கீழ்ஜாதிக்காரனை மேல் ஜாதியாக்கும் அதிசய மந்திரம்! (Post No.5283)

Written by London swaminathan

Date: 3 August 2018

 

Time uploaded in London – 6-52 AM   (British Summer Time)

 

Post No. 5283

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

கீழ்ஜாதிக்காரனை மேல் ஜாதியாக்கும் அதிசய மந்திரம்! (Post No.5283)

 

சிவ சிவ என்கிலர் தீவினையாளர்

 

சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்

 

சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்

 

சிவ சிவ என்னச் சிவகதி தானே

திருமூலரின் திருமந்திரம்

 

பொருள்

 

பாவிகள், சிவன் (கடவுள்) நாமத்தை உச்சரிக்க மாட்டார்கள்; பாவம் செய்தவர்களும் சிவ, சிவ என்ற நாமத்தை உள்ளன்போடு உச்சரித்தால் பாவங்கள் போகும். சிவன் நாமத்தை உச்சரித்தால் மனிதனும் தேவர் ஆகிவிடுவான். தொடர்ந்து சிவன் நாமத்தை உச்சரிப்பவர்கள் சிவனுடன் ஒன்றிவிடுவார்கள்.

 

‘நாவுக்கு அருங்கலம் நமச்சிவாயவே’ என்று அப்பர் பெருமான் சொன்னதும் இதனால்தான்.

 

இதை விளக்க ஒரு கதை உண்டு

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் சந்தித்த பெரிய பக்தர்களில் ஒருவர் கிருஷ்ண கிஷோர். அவர் ராம பிரானை வழிபடுபவர். அரியதாகா என்னுமிடத்தில் வாழ்ந்தார்.அவரைப் பற்றி ராமகிருஷ்ணர்  சொன்னதாவது:

 

“எனக்கு முதலில் தெய்வீகப் பரவச நிலை ஏற்பட்டு அதிலேயே  ஆழ்ந்து கிடந்தபோது  , என்னால் உலக ஆசை பிடித்த சாதாரண மக்களோடு இருக்கவே முடியாது. நான் கடவுள் வெறி பிடித்து , கடவுள் பற்றிய விஷயங்களையே கேட்க விரும்பினேன். மஹாபாரதம் எங்கே நடக்கும்? பாகவதம் எங்கே நடக்கும்?

அத்யாத்ம ராமாயணம் எங்கே நடக்கும்? என்று அலைந்தேன். சில நேரங்களில் கிருஷ்ண கிஷோரிடம் செல்வேன். அவருக்குக் கடவுளிடம் அற்புதமான நம்பிக்கை இருந்தது.

 

ஒருமுறை கிருஷ்ண குமார் பிருந்தாவனத்துக்குச் சென்றிருந்தார். அவருக்கு மிகவும் தாகம் எடுத்தது. போகும் வழியில் இருந்த ஒரு கிணற்றடிக்குச் சென்றார். அங்கே ஒருவன் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தான். கிஷோர் அவனிடம் சென்று தமக்குக் குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் தரும்படி கேட்டார். அவனோ தான் மிகவும் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவன் என்றும் அவருக்குத் தண்ணீர் எடுத்துத் தருவது பாவம் என்றும் கூறினான்.

 

உடனே கிருஷ்ண கிஷோர் அவனிடம் ‘ சிவ, சிவா’ என்று சொல்லச் சொன்னார். அவன் சொன்னதும் நீ உயர்குலத்தவன் ஆகிவிட்டாய், உன் கையாலேயே தண்ணீர் இறைத்துக் கொடு’ என்றார். அவனும் தந்தான். கடவுளின் திருநாமத்தில் அவருக்கு அவ்வளவு நம்பிக்கை.

 

சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்என்று திருமூலர் சொன்னது எவ்வளவு உண்மை! நாடு முழுதும் இந்த நம்பிக்கை உண்டு!

 

அஜாமிளன் கதை புராணத்தில் வருகிறது எவ்வளவு பாபம் செய்த போதிலும் சாகும் நேரத்தில் மகன் பெயரான நாராயணன் பெயரைச் சொல்லி அழைத்த ஒரே காரணத்தினால் அவன் எல்லா பாபமும் நீங்கப் பெற்றான்.

 

விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தின் பலஸ்ருதியிலும் சங்கீர்த்ய நாராயண சப்த மாத்ரம் விமுக்த துக்காஸ் சுகினோ பவந்து” என்று சொல்லப்படுகிறது. நாராயண என்ற சப்தமும் சிவன் என்ற சப்தமும் எல்லாப் பாவங்களையும் போக்கி எல்லோரையும் உயர் நிலைக்கு இட்டுச் சென்று விடுகிறது. இதை அப்பர் சுவாமிகள் , திருமூலர், சம்பந்தர் முதலியோரும் ஆழ்வார்களும் நமக்கு பாடல்களால் உணர்த்தியுள்ளனர்.

 

சிவ, சிவ!                                          நாராயண, நாராயண!!

 

–சுபம்–