Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 9 November 2018
GMT Time uploaded in London –13-29
Post No. 5644
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
பிரிட்டனில் பிரபுக்கள் சபை உறுப்பினருடன் ஒரு தத்துவ அறிஞரும் உணவு உண்ண அமர்ந்தார். அவர் ஒவ்வொரு தின்பண்டத்தையும் உற்று நோக்கி ருசித்து எடுத்துக் கொண்டிருந்தார்.
இதைக் கண்ட ஒரு பிரபுவுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. வாயைத் திறந்தார்; சொற்களை உதிர்த்தார்:-
“என்ன இது விநோதமாக இருக்கிறதே! உங்களைப் போன்ற தத்துவ அறிஞர் கூட இப்படி விருப்பப்பட்ட உணவைத் தேடி எடுத்து உண்பீர்களா?
உடனே அந்த தத்துவ அறிஞர் சொன்னார்:
அட, ருசியான பண்டங்களை எல்லாம், கடவுள் முட்டாள்பய ல்களுக்கு மட்டும் படைத்தாரோ?
xxxx
கழுதையும் குதிரையும் ஒன்றாகுமா?
பிரிட்டிஷ் பிரதமர் தாமஸ் பெலாம் ஹோல்ஸ் (நியூகாஸ்ல் பிரபு DUKE OF NECASTLE) பிரதமராக இருந்த போது லாரன்ஸ் ஸ்டேர்ன் (LAWRENCE STERN) என்ற பிரபல கதாசிரியருடன் பேசிக் கொண்டிருந்தார்.
பிரதமர் சொன்னார்,
உங்களைப் போன்ற அறிஞர்கள் எல்லாம் வேலைக்கு லாயக்கு அற்றவர்கள். உங்களுக்கு எழுதத் தெரியுமே தவிர வேலை செய்யத் தெரியாது.
உடனே எழுத்தாளர் ஸ்டேர்ன் சொன்னார்,
ஐயா, பிரதமர் அவர்களே. குதிரையும் சேனத்தை சுமக்கும்.
கழுதை அதைவிட பெரிய பாரத்தை சுமக்கும்.
கழுதையும் குதிரையும் ஒன்றாமோ!!
xxxx
பிளாட்டோவும் நானும் ஒன்றே!
ரால்ப் வால்டோ எமர்சன் (R W EMERSON) என்பவர் அமெரிக்காவின் புகழ்மிகு கவிஞர், தத்துவ அறிஞர், கட்டுரையாளர்.
அவர் ஒரு முறை கிரேக்க அறிஞர் பிளாட்டோவின் நூல் ஒன்றை பக்கத்து வீட்டு கிராமத்தானுக்குப் படிக்கக் கொடுத்தார். அந்த கிராமத்து ஆசாமி கொஞ்ச நாட்களுக்குப் பின்னர் அதைத் திருப்பிக் கொடுத்தார்.
எமர்ஸன் கேட்டார்:
புஸ்தகத்தைப் படித்தீர்களா? எப்படி இருந்தது? உங்கள் அபிப்ராயம் என்ன?
அந்தப் பட்டிக்காட்டான் சொன்னான்,
படித்தேனே! பிளாட்டோ என்னைப் போலவே கொள்கை உடையவர். என்னுடைய அச்சுதான் அவர்!
xxxx
நல்ல மூக்கொடை
ஜான் மேனார்ட் (JOHN MAYNARD) என்பவர் பிரிட்டனின் பெரிய சட்ட நிபுணர்.
அவருக்கு மிகவும் வயதானபோது, ஒருவர் அவரை வசை பாடினார்.
ஓய், கிழவரே! உமக்கு வயதாகிவிட்டது. சட்டம் எல்லாம் மறந்து போச்சு.
அந்த வயதிலும் அறிவு மழுங்காத அந்த மேதை உடனே பதிலடி கொடுத்தார்:-
அன்பரே! உண்மைதான்! நீர் படிக்காத அளவை விட அதிக அளவு சட்டம் மறந்து போச்சு!
(அவர் எந்த அளவுக்கு நூல் அறிவற்றவரோ அந்த அளவைவிட….. என்று சொன்னதன் மூலம் அவர் பெரிய முட்டாள் என்பதை இடித்துக் காட்டி மூக்கை உடைத்தார்).
Tags:– மூக்கொடை, பிளாட்டோ, எமர்சன்
XXXX SUBHAM XXX
You must be logged in to post a comment.