வேதங்கள் பற்றி கம்பன் தரும் வியப்பான தகவல் (Post No.4508)

WRITTEN by London Swaminathan 

 

Date: 17 DECEMBER 2017 

 

Time uploaded in London-  15-37

 

Post No. 4508

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

நால் வேதங்கள் பற்றி கம்பன் பல இடங்களில் பாடியிருக்கிறான். சில இடங்களில் வேதங்களின் உயர்வு எவ்வளவு என்பதைக் காட்ட அவைகளை உவமையாகவும் பயன்படுத்துகிறான். ஒரு பொருளை உவமையாகப் பயன்படுத்துவதானால் அது எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக இருக்க வேண்டும். கம்பன் பாடல்களில் இருந்து வேதம் பற்றித் தமிழர்கள் என்ன கருதினர் என்பதை அறிய முடிகிறது. கம்பன் நமக்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவன்.

 

புண்ணியம் செய்தால் சொர்க்கம் கிடைக்கும்

புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம்

என்னும் ஈது அருமறைப் பொருளே

மண்ணிடை யாவர் இராகவன் அன்றி

மாதவம் அறத்தொடு வளர்த்தார்

எண் அருங் குணத்தின் அவன் இனிது இருந்து இவ்

ஏழ் உலகு ஆள் இடம் என்றால்

ஒண்ணுமோ இதனின் வேறு ஒரு பாகம்

உறைவு இடம் உண்டு என உரைத்தல்

——பால காண்டம்

பொருள்

 

இப்பிறவியில் புண்ணியம் செய்தவர்கள் மறு பிறவியில் அடைவது சொர்க்கம் என்று சொல்லப்படும் இச் செய்தி அருமையான வேதங்கள்  கூறும் உண்மைப் பொருளே ஆகும். இவ்வுலகில் இராமனைத் தவிர வேறு யார் தருமத்துடன் சிறந்த தவத்தையும் வளர்த்தார்கள்? நினைப்பதற்கும் அரிய நற்குணங்களின் நாயகனான இராமன், இனிமையாக வீற்றிருந்து இந்த ஏழு உலகங்களையும் ஆளுகின்ற நகரம் அயோத்தி. இதைக் காட்டிலும் சிறந்த எல்லாப் போகங்களுக்கும் இருப்பிடமான வேறோர் உலகம் உள்ளது என்று சொல்ல முடியுமோ முடியாது.

‘புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம்’ (சுவர்க்கம்)- என்பது அருமையான வாசகம்; இது வேதத்தின் சாரம் என்று கம்பன் மொழிவதும் சிறப்பு.

 

xxxxxxxxxxxxx

காலத்தால் அழியாத மறை!

தாள்படாக் கமலம் அன்ன தடங் கணான் தம்பிக்கு அம்மா

கீழ்ப்படா நின்ற நீக்கி கிளர் படாது ஆகி என்றும்

நாட்படா மறைகளாலும் நவைபடா ஞாநத்தாலும்

கோட்படாப் பதமே ஐய குரக்கு உருக்கொண்டது என்றான்.

கிட்கிந்தாக் காண்டம், அனுமப் படலம்

பொருள்

காம்பை விட்டு நீங்காத செந்தாமரை மலர்களைப் போல பெரிய கண்களையுடைய இராமன்,  தம்பியான இலக்குவனுக்கு, ஐயனே! கால எல்லைக்குட்படாத, கீழ் நிலைக்குத் தாழாத, ஒளியில் குறைவில்லாத, அழியாத வேதங்களாலும், குற்றம் உண்டாக இடமில்லாத அறிவாலும் கொள்ளப்படாத தத்துவ நிலையே இந்தக் குரங்கின் வடிவத்தில் வந்துள்ளதாகும் என்று இராமன் வியந்து சொன்னான்.

 

அதாவது ‘காலத்தால் அழியாத உயர்ந்த வேதம்’ என்று வேதம் புகழப்படுகிறது.

xxxxx

வேதத்தின் உயர்வு

 

மேவ   அரும் உணர்வு முடிவு இலாமையினால்

வேதமும் ஒக்கும் விண்புகலால்

தேவரும் ஒக்கும் முனிவரும் ஒக்கும்

திண்பொறி அடக்கிய செயலால்

காவலின் கலை ஊர் கன்னியை ஒக்கும்

சூலத்தால் காளியை ஒக்கும்

யாவரும் தன்னை எய்துதற்கு அரிய

தன்மையால் ஈசனை ஒக்கும்

 

—–பாலகாண்டம்

 

பொருள்:

அந்த மதில், அறிவினால்  முடிவு காண முடியாதிருப்பதால் வேதங்களை ஒத்திருக்கும்;

விண்ணுலகத்தை எட்டுவதால், தேவர்களை ஒத்திருக்கும்;

போர்ப்பொறிகளை தன்னுள் மறைத்து வைத்திருப்பதால் முனிவர்களை ஒத்திருக்கும்;

காவல் தொழிலில் கலைமானை வாஹனமாக உடைய துர்கா தேவியை ஒத்திருக்கும்;

தன் சிகரத்தில் இடி தாங்கி ஆகிய சூலத்தைப் பெற்றிருப்பதால் காளியை ஒத்திருக்கும்;

 

யாரும் தன்னை அணுக முடியாத நிலையில் ஈசனை ஒத்திருக்கும்.

 

 

நல்ல கற்பனை! அயோத்தி மாநகரின் மதிலை வர்ணிக்க வந்த கம்பன் அதன் உயர்வு பற்றி ஒப்பிடுகையில் அறிவினால் முடிவே காண முடியாத வேதங்களுக்குச் சமம் என்கிறான்.

 

இந்தப் பாடலில் உள்ள விஞ்ஞான விஷயமான இடிதாங்கி பற்றியும் துர்கையின் வாஹனமான கலைமானுடன் இந்தியா முழுதும் எங்குமே துர்கை சிலை கிடைக்காதது பற்றியும் ஏற்கனவே எழுதியுள்ளேன். கலைமகளின் வாஹனம் மான் என்று தமிழ் இலக்கியமும் சம்ஸ்கிருத இலக்கியமும் பாடிப் பரவியபோதும் ஓரிடத்திலும் இப்படிப்பட்ட சிலை கிடைக்காதது அதிசயமே. முஸ்லீம் படைகள் அடித்து உடைத்த சிலைகளில் இதுவும் அடக்கம் போலும்.

 

xxxxxxxxxxxx

வேதம் பொய்க்குமோ?

 

அல்லல் உற்றேனை வந்து அஞ்சல் என்ற இந்

நல்லவன் தோற்பதே நரகன் வெல்வதே

வெல்வதும் பாவமோ வேதம் பொய்க்குமோ

இல்லையோ அறம் என இரங்கி ஏங்கினாள்

சடாயு உயிர் நீத்த படலம், ஆரண்ய காண்டம்

 

பொருள்:

துன்புற்ற என்னிடம் வந்து அஞ்சாதே என்று தைரியம் சொன்னவனான ஜடாயு தோல்வி அடைவதா? நரகத்துக்கு உரியவனான  இராவணன் வெற்றி அடைவதா?  தருமம் வெல்லும் என்று வேதங்கள் கூறுவது பொய்யாகுமோ? பாவம் வெற்றி பெறுமா? இந்த ஊரில் தர்மம் என்பது இல்லாமல் போய்விட்டதா? என்று சீதை புலம்பினாள்

 

இதில் நாம் கவனிக்க வேண்டியது ‘அறம் வெல்லும் பாவம் தோற்கும்’ என்ற கருத்தாகும். இதைக் கம்பன் மேலும் சில இடங்களில் வலியுறுத்துகிறான். இது வேதம் சொல்லும் கருத்து என்பது இந்துக்களின் நம்பிக்கை.

xxxxx

வேத பாராயணம்

கிட்கிந்தா காண்டத்தில் கிட்கிந்தைப் படலத்தில் ஒரு காட்சி வருகிறது:

அருக்கிய முதல வான அருச்சனைக் கமைந்தயாவும்

முருக்கிதழ் மகளிர் ஏந்த முரசு இனம் முகிலின் ஆர்ப்ப

இருக்கு இனம் முனிவர் ஓத இசை திசை அளப்பயானர்த்

திருக்கிளர் செல்வம் நோக்கித் தேவரும் மருளச் சென்றான்

 

பொருள்:

கலியாண முருக்க மலரைப் போன்ற சிவந்த உதடுகளை உடைய வானர மகளிர் , அர்க்யம் முதலாக உள்ள அர்ச்சனைக்கு அமைந்த அனைத்தையும் கைகளில் ஏந்தி வரவும், பேரிகை முதலிய கருவிகள் இடி போல ஒலிக்கவும்,  முனிவர்கள் இருக்கு வேதம் முதலான நால் வேதங்களையும் பாராயணம் செய்தபடி வரவும், இசை எல்லாத் திசைகளிலும் பரவும், புதிய செல்வச் சிறப்பைக் கண்டு தேவர்களும் திகைக்குமாறு, சுக்ரீவன், இலக்குவனின் எதிரில் சென்றான்.

 

வானர சாம்ராஜ்யத்திலும் வேத பாராயணம் செய்யும் முனிவர்கள் இருந்ததும், அவர்கள் நாகரீகமிக்க சமுதாயத்தில் உள்ளதைப் போலவே மன்னன் பவனியில் வேத பாராயணம் செய்தவாறு வந்தனர் என்பதும் நல்லதொரு காட்சி.

 

எங்கள் மதுரையில் மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் திருவீதி உலா வருகையில் இது போல பிராமணர்கள் வேத பாராயணம் செய்தவாறு வருவர். பின்னால் ஓதுவா மூர்த்திகள் தேவாரம், திருவாசகத்தை ஓதியவாறு வருவர்.இது கிட்கிந்தையிலும் நடந்தது!

 

 

உபநிடதம், வேதாந்தம் பற்றியும் பல பாடல்களில் பேசுகிறான் கம்பன்; அவைகளைத் தனி ஒரு கட்டுரையில் தருவேன்.

TAGS:– கம்பன், வேதம், உவமை, உயர்வு, பொய், நாட்படா மறை

 

–SUBHAM—

உள்ளத்தனையது உயர்வு; உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்! (Post No 2772)

cartoon-ladder-5

Compiled by london swaminathan

 

Date: 1 May 2016

 

Post No. 2772

 

Time uploaded in London :– 21-49

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

HitchYourWagonToAStar-jpg

அமெரிக்கக் கவிஞரும் கட்டுரையாளருமான ரால்ப் வால்டோ  எமர்சன் (1803-1882) ஒரு கட்டுரையில் எழுதிய வாசகம் ஆங்கில நூல்களில் ‘ஊக்கமுடைமை’ பற்றிய சிறந்த மேற்கோளாகப் பயன்படுத்தப்படுகிறது. உனது வாகனத்தை (பிறர் உதவியுடன்) நட்சத்திரத்தை நோக்கி நகர்த்து ‘Hitch your wagon to a star’ என்றார். இதன் உட்பொருள் உயர்ந்த குறிக்கோள் உடையவனாக இரு. ஏற்கனவே வெற்றி பெற்றவரின் பாதையைப் பின்பற்று என்பதாகும்

 

இதில் வியப்பான விஷயம் என்ன வென்றால் இதை 2000 ஆண்டுகளுக்கு முன்பே சோழ மன்னன் கோபெருஞ்சோழன் சொல்லியிருக்கிறான்:–

புறம் 214 (கோப்பெருஞ் சோழன்): யானை வேட்டைக்குப் போகிறவன் வெல்வான். யானையுடன் திரும்பி வருவான். குறும்பூழ் வேட்டைக்குப் போவோன் அது இல்லாமலும் திரும்புவான். உயர்ந்த குறிக்கோளுடன் கூடிய உயர்ந்தோனாக விளங்குக. இமயம் போல் புகழ் அடைக.

யானை வேட்டுவன் யானையும் பெறுமே

குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே

அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு (புறம் 214)

 

ஆங்கிலப் பழமொழிகள்

இதை வேறு சில ஆங்கிலப் பழமொழிகளிலும் காணலாம்.

 

He who aims at the moon may hit the top of a tree; he who aims at the top of a tree unlikely to get off the ground.

நிலவை எட்டிப் பிடிக்க முயல்பவன் மரத்தின் உச்சியையாவது தொடுவான்; மரத்தின் உச்சியை அடைய முயல்பவன், தரையை விட்டுக்கூட எழுதிருப்பது சந்தேகமே- என்கிறது ஆங்கிலப் பழமொழி.

See mickle, and get something; seek little and get nothing (mickle = much)

இன்னொரு பழமொழியும் இதை வலியுறுத்தும். ‘நிறையக் கேட்டால் கொஞ்சமாவது கிடைக்கும்; கொஞ்சம் கேட்டால் ஒன்றும் கிடைக்காது’ என்று சொல்கிறது இப்பழமொழி!

 

நன்கொடை வசூலிக்கப் போகிறவர்களுக்கு இது நன்கு விளங்கும். ஆயிரம் ரூபாய் நன்கொடை கேட்டால், கொடுப்பவன் பாதியாவது கொடுப்பான். விற்பனையாளர் தந்திரமும் இதுதானே! ஒரு பொருளின் விலையை ஆயிரம் ரூபாய் என்பான். நாம் நூறு ரூபாய்க்குத் தருகிறாயா? என்போம். கடைசியில் 500 ரூபாயில் பேரம் முடிவடையும். ஆக வாழ்க்கையில் உயர்ந்த குறிக்கோள் இருந்தால்தான் நாம் முன்னேறுவோம். குறிக்கோளே இல்லாதவர் இறந்தர்க்குச் சமம். மரக்கட்டையும் அவர்களும் ஒன்றே என்பான் வள்ளுவன் (குறள் 600).

வள்ளுவனும் ஊக்கமுடைமை என்னும் அதிகாரத்தில் இரண்டு குறள்களில் மிக அழகாகச் சொல்கிறான்:

2lotus bloom

வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்

உள்ளத்தனையது உயர்வு – திருக்குறள்  595

 

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளாமை தள்ளினும் நீர்த்து– குறள் 596

ஆனால் மேற்கூறிய எல்லா மேற்கோள்களுக்கும் முன்னதாகவே கண்ணபிரான் இக்கருத்தை பகவத் கீதையில் முன்வைத்துவிட்டான்:-

 

உத்தரேத் ஆத்மனாத்மானம் நாத்மானம் அவசாதயேத் – பகவத் கீதை (6-5)

ஒருவன் தன்னாலே தன்னை உயர்த்திக்கொள்ளவேண்டும். தன்னையே தன்னைத் தாழ்த்தக் கூடாது; உனக்கு நீயே நண்பன், நீயே பகைவன்.

புறநானூற்றில் இமயம் போல உயர்ந்து புகழ் அடைவாயாக (பாடல் 214) என்பது கீதையிலும் இருக்கிறது

(கீதை 11-33) எழுந்திரு ! புகழடை!! உத்திஷ்ட ! யசோ லப !!

 

எனது முந்தைய கட்டுரைகள்:–

மனம் பற்றிய 31 நல்ல மேற்கோள்கள் …(31 Mar 2012) என்ற பதிவிலும், புறநானூற்றில் பகவத் கீதை- பகுதி 2-லும் (31-3-2012) இக்கருத்துகளை முன்னரே தொட்டுக்காட்டி இருக்கிறேன்

 

–சுபம்–