சாக்ரடீஸை கிண்டல் அடிக்கும் கிரேக்கர்கள்! (Post No.4140)

Written by London Swaminathan

 

Date: 8 August 2017

 

Time uploaded in London- 20-46

 

Post No. 4140

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

நம்முடைய கண்ணோட்டத்தில் சாக்ரடீஸ் ஒரு சிந்தனைச் சிற்பி; பேரறிஞர்! ஆனால் அவர் காலத்திய கிரேக்க அறிஞர்கள் அவரை பைத்தியக்கரப் பயல் என்று சித்தரித்துள்ளனர். நான் ஏதென்ஸ் நகரில் ஆவலோடு வாங்கிய சீட்டுக் கட்டில் ஜோக்கர் கார்டில் சாக்ரடீஸ் உள்ளார். ஆனால் வேறு ஒரு கார்டிலும் சாக்ரடீஸ் படம் இருந்தது எனக்குக் கொஞ்சம் திருப்தி. இதைப் பார்க்கையில் சாக்ரடீஸ் பற்றி இரு வேறு கருத்துகள் உண்டோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆயினும் இரண்டாயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் நாடகங்கள் எழுதி புகழ் சேர்த்த அரிஸ்டோபனிஸ் என்பவர், எல்லா தத்துவ அறிஞர்களும் தீய கருத்துக்களைப் பரப்புவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் சாக்ரடீஸை பைத்தியக்காரன் என்கிறார்.

 

 

நம்மூர் அரசியல்வாதிகளைப் பார்க்கையில் சாக்ரடீஸ் பிழைக்கத் தெரியாத பைத்தியக்காரன்தான். கிரேக்கம் எனப்படும் கிரீஸ் நாட்டில் அக்காலத்தில் தூக்குத் தண்டனை, சிரச் சேதம் முதலியன கிடையா. எவருக்கேனும் மரண தண்டனை விதிக்கப்பட்டால் உன் கொள்கைகளைக் கைவிடுகிறாயா? அல்லது விஷத்தைக் குடிக்கிறாயா? என்று கேட்பர். அப்பாவி சாக்ரடீஸ் எனக்கு இருக்கும் ஒரே சொத்து என் கொள்கைதான்; அது என்னுடன் இருக்கட்டும் என்று சொல்லி விஷத்தைக் குடித்தார்.

அவரது ஆத்ம சிநேகிதனான கிரீட்டோ, தப்பித்துச் செல்ல வழிவகைளைக் கூறியும் சிறையிலிருந்து வெளியேற மறுத்துவிட்டார். கடைசியில் கிரீட்டோவை அழைத்து, “கிரீட்டொ! நான் வேண்டிக்கொண்ட தெய்வத்துக்கு ஒரு கோழியைப் பலி கொடுக்க மறந்து விடாதே” என்று சொல்லிவிட்டு ஹெம்லாக் என்னும் விஷத்தைக் குடித்தார். நிற்க.

 

இவரை நையாண்டி செய்து, நக்கல் அடித்த அரிஸ்டோபனிஸ், 40 நாடகங்களுக்கு மேல் எழுதினார். ஆனால் நம் கைகளில் சிக்கியது 11 நாடகங்கள்தான்.

இவருடைய வாழ்க்கைச் சரிதம் முழுதும் கிடைக்கவில்லை. ஆனால் ஏதென்ஸ் நகரில் பிறந்து 20 வயதுக்குள்ளேயே நகைச்சுவை நாடகங்களை எழுதத் துவங்கினார். இவரது  காலத்தில் ஏதன்ஸுக்கும் ஸ்பார்டாவுக்கும் 27 ஆண்டுகளுக்கு நடந்த போரில் ஏதென்ஸ் தோல்வி அடைந்தது. அத்துடன் மிகப்பெரிய கிரேக்க நாகரீகம் சீரழியத் தொடங்கியது. ஊழல் தலைவிரித்தாடியது. அவைகளக் குறை கூறியும் கிண்டல் செய்தும் நகைச் சுவை நாடகங்களை எழுதினார்.

 

இவருடைய நாடகங்கள் அங்கத நாடகங்கள் இரு பொருள்பட இருக்கும். இவரது புகழ்பெற்ற நாடகங்களில் ஒன்று தவளைகள் பற்றியது. ரிக் வேதத்தில் வரும் தவளைப் பாடலுடன் அதை ஒப்பிட்டு ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதியுள்ளேன்.

 

பிறந்த ஆண்டு- கி.மு.450

இறந்த ஆண்டு – கி.மு.385

 

My old article:

 Aristophanes, Vashistha and the Frog Song in the Rig Veda …

tamilandvedas.com/2016/12/15/aristophanes…

राजेंद्र गुप्ता Rajendra Gupta has left a new comment on your post “Aristophanes, Vashistha and the Frog Song in the R…”

 

XXXX

 

80 நாடகம் எழுதிய ஏஸ்கைலஸ்!

கிரேக்க நாடகத்தின் முன்னோடி இவர். ஏஸ்கைலஸ்– சோக நாடகங்களின் மன்னன். ஏதென்ஸ் அருகில் பிறந்தவர். அடிக்கடி இதாலிக்குச் சொந்தமான சிசிலி தீவுக்குப் போய் வந்தார். அங்கேதான் இறந்தார்.

 

மராத்தன் போரிலும் சலாமிஸ் போரிலும் பங்கேற்றவர்.

 

80 நாடகம் எழுதி 52 முறை முதல் பரிசு பெற்றவர் ஏஸ்கைலஸ் . ஆனால் நமக்குக் கிடைத்தவை ஏழே நாடகங்கள் தான்.

கிரேக்க புராணக் கதைகளைப் பயன்படுத்தி அரசியல் செய்திகளை அளித்தார். இவருடைய நாடகம் பற்றிய சிறப்பு என்னவென்றால் 2500 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்றும் இவருடைய நாடகங்கள் மேடையில் நடிக்கப்படுகின்றன (நம்முடைய மஹாபாரத நாடகங்கள் இன்றும் இந்தோநேஷியாவில் நடப்பது போல).

 

இவரது காலத்தில் பாரசீகத்துடன் நடந்த சண்டையில் கிரேக்கம் வெற்றி பெற்றது. அதன் விளைவாக போர்க்கால துன்பங்களை இவரது நாடகத்தில் காணலாம்.

பிறந்த ஆண்டு- கி.மு. 524

இறந்த ஆண்டு – கி.மு.456

 

–Subham–