Written by London Swaminathan
Date:17 October 2017
Time uploaded in London- 21-28
Post No. 4310
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
5000 ஆண்டுகளுக்கு முன்னர், வியாச மஹரிஷி, வேதங்களைக் காப்பாற்ற, அவைகளை நான்காகப் பிரித்து நாலு சீடர்களை அழைத்து இதைப் பரப்புங்கள் என்றார். எழுதாக் கிளவியாக (கிளவி= சொல்) 5000 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்றும் அது ஒலிப்பது உலக அதிசயமாகக் கருதப்படுகிறது. வியாசர் உலக மஹா ஜீனியஸ் GENIUS; பேரறிவாளன்! தனது காலத்தில் இருந்த அத்தனை கதைகளையும் நீதி வாக்கியங்களையும் உலகிலேயே மிகப் பெரிய இதிஹாசமான மஹாபரதத்தில் இணைத்தார். 20,000 மந்திரங்களை உடைய 4 வேதங்களையும் தொகுத்தார். இனி உலகில் இப்படிப்பட்ட பணியைச் செய்ய எவரால் முடியும்?
ரிக் வேத மந்திரங்களைத் தொகுத்த வியாசர், அதை மனம் போன போக்கில் அவியல் போலச் செய்யாமல், அழகாகச் செய்து கொடுத்தார். இதோ சில சுவையான தகவல்கள்:-
ரிக்வேதம் என்பது ஒரு புத்தகம் இல்லை; ஒரு கவிதைத் தொகுப்பு.
இது பல்வேறு காலங்களில் வாழ்ந்த புலவர்கள் ‘கண்டுபிடித்த’ மந்திரங்கள்; அதாவது அவை எப்போதும் இருக்கும்; ஞான த்ருஷ்டி உடைய முனிவர்கள் அதைக் கண்டு பாடுவர். அதனால் அவர்களுக்கு மந்திரங்களைப் பார்த்தவர்கள் — மந்த்ர த்ருஷ்டா — என்று பெயர்.
இது கவிதைத் தொகுப்பு; பல வகை யாப்பு அணிகளில் அமைந்துள்ளது. இலக்கணமும், மொழியும் கூட மாறுபடும்.
ரிக் வேதத்தில் மொத்தம் பத்து மண்டலங்கள்; பின்னர் இதை எட்டு அஷ்டகங்களாகவும் பிரித்தனர்.
இரண்டாவது மண்டலம் முதல் ஏழாவது மண்டலம் வரையுள்ள மண்டலங்கள் குடும்ப மண்டலங்கள் என்று அழைக்கப்படும் அதாவது 2, 3, 4, 5, 6,7 ஆகிய ஆறு மண்டலங்களும் ஆறு மஹரிஷிகளின் குடும்பத்தினர் பாடியவை/ கண்டுபிடித்தவை.
வியாசர் பிரித்த மண்டலங்களின் உட்பிரிவுகள் அனுவாகம், சூக்தம்.
அஷ்டக முறையில் உட்பிரிவுகள்:- அத்யாயம், வர்கம்
ஒவ்வொரு வர்கமும், ஒரு (Lesson) பாடத்துக்கு வசதியாக இருப்பதால் இந்த அஷ்டக முறை வைதீகர்களிடையே பிரசித்தம்.
பத்து மண்டல அமைப்பு
முதல் மண்டலம்- 24 அனுவாகங்கள்
இரண்டாவது மண்டலம் – 4 அனுவாகங்கள்
மூன்றாவது, நாலாவது மண்டலம் – 5 அனுவாகங்கள்
5,6, 7 ஆவது மண்டலம் – 6 அனுவாகங்கள்
எட்டாவது மண்டலம் – 10 அனுவாகங்கள்
ஒன்பதாவது மண்டலம் -7 அனுவாகங்கள்
பத்தாவது மண்டலம் – 12 அனுவாகங்கள்
அனுவாகங்களின் உட்பிரிவு சூக்தம்; ஒவ்வொரு சூக்தத்துக்கும் ஒரு ரிஷி, தேவதை, சந்தஸ் உண்டு. இது தெரிந்தால்தான் முழுப் பொருளும் விளங்கும்.
6 குடும்ப மண்டல ரிஷிகள்
இரண்டாவது- க்ருத்சமட
மூன்றாவது- விஸ்வாமித்ர
நாலாவது- வாமதேவ
ஐந்தாவது- அத்ரி
ஆறாவது- பரத்வாஜ
ஏழ்ழாவது- வசிஷ்ட
இந்தக் குடும்ப மண்டலங்களில் இன்னொரு அற்புதமும் உண்டு. முதல் மந்திரம் அக்னி தேவனைப் பற்றியது.
உலக எழுத்துக்களுக்கு எல்லாம் முதல் எழுத்து ‘அ’
ரிக் வேதத்தின் முதல் துதியும் அ- வில்தான் துவங்கும் இதனால்தான் வள்ளுவர் ‘அகர முதல எழுத்து எல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்றார். பகவத் கீதையில் எழுத்துக்களில் நான் ‘அ’ என்று கிருஷ்ணன் சொன்னார்.
அக்னிக்கு அடுத்தபடியாக இந்திரன் துதிகள் வரும்.
பின்னர், மற்ற தெய்வங்களின் துதிகள் வரும்
இது மட்டுமல்ல; முந்தைய துதிகளை உடைய அடுத்த துதியில் மந்திரங்கள் குறைந்து கொண்டே வரும் (ஆனால் சில விதி விலக்குகள் உண்டு)
எட்டாவது மண்டலத்தில் இப்படி ஒரு வரிசை
முறையைக் காண முடியாவிட்டாலும் கண்வர் குடும்பத்தினரின் மந்திரங்களை அதிகம் காணலாம்.
ஒன்பதாவது மண்டலம் முழுதும் சோம பானத்தைப் பற்றியவை.
இரண்டு முதல் ஏழு மண்டலம் வரை உள்ள ரிஷிகளே இவைகளைப் பாடியுள்ளனர். ஆனால் வியாசர் இதிலும் ஒரு அழகைப் புகுத்தியுள்ளார்.
1-67 வரையுள்ள மந்திரங்கள்/சூக்தங்கள் காயத்ரி அணியிலும்
68-86 வரையுள்ளவை ஜகதி அணியிலும்
87-97 வரையுள்ளவை த்ருஷ்டுப் அணியிலும்
98-144 வரையுள்ளவை மற்ற அணிகளிலும் உள்ளன.
முதல் மண்டலமும் பத்தாவது மண்டலமும் இளைய ரிஷிகளின் தொகுப்பாகும். பத்தாவது மண்டலத்திலும் வியாசர் ஒரு ஒழுங்கு முறையை வைத்துள்ளார். இறங்கு வரிசையில்— மந்திரங்கள் குறைந்து–கொண்டே வரும்.
2-7 வரையுள்ள 6 மண்டலங்களும் பழமையானவை என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். ஆனால் அதற்குள் முதல் எது? கடைசி எது? என்பதில் கருத்து வேறுபாடு உளது.
எட்டாவது மண்டலத்தின் கடைசியில் ஒட்டுப்போட்டுள்ள 11 சூக்தங்கள் ‘வாலகில்ய’ சூக்தம் எனப்படும். இவை பிற் சேர்க்கை என்பதையும் அனைவரும் ஒப்புக் கொள்வர். சாயனர், இதற்கு உரை எழுதாவிடினும் காத்யாயனரின் அனுக்ரமணியில் (இண்டெக்ஸ் INDEX) இவை கணக்கிடப்பட்டுள்ளன.
–தொடரும்