமம் ஓருருவம் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடித் தெள்ளேணம் கொட்டுவோம்!

***

இறைவன் ஏமாந்தான்!

siva, jabalpur

திருவாசக சுகம்

இறைவன் ஏமாந்தான்! சதுரன் யார்? மணிவாசகரின் ஹஹ்ஹா!

 

Written by S Nagarajan

Post No.2242

Date: 14 October 2015

Time uploaded in London:  7-47 AM

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog it at least for a week.

 

.நாகராஜன்

 

தன் பெண் ஒருவனைக் காதலிப்பதை அறிந்த தாய் ஒருத்தி பதறிப் போனாள். தன் கணவருக்கு மட்டும் அது தெரிந்தால் ..?

ஆனால் பெண் அம்மாவிடம் தீர்க்கமாகப் பேசினாள். அந்தப் பையன் நல்லவன், சாமர்த்தியமானவன் என்றும் மணந்தால் அவனையே மணப்பேன் என்றும் உறுதிபடக் கூறியதோடு அப்பாவிடம் நல்ல விதமாக எடுத்துச் சொல்ல தூதும் அனுப்பினாள்.

விஷயத்தைக் கேட்ட தந்தை திகைத்துப் போனார். சரி, பையனை வந்து என்னை பார்க்கச் சொல் என்றார்.

பையனும் வந்து பவ்யமாக நின்றான்.

 

 

காதலிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். படிக்கின்ற வயது. நல்ல காலேஜில் இடம் கிடைக்க வழி செய்ய வேண்டும். அங்கு கேட்கப்படும் நிறைய ஃபீஸைத் தர வேண்டும். இதற்கு என்ன செய்வதாக உத்தேசம்?”

பையன் பதில் சொன்னான்:”எல்லாம் கடவுள் பாத்துக்குவார்

தந்தை தொடர்ந்தார்: படிப்பு முடிந்தவுடன் நல்ல கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க வேண்டும்? எப்படிக் கிடைக்கும்?”

பையன் பதில் சொன்னான்:”எல்லாம் கடவுள் பாத்துக்குவார்

 

 

அது சரி, கல்யாண செலவு வேறு நிறைய ஆகும். பின்னர் குடும்பம் என்று வந்தால் குழந்தை குட்டி என்று வேறு செலவு இருக்கும். ஒரு வீடு, கார் எல்லாம் வாங்க வேண்டாமா? அதற்கு என்ன செய்யப் போகிறாய்?”

பையன் பதில் சொன்னான்:”எல்லாம் கடவுள் பாத்துக்குவார்

பையனை அனுப்பி விட்டார் தந்தை. அதுவரை தள்ளி இருந்த தாய் நடந்தது என்ன என்று தெரிந்து கொள்ளூம் ஆவலுடன் ஓடி வந்தாள். “எப்படிங்க பையன்?”

என்றாள்.

நிறைய கேள்வி கேட்டேன். நல்லாத் தான் பதில் சொல்றான். ஆனால் என்னைக் கடவுளா நினைக்கிறது தான் கொஞ்சம் ஓவரா இருக்கு!” என்றார் தந்தை!

*

 

 IMG_6892 (2)

படம்: சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்

எப்போதுமே வணிக பேரத்தில் சாமர்த்தியமாக ஈடுபட்டுநரியைப் பரியாக்கிய புகழ்மணி வாசகர் இப்போது கடவுளிடமே தன் பேரத்தைக் காட்டி விட்டார்.

ஒன்று கொடுத்தார்; ஒன்றை வாங்கினார்.

தந்தது உன் தன்னை, கொண்டது என் தன்னை!”

இப்போது அவருடைய சாமர்த்தியம் வெளிப்படுகிறது. இதில் திறமைசாலி யார்?

யார் கொலோ சதுரர்?

எனக்குக் கிடைத்ததோ Never ending Bliss – அந்தம் ஒன்றில்லா ஆனந்தம்!

உனக்கு என்ன கிடைத்தது, என்னிடம்?

 

 

நானோ பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன். எனக்கு செம்மையே ஆய சிவபதம் அல்லவா அளித்து விட்டாய்!

நம்மில் யார் சதுரன்? உன்னைப் பிடித்த பிடி விட மாட்டேன். சிக்கெனப் பிடித்து விட்டேன்!

கோயில் திருப்பதிகம் பாடலைப் பாருங்கள்:

தந்தது உன் தன்னை, கொண்டது என் தன்னை

சங்கரா ஆர் கொலோ சதுரர்?

அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன்

யாது நீ பெற்றதொன்று என்பால்?!

சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்

திருப்பெருந்துறை சிவனே!

எந்தையே ஈசா! உடலிடம் கொண்டாய்

யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே!

*

 

 siva head

தந்தையிடம் பேசிய பையனை எடுத்துக் கொள்வோம், யார் சதுரர்? தந்தையா, பையனா?

இங்கே மணிவாசகரா, சிவபிரானா!

இப்படிப்பட்ட நிகழ்வுகள், பேரங்கள்,(டீல்) எப்படி நடைபெறுகின்றன?

அவன் அருளாலே அவன் தாள் வணங்கிஎன்பது தான் பதில்!

எதற்கும் அவன் அருள் இருக்க வேண்டும். அப்போது தான் அவனுடைய நினைவை ஊட்டும் இந்தக் கட்டுரை கூட உங்கள் பார்வையில் படும்.

 

தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

சிவாய நம் என்றிருப்பார்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை!

–சுபம்–