சந்திரனில் கடைசியாக நடந்த மனிதன்! (Post No.2673)

Apollo_17_Cernan_on_moon

Written by S NAGARAJAN ( for Bhagya Magazine)

Date: 29 March 2016

 

Post No. 2673

 

Time uploaded in London :–  8-05 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

பாக்யா அறிவியல் துளிகள் தொடரில் 25-3-2016 இதழில் வெளி வந்த கட்டுரை

 

 

சந்திரனில் கடைசியாக நடந்த மனிதன்!

 

ச.நாகராஜன்

apollo 17,schmidt

“சந்திரனில் நின்று முதலில் பூமியைத் திரும்பிப் பார்த்த போது நான் அழுதேன்” – விண்வெளி வீரர் ஆலன் ஷெப்பர்ட்

 

நீல் ஆர்ம்ஸட் ராங் சந்திரனில் முதன் முதலாகக் கால் பதித்தவுடன் சந்திரப் பயணம் ஆரம்பித்தது. இது சூடு பிடித்து பல பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன.

 

ஆனால் அமெரிக்க விண்வெளி வீரரான செர்னான் சந்திரனில் கால் பதித்து 44 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இதுவரை யாரும் சந்திர பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை.

இதுவரை மொத்தம் பன்னிரண்டு பேர் சந்திரனில் இறங்கியுள்ளனர்.

 

 

இவர்களில் யாரும் ஒரு தடவைக்கு மேல் சந்திரனில் இறங்கவில்லை என்பதும் ஒரு சுவாரசியமான செய்தி தான்!

அபல்லோ 11

 

1969ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி நீல் ஆர்ம்ஸ்ட் ராங் சந்திரனில் இறங்கி பெரும் சாதனையைப் படைத்தார். இவரைத் தொடர்ந்த் பஸ் ஆல்ட் ரின் (Buzz Aldrin)  அங்கு இறங்கினார். அவர்கள் அமெரிக்க கொடியை அங்கு நாட்டினர். பத்திரமாக பூமிக்குத் திரும்பினர்.

அபல்லோ 12

இந்தக் கலத்தில் சென்றவர்கள் பீட் கான்ராட் மற்றும் ஆலன் பீன் (Pete Conrad & Alan Bean) இவர்கள் இருவரும் 1969ஆம் ஆண்டு நவம்பர் 19 மற்றும் 20 ஆகிய இரு நாட்கள் அங்கு இருந்தனர்.

 

அபல்லோ 13

இதில் சென்றவர் யாரும் சந்திரனில் இறங்கவில்லை. ஆக்ஸிஜன் டேங்க் ஒன்று வெடிக்கவே கலம் பெருத்த அபாயத்திலிருந்து தப்பியது.

 

அபல்லோ 14

இதில் பயணப்பட்ட ஆலன் ஷெப்பர்ட் மற்றும் எட்கர் மிட்செல்  (Alan Shepard & Edgar Mitchell) 1971ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் நாளன்று சந்திரனில் இறங்கினர். இதில் ஷெப்பர்ட் கோல்ப் பந்துகளை இரு முறை அடித்துப் பார்த்தார்.

 

அபல்லோ 15

இந்தக் கலத்தில் சென்ற டேவிட் ஸ்காட் மற்றும் ஜேம்ஸ் இர்வின் (David Scott & James Irwin) ஆகிய இருவரும் 1971 ஜூலை 31ஆம் தேதி சந்திரனில் இறங்கினர். மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்த பின்னர்  ஆகஸ்ட் 2ஆம் நாளன்று பூமிக்குப் பத்திரமாகத் திரும்பினர். பதினெட்டரை மணி நேரம் இவர்கள் கலத்தின் வெளியே இருந்து லூனார் ரோவரை இயக்கிப் பார்த்தனர்.  சுமார் 77 கிலோ எடையுள்ள சந்திரக் கற்களையும் இவர்கள் பூமிக்குக் கொண்டு வந்தனர்.

 

அபல்லோ 16

இந்தக் கலத்தில் பயணித்த ஜான் யங் மற்றும் சார்லஸ் ட்யூக் (John Young & Charles Duke) ஆகிய இருவரும் சந்திரனில் வெற்றிகரமாக இறங்கினர். 1972ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதியிலிருந்து 23ஆம் தேதி முடிய மூன்று நாட்கள் இவர்கள் அங்கு இருந்தனர். சுமார் 71 மணிகள் அங்கிருந்த இவர்கள் மூன்று சந்திர நடைப் பயணத்தை மேற்கொண்டனர். சுமார் 20 மணி 14 நிமிடங்கள் இந்த நடைப் பயணம் நீடித்தது. இவர்கள் லூனார் ரோவரை 26.7 கிலோமீட்டர் இயக்கினர்.

apollo-17

Apollo 17 was the sixth and last Apollo mission in which humans walked on the lunar surface. On Dec. 11, Lunar Module Pilot Harrison H. Schmitt and Commander Eugene A. Cernan, landed on the moon’s Taurus-Littrow region in the Lunar Module, while Command Module Pilot Ron Evans continued in lunar orbit.

அபல்லோ 17

இந்தக் கலத்தில் ப்யணித்த யூஜீன் செர்னான் மற்றும் ஹாரிஸன் ஷ்மிட் (Eugene Cernan & Harrison Schmitt) ஆகிய இருவர் தான் சந்திரனில் கடைசியாக இறங்கிய மனிதர்கள். இவர்களுக்குப் பின்னர் இது வரையிலும் யாருமே சந்திரனுக்குப் பயணம் மேற்கொள்ளவில்லை. அபல்லோ 17 விண்கலம் 1972 டிசம்பர் 11ம் தேதி சந்திரனில் இறங்கியது. இந்த சந்திரப் பயணிகள் டிசம்பர் 19ஆம் தேதியன்று பூமிக்குப் பத்திரமாகத் திரும்பினர். மூன்று நாட்கள் இவர்கள் சந்திரனில் இருந்தனர். கலத்தின் மொத்தப் பயண நாட்கள் 12. சந்திரனை விட்டுக் கிளம்பும் முன்னர் செர்னான் தனது மகள் ட்ரேஸியின் இனிஷியல்களை சந்திரனில் எழுதினார். அங்கு காற்றோ மழையோ பெய்யாது என்பதினால் இன்று வரை அந்தப் பெயரின் முதலெழுத்துகள் அங்கு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 

சுமார் 566 மணிகள் 15 நிமிடங்கள் விண்வெளியில் கழித்திருக்கும் செர்னான் 73 மணிகள் சந்திரனில் இருந்திருக்கிறார் என்பது ஒரு தனிப் பெருமையாகும்.

 

சந்திரனில் கடைசியாக இறங்கிய மனிதர் என்ற பெருமைக்குரிய செர்னான் தனது பயண அனுபவத்தை ‘தி லாஸ்ட் மேன் ஆன் தி மூன் (The Last Man on the Moon) என்ற டாகுமெண்டரி படத்தில் சுவைபடச் சொல்லியுள்ளார். இந்தப் படம் 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதியன்று அமெரிக்க தியேட்டர்களில் வெளியிடப்பட்டது.

“சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு பையன் கனவிலும் நினைக்க முடியாத் ஒரு பயணத்தை மேற்கொண்ட கதை இது”” என்கிறார் இந்தப் படம் பற்றி செர்னான்.

 

இந்தப் படம் தயாரிக்க சுமார் ஐந்து ஆண்டுகள் பிடித்தன. இதில்  செர்னான் எப்படி ஒரு விண்வெளி வீரர் கடினமான பயிற்சிகளைப் பெறுகிறார் என்பதை விளக்குகிறார். ஒரு விண்வெளி வீரர் தனது குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடவே முடியாது என்பதை வருத்தத்துடன் பதிவு செய்யும் அவர், “ஏனெனில் ஒரு விண்வெளி வீரர் வாரத்திற்கு எட்டு நாட்கள் வேலை செய்யவேண்டியிருக்கிறது” என்று நகைச்சுவையுடன் வேலைப்பளு பற்றிக் குறிப்பிடுகிறார்.  இந்தப் படம் விண்வெளி ஆர்வலர்களுக்கு பிடித்த படமாக இருப்பதோடு அடுத்து சந்திரனுக்கு ஒரு மனிதன் பயணப்பட வேண்டும் என்ற ஆசையையும் உருவாக்கியுள்ளது.

 

einstein

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

வெள்ளலூர் அண்ணாசாமி சுந்தரம் மகாத்மா காந்திஜியின் தொண்டர்களுள் ஒருவர். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிகுந்த ஈடுபாடுடன் கலந்து கொண்ட அவரை காந்திஜி சுதந்திர இயக்கச் செய்திகளை மேலை நாடுகளில் பரப்புமாறு பணித்தார். இந்த ஆணையை சிரமேற்கொண்ட சுந்தரம் ஏழு மாத காலம் மேலை நாடுகளில் பயணித்தார். அப்போது பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீனையும் சந்தித்து மஹாத்மாவின் அஹிம்சைப் போராட்டம் பற்றி விளக்கினார். இதனால் பெரிதும் கவரப்பட்ட ஐன்ஸ்டீன் காந்திஜிக்கு ஒரு கடிதம் எழுதி அதை சுந்தரத்திடம் கொடுத்து காந்திஜியிடம் சேர்ப்பிக்குமாறு வேண்டினார்.

அதில் காந்திஜியின் அஹிம்சா வழியை பாராட்டியதோடு, “ஒரு நாள் உங்களை நேரில் சந்திக்க முடியும் என்று  நம்புகிறேன்” என்று ஐன்ஸ்டீன் எழுதியிருந்தார். (I hope that I will be able to meet you face to face some day.)

 

இதைப் பார்த்து மகிழ்ந்த காந்திஜி தனது கொள்கைகளை ஐன்ஸ்டீன் ஏற்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்து 18-10-1931 தேதியிட்ட கடிதம் ஒன்றை அவருக்கு அனுப்பினார். அதில் ஐன்ஸ்டீன் தெரிவித்திருந்த விருப்பத்தை வரவேற்று, “நானும் உங்களை நேருக்கு நேர் சந்திக்க விரும்புகிறேன், அதுவும் இந்தியாவில் என் ஆசிரம்த்தில்” (I do indeed wish that we could meet face to face and that too in India at my Ashram.)  என்று எழுதி அனுப்பினார்.

 

ஆனால் இருவரும் நேரில் சந்திக்க முடியவே இல்லை! மனதால் இணைந்தனர் மஹாத்மாவும் மாபெரும் விஞ்ஞானியும்!

******