பயணம் பற்றி வேதத்தில் சுவையான செய்திகள்! (Post No4946)
RESEARCH ARTICLE WRITTEN by London Swaminathan
Date: 24 April 2018
Time uploaded in London – 21-04 (British Summer Time)
Post No. 4946
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
உலகிலேயே மிகவும் பழைய பயணச் செய்திகள் இந்து மத நூல்களில்தான் உள்ளன. எனது ஆங்கில ஆய்வுக் கட்டுரையின் சுருக்கத்தை மட்டும் முன்வைக்கிறேன்.
ராமன் கால் நடையாக உத்தர பிரதேசத்தில் இருந்து இலங்கை வரை சென்றதை நாம் அறிவோம்.
ராமனுக்குப் பிறகு, மஹாபாரதப் போரில் நடு நிலை வகித்த பலராமன் பாரத யாத்திரை (தீர்த்த யாத்திரை) என்றதை உலக மஹா இதிஹாசம் மஹாபாரதம் இயம்பும்.
தமிழில் சிலப்பதிகாரத்தில் தீர்த்த யாத்திரை பற்றி மிகத் தெளிவான விஷயங்கள் இருக்கின்றன.
ஆதிசங்கரர், போக்கு வரத்து வசதி இல்லாத காலத்தில் அடர்ந்த காடுகளையும் உயர்ந்த மலைகளையும் தாண்டி இமயம் வரை சென்று ஐந்து இடங்களில் மடங்கள் நிறுவியதையும் படித்திருப்பீர்கள்.
ராமனுஜர், குருநானக் போன்ற மஹான்கள் பாரதம் முழுதும் பயணம் செய்து புனிதத் தலங்களை தரிசித்தனர். புத்தர் வட இந்தியா முழுதும் பிரசாரம் செய்தார். மாமன்னன் அசோகனோ கப்பல் மூலம் தன் மகனையும் மகளையும் இலங்கை முதலிய இடங்களுக்கு அனுப்பி தர்மப் பிரசாரம் செய்தான்.
அவ்வையார் சுந்தரமூர்த்தி சுவாமிகள் முதலியோர் கைலாஷ் வரை சென்றனர். இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஆயினும் இவைகளுக்கு எல்லாம் முன்னர் தோன்றிய ஐதரேய பிராஹ்மணத்தில் உள்ள செய்தி மிகவும் சுவையானது.
ஹரிசந்திரன் கதையை எல்லோரும் அறிவர்; உண்மையே பேசி, மிகவும் இக்கட்டுள்ளாகி, இறுதியில் உலகப் புகழ்பெற்ற சூரியகுல மன்னன். இக்க்ஷ்வாகு சூரியகுல முதல் மன்னன். அவ்வரிசையில் 28ஆவது மன்னன் ஹரிச்சந்திரன். அவனுடைய மகன் ரோஹிதன் காட்டுக்குள் ஆறு ஆண்டுகள் இருந்தான். அவன் ஒவ்வொரு முறை கிராமத்துக்குத் திரும்பி வந்த போதும் இந்திரன் பிராமணன் வடிவில் வந்து அவனைப் பயணம் செய்து கொண்டே இரு, அதனால் பல நன்மைகள் விளையும் என்கிறான்.
உலகின் மிகப்பழைய பிரயாணப் பொன்மொழிகள் இவைகள்தாம். இதோ அந்தப் பயணப் பொன்மொழிகள்:-
இந்து சந்யாசிகள் ஓரிடத்தில் ஓரிரவுக்கு மேல் தங்கக்கூடாது என்றும் விதி உள்ளது. ம ழைக்காலத்தில் மட்டும், ஒரே இடத்தில் தங்கி நான்கு மாத (சாதுர்மாஸ்ய வ்ரதம்) நோன்பு அனுஷ்டிக்க வேண்டும்
ரோஹித, காட்டிற்குச் சென்றான். ஓராண்டுக்குப் பின்னர் கிராமத்துக்குத் திரும்பி வந்தான்; அங்கு இந்திரன், பிராமணன் உருவத்தில் சென்றான். அவனிடம் சொன்னான்:” பயணம் செய்யாதவனுக்கு இன்பம் இல்லை, ரோஹித! இதை நாம் அறிவோம். நாம் மனித சமுதாயத்தில் வாழ்கையில், நல்லவனும் கூட கெட்டுப்போக வாய்ப்பு உண்டு. இதை மனிதர்களே இல்லாத இடங்களுக்குப் பயணம் செய்தால் தவிர்க்க முடியும்; பயணம் செய்வோரின் நண்பன் இந்திரன்; ஆகையால் அலைந்துகொண்டே இரு.
-ஐதரேய பிராஹ்மணம் 7-3-15
மீண்டும் ஓராண்டுக்குப் பின்னர் ரோஹித, கிராமத்து குத் திரும்பி வந்தான்; மீண்டும் இந்திரன் அவனிடம் சென்று சொன்னான்: “அலைந்து திரியும் ஒருவனுடைய கால்கள், மலருக்குச் சமமானவை. அவனுடைய ஆன்மா வளர்ந்து பழங்களை அனுபவிக்கும். மேலும் ஒருவன் பிரயாணம் செய்யும்போது ஏற்படும் துன்பங்களால் அவனது பாவங்கள் நஸித்துப் போகும்; ஆகையால் அலைந்து கொண்டே இரு.
ஒரு பிராமணன் இப்படிச் சொல்வதைக் கேட்டு அவனும் காட்டுக்குள் அலைந்தான்.
மீண்டும் ரோஹித, கிராமத்துக்கு வந்த போது, மாறு வேடத்தில் சென்ற இந்திரன் சொன்னான்:
யார் ஒருவன் உடகார்ந்து இருக்கிறானோ அவனது அதிர்ஷ்டமும் உட்கார்ந்து விடும்
அவன் எழுந்திருந்தால் அதிர்ஷ்டமும் எழுந்து நிற்கும்;
அவன் தூங்கினால் அதிர்ஷ்டமும் தூங்கிவிடும்;
அவன் நகர்ந்தால், அதுவும் நகரும்; ஆகவே அலைந்து திரி.
இதைத் தமிழில் உள்ள பழமொழிகளுடன் ஒப்பிடலாம்:
குந்தித் தின்றால் குன்றும் (அதிக அளவுள்ள செல்வமும்) கரையும்;
திரை கடலோடி திரவியம் தேடு.
உழைப்பவனுக்கு செல்வம் கிடைக்கும், தங்கும் என்பதே இதன் பொருள்
இப்படிச் சொன்னவுடன் ரோஹித காட்டுக்குச் சென்று விட்டு ஓராண்டுக்குப் பின்னர் திரும்பி வந்தான்.
கலி (யுகம்) கீழே இருக்கிறது; த்வாபர யுகம் மேலே சுற்றிக் கொண்டிருக்கிறது; த்ரேதா (யுகம்) எழுந்து நிற்கிறது, கிருத யுகம் நடந்து செல்கிறது; ஆகவே, ரோஹித நீயும் நட.
இதை இப்படியும் சொல்லலாம்: தூங்கும் மனிதன் கலியுகம் போன்றவன்;
விழித்துக் கொள்பவன் த்வாபர யுகம் போன்றவன்;
எழுந்து நிற்பவன் த்ரேதா யுகம் போன்றவன்;
பயணம் செய்பவன் கிருதயுகம் போன்றவன்.
இதைக் கேட்டு ரோஹிதன் மேலும் ஓராண்டு காட்டுக்குச் சென்றான்.
சூதாட்டத்திலும் காயுருட்டும் போது நான்கு என்பது கிருத யுகத்தைக் குறிக்கும்; இதுதான் மிகவும் அதிக மதிப்பு உடையது.
அவன் திரும்பி கிராமத்துக்கு வந்தபோது, மாறுவேடம் தரித்த இந்திரன் சொன்னான்.
யார் ஒருவன் பயணம் செய்கிறானோ அவனுக்கு தேனும், அத்திப் பழமும் கிடை க்கும். சூரியனின் அழகைப் பார். தினமும் அலைந்து திரிந்தும் அவன் பொலிவுதான் குறைந்ததா? ஆகையால் தொடர்ந்து நட.
மேலும் சில மேற்கோள்கள்
வெளிநாடு செல்லாமல், ஒருவனுக்குப் புகழ் கிட்டாது; அறிவோ சாதனைகளோ வராது – கதா கோசம்
நமக்கும் தாய், தந்தை, சஹோதரன்,நண்பன் ஆகியோருக்கும் உள்ள தொடர்பு, பந்தம் எல்லாம் அன்ன சத்திரத்தில் சந்திக்கும் பயணிகளின் உறவைப் போன்றது தாந் மஹா பாரதம், சாந்தி பர்வம்.
பயணத்தின் முக்கியத்துவத்தை உலகிலேயே பழைய நூலான ரிக்வேதத்தின் துணை நூலான ஐதரேய பிராஹ்மணம் வலியுறுத்துவது போல வேறு எங்கும் காண முடியாது!
பிராமணர்களுக்கும் பெண்களுக்கும் தடை
பிராமணர்கள் கடல் கடந்து வெளி நாடு செல்லக்கூடாது என்று மநுஸ்ம்ருதி தடை போடுகிறது.
பெண்கள் வெளிநாடு செல்லக்கூடாது என்று தொல்காப்பியம் தடை போடுகிறது. (இவை இரண்டும் பற்றி முன்னரே விரிவான கட்டுரை த, ந்துள்ளேன்)
–சுபம்