WRITTEN by London Swaminathan
Date: 30 MARCH 2018
Time uploaded in London – 6-33 am (British Summer Time)
Post No. 4865
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
கனி இருப்ப பூக்கொய்யலாமோ? — கம்பன்
கம்பன் கனி மொழிகளை உதிர்க்கிறான் கம்ப ராமாயணத்தில்! வள்ளுவனைக் கரைத்துக் குடித்த கம்பனுக்குப் படலம் தோறும், திருக்குறள் வரிகளும், சொற்களும் தாமாக வந்து விழுகின்றன.
‘கனியிருப்பக் காய் கவர்ந்தற்று’ — என்றான் வள்ளுவன்.
கனி வரும் காலத்து ஐய பூக் கொய்யக் கருதலாமோ?
——-என்றான் கம்பன்
முனிவரும் கருணை விவைப்பர் மூன்று உலகத்தும் தோன்றி
இனிவரும் பகையும் இல்லை ஈறு உண்டு என்று இரங்க வேண்டா
துனிவரும் செறுநர் ஆன தேவரே துணைவராவர்
கனி வரும் காலத்து ஐய பூக் கொய்யக் கருதலாமோ?
எங்கே, எப்போது, யார் நுவல்வது இஃது?
கும்பகர்ணனைக் கஷ்டப்பட்டு உசுப்பிவிட்டு ராமன் முன்னிலையில் போருக்கு நிறுத்தினார்கள். வேத நாயகனான ராமன், யாரையா இந்தப் புது முகம்? என்று விபீஷணனிடம் வினவுகிறான். அப்போது கும்பகர்ணனை அறிமுகம் செய்து வைக்கிறான். இவரையும் நமது கட்சியில் சேர்த்துக் கொண்டால் நமக்கு வெற் றி நிச்சயம் என்று சுக்ரீவன் ஒரு யோஜனை சொல்கிறான். ராமனும், எத்தனை பேர் வந்தாலும் எனது கட்சியில் இடம் உண்டு; அழைத்து வா- என்று விபீஷணனை அனுப்புகிறான்.
அப்போது விபீஷணன், கட்சி மாறினால் வரும் சாதகங்களை உரைக்கிறான்:
“நீ ராமன் கட்சியில் சேர்ந்தால், அந்த நிலையில் முனிவர்களும் உன்னிடம் கருணை காட்டுவார்கள்; மூன்று உலகங்களிலும் உனக்குப் பகைவர்கள் இரார். உனக்கு சாவு என்பதே கிடையாது. தேவர்களும் நண்பர்கள் ஆவர். இனிக்கும் பழங்கள் தோன்றும் காலத்தில் வெறும் மலர்களைப் பறிப்பதற்கு நினைக்கலாமா? (கூடாது).”
இந்திய மக்கள்– குறிப்பாகத் தமிழர்கள், இயற்கையோடு இயைந்த வாழ்வு நடாத்தியதால், இயற்கையாகவே மரம், செடி, கொடி, காய், கனி உவமைகள் வரும்.
கனி மொழி பற்றி வள்ளுவன்
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று- குறள் 100
பொருள்
இனிமையான சொற்கள் இருக்கையில் ஒருவன் சுடு சொற்களைப் பெய்வது, இனிப்பான பழங்கள் இருக்கும் போது கய்களைத் தின்றது போலாகும்.
சேலத்து மாம்பழமும் , மல்கோவா, பாதிரி, நீலம் அல்பான்ஸோ பழங்களும் இருக்கும்போது நாட்டுப்புறத்தில் கீழே விழுந்து கிடக்கும் புளிச்ச மாங்காயைத் தின்னும் மாங்காய் மடையனாக இராதே என்று கனி மொழி பற்றி வள்ளுவன் சொல்கிறான்.
(பிறர் எழுதியதைத் திருடுபவனும் பிறர் மனைவியைத் திருடுபவனும் பிறர் பொருளைத் திருடுபவனும் ஒன்றே – ஐன்ஸ்டீனின் அண்ணன், பெர்னார்ட் ஷாவின் தம்பி, காந்திஜியின் தாத்தா சொன்னது)
–Subham —