Compiled by S NAGARAJAN
Article No.1900; Dated 31 May 2015.
Uploaded at London time: 6-52 am
இலக்கியப் பணியில் கண்ணதாசன்! – 3
By ச.நாகராஜன்
சாவுக்குப் பயப்படவில்லை – கவிஞர்!
’பொன்னுடன் பிறந்தேன்’ பகுதியில், ‘சாவை மகிழ்ச்சியோடு வரவேற்கும் என்னை விட்டு, சாகவே விரும்பாத அவரைக் கொண்டு போய் விட்டார்’ எனக் கூறும் தாங்கள், ‘ஶ்ரீ கிருஷ்ணகாந்தன் பாமாலைப்’ பகுதியில்,
‘கனிவுடைய வயதிலொரு எழுபது கொடுத்தென்னைக் காத்தருள் கிருஷ்ண காந்தா’ என்றும்,
‘பதி நினது கதை புகல உடல் நிலையை நீ கொஞ்சம் பார்த்தருள் கிருஷ்ண காந்தா’ என்றும்,
‘விவரமறியாத எனை பல வயது வாழ விடு விமலனே கிருஷ்ணகாந்தா’
என்றும், முரண்பாடாகக் கூறி இருப்பது ஏன்?
இப்படி உரிமையோடு கேள்வியைக் கேட்ட அன்பரின் பெயர் இர.இலாபம் சிவசாமி.
புங்கம்பட்டியைச் சேர்ந்தவர்.
அதற்கு கண்ணதாசன் ஜனவரி 1978 இதழில் கவிஞர் இப்படி பதில் அளிக்கிறார்:-
நான் வயது கேட்கிறேன். ஆரோக்கியத்தைக் கேட்கிறேன். ஆனால் மரணம் வந்து விடுமோ என்று அஞ்சுவதில்லை. நான் இறந்துவிட நேர்ந்து விடும் என்று தோன்றும் போது, மரணத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளத் தயாராகி விடுவேன். சுருங்கச் சொன்னால் ஆரோக்கியமாக நடமாட விரும்புகிறேன்; சாவுக்குப் பயப்படவில்லை.
நான் நிரந்தரமானவன். எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை!
தனது வாக்குமூலமாக அவர் படைத்த ஒரு பாடலில்
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு
இசைப்பாடலிலே என் உயிர்த்துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
காவியத் தாயின் இளைய மகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன் –நான்
காவியத் தாயின் இளைய மகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்
பாமர ஜாதியில் தனி மனிதன் – நான்
படைப்பதனால் என் பேர் இறைவன்
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு
இசைப்பாடலிலே என் உயிர்த்துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் – அவர்
மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் – நான்
மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் – அவர்
மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் – நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை – எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு
இசைப்பாடலிலே என் உயிர்த்துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
“நான் நிரந்தரமானவன் அழிவதில்லை – எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்று முத்தாய்ப்பாகக் கூறிய கவியரசர் இசைப்பாடலில் தன் உயிர்த்துடிப்பு இருப்பதாகத் தன்னிலை விளக்கம் அளித்து விட்டார்.
ஆக கண்ணதாசனின் பாடல்கள் இருக்கும் வரை, எங்கேனும் ஓரிடத்தில் ஒலிக்கும் வரை அந்த உயிர்த்துடிப்பு இருப்பதாகத் தான் அர்த்தம். அந்தப் பாடல் ஒலிக்கும் வரையில் அவர் நிரந்தரமானவர்.
‘அந்த நிலையினில்’ அவருக்கு மரணமில்லை! ரத்த திலகத்தில் திலகமான பாடலைத் தானே பாடினார் கவியரசர்.
அவரே பாடியுள்ள அந்தக் காட்சியில் ‘எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்ற வரியைப் பாடும் போது மட்டும் அவர் இமைகளை மூடிக் கொண்டு கைகளை ஆட்டுவதைப் பார்க்கலாம்!
‘கண்களை மூடினாலும்’ காலமெல்லாம் ஜீவித்திருப்பதை ‘சிம்பாலிக்காக’ உணர்த்தி விட்டாரோ, என்னவோ!
கண்ணனருள் கை கூட கண்ணதாசனின் பாடல்கள்!
நீண்ட ஆயுளைக் கேட்டவர்; அதில் ஆரோக்கியமான வாழ்வைக் கேட்டவர்; அதில் பரமனின் புகழையும் தெள்ளு தமிழ்க் காவியங்களையும் பாட ஆசைப்பட்டவர். இதற்கு ‘ஆகாத தொடர்பையெல்லாம் அறுக்க’ இறைவனை வேண்டியவர் என்ற அளவில் பலப்பல பாடல்களைப் பாடியவர் கண்ணனின் லீலைகளைத் தான் பாடியதைக் கற்றோர்க்கு கண்ணன் அருள் கை கூடும் என்கிறார்:-
“வடமொழியின் கீதத்தைத் தமிழினிலே வரைகின்றேன்
கீத கோவிந்தமிதைக் கிருஷ்ணனது லீலைகளை
நாதமொழி விளையாடும் நல்ல மணிப் பாடல்களை
சொல்லோடு பொருளழகு தோய்ந்து வரும் கவிதைகளை
கற்றோர்க்கும் மற்றோர்க்கும் கண்ணனருள் கைகூடும்!”
என்று அவரது கூற்று உண்மையே என்பதை ‘கோபியர் கொஞ்சும் ரமணன்’ (ஜெயதேவரின் ரஸலீலா) என்ற அவரது காப்பியம் படிப்போர்க்குப் புலனாகும்.
டாக்டர் சரஸ்வதி ராமநாதன், கவிஞர் கண்ணதாசன் படல்கள் பற்றி ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.(நாங்களாண்டுதோறும் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று மதுரை தினமணி அலுவலகத்தில் நடத்திய மாபெரும் பட்டி மன்றங்களில் கலந்துகொண்டு எங்களை மகிழ்வித்தவர்)
இலக்கியப் பணி – ஒரு கண்ணோட்டம்
கண்ணதாசனின் இலக்கியப் பணியை
- அரசியல் சார்ந்த பாடல்கள், கட்டுரைகள், கவிதைகள் (இதில் பெரும்பாலானவை அபத்தமானவை என்று அவரே பின்னால் கூறி விட்டார்)
- திரை இசைப் பாடல்கள்
- கதைகள் மற்றும் நாவல்கள்– பொது
- கட்டுரைகள் – பொது
- ஆன்மீக இலக்கியம் (அர்த்தமுள்ள இந்து மதம் உள்ளிட்டவை)
- காப்பியங்கள்
- சுய சரித்திரம் (இது மிக முக்கியமானது – ஏனெனில் இதில் சமகால அரசியல் அடங்கி இருக்கிறது)
- திரைக் கதை வசனம்
- மேடைப் பேச்சுக்கள் மற்றும் கேள்வி–பதில்கள்
- பொதுவான கவிதைகள்
- பத்திரிகை மற்றும் அரசியல் அறிவிப்புகள் உள்ளிட்ட இதர எழுத்துக்களும் மொழி பெயர்ப்புகளும்
என்ற பல பெரும் பிரிவுகளில் பிரிக்கலாம்.
எப்படிப் பிரித்தாலும். இவற்றில் எதைப் படித்தாலும் அன்றாட நிர்வாக ரீதியில் அவர் எழுதியவை மற்றும் அரசியல் சார்ந்த தவறான கொள்கையின் அடிப்படையில் அமைந்த கட்டுரைகள் ஆகியவற்றைத் தவிர இதர இலக்கியப் பணியில் அவரது பணி மகத்தானது என்பதை உரத்த குரலில் ஓங்கிக் கூறலாம்.
தனித் தனியே ஒவ்வொன்றையும் அலசி ஆராய்ந்தால் இந்த உண்மை தெரியவரும்.
ஈர்ப்புள்ள அன்பர்கள் அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் போகலாம்; இறுதியில் கண்ணனைச் சேரலாம்!
- தொடரின் இப்பகுதி முற்றும்
You must be logged in to post a comment.