ஆலயம் அறிவோம்! காசி (Post.9034)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9034

Date uploaded in London – –14 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தமிழ் முழக்கம் நிகழ்ச்சியில் 13-12-2020 அன்று ஒளிபரப்பான உரை. இதை www.facebook.com/gnanamayam தளத்திலும் youtubeலும் எப்போதும் காணலாம்.

ஆலயம் அறிவோம்!    

வழங்குவது பிரஹன்நாயகி சத்ய நாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது  ஏழு மோக்ஷபுரிகளில் நடு நாயகமாகத் திகழும் காசி ஸ்தலமாகும். இதன் புனிதத்தன்மையையும்  மஹிமையையும் யாராலும் முழுவதுமாக விளக்க முடியாது. 1800 கோவில்கள் உள்ள நகரம் உலகிலேயே காசி ஒன்று தான் என்று சரித்திர ஆசிரியர்கள் வியந்து கூறுகின்றனர். அன்னபூரணி,விசாலாட்சி, துண்டி கணபதி, துர்க்கா, சங்கட விமோசன ஹனுமான், கால பைரவர், பசுபதிநாதர், பிந்து மாதவர் என மஹிமை வாய்ந்த ஆலயங்கள் பல இங்கு உள்ளன. ஆகவே இரவும் பகலுமாக பக்தர்கள் கூட்டத்தை ஆங்காங்கே கண்டு கொண்டே இருக்கலாம்.

அத்துடன் மிக அதிகமான புண்ணிய ஸ்நான கட்டங்கள் கங்கைக் கரை ஓரம் அமைந்திருக்கும் இடமும் காசி தான்.

க்ருதே த்ரிசூலவத் ஞேயம் த்ரேதாயாம் சக்ரவத்ததா |

த்வாபரம் து ரதாகாரம் ஷங்காகாரம் கலௌ யுகே ||

கிருத யுகத்தில் திரிசூல வடிவத்திலும், திரேதாயுகத்தில் சக்கர வடிவத்திலும், துவாபர யுகத்தில் தேர் வடிவத்திலும் கலி யுகத்தில் சங்கு வடிவத்திலும் காசி க்ஷேத்திரம் இருப்பதாக காசி ரகஸ்யம் கூறுகிறது.

காசி என்றால் ஒளி தரும் இடம் என்று பொருள்.

காசி என்றவுடன் கங்கை நதி நம் மனதிலே எழுந்தருளுவாள்.

அரிய தவம் செய்து பகீரதன் கங்கையை பூமிக்குக் கொண்டு வந்த வரலாற்றை நாம் அனைவரும் அறிவோம். அனைத்துப் பாவங்களையும் போக்கும் புனித நதி கங்கை.

கங்கைக் கரை ஓரமாகச் சென்றால் காசியின் நீளம் சுமார் நான்கு மைல்கள். இந்தப் பகுதியில் 64 ஸ்நான கட்டங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமானவை ஐந்து.

அஸி கட்டம் என்பது காசியின் தொடக்கத்தில் இருப்பது. இங்கு தான் அஸி நதி கங்கையுடன் கலக்கிறது. தச அசுவமேத கட்டம் என்பது பத்து அசுவமேத யாகங்களைச் செய்வதால் கிடைக்கும் பலனைத் தரும் கட்டம்.வருணாகட்டம் என்பது வருணா நதி சங்கமம் ஆகும் இடம் ஆகும். அடுத்து பஞ்ச கங்கார கட்டம் என்பது ஐந்து நதிகள் கங்கையுடன் சங்கமம் ஆகும் இடத்தில் அமைந்துள்ள கட்டமாகும். எல்லாவற்றையும் விட மிக முக்கியமான கட்டம் மணிகர்ணிகா கட்டம். இதுவே பிரதான ஸ்நான கட்டமாகும். இந்த ஐந்து கட்டங்களில் நீராடியவர்கள் பித்ரு காரியங்களைச் செய்வது மரபு.

மணிகர்ணிகா கட்டத்தில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் உள்ளது அரிச்சந்திரா காட்! இங்கு தான் சந்திரமதி தன் மகன் லோகிதாசனை எரிக்க வரும் போது அரிச்சந்திரன் வெட்டியானாக வந்து பார்த்த இடம்.

இந்த ஸ்நானத்தை முடித்தவுடன் மணிகர்ணிகா கட்டத்திற்கு அருகில் உள்ள தாரகேஸ்வரர் ஆலயம் சென்று ஸ்வாமியைத் தொட்டு பூஜிக்கலாம். கங்கை நீரை எடுத்துக் கொண்டு வந்து அபிஷேகமும் செய்யலாம்.  மேலே துர்க்கையம்மன் ஆலயம் உள்ளது. இந்த தரிசனத்தை முடித்த பின்னரே காசி விஸ்வநாதரைத் தரிசிக்க வேண்டும் என்பது பாரம்பரிய பழக்கமாகும்.

     காசி விஸ்வநாதர் ஆலய பிரகாரம் வழவழப்பான சலவைக் கல்லால் அமைந்துள்ள பிரகாரமாகும். மையத்தில் விஸ்வநாதரின் கர்பக்ருஹம் உள்ளது. கங்கை நீர், பால் ஆகியவற்றால் பக்தர்கள் விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்வது தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கமாகும்.

இந்த ஆலயத்தை ராணி அகல்யாபாய் கட்டியதாக வரலாறு கூறுகிறது. கோவிலில் இருபத்தி இரண்டு மணங்கு தங்கத் தகடுகள் பயன்படுத்தப்பட்டன. ஆகவே இதை தங்க ஆலயம் என்றே அனைவரும் அழைக்கின்றனர்.

       தேவியானவள் காசி ஈஸ்வரருக்கு உணவு அளித்த இடம் இது.

இங்குள்ள அன்னபூரணி கோவிலை மராட்டிய மன்னர்கள் பயபக்தியுடன் வடிவமைத்துள்ளனர். கோயிலின் நடுவில் எண்கோண வடிவத்தில் மண்டபம் உள்ளது. அதை பன்னிரெண்டு கல் தூண்கள் தாங்குகின்றன. பலவித ரத்தினங்கள், மணிகள் பதிக்கப்பட்ட மணிமகுடத்துடன் அழகிய  ரூபத்தில் காட்சி தரும் அன்னபூரணிக்கு கீழே ஸ்ரீ சக்ர மேரு யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.

       இடது கரத்தில் தங்கக் கிண்ணம், வலது கரத்தில் தங்கக் கரண்டி இவற்றுடன் பிட்சை ஏந்தி நிற்கும் இறைவனுக்கே அன்னம் அளிக்கிறாள் லோகமாதா.

அம்பாளின் அருகே இரு புறமும்  தங்கத்தினால் ஆன ஸ்ரீ தேவியும் பூதேவியும் கொலுவிருந்து கையைத் தூக்கி ஆசீர்வதித்து அருள்கிறார்கள்.

அன்னபூரணி ஆலயத்திற்குச் சற்றுத் தொலைவில் விசாலாட்சி ஆலயம் அமைந்துள்ளது. குத்துவிளக்கு எரிய கர்பக்ருஹத்தில் தேவியை தரிசித்து குங்கும அர்ச்சனையையும் செய்யலாம்.

கங்கா ஸ்நானம் செய்து காசி விஸ்வநாதரையும் அன்னபூரணியையும் தொழுதால், பாவம் தொலையும், புண்ணியம் சேரும், முக்தி கிடைக்கும். வாழ்நாள் முழுவதும் அன்னத்திற்கு பஞ்சமில்லை, எப்போதும் எதிலும் வெற்றியே கிடைக்கும்.

காசியின் முக்கியமான மூர்த்திகளைச் சொல்லும் ஒரு ஸ்லோகம் உண்டு.

விஸ்வேஸம், மாதவம், துண்டிம், தண்டபாணிஞ்ச, பைரவம் – வந்தே

காசிம், குஹாம், கங்காம், பவானிம், மணிகர்ணிகாம் என்பதே அது.

துளஸிதாஸர், கபீர் தாஸர் உள்ளிட்ட ஏராளமான மகான்கள் வாழ்ந்த இடம் இது. இன்றும் ஏராளமான மகான்களும் சித்தர்களும் இருந்து வரும் தலம் காசி! காலம் காலமாக கோடிக்கணக்கான பக்தர்கள் பயபக்தியுடன் புனித காசி யாத்திரை மேற்கொண்டு கங்கையில் ஸ்நானம் செய்து வணங்கி வரும் காசி விஸ்வநாதர், விசாலாக்ஷி, அனைவருக்கும் சர்வ மங்களத்தை தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.     நன்றி

——-

உலகின் மிகப் பழைய நகரம் – காசி/வாரணாசி!

26abc-festival-at-varanasi

Written by London swaminathan

Research Article No.1866; Dated 15 May 2015.

Uploaded in London at 10-21

உலகின் மிகப் பழைய நகரம் எது?

காசி என்றும் வாரணாசி என்றும் அழைக்கப்படும் இந்துக்களின் புனித நகரமே உலகின் மிகப் பழைய நகரம் ஆகும். இதுவரை கிடைத்த தொல் பொருட் துறை கி.மு.900 வரையே இந்த நகரின் பழமையைக் காட்டும். ஆனால் கங்கைச் சமவெளியில் கி.மு 1200 வரை பழமையான பானை ஓடுகள் கிடைத்துள்ளன. சிலர் இதை 1400 வரை கொண்டு செல்வர். ஆயினும் இலக்கியச் சான்றுகள் இதுதான் உலகின் மிகப் பழைய நகரம் என்று காட்டும்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் கேதார்நாத் கோவில் சேதமானதையும், நேபாள பூகம்பத்தில் முக்திநாத் கோவில் சேதமானதையும் கண்டோம். தனுஷ்கோடி கோவில் கொஞ்சம் கொஞ்சமாகக் கடலுக்குள் போகவே, எங்கு கரை இருக்கிறதோ அதை தனுஷ்கோடி என்று சொல்லுகிறோம். இந்தியாவின் பருவக்காற்றும், வெய்யிலும் மாறி மாறி அடிப்பதால் கட்டிடச் சின்னங்கள் அழிந்துவிட்டன. முஸ்லீம்படை எடுப்பாளர்கள் அவர்களால் முடிந்த மட்டும் அழித்துவிட்டுச் சென்றனர். இதற்குப் பின் எஞ்சியுள்ள சின்னங்களையே நாம் இன்று காண்கிறோம்.

1).இந்துக்கள் நம்பிக்கை

மஹாபாரத யுத்தம் முடிந்த பின்னர் கலியுகம் துவங்கியதாக (கி.மு.3102) இந்துக்கள் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக நம்பிவருவதை பஞ்சாங்கங்களும் கல்வெட்டுகளும் உறுதி செய்கின்றன. அந்த மஹாபாரத காலத்தில் பீஷ்மர் என்னும் நித்திய பிரம்மச்சாரி, பாண்டவர் குலம் தழைக்க பெண்களைத் தேடிக்கொண்டிருந்தார். காசி மகாராஜன் அம்பா, அம்பிகா, அம்பாலிகா என்ற மூன்று புதல்விகளுக்கும் ஸ்வயம்வரம் ஏற்பாடு செய்தான். அதில் பீஷ்மர் தோன்றி, மூன்று பெண்களையும் கடத்தி வந்தார் என்பது உங்களுக்குத் தெரியும். அப்போதே காசி சாம்ராஜ்யம் மிகவும் புகழ் பெற்றிருந்தது.

கலியுகத்தை நம்பாதவர்கள் கூட மஹாபாரத யுத்தம் கி.மு.1500 வாக்கில் நடந்திருக்கும் என்று ஒப்புக் கொள்வர். கல்ஹணரோ மாபாரத காலத்தை கி.மு.2500 வாக்கில் வைக்கிறார். எப்படியாகிலும் காசியின் பழைய வரலாறு உறுதியாகிறது.

bcc3e-varanasi-ganga-ghat2

2).பௌத்தர்களும் சமணர்களும் கூறுவது என்ன?

பௌத்தர்களும் சமணர்களும்கூட காசியே பழைய நகரம் என்பதை எழுதி வைத்துள்ளனர். நேபாளத்தில் உள்ள கபிலவஸ்துவில் பிறந்து பீஹாரில் உள்ள புத்த கயாவில் ஞானோதயம் அடைந்த புத்தர், ஏன் உத்தரப்பிரதேசத்தில் உள்ள காசிக்கு வந்து முதல் சொற்பொழிவை நடத்தினார்? அவர் உபதேசம் செய்த சாரநாத், காசியின் புறநகர்ப் பகுதியாகும். ஏன் என்றால் காசிதான் நாட்டின் புனித, பழைய தலம்.

அந்தக் காலத்தில் யாரேனும் புதிய தத்துவம்/கொள்கை கண்டு பிடித்தால் அதை காசிக்குச் சென்று நிரூபிக்கவேண்டும். அங்கே தெரு மூலைகளில் அறிஞர்கள் நிற்பார்கள். அவர்கள் எல்லோரையும் வாதத்துக்கு அழைப்பார்கள். அதில் வென்றால் அவர்கள் சித்தாந்தம் அங்கீகாரம் பெறும். அதாவது அந்த நகரமே ஒரு பல்கலைக் கழகம்!

3.வேத இலக்கியங்களிலும் காசியின் பெயர் உள்ளது. காசி என்பது பன்மைப் பொருளில் அதர்வண வேதத்தில் பயிலப்படுகிறது. ஆதிகாலத்தில் அந்தந்த குழுக்களின் பெயரே அந்த தேசத்தின் பெயராகக் கொள்ளப்பட்டது. சோழர் வாழ்ந்த இடம் சோழநாடு. தமிழர் இருப்பிடம் தமிழ்நாடு; ஆங்கிலோ-சாக்ஸன் இனம் இருந்த இடம் ஆங்கிலாந்து (இங்கிலாந்து). இந்த காசி இனத்தாலேயே காசி என்றழைக்கப்பட்டது.

வருண, அஸ்ஸி என்ற கங்கையின் இரண்டு உபநதிகளுக்கு இடைப் பட்ட நகரம் என்பதால் வாரணாசி என்று பெயர் பெற்றது. உலகம் முழுதும் உள்ள பெயர்களை உருக்குலைக்கும் ஐரோப்பிய இனத்தால் வாரணாசி என்னும் பெயர், பனாரஸ் என்று உருமாறிப்போனது.

4.பாபிலோனியாவில் காசி இன மக்கள்

4காசி இனமக்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவினர். பாபிலோனியாவில் கி.மு.1800 முதல் காசைட் இன மக்கள் காணப்படுகின்றனர். இவர்களை அடுத்து கி.மு.1400 முதல் மிடன்னிய இனம் துருக்கி-சிரியாவில்,   ஆட்சியைப் பிடித்தது. அவர்கள் தூய சம்ஸ்கிருதப் பெயர்களுடன் ரிக்வேத மந்திரத்தின் மேல் சத்தியம் செய்து உடன் படிக்கை செய்த கி.மு.1400 கல்வெட்டும் கிடைத்திருக்கிறது. காசைட் இன மக்களும் சம்ஸ்க்ருதம் தொடர்பான மொழையையே பேசினர். இவ்வளவையும் ஒப்புக் கொள்ளும் வெள்ளைக்காரகள் இன்றுவரை அவர்களுடைய “ஆரிஜின்” (மூலம்) தெரியவில்லை என்று புத்தகம் எழுதி மழுப்பி வருகின்றனர். இவர்கள் அனைவரும் கங்கைச் சமவெளியில் இருந்து வெற்றி விஜயம் மேற்கொண்ட இந்துக்களாவர்.

சௌராஷ்டிரர் என்பவர் (ஜொராஸ்தர்) ஈரான் வரை சென்று வேதத்துக்கு ஏட்டிக்குப் பூட்டியாக ஒரு மதம் தாபித்தார்.அவர் குஜராத்தில் உள்ள சௌராஷ்டிர பிரதேசத்தில் இருந்து சென்றவர். அதை ஈரானியர்கள் “ஜொராஸ்தர்” என்று எழுதிவிட்டனர். இதை காஞ்சிப் பெரியவர் (1894-1994) தனது உபந்யாசங்களில் கூறியுள்ளார். அதே குஜராத்தில் உள்ள கிருஷ்ணரின் துவாரகை கடலுக்கடியில் கண்டு பிடிக்கப்பட்டதும், கிருஷ்ணர் மறைந்த பின்னர் அது கடலில் மூழ்கியதை  பாகவத புராணம் உறுதி செய்வதும் கலியுகத்தையும் மஹாபாரத காலத்தையும் உண்மையாக்குகின்றன.

34dfa-pilgrimage-map

6.பௌத்ததில் காசி

புத்த மதத்தினர் ஜாதகக் கதைகள் என்ற பெயரில் பாலி மொழியில் நிறைய பழைய கதைகளைத் தொகுத்து வைத்துள்ளனர். இது எழுதப்பட்டது 2300 ஆண்டுகளுக்கு முன். அதில் புத்தரின் பூர்வ ஜன்ம அவதாரங்களைப் பற்றிப் பேசுகையில் “முன்னொரு காலத்தில் காசியில் பிரம்மதத்தன் அரசாளுகையில், போதிசத்துவர் …………….” என்று எழுதுகின்னர். 2300 ஆண்டுகளுக்கு முன் கதை எழுதியவர்கள் “முன் ஒரு காலத்தில் “என்று சொன்னால் அதற்கும் முன்னர் ஒரு ஆயிரம் ஆண்டுகளாவது ஆகியிருத்தல் வேண்டும்.

7.சமணத்தில் காசி

சமணமதத்தைச் சேர்ந்த 24 தீர்த்தங்கரர்களில் கடைசி தீர்த்தங்கரரான மாஹாவீரர், புத்தருக்கும் சிறிது முந்தையவர். அவர்களில் ஏழாவது தீர்த்தங்கரர் பிறந்தது காசியில்! 23ஆவது தீர்த்தங்கரரான பார்ஸ்வநாதர், கிருஷ்ணர் காலத்தில் வசித்தவர். இதையெல்லாம் கணக்கில் சேர்த்தால் ஏழாவது தீர்த்தங்கரர் மஹாவீரருக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வசித்திருக்க வேண்டும்!! காசியின் கதையும் அவருடன் பின்னால் போகும்!

8.வேதத்தில் காசி

பௌத்த, சமண மத இலக்கியங்களுக்கு எல்லாம் முந்தையது வேத கால இலக்கியம் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமே இல்லை. அதர்வண வேதத்தில் (5-22-14) காசி மக்கள் இடம் பெறுகின்றனர். வருணாவதி என்னும் ஆறும் (4-7-1) இடம்பெறுகிறது. இதுவே பின்ன வருண+ அஸ்ஸி= வாரணாசி ஆயிற்று. சதபத பிராமணத்திலும் உபநிஷதங்களிலும் காசியை ஆண்ட தார்தராஷ்ட்ர, அஜாத சத்ரு போன்ற பழங்கால மன்னர்கள் பெயர் இடம் பெறுகின்றன.

9.காசி-கௌசல்ய, காசி- விதேக முதலிய சொற்றொடர்கள் பிராமணங்களில் இடம் பெற்றுள்ளன. அக்காலத்தில் சாம் ராஜ்யங்களுக்கு இடையில் நிலவிய நட்புறவுக்கு இவை சான்று தரும். கௌசல்ய என்பது கோசல நாட்டின் அடியாகப் பிறந்த உரிச்சொல். கோசலத்தின் தலைநகரான அயோத்தியில், முதல் சமண மத தீர்த்தங்கரர் பிறந்ததும், ராமனுக்கு எல்லாம் மூத்த இக்ஷ்வாகு வம்சத்தினர் ஆண்டதும் அயோத்தியின் பழமையையும் பறை சாற்றும்

10.கபல என்னும் பானை ஓடுகள் பற்றி ஆஸ்வலாயன கிருஹ்ய சூத்திரம் ( 4-3-5) முதலிய வேத கால இலக்கியங்களில் வருகின்றன. இதை இறந்தோர் சடங்குகளில் பயன்படுத்துவர். மஸ்கி என்னும் கங்கைச் சமவெளி ஊரில் ஒரு குழந்தையின் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. இந்துக்கள் குழந்தைகள் இறந்தால் எரிக்க மாட்டார்கள். அந்தக் குழந்தையின் சடலத்தின் மீது ஒரு கபல பானை ஓடு இருந்தது. இது அந்தக் குழந்தையின் விளையாட்டுச் சாமான் என்று ஆங்கிலம் படித்த “அறிஞர்கள்” எழுதினர். பின்னர் வேதம் படித்த அறிஞர் இது விளையாட்டுச் சொப்பு அல்ல, கபல என்னும் ஈம ஓடு என்று எடுத்துக் காட்டினர். நமது கலாசாரமே தெரியாமல் ஆங்கிலத்தில் கட்டுரை எழுதுவோர் என்ன என்ன கேடுகளை விளைவிக்க முடியும் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக் காட்டு!!

காசி வாழ்க! வாரணாசியின் புகழ் வளர்க!

மஹா சிவராத்ரி மகிமை

 

மாசி மாத கிருஷ்ண பட்சத்தில் 13 அல்லது 14 ஆம் இரவில் சிவராத்ரி அனுஷ்டிக்கப்படுகிறது. சிலர் இதை பங்குனி மாதம் என்றும் கணக்கிடுவர்.

விஷ்ணுவுக்கு வைகுண்ட ஏகாதசி எப்படி முக்கியமோ அப்படி சிவ பக்தர்களுக்கு சிவராத்திரி மிக முக்கியமான நாளாகும். இந்த நாளில் சிலர் தண்ணீர் கூட குடிக்காமல் முழுப் பட்டினி கிடந்து உபவாசம் அனுசரித்து மறுநாள்தான் சாப்பிடுவர். உலகு எங்கிலும் உள்ள சிவாலயங்களில் இரவு முழுதும் பூஜை பாராயணம், அபிஷேகம் ஆகியன நடைபெறும். 12 ஜோதிர்லிங்க தலங்களில் அன்று சிவனைத் தரிசிக்க லட்சக் கணக்கான மக்கள் கூடுவர்.

பசுபதி நாதர் கோவில் கொண்டுள்ள நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் இது பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. உண்மையில் சிவராத்ரி நேபாள நாட்டின் தேசியத் திருவிழாவாகும். அன்று சிவனை அந்த நாட்டின் ராஜாவாக கருதி ராஜ மரியாதைகள் செய்வர். காசி எனப்படும் வாரணாசியிலோ மக்கள் கூடம் அலை மோதும்.

சிவராத்திரி தோன்றிய கதை நமக்கு முக்கியமான ஒரு செய்தியைத் தருகிறது. ஒருவன் அறிந்தோ அறியாமலோ சிவலிங்கத்துக்குப் பூஜை செய்தாலும் அவனுக்கு முக்தி கிடைக்கும் என்பதே அந்த செய்தி. சிவ ராத்திரி கதை மஹாபாரதத்தில் சாந்தி பர்வத்தில் பீஷ்ம பிதாமஹர் அம்புப் படுக்கையில் படுத்திருந்தபோது கூறப்படுகிறது.

சித்ரபானு என்ற மன்னன் உபவாசம் இருந்தபோது அஷ்டவக்ரர் அங்கே வருகிறார். மன்னன் உபவாசம் இருப்பதன் காரணத்தை வினவியபோது அம் மன்னன் தனக்கு பூர்வ ஜன்மத்தில் என்ன நடந்தது என்பதை விவரமாகக் கூறுகிறான். முன் ஜன்மத்தில் தான் ஒரு வேடன் என்றும் காட்டில் வேட்டையாடிய போது நேரம் ஆகிவிட்டதால் இரவுப் பொழுதை ஒரு மரத்தின் மீது கழித்ததாகவும் அதன் கீழே வந்து தங்கிய மானைக் கொன்று வீட்டுக்குக் கொண்டுபோக வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு இலையாகப் பறித்து மானுக்குப் போட்டதாகவும் கூறுகிறான்.

காலையில் மானுடன் வீட்டுக்குச் சென்றபோது யாரோ ஒருவர் உணவு கேட்டு வந்ததால் அதைக் கொடுத்துவிட்டதாகவும் சிறிது காலத்துக்குப் பின் இறந்துவிட்டபோது சிவ தூதர்கள் இருவர் வந்து ராஜ உபசாரம் செய்து அழைத்துக் கொண்டு போனபோதுதான் முழு விஷயமும் தெரிய வந்ததாகவும் மன்னன் கூறுகிறான். அவன் இலைகளைப் பறித்துப் போட்ட மரம் சிவனுக்கு மிகவும் உகந்த வில்வ மரம் என்றும் மானுக்குப் போட்ட வில்வ இலைகள் அருகில் இருந்த சிவலிங்கம் மீதும் விழுந்ததால் எல்லா புண்யமும் வந்து சேர்ந்ததாகவும் மன்னன் கூறுகிறான்.

இந்தக் கதை நமக்குப் புகட்டுவது என்ன?

  1. சிவனுக்குப் பூஜை செய்கிறோம் என்று தெரியாமல் வில்வத்தைப் போட்டாலும் கூட முழு புண்ணியமும் கிட்டும்..
  2. வேடனாக இருந்து செய்த பாபங்கள் கூட மன்னிக்கப் படும்.
  3. அறியாமல் செய்த புஜையானாலும் அடுத்த ஜன்மத்தில் மன்னர் பதவி கிட்டும்

இந்தப் புனித நன்னாளில் நாம் என்ன செய்யலாம்?

பெரிய நகரங்கள் எல்லாவற்றிலும் உள்ள சிவன் கோவில்களில் இரவில் நான்கு ஜாமங்களிலும் பூஜை அபிஷேகம் நடக்கும். அதை தரிசிக்கலாம். பூ,தேங்காய் பழம் கொண்டுபோய்க் கொடுக்கலாம்.

மறு நாள் அலுவலகம் இல்லாவிட்டால் இரவு முழுதும் விழித்திருந்து ருத்ர பாராயணம் செய்யலாம். அது முடியாதவர்கள் ஓம் திரயம்பகம் எனத் துவங்கும் ம்ருஞ்ஜய மந்திரத்தை இயன்றவரை ஜபிக்கலாம். அதுவும் முடியாதவர்கள் மஹா மந்திரமான ஒம் நமசிவாய என்ற ஐந்தெழுத்தை ஜெபிக்கலாம்.

பட்டினி கிடக்க முடிந்தவர்கள் ஒரு நேரமாவது சிவனை நினைந்து உபவாசம் இருக்கலாம்.

வட இந்திய காய்கறிக் கடைகளில் (குறிப்பாக லண்டனில் வெம்பிளியில்) இலவசமாக வில்வ பத்திரம் கிடைக்கும். அதை சிவன் மீது அர்ச்சிக்கலாம்.

சுருக்கமாகச் சொன்னால், நாள் முழுதும் “சிவனே” என்று கிடந்தால் போதும். 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களையும் தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

ஓம் நம சிவாய.

*****************************