வள்ளிமலை ஶ்ரீசச்சிதாநந்த ஸ்வாமிகள்-Part 1(Post No.10,529)

WRITTEN BY B. KANNAN, DELHI

Post No. 10,529

Date uploaded in London – –    5 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

            Written By  B. Kannan, New Delhi

ஞானமயம் பகிரும் தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் தில்லியிலிருந்து கண்ணன் அநேக நமஸ்காரம்.

19-20-ம் நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்த ஒரு மகானின் சரிதத்தைத் தான் இன்று பார்க்கப் போகிறோம். வாருங்கள் பயணிக்கலாம்……..

வள்ளிமலை சென்று வணங்குவார் மாநிலத்தில்

வெள்ளிமலை போல மிகவோங்கி-உள்ளியன

எல்லாம் பெறுவர் இனியராய் இன்புறுவர்

பல்லாண்டு வாழ்வர் பரிந்து.

    -திருமுருக கிருபானந்தவாரியார்

முருகு என்ற சொல்லுக்கு இளமை,அழகு,தெய்வத்தன்மை எனும்பதினேழு வித அர்த்தங்களைச் சுட்டுகிறது தமிழகராதி. அப்படிப்பட்ட ஆறுமுகன் நமக்கு உணர்த்துவது என்ன,அவனருள் நம்மை என்ன செய்யும், பார்க்கலாமா………

ஒன்றே பரம்பொருள் எனக் காட்டுவான்,இரு வினைகளைப் போக்குவான், மும்மலங்களை அகற்றுவான்,நான்கு வேதங்களின் கருத்தைத் தருவான், ஐந்து புலன்களை அடக்குவான், ஆறு முகங்களின் மூலம் ஆறு ஆசிகளை வழங்குவான், ஏழு நாட்களும் நல்லவையே என்று உணர்த்துவான், எட்டு திசைகளும் உகந்ததே எனக் குறிப்பிட்டு, ஒன்பது கிரகங்கள் விளைவிக்கும் தீமைகளை விரட்டி அடித்து, வாழ்வில் பத்துக்குப் பத்து தந்திடுவான் நம் வேலவன்!  (நன்றி: கௌமாரம்)

தைப் பூசம், வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை ஆகிய விழாக்களில் அப்படிப்பட்டஆறுமுகனுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல், நடப்பு ஆண்டின் இறுதி தினம் மற்றும் வரும் புத்தாண்டின் முதல் நாளும் அழகன் முருகனின் “புகழ்”பாடி ஆராதிக்கும் பொன்னாளாகத் தணிகையிலும், சுவாமிமலையிலும் படித் திருவிழா வாகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கடந்து போகும் ஆண்டில் விளைந்த நன்மைகள் போல் வரவிருக்கும் வருடத்திலும் நல்லவையே நடந்து, வாழ்வை வளமாக்க,மனமுறுகி முருகனை வேண்டி “மைசூரு சுவாமிகள்” அனுகிரகத்தால் நடத்தப்படும் விழாவே இது.

யார் இந்த “மைசூரு சுவாமிகள்”?

அதன் பின்னணி விவரங்களைச் சுவாமிகளுடன் கூடவே இருந்து,நெருங்கிப் பழகிய ஆனையாம்பட்டி சாது ஶ்ரீகுஹாநந்த பாரதி சுவாமிகள், திரு கல்யாண சுந்தரம் (1957),சுவாமி அன்வாநந்தா (1975),பி.எஸ்.கிருஷ்ணய்யர் ஆகியோரின் நேரடி அனுபவக் கட்டுரைகளின் வாயிலாகவும், வடதிருமுல்லை வாயில் ஶ்ரீவைஷ்ணவி தேவி ஆலய வெளியீடு ‘வள்ளிமலை வள்ளல்’ என்ற நூல் மூலமும் அறிய முடிகிறது.

கொங்கு நாட்டில் பவானி நகருக்கு அருகில் பூநாச்சி கிராமத்தில் வசித்த சிதம்பர ஜோசியர்-லஷ்மியம்மாள் தம்பதிக்கு வெகுநாட்களாகப் புத்திரப் பாக்கியமில்லாமல் வருந்தினார்கள். ஒரு சமயம் திருச்செங்கோட்டு ஈசனை வழிபட நாகத்தின் மூலம் சமிக்ஞை கிடைக்கப் பெற்று அதன்படி அனுசரிக்க, அவர்களுக்கு 25-11-1870-ல் கார்த்திகை மூல நட்சத்திரத்தில் ஓர் ஆண்மகவு பிறந்தது. மகேசனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக  அக்குழந்தைக்கு அர்த்தநாரி எனப் பெயரிட்டு வளர்த்தனர்.

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்ததால் படிப்பில் நாட்டமில்லாமல் கிராமியக் கலைகளில் ஈடுபாடு கொண்டார். தனது ஒன்பதாவது வயதில் ‘குழந்தை திருமணம்’ செய்விக்கப் பட்டதும் மைசூருக்குக் குடி பெயர்ந்தார். அங்கு அரண் மனையில் தலைமைத் தவசிப்பிள்ளையாக இருந்த உறவினரிடம் உதவியா ளராகச் சேர்ந்து விரைவிலேயே சமையற்கலையின் நுணுக்கங்களைக் கற்று, நளபாகத்தில் கைதேர்ந்தவரானார். அரச சமூகத்தின் தனிப்பட்டத் தலைமைத் தவசிப்பிள்ளையாகவும் பரிணமித்தார்.

அதுவரை அவரை அணைத்துச் சென்ற அதிர்ஷ்டதேவதை இப்போது விலக ஆரம்பித்து விட்டாள். ஒரு கல்யாணத்துக்குச் சென்றவரை விதி விட்டுவிட வில்லை. அசல் மாப்பிள் ளையைத் தவிர்த்து இவரை மணாளனாக்கி இரண்டாம் திருமணம் செய்து வைத்து விட் டனர். துன்பத்துக்கு மேல் துன்பத்தை அவர் அனுபவித்தக் காலம் அது. மூன்று வருடத் துக்குப் பின் முதல் மனைவி, மூன்று மகள்கள் இயற்கை எய்தினர். தொடர்ந்து 1907-ல் இரண்டாவது மனைவியின் இரு பெண் குழந்தைகளும் இறந்தனர். அத்துடன் தீராத வயிற்று வலியும் சேர்ந்துகொள்ள வாழ்க்கையே வெறுத்துவிட்டது அவருக்கு. பழநி ஆண்டவரின் அபிஷேகத் தீர்த்தத்தை அருந்தினால் உபாதை நீங்கும் எனத் தோழர் கூற 1908-ல் மனைவி,எஞ்சிய ஒரே மகன் நரசிம்மனுடன் பழநி சென்றடைந்தார். அங்கு அன்றாட ஆலயக் கைங்கர்யத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு,அபிஷேகத் தீர்த்தத்தை அருந்திவர வாட்டியக் குன்மநோயும் அரவே அகன்றது. அத்துடன் முருகனின் திருவிளையாடலும் ஆரம்பித்தது.

அக்காலத்தில் மூலவரின் அபிஷேகத்தின் போது திருப்புகழ்ப் பாட்டுக்கு நடனமாடுவதுண்டு. ஒருசமயம் மதுரை தேவதாசி ஒருவர் “வங்கார மார்பிலணி தாரொடுயர் கோடசைய,கொந்தார மாலை குழல் ஆரமொடு தோள் புரள…”. (813)பாடலுக்கு நாட்டி யமாட,அதில் லயித்து ஓர் ஆனந்தப் பரவசநிலையை அடைந்தார். திருப்புகழ்ப் பாடலைப் படித்து ரசிக்க நினைத்தாலும் எழுத்தறிவு இல்லாமை தடங்கலாக நின்றது.

அப்போது அவருக்கருகில் திடீரெனத் தோன்றிய ஒரு மாயச் சிறுவன் (வேறுயார், ‘அழகன்’ தான்!)தமிழ் சொல்லிக் கொடுக்க முன்வர, துரிதகால இடைவெளியில் கற்றுத் தேர்ந்து,திருப்புகழ் பாடுவதில் புலமைப் பெற்றார்.‌ ஓர் இனந்தெரியாத உள்ளுணர்வு அவரை ஆன்மிக யாத்திரை மேற்கொள்ள அறிவுறுத்த,  திருச் செந்தூர்,  திருவண்ணா மலை, இலங்கை எனப் பல தலங்களைத் தரிசித்து விட்டுத் திரும்பவும் அண்ணாமலை வந்தடைந்தார். பகவான் ரமணரைச் சந்தித்து அவருக்குப் பணிவிடை செய்தும், திருப் புகழ்ப் பாடி மகிழ்வித்தும் வந்தார். ரமணர் அவர் கண்களுக்குத் தண்டாயுதபாணி யாகவே காட்சியளித்தார். அங்கு திருப்புகழின் அனைத்துக் காண்டங்களையும் கற்றறிந்தார். அர்த்தநாரியின் எதிர்காலத்தைத் தன் யோகசித்தியால் அறிந்து கொண்டவர் அவரை வட இந்தி யத் தலங்களைத் தரிசித்து வரப் பணித்தார். இமயமலைச் சாரலில் சந்தித்த ஒரு சித்தரால் ஈர்க்கப்பட்டு,அவரிடமே தீட்சைப் பெற்று,சித்தரின் ஆக்ஞைப்படி துறவறம் ஏற்று, ஶ்ரீசச்சிதானந்த சுவாமி எனும் சன்னியாச நாமத்தையும் பெற்றார். நான்கு வருட இடைவெளிக்குப் பின் ஆவலுடன் ரமணமகரிஷியைப் பார்க்க வந்தவருக்கு ஓர் அதிர்ச்சிக் காத்திருந்தது.

வந்ததும் வராததுமாய் அவரை ‘உடனே மலையடிவாரம் திரும்பிச் செல்!’ என மகரிஷி கட்டளையிட, ஒன்றும் புரியாதவராய்த் திரும்பினார். அவரது துறவற வாழ்வில் மற்றொரு திருப்புமுனையாக அமைந்துவிட்டது அச்சம்பவம். கீழே இறங்கியவரை உடலெல்லாம் சேறும் சகதியுமாய் ஓடி வந்து அணைத்துக் கொண்டார் மகான் ஶ்ரீசேஷாத்திரி சுவாமிகள். சேறும் சகதியும் சந்தன மணம் வீசியது! “வாரும்,வாரும்!சின்ன சாமி அனுப்பினாரா?” என்று வினவியவர், ஶ்ரீசச்சிதானந்தருக்கு ஆதிசங்கரரின் சிவமானஸ ஸ்தோத்திரத்தை உபதேசித்தார்.

XXXXX

to be continued……………..

tags — வள்ளிமலை ,ஶ்ரீ   , சச்சிதாநந்த , ஸ்வாமிகள்,