
Date: 2 FEBRUARY 2018
Time uploaded in London- 8-44 am
Written by London swaminathan
Post No. 4693
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST
WITH YOU.
((நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))
மானவ தர்ம சாஸ்திரம்- இரண்டாம் அத்தியாயம் தொடர்ச்சி
மநு நீதி நூல்- Part 12
SLOKA 175, SECOND CHAPTER CONTINUED………………….

2-58. வலது கையில் ஜலம் எடுத்து ஆசமனம் செய்வதில் 4 வகைகள் உண்டு. உள்ளங்கையில் பிரம்ம தீர்த்தம், காய தீர்த்தம், தேவ தீர்த்தம், பித்ரு தீர்த்தம் விடுவதற்காக 4 பகுதிகள் இருக்கின்றன. பிராமணர் ஆசமனத்துக்கு, முதல் மூன்றையே பயன்படுத்த வேண்டும் (175)
2-59. பெரு விரலின் நடுக்கணுவால் விடுவது பிரம்ம தீர்த்தம்; சுண்டு விரலின் அடிக்கணுவால் விடுவது காய தீர்த்தம்; விரல்களின் நுனிப்பகுதியால் விடுதல் தேவ தீர்த்தம்; பெருவிரலுக்கும் சுட்டு விரலுக்கும் இடையிலுள்ள பகுதியால் விடுதல் பித்ரு தீர்த்தம்.
2-60. ஆசமனம் எனப்படுவது நீரினால் செய்யும் தூய்மை. மூன்று முறை மந்திரம் சொல்லி நீர் உண்ட பின், இரு முறை வாயைத் துடைக்க வேண்டும். கண், காது, மூக்கு, தோள், மா ர்பு, தலை இவற்றையும் தொட்டுத் துடைப்பதாகும்.
2-61. தர்ம விதிகளை அறிந்தவன், சூடு இல்லாத நுரை இல்லாத தெளிந்த நீரால் கிழக்கு அல்லது வடக்கு முகமாகப் பார்த்து, நின்றவாறு ஆசமனம் செய்வது சிறந்தது.
2-62. ஆசமன ஜலத்தை உட்கொள்கையில், பிராமணன் மார்பு வரையிலும் க்ஷத்ரியன் கழுத்து வரையிலும், வைஸ்யன் உள்நாக்கு வரையிலும், ஏனையோர் (சூத்திரர்) நாவிலும் உதட்டிலும் ஜலம் படும்படியாக்ச் செய்யவேண்டும்
2-63. பூணூல் அல்லது மேலாடை இடது தோளில் இருந்து புறப்பட்டு கால் வரை செல்ல வேண்டும். இது உபவீதம் எனப்படும். இடது தோளில் மாற்றிப் போட்டால் அது பிராசீனா விதி எனப்படும். மாலையாகப் போடுதல் நிவிதம் என்றும் சொல்லப்படும். (180)
2-64. இவ்வாறு மூன்று வர்ணத்தார் அணியும் பூணூல், தோல், தண்டம், மேலாடை ஆகியன சேதம் அடைந்தாலோ, அழுக்கடைந்தாலோ பழையனவற்றை நீரில் போட்டுவிட்டு, புதியது தரிக்க வெண்டும்.

Brahmin boys; picture by P Swaminathan
2-65. இந்த மூன்று வருணத்தாரும் முறையே 16, 22, 24 வயதில் முடியிறக்க வேண்டும்
2-66. இத்தகைய சடங்குகள் ஏல்லாம் பெண் குழந்தைகளுக்கும் உண்டு. ஆனால் மந்திரம் இல்லாமல் வெறும் சடங்காக செய்தால் போதும்.
2-67. பெண்களுக்கு கல்யாணம்தான் உபநயனம் ; அதாவது பூணூல் போடுவது போல; கணவனுக்குப் பணிவிடை செய்தலே குருகுல வாசம்; இல்லறம் நடத்துவதே சமிதாதானம் ஆகும்.
கற்றுணர்ந்து செயல்படல்
2-68. இவ்வாறு உபநயனம் முதலியன மூலம் இரண்டாவது பிறப்பு எடுத்து புனித மார்கத்தில் செல்லுதலைக் கூறினேன். இனி அவரவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லுவேன். (185)
2-69. குரு தனது சீடனுக்கும், தந்தை தனது மகனுக்கும் தூய்மையாக இருத்தல், ஒழுக்கத்துடன் வாழ்தல், தீ வளர்த்து ஹோமம் செய்தல் ஆகியவற்றைக் கற்பிக்க வேண்டும். காலை, நண்பகல், மாலை ஆகிய சந்தி நேரங்களில் செய்யவேண்டிய வழிபாடுகளையும் சொல்லித் தர வேண்டும்.
2-70. வேதம் ஓதும் மாணவன் முதலில் ஆசமனம் செய்துவிட்டுக் கைகளைக் கட்டிக்கொண்டு கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து கொண்டு புலன் அடக்கத்துடன் வேதம் ஓத வேண்டும்
2-71. வேதம் கற்பதற்கு முன்னரும் பின்னரும் குரு வணக்கம் செய்தலும் கைகட்டிக் கொண்டு வேதம் படித்தலும் பிரம்மாஞ்சலி எனப்படும்
2-72.குருவின் முன்னால் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வலது கையால் அவரது வலது பாதத்தையும் இடது கையால் இடப் பாதத்தையும் தொட்டு வணங்க வேண்டும் (190)
2-73. உபதேசிக்கும் குருவும் சோம்பலில்லாமல் மாணவர்களுக்கு ‘’துவங்குக’’ என்றும் ‘’நிறுத்துக’’ என்றும் கட்டளை இட வேண்டும்

பிரணவ மந்திரத்தின் பெருமை
2-74. வேதம் கற்கும்போது துவக்கத்தில் ஓம் என்னும் பிரணவ மந்திரம் சொல்லித் துவங்க வேண்டும்; இதே போல முடிக்கையிலும் ஓம் சொல்ல வேண்டும்; துவங்கும் போது ஓம் சொல்லாவிடில் வேதம் மனதில் பதியாது; இறுதியில் ஓம் சொல்லி முடிக்காவிடில் கற்ற வேதம் நினைவிற் நிற்காது.
2-75..பிரணவ (ஓம்) மந்திரத்தை உச்சரிக்கும் முன் தர்ப்பையைப் பரப்பி, கிழக்கு நோக்கி அமர்ந்து மூன்று முறை பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) செய்தல் வேண்டும்; பின்னரே பாடம் கற்கலாம்.
2-76. பிரம்மா, மூன்று வேத சாரங்களான அகார, உகார, மகார, சப்தங்களினால் பிரணவத்தை உண்டாக்கினார். அவரே பூர், புவர், சுவர் ஆகிய புனித மந்திரங்களையும் உண்டாக்கினார்.
2-77. மேலும் ‘’தத்’’ என்ற துவக்கத்தை உடைய மூன்று அடி காயத்ரியையும் மூன்று வேதங்களில் இருந்தே உண்டாக்கினார். (195)

2-78. இந்த பிரணவத்தையும் ‘’பூர் புவர் சுவர்’’ மற்றும் காயத்ரியையும் சந்தியா காலங்களில் ஓதும் பிராமணன் மூன்று வேதங்களையும் ஓதிய புண்ணியத்தை அடைகிறான்.
2-79. இந்த காயத்ரீ மந்திரத்தை ஊருக்கு வெளியே காடு, மலை, நதி தீரத்தில் தினமும் ஆயிரம் முறை ஜபிப்பவன் ஒரு மாதம் ஜபித்தால் மஹா பாதகத்தில் இருந்து விடுபடுவான். பாம்பு அதன் தோலில் இருந்து எப்படி விடுபடுகிறதோ அது போல பாவங்கள் நீங்கும்.
2-80. இந்த ஜபம்- உபநயனம் ஆகிய இல்லாத மூன்று வருணத்தாரும் பெரியோர்களினால் நிந்திக்கப்படுவார்கள்
2-81. காயத்ரீயை மோட்சத்துக்கான வழியாகச் சொல்லுகிறார்கள்.
2-82. எவன் மூன்று வருடத்துக்குச் சோம்பல் இல்லாமல், தினமும் இடைவிடாது காயத்ரீயை ஜபிக்கிறானோ, அவன் வாயுவைப் போல ஆகாயத்தில் , தன் இஷ்டப்படி உருவம் எடுத்து சஞ்சரிக்கிறான். இறைவனுடன் ஒன்றிவிடுகிறான் (200)

2-83. பிரணவம் பரப்பிரம்மம் ஆகவும், பிராணாயாமம், சாந்திராயனம் முதலியவற்றைக் காட்டிலும் மேலானதாகவும் சொல்லப்படுகிறது; காயத்ரீயைச் ஜபிப் பவனுக்குப் பாபம் இல்லை. காயத்ரிக்கு மேலான மந்திரம் இல்லை. அவன் சத்தியத்தையே சொல்லுவதால் இதைச் செய்பவனுக்கு மௌன விரதம் தேவை இல்லை.
2-84. வேதத்தில் உள்ள யாக யக்ஞாதி கருமங்கள் அழியக்கூடிய பலத்தையே தரும்; ஆனால் பிரணவம், பரமாத்ம ஸ்வரூபத்தைக் காட்டி மோட்சத்தைக் கொடுக்கிறபடியால், அதற்கு அழிவற்றது (அக்ஷரம் = அழியாதது) என்றும் பிரம்மனால் (by Bahma) சொல்லப்பட்டிருக்கிறது
2-85. ஒரு பிராமணன் ‘’ஓம்’’ உடன் காயத்ரீயைச் சொன்னால் இந்த ஜப யக்ஞமாவது அமாவாசை, பௌர்ணமியில் செய்யும் யாகங்களைவிட பத்து படங்கு பலன் தரக்கூடியது. அதை யார் காதிலும் விழாமல் ரஹசியமாகச் செய்தால் நூறு மடங்கு பலன் கிடைக்கும். மனதில் அதன் பொருளை அறிந்து சொன்னால் ஆயிரம் மடங்கு பலன் பெறுவர்.(203)
2-86. பஞ்ச மஹா யக்ஞங்களில் பிரம்ம யக்ஞம் ஒன்றைத்தவிர மற்ற நான்கும் காயத்ரீயை விட மதிப்புக் குறைந்தவையே. காயத்ரீயின் மஹிமையில் பதினாறில் ஒரு பங்கு கூட அவைகளுக்கு இல்லை.
2-87. காயத்ரீ ஜபத்தால் பிராஹ்மணன் நிச்சயமாக மோட்சத்தை அடைகிறான். அவன் வேறு எதையும் செய்தாலும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. அந்தணர் என்போர் அறவோர்; மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான் (குறள் வரிகள்); அவன் எல்லோருடைய நண்பன் ஆகிறான்.
2-88. தேரை ஓட்டும் சாரதி குதிரைகளை கடிவாளம் போட்டு அடக்குவது போல, அறிவுடையார், மனம் என்னும் குதிரைகளை அடக்க வேண்டும். புலன் இன்பங்களை நாடி ஓடும் மனது, கட்டுக்கடங்காத குதிரைகளுக்கு உவமை.(206)
எனது கருத்து:-

பூணூல், தண்டம், மேலாடை, குருகுல வாசம், பிக்ஷை எடுத்தல் முதலியவற்றை மூன்று வருணத்தாருக்கும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத் தக்கது. இப்போது பிராமணர் தவிர மற்ற எல்லோரும் சூத்திரர்கள் என்ற அரசியல் பிரசாரத்தால் மக்கள் குழம்பிக் கிடக்கின்றனர். ஆளும் அரசியல்வாதிகள், வணிகப் பெருமக்கள், விவசாயிகள் முதலியோரும் பூணூல் அணிந்து வேதம் கற்ற காலம் ஒன்று இருந்தது. ஆனால் இதை நடத்திக் கொடுக்கும் பணிக்கு பிராஹ்மணர் தலைமை வகித்தனர்.
மேலும் பெண்களுக்கும் மந்திரம் இல்லாமல் எல்லாச் சடங்குகளையும் செய்க என்று மநு கூறுவதிலிருந்து அவர் மிக மிகப் பழங்காலத்தில் வாழ்ந்தவர் என்பது தெரிகிறது. ஏனெனில் கதைகளில் கூட மூன்று வருணத்தார் இவற்றைச் செய்ததாகப் படிப்பதில்லை. ஆகவே அவர் ஸரஸ்வதி நதி பாய்ந்த காலத்தில் இதை எழுதினார் என்பது தெளிவாகிறது. பிற்காலத்தில் இடைச் செருகல்கள், குறிப்பாக சூத்திரர்களுக்கு எதிரான விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
தற்காலத்தில் வேதம் படிப்பதையும், காயத்ரீ சொல்லுவதையும் எல்லோருக்கும் பொதுவாக்கினார் சத்ய சாய் பாபா போன்ற மஹான்கள். இது ஜனகர் காலத்திலும் அவருக்கு முந்தியும் இருந்ததை நாம் உபநிஷத்து மூலம் அறிகிறோம். அப்பொழுது கார்க்கி போன்ற பெண்கள் பெரிய சபைகளில் வாதம் செய்ததைப் பிருஹத் ஆரண்யக உபநிஷத்தில் பார்க்கிறோம். ஆகவே பெண்களும் , மற்ற ஜாதியினரும் வேதம் அறிந்தவர்களாக இருந்த காலம் ஒன்று இருந்தது.
‘’ஓம்’’ என்னும் பிரணவ மந்திரத்தையும், காயத்ரீ மந்திரத்தையும் மிக உச்சாணிக் கொம்பில் வைக்கிறார் மநு. பிராஹ்மணர்கள், காயத்ரீ மந்திரத்தைப் பிடித்துக் கொண்டால் போதும், வேறு யாக யக்ஞங்கள் இல்லாவிட்டாலும் ஒன்றும் தவறில்லை என்று அடித்துக் கூறுகிறார் மநு.
மேலும், மாநசீகமாகச் செய்யும் (மனதுக்குள்) காயத்ரீக்கு ஆயிரம் மடங்கு பலன் என்று மநு செப்புவதும் குறிப்பிடத்தக்கது.
குருவுக்கு எப்படி வணக்கம் செலுத்த வேண்டும் என்று மநு கூறுவதும், குருவானவர் இப்போது ‘சொல்’, இப்போது ‘நிறுத்து’ என்று சொல்ல வேண்டும் என்று மநு கட்டளையிடுவது நோக்கற்பாலது. ஆசிரியர் என்பவர், மாணவர்களை வகுப்பறையில் உட்கார வைத்துவிட்டு மற்ற அலுவல்களைச் செய்ய முடியாது; முழுக் கவனமும் மாணவர் மீது இருக்க வேண்டும் என்பதும் பெறப்படுகிறது.
மநு தனது நூல் முழுதும்— துவக்கம் முதல், இறுதி வரை — புலன் அடக்கத்தையும் ஸத்தியத்தையும் வலியுறுத்துவதை நன்கு கவனிக்கவும். இவை இரண்டும் இருக்கும் எல்லோரும் பிராஹ்மணர்களே; வேதம், காயத்ரீ எல்லாம் இதற்குப் பின்னரே. அதனால்தான் வள்ளுவனும் மநு சொன்னதை அப்படியே சொன்னான்—
மறப்பினும் ஒத்துக்கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் (134)
மநு சொன்ன முதல் 200 ஸ்லோகங்களிலேயே பல அதிசய விஷயங்களைக் கண்டு வருகிறோம்; இன்னும் 2400 ஸ்லோகங்களில் பல அதிசயங்களைக் காண்போம்.
-தொடரும்……………………….
You must be logged in to post a comment.