Written by London Swaminathan
Date: 30 NOVEMBER 2017
Time uploaded in London- 20-17
Post No. 4447
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
பிரபல வயலின் மேதை மிஸ்சா எல்மான் (Mischa Elman) சிறு வயதிலேயே வயலின் வாசிப்பில் சக்கைப்போடு போடுவார். ஒருமுறை ஒரு நண்பர் வீட்டில் விருந்துக்கு அவரது குடும்பத்தினரையும் அழைத்திருந்தனர். அந்த வீட்டுக்காரர் சிறுவயது மேதை மிஸ்சாவை அழைத்து ‘வயலின் வாசித்துக் காட்டு. எல்லோரும் கேட்கட்டும்’ என்றார். அவரும் தனது முழுத் திறமையைக் காட்டுவதற்காக உலகப் புகழ்பெற்ற சங்கீத மேதை, பியானோ கலைஞர், சாஹித்ய கர்த்தாவான பீதோவனின் (Ludwik Beethoven’s Sonata) ஒரு வயலின் பாடலை வாசித்தார். அந்தப் பாட்டில் நிறைய இடைவெளிகள் (stops, Pauses) வரும். அதாவது சில வினாடிகள் அமைதி நிலவும்.அதை வாசித்தபோது எல்லோரும் மெய் மறந்து கேட்டனர். அந்தக் குழுவில் சங்கீத ஞான சூன்யப் பாட்டி ஒருத்தியும் இருந்தார். அவர் ஏன் இந்தச் சின்னப் பையன் இப்படி நிறுத்தி நிறுத்தி வாசிக்கிறான் என்று கவலைப்பட்டார். எல்லோருக்கும் முன்னால், மெதுவாக நடந்து சென்று எஸ்சாவின் முதுகில் தட்டிக்கொடுத்து “டேய் பையா, உனக்கு தெரிந்த பாட்டை வாசியேன்டா, ஏன் சிரமப்டுகிறாய்?” என்று சொன்னார்.
இதை எஸ்சா எல்மானே எல்லோரிடமும் சொல்லிச் சொல்லிச் சிரிப்பார். இது அவருடைய இளம் வயதில் நடந்த நிகழ்ச்சி.
சங்கீத சாம்ராஜ்யம்
ஜஸ்சா ஹைபிட்ஸ் (Jascha Heifitz) முதல் முதலில் நியூயார்க்கில் வாசித்த வயலின் கச்சேரிக்குப் பெரும் கூட்டம் கூடி இருந்தது. அது நல்ல சுகமான வசந்த காலம். புகழ்பெற்ற பியானோ கலைஞர் ஜோசப் ஹாப்மான் அருகில் மற்றொரு புகழ் பெற்ற வயலின் மேதை மிஸ்சா எல்மான் (Mischa Elman) உட்கார்ந்திருந்தார். கச்சேரி சூடுபிடித்தது. எல்லோரும் வாயில் கொசு, ஈ புகுந்தாலும் தெரியாத அளவுக்கு மெய்மறந்து கேட்டனர். ஆனால் எல்மானுக்கு வியர்த்து விறுவிறுத்தது. உட்கார முடியவில்லை; கச்சேரி நல்ல படியாக அமைய வேண்டும் என்ற கவலை. அவரால் சும்மா இருக்க முடியவில்லை. கைவிரல்களை சட்டைக்குள் விட்டுக் குடைந்து கொண்டிருந்தார். பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஜோசப் இதை கவனிப்பதையும் அவர் அறிவார்.
ஒரு பாட்டு முடிந்து அடுத்த பாட்டு துவங்குவதற்கு முன்னர் இருந்த இடைவெளியில் ஜோசப்பைப் பார்த்து, அவர் காதில் ரஹஸியமாக,
“ஒரே புழுக்கமாக இருக்கிறதல்லாவா? ஒரே வியர்த்துக் கொட்டுகிறதல்லவா? “ என்றார்.
அவர் சிரித்துக் கொண்டே காதில் முனகினார்:
‘பியானோக்காரர்களுக்கு வியர்க்காது’ என்றார்.
xxxxxx
என் வயலின் காலை வாரிவிடவே விடாது
சாம் வார்ட் (Sam Ward) என்பவர் புகழ்பெற்ற இதாலிய வயலின் மேதை நிக்கலோ பகனீனி (Niccolo Paganini) பற்றி ஒரு கதை சொல்லுவார்:
மற்றொரு இசை மேதை ஒரு நண்பரை அழைத்து வந்திருந்தார்.
உங்கள் நண்பருக்கு சங்கீதம் பிடிக்குமா? என்றார்.
அவர் ஆமாம் என்று சொன்னவுடன், பகனீனி ஒரு கிதாரை எடுத்தார். நாளைய கச்சேரிக்கு நான் பயிற்சி செய்வதை அவரும் கேட்கட்டும் என்று சொல்லி வாசிக்க ஆரம்பித்தார். அரை மணி நேர வாசிப்பில் பூலோக சுவர்க்கத்தை உருவாக்கினார். அவருடைய கிதார் பேசியது, பாடியது, உறுமியது, கெஞ்சியது கொஞ்சியது, மிஞ்சியது, விஞ்சியது ஆனந்தக் கூத்தாடியது. கேட்டவர்கள் எல்லோரும் அசந்தே போயினர்.
உடனே வந்திருந்த பிரபல மேதை, அடடா, அடடா, அப்படியானால் நாளைய வயலின் கச்சேரிக்கு எப்போது பிராக்டீஸ் செய்யப்போகிறீர்கள்; அதையும் கேட்க ஆசை என்றார்.
பகனீனி சொன்னார்:
“ஆங்! தேவையே இல்லை! என் வயலின் என்னை என்றைக்கும் காலை வாரிவிடாது.”
அந்த அளவுக்கு வயலின் வாசிப்பு அவருடைய உடலில் உள்ள ஒவ்வொரு மயிர்க்காலிலும் கலந்திருந்தது. அவ்வளவு நம்பிக்கை!
–Subham —