ரிக்வேதத்தில் புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை கருத்துக்கள்!- 3 (Post No.10,181)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,181

Date uploaded in London – 6 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக்வேதத்தில் புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை கருத்துக்கள்!- 3 (Post No.10,181)

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் – 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

—சிவபுராணம் – திருவாசகம்

xxx

RV.10-16-4

இது தகனம் செய்யும் மந்திரம் / சுடுகாட்டில்

“அக்கினியே, தேகத்தில் பிறப்பில்லாத ஒரு பாகம் /ஆன்மா இருக்கிறது. அதை தூய்மை செய்க;. நீ எரித்து அழித்த  உடல் உறுப்புகளுடன் அவனை புனிதர்கள் வாழும் இடத்துக்கு அழைத்துச் செல்க”.

RV.10-16-5

“அக்கினியே உனக்கு அளிக்கப்பட்ட பொ ருட்களுடன் வருபவனை பிதாக்களிடம்/ முன்னோரிடம் அழைத்துச் செல்க. அவன் ஜீவனை அடைந்து சந்ததியை வளர்ப்பான் ஆகுக. ஜாத வேதசனே/ அக்கினியே அவனை மீண்டும் தேகத்துடன் சேர்த்து வைப்பாயாகுக”.

இதில் இறந்து போனவர் மீண்டும் பிறந்து சந்ததியை வளர்க்க வேண்டும் என்ற கருத்து தொனிக்கிறது. எப்போது??

 புனித உலகத்தில்/ சொர்க்கத்தில் வாசம் முடிந்தவுடன் என்பதும் தெளிவாகிறது .

இந்தக் கருத்துக்கள் இந்திய மதங்களைத் தவிர ஏனைய செமிட்டிக் மதங்களுக்கு Semitic Religions  (யூத, கிறித்தவ, இஸ்லாமிய) எதிரானவை. ஆகவே வெள்ளைக்காரப் பயல்கள் இது பற்றி பிரஸ்தாபிப்பதில்லை. மாக்ஸ்முல்லர், மார்க்சீய கும்பல்கள் வாய் மூடி மௌனியாகி விடுவார்கள்!!!

Xxx

ரிக்வேதம் RV. 10-54 முதல் Rv.10-60 துதிகள்

ரிக்வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் ஏராளமான ஈமக்கிரியை விஷயங்கள் (Funeral Rites) வருகின்றன. அவற்றை விளக்க வெள்ளைத் தோல் வெளிநாட்டனாலோ மார்க்சீய கும்பலினாலோ முடியாது. இதை இன்றும் சுடுகாட்டிலும் , வீட்டில் நடக்கும் திவச திதிகளை செய்வோரும் மட்டுமே விளக்க முடியும். குறிப்பாக ஞான திருஷ்டி உடைய சாது சன்யாசிகள் மூலமே அறியமுடியும். இங்கே அசுநீதி , அசமாதி , அனுமதி, உஸீநாரணி   ஆகிய புதிய பித்ருலோக தேவதைகள் பற்றி ரிஷிகள் பாடுகின்றனர்.

xxx

ஒரு சில குறிப்புகளை மட்டும் காண்போம்

RV. 10-56-1; 10-56-2

மூன்று ஒளிகள் இருக்கின்றன; இங்கே தகன அக்கினி; மேலே ஒரு வெளிச்சம்; அதையும் தாண்டி உள்ள ஒளியுடன் கலப் பாயாகுக

அது தேவர்களின் பிறப்பிடம். அன்பு செழிக்கும் இடம்.

நீ வானத்திலுள்ள ஒளியிலும், சூரியனுடைய ஒளியிலும், உன்னுடைய சொந்த ஒளியிலும் நுழைவாயாகுக.

ரிக் வேதத்தின் 56ஆவது துதியின் அடிக்குறிப்பு இறந்தவர்கள் ஒளி ரூபத்தில் சென்று மஹத்தான ஒளியுடன் கலப்பார்கள் என்று சொல்கிறது .

XXXX

RV.10-56-7

“புவியின் பல திசைகளுக்குச் செல்ல கப்பலில்  நீரின் மீது சென்று எல்லாக் கஷ்டங்களையும் கடந்த மனிதர்களைப் போல பிருகதுக்தன் , தன்  பலத்தால் தன்  புதல்வனை — வாஜிநனை — இங்கு அக்கினி முதலியவற்றில் – அங்கு சூ ரியன் முதலியவற்றில் ஸ்தாபித்தான்” .

இப்படி ரிக் வேதத்தை தமிழில் மொழிபெயர்த்த ஜம்புநாதன் எழுதியபோதும் இதைப் பாடிய ரிஷியின் பெயர், புதல்வர் பெயர் எல்லாம் உண்மைப் பெயர்கள் அல்ல; அடையாள பூர்வ பெயர்களே என்ற கருத்தும் தொனிக்கிறது.

xxxx

RV.10-58-12

58-ஆவது துதி மனம் பற்றிப் பேசுகிறதா , இறந்தவரின் ஆவி பற்றிப் பேசுகிறதா என்று எவருக்கும் தெளிவாகவில்லை. ஆகையால் இரண்டு பெயர்களையும் (MIND/SPIRIT)  எழுதிவிட்டார்கள் .

எமனிடம் சென்றுள்ள உன்னை மீண்டும் இங்கு வசிக்கச் செய்கிறோம் என்பது பல்லவி போல  12 மந்திரங்களிலும் வருகிறது. இதில் 12ஆவது மந்திரத்தை ஜம்புநாதன் மொழிபெயர்க்கத் தவறிவிட்டார்.

இதோ மந்திரம்  எண் 12

“உன்னுடைய ஆவி இருக்கும் மற்றும் இருக்கப் போகும், தொலை தூரத்துக்குச் சென்றுவிட்டது  நீ இங்கு வந்து நீண்டகாலம் வசிக்க  வரச்  செய்கிறோம்” .

மந்திரம் எண் 7

“உன்னுடைய ஆவி நீரிலும் தாவரங்களிலும் , தொலை தூரத்துக்குச் சென்றுவிட்டது  நீ இங்கு வந்து நீண்டகாலம் வசிக்க  வரச்  செய்கிறோம்” .

இது கல், மண், புல் முதலிய எல்லாவற்றுமாக மனிதன் பல பிறவிகள் எடுப்பதும் தொனிக்கிறதது . மாணிக்கவாசகர் போலத் தெளிவாகப்படுகிறார் ரிஷி.

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்

………… மாணிக்கவாசகர், திருவாசகம்

xxx

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் – 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

—சிவபுராணம் – திருவாசகம்

இந்த  12 மந்திரங்களிலும் இறந்த ஆவியை மீண்டும் இங்கு வசிக்க அழைப்பது மறுபிறப்பை வலியுறுத்துகிறது

Xxxx

ஈமக்  கிரியையில் படகு வைத்ததை என் அம்மாவின் இறுதிச் சடங்கிலே  எழுதினேன் ; எகிப்திலும் இது உள்ளது .

இதோ மேலும் ஒரு கப்பல் மந்திரம் ; இதையும் எதோ ஒரு காரணத்தினால் ஜம்புநாதன் மொழி பெயர்க்கவில்லை. 10,000+++ மந்திரங்களில் அவர் விட்டுப்போன மந்திரங்கள் சுமார் பத்துதான் ; அதில் ஒன்று இங்கே –

RV.10-135-4

“பாலனே , நீ ரிஷிகளிடமிருந்து இங்கே வரச்செய்த தேர் , சாமனால்  பின்தொடரப்பட்டது. ஆகையால் இரண்டையும் கப்பலில் வைத்துள்ளோம்”. (இங்குள்ள 7 மந்திரங்களும் எமனை நோக்கிச் சொல்லும் மந்திரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. )

RV.10-135-1

“நல்ல இலைகளுள்ள மரத்தின் அருகே எமன் தேவர்களோடு பருகுகிறான். எமன் மனையின் தலைவன் . அவன் நம்முடைய பழைய மனிதர்களை விரும்பும் தந்தையாக இருக்கிறான்” .

(இதன் அடிக்குறிப்பில் ‘நல்ல இலைகளுள்ள மரத்துக்கு , இறந்து போன நல்ல ஆத்மாக்கள் இளைப்பாறும் இடம்’ என்று எழுதப்பட்டுள்ளது).

XXXX

ரிக் வேத துதி RV.10-154, யமி , புதிய ஜீவனை நோக்கிப் பாடுவதாக அமைந்துள்ளது . இறந்தவர்களின் ஆன்மா , பித்ருக்கள் வசிக்கும் லோகத்துக்குத் செல்கிறது. (முதல் மந்திரத்தின் அடிக்குறிப்பு இறந்தோருக்கு அதர்வவேதிகள் தேனையும், சாமவேதிகள் நெய்யையும் அளிப்பதாகாச் சொல்கிறது .)

xxx

எனது வியாக்கியானம்

நான் படிக்கும்போது எனது கருத்துக்களை புஸ்தகம் முழுதும் எழுதுவதும், கடைசி பக்கத்தில் நானாக ஒரு இன்டெக்ஸ்INDEX  தயாரித்து எழுதுவதும் வழக்கம். அதில் மறுபிறப்பு என்று நான் எழுதிய குறிப்புகள் —

RV.10-55-5

நேற்று இறந்தவன் இன்று உயிரோடு இருக்கிறான்

இதைப்பாடிய புலவரே அடுத்த 4 துதிகளில் இறந்தவர்கள் பற்றிப்பாடும் பின்னணியில் இதைக் காண்க.

RV.10-30-9

இந்த மந்திரத்தில் இருமை என்ற சொல்லுக்கு இம்மை, மறுமை என்று சாயனர் விளக்கம் சொல்கிறார். அதையே ஒப்புக் கொள்ளும் வள்ளுவனும் மறுபிறப்பை ஒப்புக்கொள்கிறான் (குறள் 23)

இம்மை, மறுமை, அமிர்தம்; இறவாத தன்மை, பிறவாத தன்மை , எமலோகம், சொர்க்கம், நரகம் ஆகியவற்றைப் பற்றிப் பேசும் பாடல்களை ஒட்டுமொத்தமாக நோக்கும்போது இந்துக்கள் இன்று கொண்டுள்ள கருத்துக்களையே ரிக் வேத காலத்திலும் கொண்டிருந்தனர் என்பதற்குச் சான்று ஈமக்ரியைப் பாடல்களில் உள்ளன.

இந்துக்கள் இது பற்றி படிப்பதோ பேசுவதோ ‘அபசகுனம்’ என்று கருதுவதாலும் , மார்க்சீய மாக்ஸ்முல்லர் கும்பல்களுக்கு இது அவர்கள் கொண்டுள்ள கொள்கைகளுக்கு விரோதமானது என்பதாலும் இந்த விஷயங்கள் அதிகமாக வெளியே தெரிவதில்லை. மரணத்துடன் தொடர்புள்ள நிர்ருதி என்ற தேவதையை ரிக் வேதம் நிறைய இடங்களில் குறிப்பிடுகிறது. அது மட்டுமே இன்று புரோகிதர்களுக்குத் தெரியும்; பயன்படுத்துகின்றனர். ஆனால் மற்ற தேவதைகள் அந்த மந்திரங்களில் மற்றும் பேசப்படுவதால் இந்தப் புஸ்தகத்திலும் அவைகளுக்கு விளக்கம்  இல்லை. இது தவிர ‘மர்ம நாமம் (ரகசியப்  பெயர்கள்) பற்றியும் இது போன்ற துதிகளில் வருகிறது ; ரகசிய நாமங்கள் பற்றிய விளக்கமும் இல்லை.

தேவார , திருவாசக, திருமந்திர, திவ்வியப் பிரபந்த பாடல்கள் இவைகளுக்கு விளக்கமாக அமைகின்றன.

பவுத்த, சமண மதங்களுக்கு முந்தைய உபநிஷதங்களில் மிகத்தெளிவாக உள்ளன ; பகவத் கீதைப்  புஸ்தகத்துக்கு நூற்றுக்கணக்கில் உரைகள் உள்ளன. அவைகளில் மறு ஜென்மம் பற்றிய பாடல்களுக்கு எல்லோரும் உபநிஷதக் கருத்துக்களையே மேற்கோள் காட்டுகின்றனர்.

–சுபம்–

tags- வேதத்தில்,  புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை, கருத்துக்கள்