Compiled by London swaminathan
Date: 19 April 2016
Post No. 2739
Time uploaded in London :– 14-40
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
Eccentricity Anecdotes
கிறுக்குத்தனம், பைத்தியக்காரத்தனம் பற்றிய நிகழ்ச்சிகள்
தீ! தீ! — ஆங்கிலப் புலவர் வீட்டில் கூச்சல்
தாமஸ் கிரே என்பவர் புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞர்களில் ஒருவர். அவருக்கு தீ என்றால் பயம்—அதாவது பைரோ போபியா! யாராவது அந்த தீ, நெருப்பு என்ற வார்த்தைகளைச் சொன்னால் அந்த சொல்லே அவரைச் சுட்டது போல எண்ணுவார். இந்த புது வகை பயத்தினால் அந்த “முன் ஜாக்கிரதை முத்தண்ணா” தனது வீட்டில் தக்க ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தார்.
அவரது வீட்டு ஜன்னலில் இருந்து ஒரு ஏணி தொங்கும். அது கயிற்றினாலான ஏணி. அதன் ஒரு முனை ஜன்னலில் துவங்கி மறு முனை ஒரு தண்ணீர்த் தொட்டியில் முடியும். ஒரு வேளை தனது துணிகளும் தீப்பற்றி, ஏணியும் தீப்பற்றினாலும் தண்ணீர்த் தொட்டிக்குள்தானே விழுவார்! அவ்வளவு கன கச்சிதமான ஏற்பாடு.
சில குறும்புக்கார இளைஞர்களுக்கு கிரே அவர்களின் பயம் குறித்து தெரியும். ஒரு நாள் இரவில் அவர் வீட்டு வாசலில் நின்று தீ! தீ! என்று கூச்சலிடவே, கவிஞர் கிரே, படுக்கையிலிருந்து தாவிக்குதித்து, கயிற்றேணியைப் பிடித்து, தர தரவென்று கீழே இறங்கி தண்ணீர்த் தொட்டியில் தொப்பென்று விழுந்தார்.
வீட்டுக் காவற்காரனும் கூச்சல் கேட்டெழுந்து யாரோ தண்ணீர்த் தொட்டியில் விழுந்த சப்தம் கேட்டதே என்று ஓடோடி வந்தார். நமது புலவர் பெருமகனார் கிரே, தொட்டிக்குள் மிதந்தவாறே, குளிரில் நடுநடுங்க தீ, தீ என்று கதறினார்.
காவற்காரருக்கு நிலைமை புரிந்தது. அவரை சமாதானப் படுத்தி, தீ விபத்து எதுவும் நடக்கவில்லை என்று சொல்லி, பத்திரமாக மாடிக்கு அழைத்துச் சென்று படுக்கை அறையில் கொண்டுவிட்டார்.
xxx
‘கேக்’கில் சின்ன ‘எஸ்’ஸும், பெரிய ‘எஸ்’ஸும்! கஸ்டமர் அலப்பறை!
பிறந்த நாள் ‘கேக்’ செய்துதரும் கடைக்குள் ஒருநாள், ஒரு வாடிக்கையாளர் நுழைந்தார். டிப், டாப்பாக உடைகள் அணிந்திருந்தார்.
“ஐயா ஒரு கேக் செய்ய வேண்டும் அதில் சின்னதாக ‘எஸ்’ என்று ஆங்கிலத்தில் பொறிக்க வேண்டும். இன்னின்ன அலங்கார பூ வேலைப்பாடுகள் செய்யவேண்டும்; நாளை மறுதினம் தயாராக இருக்க வேண்டும்” என்றார்.
கடை முதலாளி, “ஓ.கே. நாளை மறுதினம் வாருங்கள். எல்லாம் பிரமாதமாக செய்து வைத்திருக்கிறேன்” என்றார்.
ஆனால் ஒரு நாள் முன்னதாகவே, அந்த கஸ்டமர், மீண்டும் கேக் கடைக்குச் சென்று, நாளை வந்துவிடுகிறேன்; மறக்கமாட்டீர்களே? என்றார். உடனே கடைக்கார பையன், ஸார், உங்களுடைய ‘கேக்’கில் முக்கால் வாசி வேலை முடிந்துவிட்டது; இதோ பாருங்கள்” என்று கேக்கை எடுத்துக் காட்டினான்.
அந்த ஆள் கேக்கைப் பார்த்ததுதான் தாமதம்; உடனே கோபத்தில் சீறிப் பாய்ந்தார். ஆங்கிலத்தில் பெரிய ‘எஸ்’ பொறித்து விட்டீர்கள். நான் சின்ன ‘எஸ்’ அல்லவா பொறிக்கச் சொன்னேன்; காரியத்தைக் கெடுத்துவிட்டீர்களே! ஐயகோ!” என்று அலறினார். கடை முதலாளி ஓடிவந்தார்.
“ஐயா! மன்னித்துக்கொள்ளுங்கள். சின்னப் பிழை நடந்துவிட்டது. உங்களுக்கு டெலிவரி நாளைதானே வேண்டும்; கவலையே படாதீர்கள்; எல்லாம் கச்சிதமாக நீங்கள் சொன்னபடியே செய்துவைக்கிறேன்; நாளைக்கு வாருங்கள்” என்றார். அவ்வளவு ‘கஸ்டமர்’களுக்கும் முன்னால், இப்படிக் கத்திவிட்டுப் போனதால். முதலாளியே பக்கத்திலிருந்து ‘கேக்’கை அழகாக செய்து முடித்து அதன் மீது சின்ன ‘எஸ்’ பொறித்தார்.
மறு நாள், சொன்ன நேரத்தில் கஸ்டமர் (வாடிக்கையாளர்) வந்தார்; ‘கேக்’கைப் பார்த்தார். பிரமாதம் என்று சொல்லிவிட்டு பர்ஸிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தார்.
முதலாளி கேட்டார்: இதை எங்கே டெலிவரி செய்ய வேண்டும்; முகவரியைக் கொடுங்கள் உடனே டெலிவரி செய்கிறேன்; அல்லது நீங்களே எடுத்துச் செல்வதானால், நல்ல பெட்டியில் வைத்து ‘பேக்’ செய்து தருகிறேன்” என்றார்.
அதற்கு அந்த கஸ்டமர் சொன்னார்;
“நோ! நோ! நான் இங்கேயே சாப்பிடத்தான், இந்த ஆர்டரைக் கொடுத்தேன்” என்று சொல்லிவிட்டு அங்குள்ள காப்பி டேபிளில் அமர்ந்து, கேக்கைச் சாப்பிடத் துவங்கினார்.
அடப் பாவிமகனே! இப்படி சாப்பிடுவதற்குத்தான் நேற்று சின்ன எஸ், பெரிய எஸ் என்று அலப்பறை செய்தாயா? என்று முதலாளியும் கடைப்பையன்களும் நினைத்தார்கள்; ஆனால் வெளியே சொல்லமுடியுமா?
Customer is always right — ‘கஸ்டமர் இஸ் ஆல்வேய்ஸ் ரைட்’ = வாடிக்கையாளரின் வாதம் எப்பொழுதும் பொருளுடைத்தே – என்பது மேல்நாட்டுக் கருத்து!
–சுபம்–
You must be logged in to post a comment.