கோவலனும் இளங்கோவும் சம்ஸ்கிருத அறிஞர்கள் !!

SriNarayani2
image of Narayani

Research paper written by London Swaminathan
Post No.1213; Dated :- 4 August 2014.

சிலப்பதிகாரத்தை யாத்த இளங்கோவும் காவியத்தின் கதாநாயகனான கோவலனும் சம்ஸ்கிருத அறிஞர்கள் !! இது நான் கூறும் கருத்து மட்டும் அல்ல. சிலப்பதிகாரத்தை அழகிய ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வீ.ஆர் ராமசந்திர தீட்சிதரும், கோவலன் சம்ஸ்கிருதப் புலமை பெற்றவன் என்று எழுதி இருக்கிறார்.

நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் ஒரு இந்து மதக் கலைகளஞ்சியம் ஆகும்.1939 ஆண்டில் இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வீ.ஆர். ராமசந்திர தீட்சிதர், பக்கம் தோறும் கொடுத்திருக்கும் அடிக் குறிப்புகளையும் அடியார்க்கு நல்லாரும் அரும்பதவுரையாசிரியரும் எழுதிய நீண்ட உரைகளையும் படிப்போருக்கு இது சொல்லாமலேயே விளங்கும்.

சிலப்பதிகாரம் — புகார், மதுரை, வஞ்சி — என்ற மூன்று மாபெரும் தமிழ் நகரங்களின் பெயரில் 3 காண்டங்களாகப் பிரிக்கப்பட்டது. அதில் 30 காதைகள் உள்ளன. ஆய்ச்சியர் குரவை என்ற பகுதியில் கண்ணன், இராமன் புகழையும் குன்றக் குரவை என்ற பகுதியில் முருகன் புகழையும் வேட்டுவ வரி என்ற பகுதியில் துர்க்கையின் புகழையும் விதந்து ஓதுகிறார் இளங்கோ.

சங்க இலக்கிய நூலான நற்றிணையின் கடவுள் வாழ்த்தில் எப்படி விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்லோகம் (பூ பாதௌ….) உள்ளதோ, அதே போல சிலப்பதிகாரத்தில் பல சம்ஸ்கிருத ஸ்லோகங்களின் மொழிபெயர்ப் புகளைக் காணலாம்.

கோவலனும் இளங்கோவும் சம்ஸ்கிருத அறிஞர்கள் என்பதற்கான சில எடுத்துக் காட்டுகளை காண்போம்:–
durga mahisa

சான்று ஒன்று:–
குழந்தையைக் கொல்ல வந்த பாம்பைக் கொன்ற ஒரு கீரிப்பிள்ளை பெருமித உணர்வோடு வாசலில் காத்திருந்தது. தண்ணீர்க் குடத்துடன் வீட்டுக்குத் திரும்பிய பார்ப்பனி, கீரியின் வாய் முழுதும் ரத்தம் படிந்திருப்பதைப் பார்த்து, பதறிப் போய், கீரிதான் குழந்தையைக் கொன்றுவிட்டது என்று தவறாக எண்ணி கீரியின் தலையில் குடத்தைப் போட்டுக் கொன்ற பஞ்ச தந்திரக்கதை எல்லோருக்கும் தெரியும்.

இதில் ஒரு சுவையான விஷயத்தை நுழைக்கிறார் நுன்மாண் நுழைபுலம் மிக்க இளங்கோ! அந்த வீட்டுப் பார்ப்பனக் கணவன் கோபித்துக் கொண்டு அவளை விட்டுப் பிரிந்தான். எதற்காக? வடதிசை சென்று புண்ணியம் தேட! அப்படிப் போகையில், வட மொழி வாசகம் எழுதிய ஒரு ஓலையை அந்தப் பார்ப்பனப் பெண்ணிடம் கொடுத்து கற்றவரிடம் (அடைக்கலக் காதை) காட்டி உய்வு பெறு என்று சொல்லிப் போய்விடுகிறான். அந்தப் பிராமணப். பெண் கடைத் தெருவில் நின்று, குய்யோ முறையோ என்று ஓலமிட்டு அழுத போது, கோவலன் வந்து அந்த சம்ஸ்கிருத பாடலைப் படித்து அவளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்கிறான். அடியார்கு நல்லார் எழுதிய உரையில் அது என்ன சம்ஸ்கிருத ஸ்லோகம் என்பதையும் பஞ்ச தந்திரக் கதையிலிருந்து எடுத்துச் சொல்கிறார்.

இங்கே காலவழுவமைதி உள்ளதைச் சுட்டிக்காட்டிய தீட்சிதர், கோவலனை சம்ஸ்கிருதப் புலமை பெற்றவன் என்கிறார். காலவழுவமைதி= கோவலன் காலத்துக்கு முன்னர் நடந்த சம்பவம் இது!!

DurgaS

சான்று இரண்டு:–
கோவலனுக்கு மதுரைக்குப் போகும் காட்டு வழியை ஒரு மாங்காட்டுப் பிராமணன் (காடுகாண் காதை) சொல்வதாகக் கதை அமைத்துள்ளார் இளங்கோ. கோவலனும் கண்ணகியும் புகார் நகரில் இருந்து காட்டு வழியாக வருகையில் மாதவியின் நண்பி வசந்தமாலா போல வேஷம் போட்ட வனமோகினி கோவலனை இடைமறிக்க, மாங்காட்டு மறையவன் சொன்ன மோகினி விஷயங்கள் கோவலனுக்கு நினைவுக்கு வருகிறது. உடனே துர்க்கா தேவி மந்திரத்தை சொன்னவுடன் அந்த வன தேவதை ஓடிவிடுகிறது. இங்கே இளங்கோ பயன் படுத்தும் சொல் பாய்கலைப் பாவை மந்திரம். அதாவது பாயும் மான் என்னும் விலங்கை வாஹனமாகக் கொண்ட துர்க்காதேவியின் மந்திரம் (காடுகாண் காதை)
இதே பகுதியில் மாங்காட்டுப் பிராமணன் ஐந்தெழுத்து ( நமசிவாய) எட்டெழுத்து (நமோ நாராயண) மந்திரங்களின் பெருமையையும் பகர்கிறான். எல்லா இடங்களிலும் “மந்திரம்” என்னும் வடசொல்லைப் பயன்படுத்துகிறார் இளங்கோ!!

pallava
Mahishasuramardani in Mahabalipuram

சான்று மூன்று:–
1008 பெயர்களைக் கொண்ட சஹஸ்ரநாமம் எல்லா இந்துக் கடவுளர்க்கும் உண்டு. இளங்கோவுக்கு இந்த எண் மிகவும் பிடிக்கும். இந்திர விழா பற்றிய காதையில் 1008 மன்னர்கள் தங்கக் குடங்களில் புனித நீர் ஏந்தி இந்திர அபிஷேகம் செய்த்தைக் கூறுவார். சமண மதத்தினர் 1008 நாமம் சொல்வதாகக் கவுந்தி அடிகள் என்ற சமணப் பெண் துறவி வாயிலாகக் கூறுகிறார். ஊர்காண் காதையில் 1008 பொற்காசுகள் பற்றிப் பாடுகிறார் இளங்கோ. இதுவும் சம்ஸ்கிருத செல்வாக்கைக் காட்டும்.
சமணத் துறவி கவுந்தி அடிகள் வாய்மொழியாக சமண நாமாவளியில் பல சம்ஸ்கிருத நாமங்களைச் சொல்கிறார். இதில் பல சைவ (சிவன்) பெயர்களும் (நாடுகாண் காதை) உண்டு:

அறிவன் அறவோன் அறிவுவரம்பு இகழ்ந்தோன்
செறிவன், சினேந்திரன், சித்தன், பகவன்,
தரும முதல்வன், தலைவன், தருமன்
பொருளன், புனிதன், புராணன், புலவன்,
சினவரன், தேவன், சிவகதி நாயகன்
பரமன், குணவதன், பரத்தில் ஒளியோன்
தத்துவன், சாதுவன், சாரணன் காரணன்
……………………………………………
சங்கரன், ஈசன், சுயம்பு சதுர்முகன்

dance mahisa

சான்று நான்கு:–
வேட்டுவ வரியில் வேடர்கள் ——– கொற்றவை என்றும் பாய் கலைப் பாவை என்றும் துர்கா தேவி என்றும் அழைக்கப்படும் தெய்வத்தை எப்படி எல்லாம் வணங்கினர் என்று நிறையவே சொல்கிறார் இளங்கோ:

அமரி, குமரி,கவுரி, சமரி
சூலி, நீலி, மால் அவற்கு இளங்கிளை (நாராயணி)
ஐயை, செய்யவள் வெய்யவாள் தடக்கைப்
பாய்கலைப் பாவை பைந்தொடிப் பாவை
ஆய்கலைப் பாவை அருங்கலைப் பாவை

இதில் கவுரி, நாராயணி என்ற சொற்கள் பல ஸ்தோத்திரங்களில் உள்ளன.

சர்வமங்கல மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதிகே
சரண்யே த்ரயம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே

என்ற ஸ்லோகம் எல்லோருக்கும் தெரிந்தது.

‘அயிகிரி நந்தினி’– என்ற மஹிஷாசுரமர்தனி ஸ்லோகத்தில் வரும் எல்லா விஷயங்களையும் வேட்டுவ வரியில் சொல்கிறார் இளங்கோ. அத்தனை யையும் காட்ட இடமிருக்காது. இதோ ஒரு சில செய்யுள்கள்:

ஆனைத் தோல் போர்த்துப் புலியின் உரி உடுத்துக்
கானத்து எருமைக் கருந்தலைமேல் நின்றாயால்—-
வானோர் வணங்க, மறைமேல், மறையாகி
ஞானக் கொழுந்தாய், நடுக்கு இன்றியே நிற்பாய்!

வரிய வளைக்கை வாள் ஏந்தி மாமயிடற் செற்று,
கரியதிரி கோட்டுக் கலைமிசைமேல் நின்றாயால்—-
அரி, அரன், பூமேலோன், அகமலர் மேல் மன்னும்
விரிகதிர் அம்சோதி விளக்கு ஆகியே நிற்பாய்!

சங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்தி
செங்கண் அரிமான் சினவிடைமேல் நின்றாயால்—-
கங்கை முடிக்கு அணிந்த கண்ணுதலோன் பாகத்து
மங்கை உருவாய், மறை ஏத்தவே நிற்பாய்!
–வேட்டுவ வரி
mahisa1

இதே போல பகவத் கீதையின் தாக்கத்தையும் பல இடங்களில் காணலாம். சம்ஸ்கிருத சொற்களின் ஆதிக்கமும் சங்க இலக்கியத்தைவிட பன்மடங்கு கூடுதலாகக் காணக்கிடக்கிறது. பின்னொரு சமயம் அவை பற்றிக் காண்போம்.

–சுபம்–

சிலப்பதிகாரப் பொன் மொழிகள் – Part 2

16DFR_KANNAKI3_1894936g

தொகுத்தவர் – லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்—1197; தேதி ஜூலை 27, 2014

ஆகஸ்ட் மாத (சிந்தனைச் சிற்பிகள்) காலண்டரில் —முக்கிய “சிலப்பதிகாரப் பபாடல்கள் 31” — என்று முதல் பகுதி ஜூலை 26ம் தேதி வெளி வந்துள்ளது. இது இரண்டாவது பகுதி. சில பாடல்கள் இதில் மீண்டும் முழு வடிவத்தில் இருக்கும்.

32.சிலப்பதிகாரத்தின் 3 முக்கிய கருத்துக்கள்:–
அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரணமாகச்
சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
நாட்டுதூஉம் யாம் ஓர் பாட்டு உடைச் செய்யுள்’ என
–சிலப்பதிகாரப் பதிகம்

33.இளங்கோ அடிகளின் அறிவுரை:–
“பரிவும் இடுக்கணும், பாங்குற நீங்குமின்
தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்;
பொய்யுரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;
ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
தானம் செய்மின்; தவம்பல தாங்குமின்
செய்நன்றி கொல்லன்மின், தீ நட்பு இகழ்மின்
பொய்க்கரி போகன்மின், பொருள்மொழி நீங்கன்மின்
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்
பிறவோர் அவைக்களம் பிழைத்தும் பெயர்மின்
பிறமனை அஞ்சுமின், பிழையுயிர் ஓம்புமின்
அறமனை காமின், அல்லவை கடிமின்
கள்ளும் களவும் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா
உளநாள் வரையாது ஒல்லுவது ஒழியாது
செல்லும் தேஎத்துக்கு உறுதுணை தேடுமின்
மல்லன் மாஞாலத்து வாழ்வீர் ஈங்கென்”
(வரந்தரு காதை)

34.கண்ணகி கோவில் கும்பாபிஷேகத்துக்கு வந்த மன்னர்கள்:–
குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும்
கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்
எந்நாட்டு ஆங்கண் இமைய வரம்பனின்
நன்னாள் செய்த நாளனி வேள்வியில் –(வரந்தரு காதை)

35.நல்லது செய்தால் சுவர்க்கம்:–
நற்றிறம் புரிந்தோர் பொற்படி எய்தலும்
அற்புளம் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும்
அறப்பயன் விளைதலும் மறப்பயன் விளைதலும்
பிறந்தவர் இறத்தலும், இறந்தவர் பிறத்தலும்
புதுவதன்றே ————(வரந்தரு காதை)

36.தமிழர் போற்றும் இமயமும் கங்கையும்
முடி மன்னர் மூவரும் காத்து ஓம்பும் தெய்வ
வடபேர் இமய மலையிற் பிறந்து
கடுவரல் கங்கைப் புனலாடிப் போந்த —- (வாழ்த்துக் காதை)

37.நல்லாட்சி இருந்தால் கற்பு நிலைக்கும்:–
அருந்திறல் அரசர் முறைசெயின் அல்லது,
பெரும்பெயர்ப் பெண்டிற்குக் கற்புச் சிறவாது என
பண்டையோர் உரைத்த தண்தமிழ் நல்லுரை —- (நடுநற் காதை)

tm_hindu-indian-jain-sculpture

38.ஒன்றே செய்க, நன்றே செய்க, இன்றே செய்க:–
“நாளைச் செய்குவம் அறம் எனின், இன்றே
கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும்” — (நடுநற் காதை)

39.யவனர் நாடு வரை சேரன் ஆட்சி
வன்சொல் யவனர் வளநாடு ஆண்டு
பொன்படு நெடுவரை புகுந்தோ ஆயினும் — (நடுநற் காதை)

40.மறுபிறப்பில் விலங்காகவும் வாய்ப்பு!!!
விண்ணோர் உருவின் எய்திய நல்லுயிர்
மண்ணோர் உருவின் மறிக்கினும் மறிக்கும்;
மக்கள் யாக்கை பூண்ட மன்னுயிர்
மிக்கோய்; விலங்கின் எய்தினும் எய்தும்— (நடுநற் காதை)

41.ஆயிரம் பொற்கொல்லர் பலி !! கண்ணகிக்கு காணிக்கை!!!
கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன்
பொன் தொழில் கொல்லர் ஈர் ஐஞ் ஞூற்றுவர்
ஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு
ஒருபகல் எல்லை உயிர்ப்பலி ஊட்டி
உரை செல வெறுத்த மதுரை மூதூர் – நீர்ப்படைக் காதை

42.சூரியனின் ஒரு சக்கரத்தேர்
ஒருதனி ஆழிக் கடவுள் தேர்மிசைக்
காலைச் செங்கதிர்க் கடவுள் ஏறினன் என
மாலைத் திங்கள் வழியோன் ஏறினன் – நீர்ப்படைக் காதை

silambu_for_dance

43.தமிழைத் திட்டிய கனக விசயன் கைது!!
வாய்வாள் ஆண்மையின், வண்தமிழ் இகழ்ந்த
காய்வேல் தடக்கைக் கனகனும் விசயனும்
ஐம்பத்திருவர் கடுந்தேராளரொடு
செங்குட்டுவன் தன் சினவலைப் படுதலும் – கால்கோட்காதை

44.தமிழர்களை எதிர்த்த சில்லறைப் பயல்கள்
உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன்
சித்திரன், சிங்கன், தனுத்தரன், சிவேதன்
வடதிசை மருங்கின் மன்னவர் எல்லாம்
தென் தமிழ் ஆற்றல் காண்குதும் யாமென– கால்கோட்காதை

45.தமிழ் வீரம் அறியாமல் உளறிய கனக விசயர்கள்
காவா நாவிற் கனகனும் விசயனும்
விருந்தின் மன்னர் தம்மொடுங் கூடி
அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர் ஆங்கு என – கால்கோட்காதை

46.ஜம்பூத்வீபத்தில் எங்கும் ஒற்றர் படை !!
நாவலம் தண் பொழில் நண்ணார் ஒற்று நம்
காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா; — காட்சிக் காதை

47.சேரன் ஆட்சியில் நாடே அடக்கம்
கொங்கணர், கலிங்கர், கொடுங் கருநாடர்,
பங்களர், கங்கர், பல்வேற்கட்டியர்,
வட ஆரியரொடு வண்தமிழ் மயக்கத்து, உன்
கடமலை வேடம் என் கட்புலம் பிரியாது — காட்சிக் காதை

48.நீ நினைத்தால் உன்னை எதிர்ப்பவர் யார்?
இமிழ் கடல் வேலியைத் தமிழ் நாடாக்கிய
இது நீ கருதினை ஆயின், ஏற்பவர்
முது நீர் உலகின் முழுதும் இல்லை;
இமயமால்வரைக்கு எம்கோன் செல்வது
கடவுள் எழுதவோர் கற்கே; — காட்சிக் காதை

49.சேரன் மனைவியுடன் இயற்கைச் சுற்றுலா (பிக்னிக்)
துஞ்சா முழவின், அருவி ஒலிக்கும்
மஞ்சு சூழ் மலை காண்குவம் என
பைந்தொடி ஆயமொடு பரந்தொருங்கு ஈண்டி
வஞ்சி முற்றம் நீங்கிச் செல்வோன் — காட்சிக் காதை

anklets

50.மதுரைக்கு தீ வைத்த கண்னகியைப் பாடுவோம்:–
பாடுகம் வா, வாழி, தோழி! யாம் பாடுகம்
கோமுறை நீங்கக் கொடி மாடக் கூடலைத்
தீமுறை செய்தாளை ஏத்தியாம் பாடுகம் – குன்றக் குறவை
51.அறுபடை வீடு கொண்ட திரு முருகா!!
சீர்கெழு செந்திலும், செங்கோடும், வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன் கை வேலன்றே —- குன்றக் குறவை

52.கண்ணகிக்கும், கோவலனுக்கும் ஸ்பெஷல் பிளேன்
நின்ற எல்லையுள், வானவரும்
நெடுமாரி மலர் பொழிந்து,
குன்றவரும் கண்டு நிற்பக்
கொழுநனொடு கொண்டு போயினார் ——- குன்றக் குறவை

53.விதி பலமானால் பழைய புண்யமும் உதவாது
உம்மை வினை வந்து உருத்த காலைச்
செம்மையிலோர்க்குச் செய்தவம் உதவாது — கட்டுரைக் காதை

54.மதுரை தீக்கிரையாகும் என்பது முன்னரே கூறப்பட்ட ஆருடம்
ஆடித் திங்கள் பேரிருள் பக்கத்து
அழல் சேர் குட்டத்து அட்டமி ஞான்று
வெள்ளி வாரத்து ஒள்ளெரி உண்ண
உரைசால் மதுரையோடு அரைசு கேடுறும் — கட்டுரைக் காதை

55.சிபியும், மனு நீதிச் சோழனும் என் முன்னோர்
புறவு நிறை புக்கோன், கறவை முறை செய்தோன்
பூம்புனல் பழனப் புகார் நகர் வேந்தன் — கட்டுரைக் காதை

56.பாண்டிய நாட்டில் வேதம் மட்டுமே ஒலிக்கும்
மறை நா ஓசை அல்லது; யாவதும்
மணி நா ஓசை கேட்டதும் இலனே— கட்டுரைக் காதை

57.அலைமகள்,மலைமகள்,கலைமகள்= மதுராபதி தெய்வம்
மா மகளும் நா மகளும் மா மயிலுடன் செற்றுகந்த
கோ மகளும் தான் படைத்த கொற்றத்தாள் நாம
முதிரா முலை குறைத்தாள்; முன்னரே வந்தாள்
மதுரா பதி என்னும் மாது —– அழற்படு காதை

58) 64 கலை தெரிந்தோர் வீதியும் எரிந்தது!
எண் நான்கு இரட்டி இருங்கலை பயின்ற
பண் இயல் மடந்தையர் பயங் கெழு வீதி—– அழற்படு காதை

59.ஒரு முலையால் மதுரை எரிந்தது!
இடமுலை கையால் திருகி, மதுரை
வலமுறை மும்முறை வாரா, அலமந்து,
மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து
விட்டாள் எறிந்தாள் விளங்கு இழையாள்– வஞ்சின மாலை

29frSilappadikaram__736602g

60.முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு
பிற்பகல் காண்குறூ உம் பெற்றிய – காண்– வஞ்சின மாலை

61.பெண்கள் பேதைகள்: கண்ணகி
விழுமிய
பெண்ணறிவு என்பது பேதைமைத்தே என்றுரைத்த
நுண்ணறிவினோர் நோக்கம்; நொக்காதே எண்ணிலேன்– வஞ்சின மாலை

62.நான் தப்பு செய்துவிட்டேன்
பொன்செய் கொல்லன் தன் சொல் கேட்ட
யானோ அரசன்? யானே கள்வன்
மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள்— வழக்குரை காதை

63.பாண்டிமாதேவி வருத்தம்!
கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல் என்று
இணையடி தொழுது வீழ்ந்தனளே, மடமொழி— வழக்குரை காதை

64.மதுரையில் தெய்வம் இருக்கிறதா? கண்ணகி கேள்வி
தெய்வமும் உண்டு கொல்? தெய்வமும் உண்டு கொல்?
வைவாளின் தப்பிய மன்னவன் கூடலில்
தெய்வமும் உண்டு கொல்? தெய்வமும் உண்டு கொல்? — ஊர் சூழ் வரி

65.இது என்ன? புது தெய்வம்?
செம்பொற் சிலம்பு ஒன்று கை ஏந்தி, நம் பொருட்டால்
வம்பப் பெருந்தெய்வம் வந்தது! இதுவென் கொல்? – ஊர் சூழ் வரி

66.யாதவ மகளிர் பாடிய கண்னன் பாட்டு
கொல்லையெம் சாரல் குருந்தொசித்த மாயவன்
எல்லை நம் ஆனுள் வருமேல், அவன் வாயில்
முல்லையன் தீங்குழல் கேளாமோ, தோழீ
தொழுநைத் துறைவனோடு ஆடிய பின்னை –
அணி நிரம் பாடுகேம் யாம் — ஆய்ச்சியர் குரவை

Puhar-ILango
Image of Ilango

67.திருடர்களுக்கு தெரிந்த எட்டு விஷயங்கள்
மந்திரம், தெய்வம், மருந்து, நிமித்தம்,
தந்திரம், இடனே, காலம், கருவி, என்று
எட்டுடன் அன்றே – இழுக்கு உடை மரபின்
கட்டுண் மாக்கள் துணை எனத் திரிவது? (கொலைக்களக் காதை)

68.கற்றறிந்தோர் வினைப்பயன் பற்றி கவலைப்படார்
ஒய்யா வினைப் பயன் உண்ணுங் காலை
கையாறு கொள்ளார் கற்றறி மாக்கள் – ஊர்காண் காதை
69.மாதவியின் மன்னிப்புக் கடிதம்
அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன்
வடியாக் கிளவி மனங் கொளல் வேண்டும்
குரவர் பணி அன்றியும், குலப் பிறப்பு ஆட்டியோடு
இரவிடைக் கழிதற்கு என் பிழைப்பு அறியாது
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்
பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி — புறஞ்சேரி இறுத்த காதை

70.கோவலன் போன புகார் = ராமன் வெளியேரிய அயோத்தி
அருந்திறல் பிரிந்த அயோத்தி போல
பெரும்பெயர் மூதூர் பெரும்பேது உற்றதும் — புறஞ்சேரி இறுத்த காதை

71.மறவரின் துர்க்கை வழிபாடு
வம்பலர் பல்கி, வழியும் வளம்பட;
அம்புடை வல்வில் எயின் கடன் உண்குவாய் –
சங்கரி, அந்தரி, நீலி, சடைமுடிச்
எங்கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய்! – வேட்டுவ வரி

72.சூரியனுடன் சுற்றும் குள்ள வாலகீய முனிவர்
சுடர்தரு திரிதரு முனிவரும் அமரரும்
இடர்கெட அருளும் நின் இணை அடி தொழுதேம்’
அடல்வலி எயினர் நினடிதொடு
மிடறுகு குருதி; கொள்விறல்தரு விலையே — வேட்டுவ வரி

73.வேடர்களின் மஹிஷாசுரமர்த்தனி வழிபாடு
ஆனித்தோல் போர்த்துப் புலியின் உரிஉடுத்துத்
கானத்து எருமைக் கருந்தலை மேல் நின்றாயால் –
வானோர் வணங்க, மறைமேல் மறையாகி,
ஞானக் கொழுந்தாய், நடுக்கு இன்றியே நிற்பாய்!

74.சமணப் பெண்மணியுடன் துர்க்கை கோவிலில் அடைக்கலம்
கழிபோர் ஆண்மைக் கடன் பார்த்து இருக்கும்
விழிநுதற் குமரி, விண்ணோர் பாவை
மையறு சிறப்பின் வான நாடி
ஐயை தன் கோட்டம் அடைந்தனர் ஆங்கு என் – காடுகாண் காதை

75.கணிகையர் என்றால் எல்லோருக்கும் வெறுப்பா?
மேலோர் ஆயினும் நூலோர் ஆயினும்
பால்வகை தெரிந்த பகுதியோர் ஆயினும்
பிணி எனக் கொண்டு, பிறக்கிட்டு ஒழியும்
கணிகையர் வாழ்க்கை கடையே போனும் என– காடுகாண் காதை

pumpukar

76.எட்டெழுத்து, ஐந்தெழுத்து மந்திரம்
அருமறை மருங்கின், ஐந்தினும் எட்டினும்
வருமுறை எழுத்தின் மந்திரம் இரண்டும்
ஒருமுறையாக உளம் கொண்டு ஓதி — காடுகாண் காதை

77.தெய்வக் காவிரி
தெய்வக் காவிரித் தீதுதீர் சிறப்பும்,
பொய்யா வானம்புதுப்புனல் பொழிதலும் — நாடுகாண் காதை

78.சமண நாமாவளி
தரும முதல்வன், தலைவன், தருமன்
பொருளன், புனிதன், புராணன், புலவன்,
சினவரன், தேவன், சிவகதி நாயகன்— நாடுகாண் காதை

79.சமணர் பிரார்த்தனை
மொழிப் பொருள் தெய்வம் வழித்துணை ஆக எனப்
பழிப்புஅரும் சிறப்பின் வழிப்படர் புரிந்தோர் — நாடுகாண் காதை

80.மதுரைக்கு போக ஆசை: கோவலன்
தென் தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரைக்கு
ஒன்றிய உள்ளம் உடையேன் ஆகலின்
போதுவால் யானும்;போதுமின்— நாடுகாண் காதை

81.திருவரங்கநாதன் வலம் வந்து
அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த
மணிவண்ணன் கோட்டம் வலம் செயக் கழிந்து –— நாடுகாண் காதை

82.தீய கனவு: கண்ணகிக்கு அருகம் புல் பரிகாரம்
கண்ணகி நல்லாளுக்கு உற்ற குறை உண்டு என்று
எண்ணிய நெஞ்சத்து இனையளாய் நண்ணி;
அறுகு, சிறு பூளை, நெல்லொடு தூஉய்ச் சென்று;
பெறுக கணவனோடு என்றாள் – கனாத்திறம் உரைத்த காதை

Riverkaveri

83.கங்கைக்கும் மேலான காவிரி
திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் — அது ஒச்சி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி – கானல் வரி

84.நாரதன் வீணை, இந்திரன், ஊர்வசி சாபம்
நாரதன் வீணை நயம் தெரி பாடலும்
தோரிய மடந்தை வாரம் பாடலும்
ஆயிரம் கண்ணோன் செவியகம் நிறைய
நாடகம் உருப்பசி நல்காள் ஆகி
மங்கலம் இழப்ப வீணை– கடல் ஆடு காதை

85.பாவம் செய்வோர் பட்டியல்; பூதம் நையப் புடைக்கும்
தவம் மறைந்து ஒழுகும் தன்மை இலாளர்
அவம் மறைந்து ஒழுகும் அலவற் பெண்டிர்
அறைபோகு அமைச்சர், பிறர்மனை நயப்போர்
பொய்க்கரியாளர், புறங்கூற்றாளர், என்
கைக்கொள் பாசத்துக் கைப்படுவோர் எனக்– இந்திர விழவு ஊரெடுத்த காதை

86) 1008 பவுன் தங்க மாலை வாங்கினால் மாதவி பரிசு!!
நூறு பத்து அடுக்கி எட்டுக் கடை நிறுத்த
வீறு உயர் பசும்பொன் பெறுவது இம்மாலை
மாலி வங்குநர் சாலும் நம் கொடிக்கு என – அரங்கேற்றுக் காதை

silambu tamil book

87.தமிழகம்
இமிழ்கடல் வரைப்பின் தமிழகம் அறியத்
தமிழ் முழுது அறிந்த தன்மையன் ஆகி
வேத்து இயல், பொது இயல் , என்று இரு திறத்தின்
நாட்டிய நல் நூல் நன்கு கடைப்பிடித்து–அரங்கேற்றுக் காதை

88.அகத்தியன் சாபம்
தெய்வ மால்வரைத் திருமுனி அருள
எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு
தலைக்கோல் தனத்து, சாபம் நீங்கிய
மலைப்பு – அருஞ் சிறப்பின் வானவர் மகளிர் — அரங்கேற்றுக் காதை

89.கண்ணகிக்கு கோவலன் புகழ்மாலை
மாசறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசறு விரையே ! கரும்பே! தேனே!
அரும்பெறல் பாவாய்! ஆருயிர் மருந்தே!
பெருங்குடி வணிகன் பெரு மட மகளே!
மலையிடைப் பிறவா மணியே என்கோ?
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ?
யாழிடைப் பிறவா இசையே என்கோ?
தாழ் இருங் கூந்தல் தையல்! நின்னை! – மனையறம்படுத்தகாதை

90.பூம்புகார் மக்கள்= உத்தரகுரு புண்யவாசிகள்
அத்தகு திருவின் அருந்தவம் முடித்தோர்
உத்தர குருவின் ஒப்பத் தோன்றிய
கயமலர்க் கண்ணியும் காதற் கொழுநனும்
மயன் விதித்தன்ன மணிக்கால் அமளிமிசை
நெடுநிலை மாடத்து இடிநிலத்து, இருந்துழி –மனையறம்படுத்தகாதை

91.திருமண வயது: கண்ணகி 12, கோவலன் 16 !!!
ஈறு ஆறு ஆண்டு அகைவையாள் (கண்ணகி)
ஈர் எட்டு ஆண்டு அகவையான் (கோவலன்) –மங்கல வாழ்த்துப் பாடல்

silambu book1

92.சந்திரன், சூரியன், வருணன் வாழ்க!!!
திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!
கொங்கு அலர்தார்ச் சென்னி வெண்குடை போன்று இவ்
அம் கண் உலகு அளித்தலான்

ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!
காவிரி நாடன் திகிரிபோல், பொன் கோட்டு
மேரு வலந்திரிதலான்

மாமழை போற்றுதும் ! மாமழை போற்றுதும் !
நாம நீர் வேலி உலகிற்கு, அவன் அளி போல்
மேல் நின்று தான் சுரத்தலான் –மங்கல வாழ்த்துப் பாடல்

93.கண்ணாடியில் மலையையே காட்டலாம், சிலம்பில் எல்லாம் தெரியும்
ஆடிநல் நிழலின் நீடு இருங்குன்றம்
காட்டுவாற் போல் கருத்து வெளிப்படுத்து (நூற் கட்டுரை)

வாழ்க இளங்கோ !! வளர்க சிலம்பின் புகழ் !!!

–சுபம்–

முக்கிய சிலப்பதிகாரப் பாடல்கள்-31

old-tamilnadu

சிந்தனைச் சிற்பிகள் (ஜய வருடம்) 2014 ஆகஸ்ட் மாத காலண்டர்
(( முக்கிய 31 சிலப்பதிகார மேற்கோள்கள் ))

Post No. 1195 Date: 26 July 2014
Prepared by London swaminathan (copyright)
நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று பாரதி போற்றிய சிலப்பதிகாரக் காவியத்தில் இருந்து முக்கிய 31 பாடல்கள் இந்த ஆகஸ்ட் மாத காலண்டரை அலங்கரிக்கின்றன.

முக்கிய நாட்கள்: ஆகஸ்ட் 8 வெள்ளி-வரலெட்சுமி நோன்பு; 10 ஞாயிறு – ஆவணி அவிட்டம்/ ரக்ஷா பந்தன், பௌர்ணமி
ஆகஸ்ட் 11-காயத்ரி ஜபம்; 15 வெள்ளி- இந்திய சுதந்திர தினம்; 17 ஞாயிறு ஜன்மாஷ்டமி 19- கிருஷ்ண ஜயந்தி; 29 வெள்ளி- கணேஷ் சதுர்த்தி;
சுபமுஹூர்த்த நாட்கள்:– 20, 22, 29, 31; பௌர்ணமி – 10; அமாவாசை– ஆகஸ்ட் 24,; ஏகாதசி 7 & 21.

ஆகஸ்ட் 1 வெள்ளி
திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!
கொங்கு அலர்தார்ச் சென்னி வெண்குடை போன்று இவ்
அம் கண் உலகு அளித்தலான்
ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!
காவிரி நாடன் திகிரிபோல், பொன் கோட்டு
மேரு வலந்திரிதலான்–மங்கல வாழ்த்துப் பாடல்

ஆகஸ்ட் 2 சனி
தீது இலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும்
மாதரார் தொழுது ஏத்த வயங்கிய பெருங் குணத்துக்
காதலாள்; பெயர் மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ
–மங்கல வாழ்த்துப் பாடல்

ஆகஸ்ட் 3 ஞாயிறு
பொதியில் ஆயினும், இமயம் ஆயினும்
பதி எழு அறியாப் பழங்குடி கெழீ இய
பொது அறு சிறப்பின் புகாரே ஆயினும்
நடுக்கு இன்றி நிலைஇய என்பது அல்லதை- –மங்கல வாழ்த்துப் பாடல்

ஆகஸ்ட் 4 திங்கள்
வான் ஊர் மதியம் சகடு அனைய, வானத்துச்
சாலி ஒருமீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட
தீவலம் செய்வத் காண்பார் கண் நோன்பு என்னை!
-மங்கல வாழ்த்துப் பாடல்
kannaki andkovalan

ஆகஸ்ட் 5 செவ்வாய்
மாசறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசறு விரையே ! கரும்பே! தேனே!
அரும்பெறல் பாவாய்! ஆருயிர் மருந்தே!
பெருங்குடி வணிகன் பெரு மட மகளே!– மனையறம்படுத்தகாதை

ஆகஸ்ட் 6 புதன்
குழல் வழி நின்றது யாழே; யாழ் வழித்
தண்ணுமை நின்றது தகவே: தண்ணுமைப்
பின்வழி நின்றது முழவே; முழவொடு
கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை –அரங்கேற்றுக் காதை

ஆகஸ்ட் 7 வியாழன்
ஐம்பெருங் குழுவும், எண்பேர் ஆயமும்
அரச குமரரும் பரத குமரரும்
கவர் பரிப் புரவியர், களிற்றின் தொகுதியர்
இவர்பரித்தேரினர், இயைந்து ஒருங்கு ஈண்டி — இந்திர விழவு ஊரெடுத்த காதை

ஆகஸ்ட் 8 வெள்ளி
பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீலமேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும் – இந்திர விழவு ஊரெடுத்த காதை

ஆகஸ்ட் 9 சனி
சிமையத்து இமையமும், செழுநீர்க் கங்கையும்
உஞ்சை அம் பதியும், விஞ்சத்து அடவியும்
வேங்கட மலையும், தாங்க விளையுள்
காவிரி நாடும், காட்டிப் பின்னர் — கடல் ஆடு காதை

tolkappian katturai

ஆகஸ்ட் 10 ஞாயிறு
நெடியோன் குன்றமும் தொடிதோள் பௌவமும்
தமிழ் வரம்பு அறுத்த தண் புனல் நல் நாட்டு
மாட மதுரையும், பீடு ஆர் உறந்தையும்
கலிகெழு வஞ்சியும், ஒலி புனல் புகாரும்
அரைசு வீற்றிருந்த உரைசால் சிறப்பின் – வேனிற் காதை

ஆகஸ்ட் 11 திங்கள்
கரியவன் புகையினும், புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
கால்பொரு நிவப்பின் கடுங்குரல் ஏற்றொடும்
சூன்முதிர் கொண்மூப் பெயல்வளம் சுரப்ப — நாடுகாண் காதை

ஆகஸ்ட் 12 செவ்வாய்
வடிவேல் எறிந்த வான் பகை பொறாது,
பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென் திசை ஆண்ட தென்னவன் வாழி! — காடுகாண் காதை

ஆகஸ்ட் 13 புதன்
இவளோ கொங்கச் செல்வி; குடமலையாட்டி;
தென்றமிழ்ப் பாவை; செய்தவக் கொழுந்து;
ஒருமாமணி ஆய், உலகிற்கு ஓங்கிய
திருமாமணி எனத் தெய்வம் உற்று உரைப்ப — வேட்டுவ வரி

ஆகஸ்ட் 14 வியாழன்
கோள்வல் உளியமும் கொடும் புற்று அகழா
வால்வரி வேங்கையும் மான் கணம் மறலா;
அரவும், சூரும், இரைதேர் முதலையும்
உருமும் சார்ந்தவர்க்கு உறுகண் செய்யா –
செங்கோல் தென்னவர் காக்கும் நாடு — புறஞ்சேரி இறுத்த காதை
tamil-penkal

ஆகஸ்ட் 15 வெள்ளி
அருந்தெறல் கடவுள் அகன் பெருங் கோயிலும்
பெரும்பெயர் மன்னவன் பேர் இசைக் கோயிலும்
பால்கெழு சிறப்பின் பல் இயல் சிறந்த
காலை முரசக் கனைகுரல் ஓதையும்
நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும்— புறஞ்சேரி இறுத்த காதை

ஆகஸ்ட் 16 சனி
உலகு புரந்தூட்டும் உயர் பேர் ஒழுக்கத்து
புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி
வையை என்ற பொய்யாக் குலக் கொடி —
‘புனல்யாறு அன்று; இது பூம் புனல்யாறு’ – – புறஞ்சேரி இறுத்த காதை

ஆகஸ்ட் 17 ஞாயிறு
நுதல்விழி நாட்டத்து இறையோன் கோயிலும்
உவணச் சேவல் உயர்த்தோன் நியமும்
மேழி வலன் உயர்த்த வெள்ளை நகரமும்
கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும் — ஊர்காண் காதை

ஆகஸ்ட் 18 திங்கள்
பெண்டிரும் உண்டியும் இன்பம் என்று உலகில்
கொண்டோர் உறூவும் கொள்ளாத் துன்பம் — ஊர்காண் காதை

ஆகஸ்ட் 19 செவ்வாய்
நான்மறை முற்றிய நலம்புரி கொள்கை
மாமறை முதல்வன் மாடலன் என்போன்
மாதவ முனிவன் மலைவலம் கொண்டு
குமரியம் பெருந்துறை கொள்கையிற் படிந்து —- அடைக்கலக் காதை

A_SCENE_FROM_SILAPADHIKARAM
ஆகஸ்ட் 20 புதன்
ஞான நன்னெறி நல்வரம்பு ஆகியோன்
தானம் கொள்ளும் தகைமையின் வருவோன்
தளர்ந்த நடையின் தண்டுகால் ஊன்றி
வளைந்த யாக்கை மறையோன்— அடைக்கலக் காதை

ஆகஸ்ட் 21 வியாழன்
கற்புக் கடம் பூண்ட இத் தெய்வம் அல்லது
பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலமால்;
வானம் பொய்யாது; வளம் பிழைப்பு அறியாது;
நீள்நில வேந்தர் கொற்றம் சிதையாது;
பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு — அடைக்கலக் காதை

ஆகஸ்ட் 22 வெள்ளி
என்னொடு போந்த இளங்கொடி நங்கை – தன்
வண்ணச் சீரடி மண்மகள் அறிந்திலள்; — அடைக்கலக் காதை

ஆகஸ்ட் 23 சனி
“அறவோர்க்களித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும்,
தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” (கொலைக்களக் காதை)

Riverkaveri
Picture of River Kaveri

ஆகஸ்ட் 24 ஞாயிறு
மடந்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர் பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தாரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே?
நாராயணா என்னா நாவென்ன நாவே?”
–சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை, இளங்கோ அடிகள்.

ஆகஸ்ட் 25 திங்கள்
பெரியவனை மாயவனைப் பேர் உலகம் எல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார் – தம் கண்ணென்ன கண்ணே? –ஆய்ச்சியர் குரவை

ஆகஸ்ட் 26 செவ்வாய்
மூ உலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
தாவிய சேவடிசேப்பத் தம்பியொடும் கான் போந்து,
சோ அரணும் போர்மடியத் தொல் இலங்கைக் கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே!
திருமால் சீர் கேளாத செவியென்ன செவியே! — ஆய்ச்சியர் குரவை

ஆகஸ்ட் 27 புதன்
“வடவரையை மத்தாக்கி, வாசுகியை நாணாக்கி
கடல் வண்ணன்! பண்டொரு நாள் கடல் வயிறு கலக்கினையே;
கலக்கிய கை அசோதையார் கடை கயிற்றால் கட்டுண்கை!
மலர்க்கமல உந்தியாய்! மாயமோ மருட்கைத்தே! — ஆய்ச்சியர் குரவை
vaigai-river_6972
Picture of Vaigai River and Dam

ஆகஸ்ட் 28 வியாழன்
தேரா மன்னா ! செப்புவது உடையேன்
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்
வாயிற் கடைமணி நடு நா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுடதான் தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும்பெயர் புகார் என்பதியே— வழக்குரை காதை

ஆகஸ்ட் 29 வெள்ளி
அல்லவை செய்தார்க்கு அறங் கூற்றம் ஆம் என்னும்
பல்லவையோர் சொல்லும் பழுதன்றே — வழக்குரை காதை

ஆகஸ்ட் 30 சனி
பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர்
மூத்தோர், குழவி, எனும் இவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்க — வஞ்சின மாலை

ஆகஸ்ட் 31 ஞாயிறு
தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்;
பொய்யுரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;
ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
தானம் செய்மின்; தவம்பல தாங்குமின்.
Silappathikaram-AG_12825
Pumpukar now.

Contact swami_48@yahoo.com