

Post No.7913
Date uploaded in London – 2 May 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ரூபா, அணா , பைசா, காசு, பணம், நாணயம் முதலிய எதுவுமே தமிழ் சொற்கள் இல்லை!!!!
உலகம் வியக்கும் முதல் இலக்கண புஸ்தகத்தை எழுதியவர் பாணினி . இதன் பெயர் ‘அஷ்டாத்யாயி’ . தமிழில் ‘எட்டு அத்தியாயங்கள்’ என்று மொழி பெயர்க்கலாம். பாணினி எழுதியதால் ‘பாணினீயம்’ என்றும் செப்புவர் .அவர் பிறந்த லாகூர் இப்போது பாகிஸ்தான் வசம் உள்ளது. 2700 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் பிறந்த லாகூர் , சாலத்துறை (சால துரா / சாலத்தூர்) என்று அழைக்கப்பட்டது . சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் லாகூருக்குச் சென்ற சீன யாத்ரீகன் யுவாங் சுவாங் , தான் கேட்ட எல்லா விஷயங்களையும் அப்படியே நமக்கு எழுதி வைத்துள்ளார் .
பாணினி எழுதிய 4000 சூத்திரங்களும் சின்னச் சின்ன வரிகள் . அவற்றின் மூலம் அவர் செப்பியதோ இமய மலை அளவுக்கு !! அவர் எழுதிய எல்லாவற்றையும் அச்சிட்டால் சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டு போய்விடலாம். திருக்குறள் புஸ்தகத்தை விடச் சின்னது. ஆனால் ‘மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது’. எப்படி குட்டையான, சின்ன பிராஹ்மணப் பையன் வாமனன் , திரிவிக்ரமனாக வளர்ந்து ஓங்கி ‘உலகளந்த உத்தமன்’ ஆனானோ அதுபோல பாணினி புஸ்தகமும் த்ரிவிக்ரம அவதாரம் எடுக்கும். உலகின் முதல் இலக்கண (Grammar) புஸ்தகம் இதுதான். உலகின் முதல் மொழியியல் (Linguistics) புஸ்தகமும் இதுதான்.

இரண்டு அதிசய விஷயங்கள் என்னவென்றால் ,
1.இவர் மிளகு பற்றி ஒரு சூத்திரத்தில் சொல்கிறார். ஆகையால் இவருக்கு கேரளா பற்றித் தெரியும். 2700 ஆண்டுகளுக்கு முன்னர் சேர நாடு இருந்த செய்தி நமக்கு மகிழ்ச்சி தரும் . கோதாவரி நதிக்கரையில் இருந்த அஸ்மாக தேசம் பற்றியும் விளம்புகிறார். ஆப்கானிஸ்தானம் துவங்கி அஸ்ஸாம் மாநிலத்தைத் தொட்டுவிட்டு கேரள மிளகு வரை கதைக்கிறார்.
2.இரண்டாவது அதிசய விஷயம் –ஸம்ஸ்க்ருதம் என்ற சொல்லையே இவர் பயன்படுத்தவில்லை. ஏனெனில் அக்காலத்தில் எல்லோருக்கும் தெரிந்த பாஷை ஒன்றுதான். ஆகையால் பாஷா என்ற சொல்லை மட்டும் பயன்படுத்துகிறார். அதைவிட வியப்பான விஷயம் இவர் வேத கால சம்ஸ்க்ருத இலக்கணத்தையும் ஒப்பிட்டுக் கொண்டே போகிறார். இதனால் இவர் வேதகால இலக்கியத்தை ஒட்டி வாழ்ந்தவர் என்பது உலக மஹா அறிஞர்களின் துணிபு. பாஷா இலக்கணத்தைச் செப்பிவிட்டு, சந்தஸி (வேத கால கவிதை) இலக்கணத்தைச் செப்புவார். இதனால் முற்கால, நிகழ் கால இலக்கணத்தை ஒப்பிட்டுக் கொண்டே போகலாம்.
தொல்காப்பியர் ‘என்மனார்’ புலவர், ‘என்ப’ , ‘மொழிப’ என்று தமக்கு முந்தி இருந்த இலக்கண கர்த்தாக்கள் சொன்னதை நான் தொகுத்து அளிக்கிறேனே தவிர ஒன்றும் புதிதாகச் சொல்லவில்லை என்பதை சொல்லாமல் சொல்லுவார். ஆனால் பாணினியோ இது வடக்கத்திய வழக்கு, இது கிழக்கத்திய வழக்கு என்று சுட்டிக்காட்டிக் கொண்டே செல்கிறார். இதனால் இவருக்கு 2000 மைல் அகலத்துக்கு நாட்டில் வழங்கிய விஷயங்கள் தெரிந்திருக்கின்றன. அவருக்கு முன் வாழ்ந்த ஆபிசாலி , சாகடாயான , சாகல்ய, கார்க்ய , காலவ, பாரத்வாஜ , காஸ்யப, சேனக, ஸ்போடாயன , சக்ரவர்மன என்று பத்து இலக்கண வித்தகர் பற்றி உரைக்கிறார்.
உலகின் முதல் சொற்பிறப்பியல் (Etymology) நூல் (நிருக்தம்) எழுதிய யாஸ்கருக்கும், பாணினீயம் மீது பேருரை – ‘மஹா பாஷ்யம்’ எழுதிய பதஞ்சலிக்கும் இடையே 600 முதல் 800 ஆண்டு இடைவெளி இருந்தது. இந்த கால கட்டத்துக்குள் 64 இலக்கண ஆசிரியர்கள் இருந்தனர். இவர்களுடைய பெயர்ப் பட்டியல் மாக்ஸ்முல்லர் எழுதிய ஸம்ஸ்க்ருத இலக்கிய வரலாறு (பக்கம் 142) நூலில் இருக்கிறது.
****

பாணினீயத்தில்/ அஷ்டாத்யாயியில் உள்ள நாணயம்- காசு – பணம் பற்றிய செய்திகள், இவரை கௌடில்யருக்கு முன்னவர் என்பதைக் காட்டுகிறது கௌடில்யர் காலம் கி.மு .நாலாம் நூற்றாண்டு.
பாணினி சொல்லும் நிஷ்கா , சுவர்ண, சாண, சதமான என்ற நாணயங்களை கௌடில்யர் அறியார். ஆகையால் இருவருக்கும் இடையே பல நூறு ஆண்டு இடைவெளியாவது இருக்க வேண்டும். பொருளாதார நூல் எழுதிய கௌடில்யருக்கே தெரியாத காசு, பண விஷயத்தை ஒரு இலக்கண ஆசிரியர் குறிப்பிடுகிறார் என்றால் எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும் என்பதை நாமே ஊகிக்கலாம்.
மேலும் ‘அஷ்டாத்யாயீ’-யில் காணப்படும் ‘விம்சதிகா’ (20) , த்ரிம்ஸ்தக( 30)’ நாணயங்களை கௌடில்யர் குறிப்பிட்டதே இல்லை இந்த நாணயங்கள் நமக்கு கிடைத்துள்ளதால் இவை உண்மையிலேயே புழக்கத்தில் இருந்ததை அறிகிறோம்
பாணினி காலத்தில் வழங்கிய முக்கியக் காசு ‘சதமான’ ஆகும். 100 என்பது இதன் பொருள். இதை சதபத பிராமண நூல் குறிப்பிடுகிறது. அந்த நூலின் காலம் கி.மு 2100 முதல் 1000 வரை என்பர் அறிஞர் பெருமக்கள்.
மற்றொரு முக்கிய நாணயம் ‘கார்ஷா பணம்’ . இது 20 மாஷா அல்லது 40 ரத்தி எடை கொண்ட கனமான நாணயம் . இதன் மற்றோரு பெயர் ‘விம்சதிகா (20)’. ஆனால் மௌர்ய கால வெள்ளி நாணயம் 16 மாஷா எடையுடையதே. இதை அர்த்த சாஸ்திரமும் குறிப்பிடுகிறது. கார்சா பணம் என்னும் வழக்கமான நாணயமும் அதிக எடையுள்ள விம்சதிக்காவும் பாணினிக்குத் தெரியும். மனுவும் கார்ஷா பணத்தைக் குறிப்பிடுகிறார். இதன் எடை 32 ரத்தி ஆக இருக்கக்கூடும் . கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு முதல் ஆண்ட நந்த வம்ச ராஜாக்கள்தான், முதல்முதலில் எடைக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தனர்.
பிம்பிசாரன் காலத்தில் ராஜக்ருஹத்தில் 20 மாஷா எடையுள்ள கனமான காசு புழக்கத்தில் இருந்தது. பல்வேறு ஜனபதங்களிலும் இது பயன்படுத்தப்பட்டது.
இதனால் கௌடில்யருக்கு முந்தையவர் பாணினி என்பது உறுதியாகிறது. நந்த வம்ச மன்னர் காலத்திலோ அதற்கு முன்னரோ அவர் வாழ்ந்திருப்பார்.
****
மருத்துவ நூல்களில் ‘கலிங்கமான’ , ‘மாகத மான’ என்று வேறு வேறு நாணயங்கள் காட்டப்படுகின்றன.
நந்த வம்ச ஆட்சியில் காணப்படும் புதிய அம்சங்கள் :–
20 மாஷா விம்சதிகாவுக்குப் பதில் , 16 மாஷா எடையுள்ள நாணயம் ;
நாணயத்தின் இரு பக்கங்களிலும் முத்திரை குத்தப்படும்;
4 முத்திரைக்குப் பதிலாக 5 முத்திரைகள் குத்தப்படும்;
முந்திய விம்சதிகா-வில் 4 முத்திரைகளே இருந்தன.
5 முத்திரைகளில் சூரியன் மற்றும் ஆறு கோடுகள் உள்ள ‘ஷடரா’ பொறிக்கப்படும்.
32 ரத்தி நாணயங்கள் மெல்லிதாக பெரிய தட்டு போல இருக்கின்றன.
இதற்குப்பின்னர் மௌரியர் அச்சிட்ட கனமான நாணயங்களில் மயிலும் பிறையும் காணப்படுகின்றன.
****
நிஷ்கா
இது உலகிலேயே மிகப் பழைய கவிதை நூலான ரிக் வேதத்தில் அடிக்கடி வரும் சொல். பெரும்பாலும் கழுத்தில் அணியும் ஆபரணங்களைக் குறிக்கும் . ‘நிஷ்க கண்ட’ , ‘நிஷ்க க்ரீவ’ என்ற தங்கக் காசு மாலை அணிந்து சென்றனர் வேதகாலப் பெண்கள் .
வேத கால மக்கள் மாடு மேய்க்கும் நாடோடிகள் என்று பரப்பி வந்த அரை வேக்காடுகளின் முகத்திரையைக் கிழிக்கும் துதிகள் இவை – RV. 2-33-10; 8-47-15 மற்றும் பல இடங்கள் .
நிஷ்கா கண்ட , நிஷ்கா க்ரீவ என்ற சொற்களை காணலாம்.
அதர்வ வேதத்திம் உளது – 5-14-3; 7-99-1; 20-131-8
இவை தங்கக் காசுகள் என்பதை ரிக் வேதம் RV 1-126-2 உறுதிப்படுத்துகிறது.. ஒரு புலவர் தனக்கு 100 நிஷ்காக்களும், 100 குதிரைகளும் பரிசாகக் கிடைத்ததை பாடுகிறார்.
இதற்குப்பின்னர் இவை காசுகளை மட்டுமே குறித்ததை அதர்வ வேதம் 20-127-3 காட்டுகிறது. பிராஹ்மண நூல்களில் எண்ணற்ற குறிப்புகள் உள . எக்ளிங் (Eggeling) , கெல்ட்னர் (Geldner) , ஸிம்மர் (Zimmer) ஆகியோர் ஆராய்ச்சிக் கட்டுரைகளிலும் குறித்துளர் .
பஞ்ச விம்ச பிராஹ்மண நூலில் வெள்ளி நிஷ்காவும் காணப்படுகிறது.
****
ரூபா (Rupa)
ரூபாய் என்று இன்று நாம் வழங்கும் சொல் ‘ரூப= உருவ’ என்ற சொல்லிலிருந்து வந்தது . முத்திரை குத்தப்பட்ட தகட்டு நாணயங்களில் ‘ரூபம்’ (symbols) இருந்ததால் அவை ரூபாய் எனப்பட்டது. கிரேக்க வரலாற்று எழுத்தாளர் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இதை ‘சிக்னடி அர்ஜெண்டி’ Signeti argenti — வெள்ளி முத்திரை – என்று சொல்லியிருக்கிறார். அவருடைய பெயர் — க்விண்டஸ் கர்டியஸ் Quintus Curtius
ஒரு பெரிய தகட்டை , தேவையான எடைக்கேற்ப வெட்டி எடுத்து முத்திரை அடையாளங்களை குத்தினார்கள் .
பாணினி 5-2-120
ரூபா என்பதை ஒருமையில் பாணினி பயன்படுத்துவதால் அவர் காலத்தில் ஒவ்வொரு முத்திரையாக குத்தப்பட்டதை அறியலாம். மஹா சுபின ஜாதகத்தில் ‘ரூபா’ நாணயம் வருகிறது.கௌடில்யர் காலத்தில் நாணய தரக் கட்டுப்பாடும் இருந்தது. ‘ரூப தர்சக’ என்ற அதிகாரியை அர்த்த சாஸ்திரமும், ‘ரூபா தர்க்க’ என்ற அதிகாரியை பதஞ்சலியும் எழுதியுள்ளனர்
ரிக் வேதத்தில் தங்க நகைகள், தங்கக் …
tamilandvedas.com › 2017/09/26 › ர…
26 Sep 2017 – சேர மன்னர்கள் பிராமணப் புலவர்களுக்கு தங்க நாணயங்களை மழை … ஆக உலகிலேயே நிஷ்கா என்னும் தங்க நாணயத்தை வெளியிட்ட …
வேதத்தில் தங்கமும் … – Swami’s Indology Blog
swamiindology.blogspot.com › blog-…
23 Apr 2015 – வேதத்தில் தங்கமும் ரத்தினக் கற்களும்! Compiled by London swaminathan. Date: 23 April 2015; Post No: 1822. Uploaded in London 9-28 காலை. ரிக் வேதம் கி.மு 1700 …
ரத்தினக் கற்கள் | Tamil and Vedas
tamilandvedas.com › tag › ரத்தி…
16 Nov 2019 – வேதத்தில் ரத்தினக் கற்கள் மற்றும் தங்கம், வெள்ளி பற்றிய குறிப்புகள் சில முக்கியமான விஷயங்களை உணர்த்துகின்றன. 1.வேத …
tags – பாணினி, நாணயங்கள், நிஷ்கா, ரூபா , கார்ஷாபண, பணம், காசு


XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX