குகைகள் பற்றி கம்பன் தரும் சுவையான தகவல் (Post No.3407)

Written by London swaminathan

 

Date: 1st December 2016

 

Time uploaded in London: 19-40

 

Post No.3407

 

Pictures are taken from various sources; thanks. They are representational.

 

contact; swami_48@yahoo.com

 

மேல் நாடுகளில் குகைகள் பற்றி ஆராய்வோருக்காக (Speleology) சங்கங்கள் உள்ளன. உலகில் எங்கு குகைகள் இருந்தாலும் அங்கு சென்று நவீன கருவிகளை வைத்து முதலில் ஆராய்ந்துவிட்டு பின்னர் கயிறு கட்டி உள்ளே இறங்குவர். பின்னர் அது பற்றிய சுவையான தகவல்கள் வெளியாகும். நமது இந்தியாவில் ஏராளமான குகைகள் உள்ளன. மேகாலயாவில் உள்ள குகைகளைப் பற்றி கூட ஒரு ஆங்கிலக் கட்டுரை வந்தது.

 

வால்மீகி ராமாயணத்தில் கதையின் முக்கியத் திருப்பமே குகை மூலமகத்தான் வந்தது. கிஷ்கிந்தையில் குகைக்குள் போன வாலி வரவில்லை என்றவுடன், பயந்து போனதம்பி சுக்ரீவன் அதன் வாயிலை மூடவே வந்தது வம்பு! பின்னர் நடந்த கதை எல்லாம் நாம் அனைவரும் அறிந்ததே.

 

இமயமலையில் நைமிசாரண்யம் என்னும் இயற்கை அழகு மிக்க பூமி அருவிகளும், அடவிகளும் (காடு), குகைகளும் வனவிலங்குகளும் நிறைந்த இடம். அங்குதான் முனிவர்கள் தங்கி புராணக் கதைகளைக் கேட்டனர்; எழுதினர்; யாக யக்ஞங்களைச் செய்தனர்.

இதே போல கிஷ்கிந்தையிலும் குகைகள் இருந்தது வாலியின் கதை மூலம் தெரிகிறது. கிஷ்கிந்தை குகைகள் பற்றிக் கம்பன் கூறும்  பாடலைக் காண்போம்:

 

சரம்பயில்நெடுந்துளி நிரந்த புயல் சார

உரம் பெயர்வு இல் வன் கரி கரந்துற ஒடுங்கா

வரம் பகல் நறும் பிரசம் வைகல் பல வைகும்

முரம்பினில் நிரம்பல முழைஞ்சியடை நுழைந்த

கார்காலப் படலம், கிட்கிந்தா காண்டம்

 

பொருள்:-

வானில் பரவிக்கிடந்த மேகங்களில் இருந்து மழை கொட்டியது அம்புகள் சரமாரியாக வந்ததுபோல இருந்தது. அப்போது தேன்கூடுகளில் இருந்து தேன் வழிந்தது. அப்பொழுது அந்த யானைகள்  மழையைப் பொறுக்க முடியாதபடி குகைக்குள் ஒவ்வொன்றாக நுழைந்தன.

 

இப்பொழுது நாம் இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பார்ப்போம்; யானைகள் நுழையும் அளவுக்கு பெரிய வாயில்கள்!! அவ்வளவு யானைகளுக்கும் இடம் தரும் அளவுக்கு அகன்ற ஆழமான குகைகள்! இப்படி இருந்ததாம் கிஷ்கிந்தைப் பகுதி.

 

(முழை=குகை, பிரசம்=தேன்கூடு)

 

முழை என்ற சொல் சங்க இலக்கியத்தில் பரிபாடல், அகநானூறு, புறநானூறு பாடல்களில் வருகிறது. பேகன் ஆண்ட மலைப் பகுதியில் பெரிய குகைகள் இருந்தனவாம். அகநானூறு பாடல் ஒன்றில் இரவுநேரத்தில் தன்னைக் காண வரவேண்டாம்; ஏனெனில் மலைக்குகைகளில் புலிகள் இருக்கின்றன என்று காதலனுக்கு காதலி கூறுகிறாள்.

 

குகை என்ற சம்ஸ்கிருதச் சொல் சங்கப் பாடல்களில் கிடையாது. முழை என்ற சொல்லே நீண்டகாலத்துக்குப் பயன்படுத்தப்பட்டது.

காளிதாசன் பாடலில் குகைகள்

உலகப் புகழ்பெற்ற கவிஞன் காளிதாசன், குமாரசம்பவம் என்னும் காவியத்தில் முதல் 18 பாடல்களில் இமய மலையை அற்புதமாக வருணிக்கிறான். அதில் இரண்டு பாடல்களில் குகைகளைப் பற்றியும் சொல்கிறான். கிம்புருஷப் பெண்கள், இமயமலைக் குகைகளில் இருப்பதாகவும் மேகங்கள் குகைகளின் வாயிலில் தவழ்ந்து செல்லுகையில் அவை திரை போல இருந்து அவர்களுக்கு உதவின என்றும் பாடுகிறான்.

 

சங்க இலக்கியப் பாடல்களில் குகை (முழை)

அகம்-168, பரி-8, 19, புற. 147, 157, 158.

 

காளிதாசன் குமார சம்பவம் – 1-12, 1-14

 

–SUBHAM–