Picture of Skanda/Kartikeya/Murugan in Cambodia (from Wikipedia)
திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை -6
நரகத்துக்கு போவோர் பட்டியல்
யார் யார் நரகத்துக்குப் போவார்கள் என்று ஒரு சுவயான பட்டியலைத் தருகிறார் அருணகிரிநாதர்:
ஓதுவித்தவர் கூலிகொடாதவர்
மாதவர்க்கு அதிபாதகமானவர்
ஊசலில் கனலாய் எரி காளையர் மறையோர்கள்
ஊர்தனக்கு இடரே செயும் ஏழைகள்
ஆர்தனக்கும் உதாசினதாரிகள்
ஓடி உத்தமர் ஊதிய நாடினர் இரவோருக்கு
ஏதும் இத்தனை தானம் இடாதவர்
பூதலத்தினில் ஓரமதானவர்
ஈசர் விஷ்ணுவை சேவை செய்வோர்தமை இகழ்வோர்கள்
ஏகசித்த தியானமிலாதவர்
மோகமுற்றிடு போகிதம் ஊறினர்
ஈனர் இத்தனை பேர்களும் ஏழ்நரக உழல்வாரே
பொருள்: குரு தட்சிணை கொடுக்காதவர்கள், தவ வலிமை மிக்க பெரியோர்களுக்கு ஊறுவிளைவிப்போர், காம வெப்பத்தில் நெருப்பாய் எரியும் இளையோர், வேதம் அறிந்த பார்ப்பனர் ஊர்களுக்கு கெடுதி செய்வோர், எல்லோரையும் உதாசினம் செய்து பேசுவோர், உத்தமர்களின் செல்வத்தை ஏமாற்றிப் பறிப்போர், பிச்சை கேட்போருக்கு தானம் இடாதவர், பூவுலகில் பாரபட்சமாகப் பேசுவோர், சிவனையும் விஷ்ணுவையும் க்உம்பிடுவோரை கேலி செய்வோர், ஒரு முகப் பட்ட மனத்துடன் தியானம் செய்யாதவர்கள், மோகத்தில் மூழ்கி காமத்தில் திளைப்பவர்கள், இன்னர்கள் இத்தனை பேரும் ஏழுவகை நரகங்களில் துன்புறுவார்கள்.
இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு வேண்டுவோர் கௌமாரம்.காம் –இல் திரு கோபாலசுந்தரம் அவர்களின் அற்புதமான மொழிபெயர்ப்பைப் படிக்கவும்.
“ கடவுள் ஒரு திருடன் “
ஒரு நாஸ்தீகர் இப்படிச் சொல்லியிருந்தால் நாம் இது அவர்களின் வாடிக்கையான வசனம் என்று தள்ளிவிடலாம். அருணகிரிநாதரும் ஞான சம்பந்தரும் மீரா பாயும் சொன்னால் ஒதுக்கிவிட முடியுமா? கொஞ்சம் ஆழ்ந்து படிக்க வேண்டும்.
கண்ணபிரானைப் பற்றிப் பாடுவோர் எல்லாம் அவனை ‘சோர்’ (சம்ஸ்கிருத இந்தி மொழியில் சோர, சோர் என்றால் திருடன்) என்று புகழ்ச்சியாகப் பாடுவதைக் கேட்கிறோம். வெண்ணையை மட்டுமா திருடினான். கோபியரின் புடவையையும் அல்லவா திருடினான் கள்ளக் கிருஷ்ணன். ஆனால் இந்தத் திருட்டுக்கும் நம்ம ஊர் அரசியல் திருடர்களுக்கும் வித்தியாசம் உண்டு. கண்ணன் திருடினால் அவன் அன்பின் காரணமாக நம் வீட்டில் செல்வம் குவியும். நாம்ம ஊர் அரசியல்வாதிகள் திருடினால் நம் வாழ்வில் இருள் கவியும்.
அருணகிரிநாதர் கூட கண்ணனின் பெருமையைப் பாடுகிறார்:
சிகர குடையினி னிரைவர இசைதெரி
சதுரன் விதுரனில் வருபவ னளையது
திருடி யடிபடு சிறியவ நெடியவன் மதுசூதன்
என்று பழனி திருப்புகழில் பாடுகிறார்.
சம்பந்தப் பெருமான் சிவனுக்கும் திருட்டுப் பட்டம் சூட்டினார். சிவனை உள்ளம் கவர் கள்வன் என்று மூன்று வயதிலேயே முதல் பாட்டிலேயே அடையாளம் கண்டுவிட்டார்:
தோடுடைய செவியன், விடை ஏறி ஓர் தூவெண் மதி சூடி
காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் உனை நான் பணித்து ஏத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
மூன்று வயதிலேயே சம்ப்ந்தரின் உள்ளத்தைக் கவர்ந்ததால் ஞான சம்பந்தர் இந்து சமய வரலாற்றில் அழியாத இடம் பெற்றுவிட்டார்.
முருகனுக்கும் திருட்டுப் பட்டம் உண்டு என்பது பலருக்கும் தெரியாது. அருணகிரிநாதர் போன்ற அருளாளர்கள் தான் இப்படிச் சொல்லமுடியும்.
பெண் திருடி
செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன், பிறவான், இறவான்,
‘சும்மா இரு சொல் அற’ என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே
(கந்தர் அநுபூதி, பாடல் 12)
இறைவனின் திருவிளையாடல்கள் எண்ணிலடங்கா. எவ்வளவோ அடியார்கள் வாழ்வில் கொள்ளையர் ரூபத்தில் வந்தும் அருள் பாலித்தான். இதுபோல பல அரசர்களும் புலவர்கள் பேரில்கொண்ட அன்பின் காரணமாக அவரை மீண்டும் ஊருக்கு வரவழைக்க இப்படி வழிப்பறிக் கொள்ளை அடித்ததுண்டு.
எனது முந்தைய திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள்
1.தமிழில் திட்டத் தெரியுமா? வசை பாடுவது எப்படி?
2.சம்பந்தருக்கு அடிமை அருணகிரிநாதர்
3. தனிமையில் இனிமை: அருணகிரிநாதர்
4. டாக்டர் முருகனும் ‘பேஷன்ட்’ அருணகிரிநாதரும்
5. அருணகிரிநாதருடன் 60 வினாடி பேட்டி
6.’திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம்’
Contact London Swaminathan at swami_48@yahoo.com for the list of all the 400+ articles.