கம்பன் காலத்தில் கமாண்டோ COMMANDO படை இருந்ததா? (Post No.5051)
Written by London Swaminathan
Date: 27 May 2018
Time uploaded in London – 17–35
Post No. 5051
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
கம்பனுக்குக் கணக்குத் தெரியாது. கம்ப ராமாயணத்தில் ஆயிரம் கோடி, நூறு கோடி என்றெல்லாம் படைகளின் எண்ணிக்கைக்குப் பயன்படுத்துவார். அந்தக் காலத்தில்– ராமாயண காலத்தில்– அல்லது அதற்குச் சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் அவதரித்த கம்பன் காலத்தில் ஜனத் தொகை மிகவும் குறைவு. ஆயினும் கவிஞர்கள் எதுகை மோனைக்காக இஷ்டப்பட்ட எண்களைப் பயன் படுத்துவர். ரிக் வேதம் முழுதும் இந்திரன் அழித்த அசுர படை எண்ணிக்கை ஆயிரக் கணக்கிலேயே இருக்கும்; அக்காலத்திலும் அவ்வளவு ஜனத்தொகை கிடையாது. ஆனால் கவிஞர்களுக்கே உரித்தான உரிமை அது. புத்த மத நூல்களில் 500 அல்லது ஆயிரம் என்ற எண்ணை சர்வ சாதாரணமாகப் பிரயோகிப்பர். இதை எல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால் கம்பன் சில பாடல்களில் பேய்கள் பற்றிச் சொல்லும் போதும் ஆயிரம் பேய்கள் பற்றிப் பேசுகிறான்!
பல பாடல்களில் ராவணன் படையில் இருந்த பேய்கள் பற்றிப் பாடுகிறான். இதோ ஒரு பாடல்
பொய்யினும் பெரிய மெய்யான் பொருப்பினைப் பழித்த தோளான்
வெய்யன் என்று உரக்க சாலத் திண்ணியான் வில்லின் செல்வன்
பெய்கழல் அரக்கன் சேனை ஆர்த்து எழப் பிறக்கு பல் பேய்
ஐ இருநூறு பூண்ட ஆழி அம் தேரின் மேலாம்
—யுத்த காண்டம்
பொருள்:
“வயமத்தன் என்ற ஆள் பொய்யைக் காட்டிலும் பெரிய உடலைக் கொண்டவன்; மலையினை விடப் பெரிய தோள்கள் உடையவன்; கொடியவன் என்று சொல்லத்தக்க தோற்றம் கொண்டவன்; வில் வீரன்; வீரக் கழல் அணிந்த ராவணன் சேனை ஆரவாரம் செய்து கிளம்புமாறு ஆயிரம் பேய்கள் பூட்டிய பல சக்கரத் தேரில் வருபவன்.”
இதில் பேய்கள் என்பது நாம் சாதரணமகப் பயன்படுத்தும் பேய்=பூத= பிசாசு என்னும் பொருளுடைத்தா அல்லது வேறா என்பதே நாம் ஆராய வேண்டிய விஷயம். இந்தப் பாட்டுக்குப் பொருள் எழுதிய பழைய உரைகாரர் களும் பேய்களை அப்படியே ‘பேய்’ என்று எழுதிவிட்டுப் போய் விட்டனர்.
நாமோ ஒரு பேய்க்கே மக்கள் பயந்து ஓடுவர் என்று கதைகளில் படிக்கையில் 1000 பேய்கள் தேரில் பூட்டப்பட்டது என்பது வேடிக்கையாக இருக்கிறது. இந்திரஜித்தின் கொடி பேய்க் கொடி என்பதைப் பின்னொரு பாடலில் கம்பன் பகர்வான்.
பேய்கள் என்பது வேடம் அணிந்த விசேஷப் படை என்று நான் ஊகிக்கிறேன். தற்காலத்தில் பெருந் தலைவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க ‘கருஞ் சிறுத்தைகள்’ (BLACK PANTHERS) ‘கருப்புப் பூனைகள்’ (BLACK CATS) என்ற கமாண்டோகளைப் பயன் படுத்துகிறோம். காலப்போக்கில் இவர்களின் பெயர்கள் மாறுகிறது என்று வைத்துக் கொள்வோம். 100 ஆண்டுகளுக்குப் பிறகு, செய்திப் பத்திரிக்கைகளைப் படிப்போருக்கு நாம் விளக்கம் சொன்னால்தான் அவர்களுக்கு அர்த்தம் புரியும். ஆனால் கம்ப ராமாயண உரைகாரர்கள் விளக்கமே சொல்லாமல் போய்விட்டனர்.
இப்பொது நாம் Commando கமாண்டோ படைகள் என்று சொல்லும் சிறப்புப் படையினர் போல அக்காலத்திலும் இந்திரஜித் மற்றும் ராவணன் படையில் கருப்பு உடை அணிந்த வீரர்கள் இருந்திருப்பர். அவர்கள் தேரை இழுக்காமல் தேருக்கு இரு புறமும் பாதுகாப்புக்காக வந்திருப்பர்!!!
–SUBHAM–