கண்ணன் எத்தனை கண்ணனடி!

krishna unjal ,sivaramn

2015 செப்டம்பர் 5 ஜன்மாஷ்டமி. அதையொட்டிய சிறப்புக் கட்டுரை!

ச.நாகராஜன்

Written by S NAGARAJAN

Date : 5 September  2015

Post No. 2126

Time uploaded in London : 6-16 am

காலம் காலமாக கோடிக் கணக்கானோருக்கு கோடானு கோடி விதத்தில் ஒரு அவதாரம் அருள் செய்து வருவது மனித குலத்தின் சிறப்பான ஒரு அதிசய அம்சம்.

கண்ணன்! எத்தனை கண்ணனடி!

குழந்தைகளுக்கு அவன் வெண்ணெய்திருடி. தமாஷ்வாலா!

யசோதைகளுக்கு வாயில் அண்ட பிரபஞ்சத்தையேக் காண்பிக்கும் அதிசய மாயாவி!

யௌவன ருக்மிணிகளுக்கு தன்னைப் போன்ற சரியான ஒருவனுக்குக் காதல் கடிதம் எழுத உத்வேகமூட்டும் அற்புத சுந்தரன்!

அர்ஜுனனுக்குத் தன்னை மறைத்துக் கொண்டு தேர் ஓட்டிய பார்த்தசாரதியான அற்புத நண்பன்

ஆனால் அவனை நிமித்தமாக வைத்து குருக்ஷேத்திரத்தில் உலகிற்கே கீதையை உபதேசம் செய்த லோக குரு!

cute krishna, fb

காந்தாரிக்கோ தர்மம்.

சகாதேவனுக்கு மனதால் பற்றும் பற்றற்றான்!

பீஷ்மருக்கோ இச்சாமரணியாக இருந்த போதும் மரணத்தின் போது கண்ணுக்கு நேரே வந்து அருள் பாலிக்கும் கடவுள்.

துரியோதனனுக்கு அவனது சுடுசரங்களை எதிர்கொள்ளும் காலாக்னி.

குந்திக்கு கஷ்டகாலத்தில் உன்னை நினைக்க வரம் தா என்று கஷ்டத்தை வரவேற்கத் தூண்டும் கர்த்தா!

திரௌபதிக்கோ சகல கஷ்டங்களையும் அரை நொடியில் போக்கும் ஹ்ருதய கமல வாஸன்.

தர்ம பீம நகுலருக்கோ ராஜ தந்திரி!

வியாஸருக்கு புவனத்ரய வாஸுதேவன்

சஞ்சயனுக்கோ யோகேஸ்வரன்.

krishna dance by sivaraman fb

கண்ணன் இன்னும் எத்தனை பேருக்கு என்னென்னவாக இருக்கிறானோ, யார் அறிவார்?

பாரதிக்கு அவன் தீராத விளையாட்டுப் பிள்ளை.

நம்மாழ்வாருக்கு உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்!

பொய்கையாழ்வாருக்கு வினைச்சுடரை நந்துவிக்கும் ஓங்கோதவண்ணன்!

அவன் லீலைகளைக் கேட்டவண்ணமும் சொன்ன வண்ணமும் இருக்கும் லீலாசுகருக்குச் செவிக்கு அமிர்தமாக இருப்பவன் (கிருஷ்ணகர்ணாம்ருதம் இயற்றியது அதனால் தான்!)

சைதன்யருக்குத் தன்  நாமம் சொல்லி நாட்டியமாட வைக்கும் நர்த்தன நாயகன்!

சூர்தாஸுக்கு அவனை மட்டும் பார்க்க கண்ணொளி தரும் ஞான சூரியன்!

யோகினியாக கண்ணனைத் துதிக்கும் மீராவுக்கோ அவன் கோவர்த்தன கிரிதாரி!

ஆண்டாளுக்கோ எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்றோனாக ஆகும் ஆழிமழைக்கண்ணன்!

வேங்கடசுப்பையருக்கு ஈரேழு புவனமும் அசைந்தாட, குழல் ஆடி வரும் அழகன்.

தமிழ்நாட்டின் தீய சக்திகளுக்கோ கால சக்தி!

இந்திய நாட்டிற்கோவெனில் பாரதத்தை மையமாக வைத்து உலக நாடுகளை வழி நடத்திச் செல்லும் ஒளி விளக்கு!

இத்தனையும் அவன்!

இதற்கு மேலும் அவன்!!

இதெல்லாம் இல்லாமல் தன்னை மறைத்துக் கொள்பவனும் அவனே!

சொல்லுரைக்க மாட்டா விந்தையிலும் விந்தையான கண்ணனைப் பற்றிச் சொல்ல நூலாயிரம் வேண்டும். நாளாயிரமும் நாவாயிரமும் போதா!

அவனைப் போற்றி வணங்கும் இந்த ஜன்மாஷ்டமியில்,

அவனை மனம் பற்றித் துதிப்போம்! மகிழ்வோம்!! உயர்வோம்!!!

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே I

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே II***************

((Photos are from my face book friends Mr Sivaraman and others; thanks:swami))

————–xxxxxxxxxxxxx—————