பேயை விரட்டிய விவேகாநந்தர்! அதீத உளவியல் ஆற்றல் (Post No. 2535)

viveka namste

Written by S Nagarajan

 

Date: 13  February 2016

 

Post No. 2535

 

Time uploaded in London :–  7-07  AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

 

 

ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்! – (3)

 

ச.நாகராஜன்

 

இமயமலை கிராமம் ஒன்றில்!

 

ஸ்வாமிஜி ஒரு முறை 1898ஆம் ஆண்டில் பல்ராம் பாபுவின் வீட்டில் இருந்த போது அமானுஷ்ய சக்தி பற்றி பேச்சு திரும்பியது.அதீத உளவிய்ல ஆற்றல் பற்றி பேச ஆரம்பித்தார் ஸ்வாமிஜி.

 

 

மனதை ஒருமுகப் படுத்துவதால் சுலபமாக சில அபூர்வமான சக்திகளைப் பெறலாம் என்ற ஸ்வாமிஜியின் வார்த்தைகளைக் கேட்ட சீடர் அதனால் பிரம்மம் பற்றிய ஞானத்தை அடைய முடியுமா என்று கேட்டார்.

 

நிச்சயமாக முடியாது என்று பதிலிறுத்தார் ஸ்வாமிஜி. அப்படியானால் அப்படிப்பட்ட ஆற்றல் எங்களுக்கு வேண்டாம் என்று கூறிய சீடர், இருந்தாலும் அப்படிப்பட்ட உங்களின் சொந்த அனுபவங்களைக் கேட்க ஆசைப்படுகிறோம் என்று கூறினார்.

உடனே இமயமலையில் தனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றைக் கூறத் தொடங்கினார் ஸ்வாமிஜி.

 

 

இமயமலைப் பகுதியில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த போது ஒரு நாள் இரவு மலைப் பகுதி மக்கள் வாழும் ஒரு கிராமத்தில் தங்க நேர்ந்தது.திடீரென்று நள்ளிரவில் பெரிதாக முரசு அறையும் பேரொலியைக் கேட்ட ஸ்வாமிஜி என்ன விஷயம் என்று தான் தங்கியிருந்த வீட்டாரைக் கேட்டார்.

 

vivekananda-rock-and-valluvar

Picture of Vivekananda Rock in Kanyakumari

ஆவி வந்து பீடிக்கப்பட்ட மனிதன்

 

அதற்கு அவர் அந்த கிராமத்தில் ஒருவர் மீது நல்ல ஆவி ஒன்று ஆவிர்ப்பித்து இருப்பதாக பதில் கூறினார்.

ஆவல் உந்த சத்தம் வந்த இடத்திற்கு கூட வந்தவர்களுடன் ஸ்வாமிஜி சென்றார்.

 

அங்கு ஏராளமான மக்கள் கூட்டம் குழுமி இருந்தது. அதில் நடுவே உயரமான மனிதர் ஒருவர் இருந்தார். நீண்ட தலைமுடி அவருக்கு! அவரைச் சுட்டிக் காட்டி அவரிடம் தான் ஒரு தேவதை ஆவிர்ப்பித்து இருப்பதாகச் சொன்னார்கள்.

 

அங்கு ஒரு கோடாலி தீயில் நன்கு பழுக்கக் காய வைக்கப்பட்டிருந்தது. அக்னியில் இருந்து சிவப்பாக மாறி இருந்த அந்க்த கோடாலியை எடுத்து அவர் தன் உடம்பு மீதும் தலை முடி மீதும் வைத்தார்.

 

ஆச்சரியத்திலும் ஆச்சரியம். அந்தப் பழுக்கக் காய்ச்சிய கோடாலி அவர் மீது எந்த தீப் புண்ணையும் ஏற்படுத்தவில்லை. அவர் முடியிலும் எந்த பாதிப்பும் இல்லை. அவர் வலியினால் துடிக்கவும் இல்லை,

 

மௌனமாக வாயடைத்துப் போனார் ஸ்வாமிஜி.

 

அப்போது அந்த கிராமத் தலைவன் அவரிடம் வந்து, “ஸ்வாமிஜி! தயவு செய்து இந்த தேவதையை நீங்கள் தான் போக்க வேண்டும், சற்று கருணை காட்டுங்கள்” என்று வேண்டிக் கொண்டான். என்ன செய்வதென்று ஒரு கணம் ஸ்வாமிஜி திகைத்துப் போனார்.

 

ஆனால் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற கருணை உள்ளத்துடன் ஆவியால் பிடிக்கப்பட்டிருந்த அந்த மனிதனை அணுகினார். அங்கு சென்றவுடன் அந்தப் பழுக்கக் காய்ச்சிய கோடாலியை சோதிக்க எண்ணம் கொண்டு அதைத் தொட்டார்.  அவர் கை தீப்புண்ணால் சிவந்தது. அப்போது அந்தக் கோடாலி சற்று குளிர்ந்து சிவப்பு நிறத்தை இழந்து தான் இருந்தது. அதற்கே அவ்வளவு சூடு!!

 

 

கோடாலியில் ஏதாவது இருக்கும் என்ற ஸ்வாமிஜியின் எண்ணம் காற்றில் பறந்து போனது – கையில் ஏற்பட்ட தீப்புண்ணால்!

இருந்தாலும் அந்த புண்ணான கையுடன் அந்த  மனிதனின் தலை மீது கை வைத்து ஒரு ஜபத்தை உச்சரித்தார் ஸ்வாமிஜி.

என்ன ஆச்சரியம்! பத்து பன்னிரெண்டு நிமிடங்களில் அந்த தேவதை அவனை விட்டு நீங்க, அவன் சுய உணர்வைப் பெற்றான்.

 

உடனே அங்கு குழுமி இருந்த அனைவரும் பரவசம் அடைந்து ஸ்வாமிஜியை விழுந்து வணங்கினர்.

 

அடடா! அவர்களின் பக்தியைக் கண்ட ஸ்வாமிஜி திகைத்துப் போனார்.

 

அவர்களுக்கு ஒரு தெய்வீக மனிதராக அவர் ஆகி விட்டார்.

என்ன நடந்தது என்று ஸ்வாமிஜிக்குப் புரியவில்லை..

ஆகவே மௌனமாக தன்னுடன் வந்தவருடன் வீட்டிற்குத் திரும்பினார்.

கையில் பட்ட தீக்காயத்துடனும் என்ன நடந்திருக்கும் என்ற எண்ணத்துடனும் படுக்கையில் படுத்த ஸ்வாமிஜிக்கு உறங்கவே முடியவில்லை.

 

உடம்பில் பழுக்கக் காய்ச்சிய கோடாலியை வைத்துக் கொண்ட அந்த மனிதனை நினைத்த போது ஸ்வாமிஜிக்கு ஷேக்ஸ்பியரின் வரிகள் தாம் நினைவுக்கு வந்தன:

 

“THERE ARE MORE THINGS IN HEAVEN AND EARTH,

HORATIO, THAN ARE DREAMT OF YOUR PHILOSOPHY”

 

ஸ்வாமிஜி பேச்சை நிறுத்த பிரமித்துப் போயிருந்த சீடர், “ஸ்வாமிஜி பின்னால் எப்போதாவது அந்த மர்மத்தை நீங்கள் விடுவிக்க முடிந்ததா?” என்று கேட்டார்.

 

 

“இல்லை” என்று பதிலிறுத்தவர், இப்போது தான் சட்டென்று அது என் நினைவுக்கு வந்தது. அதை உங்களிடம் சொல்கிறேன்” என்றார்.

 

பிறகு தொடர்ந்தார்: “ஆனால் ராமகிருஷ்ணர் இந்த மாதிரி சித்திகளை ஒரு போதும் ஆதரித்ததில்லை.இப்படி மனதை வேறு ஒரு பக்கம் செலுத்துவதாலெல்லாம் மெய்ப்பொருளை அறியவே முடியாது என்று கூறி இருக்கிறார்”

 

ஸ்வாமிஜி தொடர்ந்து மேலை நாடுகளில் இப்படிப்பட்ட அற்புதங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பற்றிப் பேசலானார்.

அற்புதங்கள் தொடரும்

 

குறிப்பு: மனதின் அபூர்வ ஆற்றல்கள் பற்றி முழுவதுமாக அறியவும் மேற் கூறிய சம்பவத்தை ஆங்கிலத்தில் படிக்கவும்,

“TALKS WITH SWAMI VIVEKANANDA “ (RAMAKRISHNA MUTT) என்ற புத்தகத்தைப் பார்க்கலாம் 500 பக்கங்கள் அடங்கியுள்ள இந்த நூலில் ஸ்வாமிஜி பல விஷயங்களைத் தெளிவு பட விளக்குகிறார். மேலே உள்ள சம்பவம் 110ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

 

-Subham–