தேசீய கவி சுப்ரமண்ய பாரதி
Article No. 2067
Written by S NAGARAJAN
Date : 13 August 2015
Time uploaded in London :– 9-05
By ச.நாகராஜன்
கம்பளி ஸ்வாமி காட்டும் ஹிந்து–முஸ்லீம் ஒற்றுமை
ஸ்வாமி விவேகானந்தர் போற்றிய மகான். இமயமலையின் ஒரு சிகரத்திலிருந்து இன்னொரு சிகரத்திற்குப் போக ஒரு இரும்புப் பாலம் கட்டியவர். அதற்கென தான் பிரயாசைப்பட்டுச் சேர்த்த கொஞ்சம் பணத்தையும் செலவழித்தவர். பெயர் – கம்பளி ஸ்வாமி!
இவரைப் பற்றி மஹாகவி பாரதியார் போற்றக் காரணம் இவர் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காகப் பாடுபடும் ஒரு ஸாது என்பதால் தான்.
‘ஒரு மகமதிய ஸாது’ என்ற தலைப்பில் மஹாகவியின் கட்டுரை விஜயா இதழில் 1910ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
கம்பளி ஸ்வாமியைப் பற்றிய பாதியாரின் வார்த்தைகள் இதோ:-
“கம்பளி ஸ்வாமி என்று இமயமலைப் பக்கங்களில் ஒரு ஸ்வாமி இருப்பதை நம் நேயர்கள் அநேகர் கேட்டிருக்கலாம். அவர் சில காலமாகத் தென் இந்தியாவிற்கு வந்து அநேக இடங்களில் உபன்னியாசம் செய்து கொண்டிருக்கிறார்.
இப்போது பெங்களூரில் உபன்னியாசம் செய்தார்.அதில் ஹிந்துக்களுக்கும் மகமதியர்களுக்கும் ஒற்றுமை இருக்கவேண்டுமென்றும், இருவர்களின் மதமும் ஒன்றையே குறிக்கிறதென்றும், நம் மதக் கொள்கையைச் சரியாக அனுசரிக்க வேண்டுமானால் எல்லோரையும் சகோதரர்களாகக் கொண்டாலொழிய முடியாதென்றும் பேசினார். இவருடைய உபன்னியாசத்தைக் கேழ்க்க அநேக ஹிந்துக்களும் மகமதியர்களும் கணக்கில்லாமல் வந்திருந்தார்கள். இவர் பேசிய ஒவ்வொரு பேச்சும் கேட்பவர்களுக்கு வெகு ஆனந்தத்தையும் ஊக்கத்தையும் கொடுத்தது.”
இந்தப் பாராவைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் குடுகொண்ட என்ற இடத்தில் பிறந்த இவர் அமரகோசம்,கீதை ஆகியவற்றை மனப்பாடமாகக் கற்றதையும் கபீர், நானக், கனகா முதலானோரின் கீதங்களைக் கற்றதையும் மஹாகவி குறிப்பிடுகிறார்.
கம்பளி ஒன்றைப் போர்த்திக் கொண்டு மலைச் சிகரங்களில் எல்லாம் சுற்றித் திரிவதால் இவர் பெயர் கம்பளி ஸ்வாமி ஆயிற்று.
இப்படிப்பட்ட மகானை நன்கு விவரித்துப் புகழும் பாரதியார் தன் ஆழ்ந்த கருத்து ஒன்றை இப்படிக் கூறுகிறார்:-
“இப்படிப்பட்ட மகான்கள் ஹிந்து முஸ்லீம்களுக்குள் ஐக்கியத்தை உண்டாக்கக் கருதினால் அது அதி சீக்கிரத்தில் நடைபெறும்.”
இதற்கான காரணத்தையும் அவரே கூறி விடுகிறார்:;” இந்தியாவில் மதக் கோட்பாடுகளை நன்றாயறிந்த ஸாதுக்கள் வந்து ஒரு சீர்திருத்தம் செய்ய வேண்டுமானால் அதைத்தான் ஹிந்துக்களும் மகமதியர்களும் அக்கரையோடு கேட்டு அனுசரிக்க எத்தனிப்பார்கள்.”
இப்படிக் கூறிய மஹாகவி தனக்கே உரித்தான நையாண்டி நடையில் இதை விட்டு விட்டு ஆங்கிலேயர்களின் நடவடிக்கையைப் புத்தகத்தில் படித்து விட்டு அதை இங்கு கொண்டு வர நினைக்கும் போலிச் சீர்திருத்தக்காரர்கள் என்ன தான் கூட்டம் கூட்டினாலும் ஒன்றும் நடக்காது என்று தெளிவுபடக் கூறுகிறார்.
தேசம் ஒன்றே சிந்தனையில்
பாரதியாரின் சொல் செயல் சிந்தனை அனைத்தும் தேச விடுதலை தேச ஒற்றுமை தேச முன்னேற்றம் ஆகியவற்றையே குறிக்கோளாகக் கொண்டிருந்ததையும் ஹிந்துக்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அவரது பல கட்டுரைகள் நன்கு விளக்குகின்றன.
அவற்றில் ஒன்று இது! முழுக் கட்டுரையும் படிப்பதற்கு சுவாரசியமாக இருக்கும்.
*************
You must be logged in to post a comment.