‘மயிரும் பயிரும்’- ஒரு பெண் புலவர் பாடிய பாட்டு ! (Post No.10054)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,054

Date uploaded in London – 4 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உலகிலேயே பழைய நூல் ரிக்வேதம். 6000 ஆண்டுகளுக்கு முந்தைய புஸ்தகம் என்கிறார்கள் ஜெர்மன் அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும், சுதந்திரப் போராட்ட வீரர் பலகங்காதர திலகரும். பிரிட்டிஷ் கைக்கூலியாக கிழக்கு இந்திய கம்பெனியின் மொழிபெயர்ப்பாளராக அமர்த்தப்பட்ட பிரிட்டன் வாழ், ஜெர்மன் ஆள் மாக்ஸ்முல்லர் முதலில் கி.மு 1200 என்று உளறிவிட்டு , பேராசிரியர் வில்சன் முதலியோர் கொடுத்த அடி தாங்காமல் ரிக் வேதம் கி.மு 1500 அல்லது அதற்கு முன் உண்டானது; எவரும் இதன் காலத்தைக் கணக்கிடவே முடியாது என்று கதறினார். இப்போது அமெரிக்காவில் இந்துக்களை  எதிர்த்துப் பேசிவரும் விட்சல் இது கி.மு 1700 என்கிறார். இந்துக்களோவெனில் இதை நாலாக வேத வியாசர் பிரித்தது கி.மு. 3150ல் என்கின்றனர். அணுசக்தி ஆராய்ச்சி நிலையம் (BARC) மற்றும் அமெரிக்க விண் வெளி நாசா (NASA) நடத்திய அராய்ச்சிகளோ இதில் குறிப்பிடும் சரஸ்வதி நதி கி.மு 2000க்கு முன் ஓடியதாக சொல்கின்றனர். இவ்வாறு பல்லாயிரம் ஆண்டுப் பழமையான ரிக் வேதத்தில் 20-க்கும் மேலான பெண் புலவர்கள் இருக்கின்றனர். அதுவும் உலக சாதனை. இவ்வளவு பெண் புலவர்களின் பட்டியல் அக்காலத்தில் வேறு எங்கும் இல்லை.

ரிக் வேதத்தில் எட்டாவது மண்டலத்தில் 91-ஆவது துதியாக வருகிறது (RV.8-91)அபாலா என்னும் பெண்மணி பாடிய கவிதை. அவர் இந்திரனை நோக்கி வேண்டுகிறார்.

இதில் பல அதிசய விஷயங்கள் உள்ளன. சோம லதா என்னும் அதிசயக் கொடி மலையில் விளைகிறது, அதை பருந்து கொண்டு தருகிறது என்றெல்லாம் பல புலவர்கள் பாடுகின்றனர் . ஆனால் அபாலா அதை  தான் போகும் வழியில் தண்ணீர் (நீரோடை) அருகில் காண்கிறாள்.அதைச் சாப்பிட்டு குணமும் அடைகிறாள். அவள் தனக்கும் தன்  தந்தைக்கும் இளமை திரும்ப வேண்டுகிறாள் . எப்படி தனக்கும் தத்தையின் வழுக்கைத் தலையிலும் முடி வளருகிறதோ அதே போல பயிரும் செழித்து வளர வேண்டும் என்கிறாள். மூன்று முறை அவளை இந்திரன் தேரின் சக்கரத் துளைகள் வழியாக இழுத்த பின்னர் அவளிடம் இருந்த தோல் வியாதி குணமாகி முடி வளர்ந்தது.

ஆண்டாளும் அபாலாவும்

இங்கு அபாலா  நமக்கு ஆண்டாளை நினைவுபடுத்துகிறார். அபாலாவுக்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த ஆண்டாளும் தேச பக்தி உணர்ச்சி பொங்க , “தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து

ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகள” என்று வேண்டுகிறார்

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து

ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி

வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!—திருப்பாவை

XXXX

இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் தந்தை மீது அவள் கொண்டுள்ள பாசம் மற்றும் விவசாயத்தில் முனைப்பு. ஆக, வெள்ளைக்காரன் சொன்ன நாடோடி விஷயம் பொய்யாகப் போனது ! வேத கால இந்துக்களை விவசாயம் செய்யாத நாடோடி என்று வெள்ளைக்காரர்கள் ‘கப்ஸா’ விட்டனர். அவர்களது முகத்திரையைக் கிழித்து விட்டது அபாலாவின் ரிக்வேதக் கவிதை

அவளுக்கு தோல் வியாதி இருந்ததால் கணவன் அவளை வெறுத்தான் என்பதும் கவிதையில் வருகிறது. ஆகையால் வியாதியுள்ள பெண்களின் அவல நிலையும் நமக்குத் புரிகிறது .

மூன்று முறை தேரின் துளை வழியாக இழுத்தனர் என்பது ஒரு சடங்காக இருக்கலாம்.  தேரின் 3 துளை பற்றி ரிக் வேத முதல் மண்டலத்திலும் வருகிறது (1-164)

XXXX

இதோ பாடலின் சுருக்கம் (RV.8-91)

8-91-1.நீரோடைக்குச் சென்ற ஒரு இளம்பெண்  சோம லதை  என்னும் செடியைக் கண்டாள். அதை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றாள் . இந்திரனே உனக்கு இதன் ரசத்தைப் பிழிந்து தருவேன் என்றாள்.

2.நீ வீரன், ஒளியுடன் பிரகாசிப்பவன்; வீடு வீடாகச் செல்பவன். என் பற்களால் கடித்துப் பிழியப்பட்ட  இந்த சோம ரசத்தை யவ /பார்லி பொரியுடனும், கரம்பைக் கஞ்சியுடனும், புரொடச ரொட்டிகளுடனும் சாப்பிடு .

XXXX

இங்கே ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும்; இராம பிரானுக்கு சபரி என்னும் வேடுவ குலக் கிழவி இலந்தைப் பழத்தைக் பல்லால் கடித்து ருசி பார்த்துவிட்டு நல்ல கனிகளை மட்டும் கொடுத்தாள்; அது போல இங்கு ஒரு இளம் பெண் தன் பல்லால் கடித்து பிழியப்பட்ட சோம ரசத்தைக் கொடுக்கிறாள் . அது மட்டுமல்ல. அத்தோடு அவள்  கொடுக்கும் எல்லா உணவு வகைகளும் ‘வெஜிட்டேரியன்’ VEGETARIAN DISHES பண்டங்கள் என்பதையும் கவனிக்க வேண்டும் .XXXX

3. நாங்கள் உன்னை தெரிந்து கொள்ள ஆசைப்பட்டோம். ஆனால் நீயே இங்கு வந்து இருப்பதை அறியவில்லை ; சோம ரசமே முதலில் மெதுவாகவும் பின்னர் வேகமாகவும் பாய்ந்து போ.

4.இந்திரன் எங்களுக்கு அடிக்கடி பலத்தையும் செல்வத்தையும் தருக; கணவனால்  வெறுக்கப்பட்ட பெண்கள் இந்திரன் உதவியை நாடுவோமாகுக.

5. இந்திரனே, மூன்று இடங்களை செழிப்பாக் குவாயாக. என் தந்தையின் வழுக்கைத் தலையையும், பாழாய்ப் போன நிலத்தையும், என் அங்கத்தையும் செழிப்பாக்குக ,

6. இந்திரனே, மூன்று இடங்களை செழிப்பாக் குவாயாக.. என் தந்தையின் வழுக்கைத் தலையையும், பாழாய்ப் போன நிலத்தையும், என் இடுப்புக்கு கீழேயுள்ள வியாதியுள்ள இடத்தையும் செழிப்பாக்குக ,

8-91-7.சதக்ரதுவே; நீ அபலையின் உடலை சகடத்தின் துளையிலே மூன்று முறை செலுத்தி சுகப்படுத்தினாய். அவளுக்கு சூரியனைப் போல ஒளிவீசும் தோலையும் தந்தாய்.

XXXX

இது ஒரு அருமையான, நிறைய தகவல் உள்ள கவிதை. சோமம் என்பது வெள்ளை க்காரன் சொல்லும் போதை பொருள் அல்ல. நோய் தீர்க்கும் ,மருந்து; ஆயுளை நீட்டிக்கும் அபூர்வ மூலிகை ; தோல் வியாதிகளைக் குணப்படுத்தும் .

என்பதையும் இக்கவிதை உறுதிப்படுத்துகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அக்காலத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் கவிபாடினர். 3000, 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கிரேக்க, பாபிலோனிய, சுமேரிய , சீன, பாரசீக ,எகிப்திய நாகரீகங்களில் பெண் கவிஞர்கள் அரிதிலும் அரிது!

இந்தக் கவிதைகளை நமக்குத் தொகுத்தளித்த வியாசருக்கு வணக்கங்கள்; அதைப் பாதுகாத்து வாமொழியாகவே பரப்பி வரும் பிராமணர்களுக்கும் நமஸ்காரம்.

-SUBHAM-

tags- மயிர், பயிர், அபாலா , ஆண்டாள், வழுக்கைத் தலை, ரிக் வேதம், கவிதை , சபரி

‘அருந்தவத்து அரசி’ சபரி – ராமாயண இன்பம் (Post No.3004)

sabari

Picture shows Sabari with Rama, Lakshmana

Article Written by London swaminathan

Date:25 July 2016

Post No. 3004

Time uploaded in London :– 8-05 AM

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

கம்ப ராமாயணத்திலும், வால்மீகி ராமாயணத்திலும் சபரி என்னும் கானகப் பெண்மணியைப் பற்றிய பாடல்கள் மிகவும் குறைவு. ஆயினும் அந்தப் பாடல்களை, ஸ்லோகங்களைப் படிக்கும்போது இலக்கிய இன்பமும், பக்திச் சுவையும் கிட்டும்.

 

முதலாவது, கானகத்தில் தவம் செய்யும் கிழவிக்கு கம்பன் கொடுக்கும் அடை மொழி “அருந்தவத்து அரசி”. வால்மீகி அடிக்கடி பயன்படுத்தும் “தபோநிதி” – என்பதை கம்பன் வேறு வடிவத்தில், இப்படி மிகவும் அழகாகப் பகர்கிறான்.

 

கம்ப ராமாயணம் முழுதும், ராமனுக்கும் சீதைக்கும் அனுமனுக்கும் கம்பன் கொடுக்கும் அடை மொழிகள் படித்துப் படித்து இன்புறத் தக்கவை.

இருந்தனென் எந்தை நீ ஈண்டு எய்துதி என்னும் தன்மை

பொருந்திட இன்றுதான் என் புண்ணியம் பூத்தது என்ன

அருந்தவத்து அரசி தன்னை அன்புற நோக்கி எங்கள்

வருந்துறு துயரம் தீர்த்தாய்; அம்மனை வாழி என்றார்

பொருள்:

சபரி சொன்னாள்: என் தந்தையே! நீ இங்கே வரப்போகிறாய் என்று கேட்டு, உன்னை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். நீ வந்துவிட்டதால், இன்றுதான் என் தவம் பலித்தது ( என் புண்ணியம் பூத்தது).

உடனே, அருந்தவத்துக்கு ராணியான அவளைப் பார்த்து, அன்போடு ராமன் சொன்னான்: தாயே! வழிநடையால் ஏற்பட்ட களைப்பை, உன் உபசரிப்பால் தீர்த்துவிட்டாய், நீ வாழ்வாயாக.

 

அவள் சொல்கிறாள்: சிவனும் பிரம்மனும், இந்திரனும் என்னிடம் வந்து,  நீ சித்தி பெறும் காலம் வந்துவிட்டது. ராமன் இங்கே வருகிறான். அவனுக்கு உரிய உபசாரங்களைச் செய்துவிட்டு எம் உலகத்துக்கு வருக என்று அவர்கள் சொன்னார்கள்.

 

(பிரம்மா, சிவன் பெயரை மட்டும் சொன்னதிலிருந்து,   ராமனே விஷ்ணு என்பதையும் கம்பன் தெரிவிக்கிறான்.)

shabari

Picture: – சபரி என்ற வேடுவப் பெண்மணி

இன்னொரு பாடலில் ஞானிகள் யார் என்றும் கம்பன் சொல்கிறான். அவர்கள் “கேள்வியால் செவிகள் முற்றும் தோட்டவர்”. அதாவது, நமக்கு எல்லாம் காதில் இயற்கையாகவே துளை இருக்கிறது. சான்றோருக்கு,  கேள்வி  ஞானத்தால் – நல்லனவற்றைக் கேட்டதால் அத்துளை உண்டாயிற்றாம்!

 

சபரி வாழ்ந்த இடம் .மதங்க முனிவரின் ஆசிரமம் ஆகும். அந்த இடத்தின் இயற்கை அழகையும் பம்பா நதி தீரத்தின் இயற்கை அழகையும் வால்மீகி விரிவாக வருணிக்கிறார். கமபன் அந்த இடம் சொர்க்கலோகம் போல இருந்தது என்பான்:

எண்ணிய இன்பங்கள் அன்றித் துன்பங்கள் இல்லை ஆன

புண்ணியம் புரிந்தோர் வைகும் துறக்கமே போன்றது அன்றே

 

பொருள்:

புண்ணியம் செய்தோர் போகக்கூடிய சுவர்க்கம் (துறக்கம்) போல எப்போதும் இன்பம் மட்டுமே நிலவும் — துன்பமே இல்லாத – இடம் போல இருந்தது (மதங்க முனிவரின் இருப்பிடம்)

 

இறுதியில் ராமனுக்கு காய் கனிகளைக் கொடுத்து சபரி உபசரிக்கிறாள். அது மட்டுமல்ல சுக்ரீவன் வாழும் இடத்துக்கு எப்படி போவது என்றும் வழிகளை விரிவாகச் செப்புகிறாள். கடை சியில் யோக சக்தி மூலம் தன் உடம்பை விட்டு நீங்கி உயிர் துறக்கிறாள்.

 

வால்மீகி சிறிது வேறுவிதமாக முடிக்கிறார். யோக சக்தி என்பதற்குப் பதிலாக தீயில் புகுந்து சபரி உயிர் நீத்தாள் என்று இயம்புகிறார். அக்காலத்தில் சான்றோர்கள், தனது பணிகள் முடிந்தபின் இப்படி தீப்புகுந்து உயிர் துறப்பர்.

 

அதிகமான சங்கத் தமிழ் பாடல்களைப் பாடிய பிராமணப் புலவன் – “புலன் அழுக்கற்ற அந்தணாளன்” – கபிலனும் இப்படி தீப்புகுந்து உயிர்நீத்தான்.

 

சபரி பாடல்களில் இருந்து நாம் அறிவது என்ன என்று ஒரு ஆராய்ச்சி செய்வோம்:–

sabari ashram

Picture:– சபரி வாழ்ந்த இடம் .மதங்க முனிவரின் ஆசிரமம்

1.அந்தக் காலத்தில் பெண்களும் நல்ல ஆன்மீக அறிவு பெற்றிருந்த்னர். அவ்வையாருக்கு எல்லாம் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவர் சபரி. அப்போதே பெண்கள் ஆன்மீக தாகம் கொண்டு தவம் செய்தனர்.

2.ராமன் போன்றாரும், சபரியும் கானகத்தில் – வெஜிட்டேரியன் உணவை மட்டுமே சாப்பிட்டனர். காயும் கனிகளும் கீரையும் தேனும் திணை மாவுதான் அவர்கள் உண்டவை.

3.சான்றோர்கள் தன் தவ வலிமையால் உடல் துறப்பது, தீப்புகுவது என்பது சர்வ சாதாரணமாக இருந்தது. அதாவது உடலைத் துச்சமாக எண்ணினர். நாம் பழைய உடைகளைக் குப்பைக் கூடையில் எறிவது போல அவர்கள் உடலைத் துறந்தனர்.

4.கானகத்தில் இருந்த ஆசிரமங்கள் மிகவும் இயற்கை அழகு மிக்கவை அவை சொர்க்க லோகம் போன்று இன்பமே எந்நாளும் என்ற இடமாகத் திகழ்ந்தன.

5.சபரி கடித்துச் சுவைத்து கொடுத்த பழங்களை ராமன்- மன்னன் மகன் — ஜாதி வேறுபாடின்றி சாப்பிட்டதையும் நாம் அறிவோம். ஜாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாடலை – ராமன் குகன் சம்பவத்திலும், சபரி சம்பவத்திலும் காட்டுகிறான்.

  1. எல்லாவற்றிற்கும் மேலாக ஆரிய-திராவிட வாதத்துக்கு செமையடி கொடுக்கிறது ராமாயணம். ஆதிகுடிகள், வேடுவர்கள் என்போரெல்லாம் திராவிடர் என்றும் , ராமன், கிருஷ்ணன் போன்றோர் எல்லாம் ஆரியர் என்றும் பிதற்றினர் வெளி நாட்டினர். அது தவறு – சபரியும் கூட யோக வாழ்வு நடத்தினாள் என்று காட்டுகிறது இந்த சம்பவம். மேலும் ராமனும், கிருஷ்ணனும் “காக்கா கறுப்பு நிறத்தோலினர் என்பதையும் நாம் அறிவோம். ஆக நிறவேற்றுமை புகுத்திய வெளி நாட்டுப் பேய்களுக்கு அடிமேல் அடி கொடுக்கிறது சபரி நிகழ்வு

7.சபரி என்ற வேடுவப் பெண்மணிக்கு நல்ல பூகோள அறிவு இருந்ததையும் இச்சம்பவம் காட்டும். அதாவது அவள், சுக்ரீவன் வாழும் ரிஷ்யமுக பர்வதத்துக்குப் போகும் வழியை இராம இலக்குவருக்கு இயம்புகிறாள். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று ஒரு காலம் நிலவியது உண்மைதான். ஆனால் அதற்கு முன்னர் ‘கூகுள் மேப்’- ஐ (Google Map) விட அதிக அறிவு இருந்தது பெண்களுக்கு.

 

8.இப்படலம் சுவர்கம் பற்றிய தகலையும் நமக்குத் தருகிறது. சுவர்க்க லோகம் இன்பமே எந்நாளும் நிலவும் இடம். அங்கு துன்பம் என்பதே கிடையாது.

 

சபரி பிறப்பு நீங்கு படலத்தை கம்பன் முடிக்கும் முன்பாக, சபரி தன் யோக சக்தியால் உயிர் நீத்ததை ராமன் அதிசயத்தோடு பார்த்த செய்தியையும் கம்பன் கூறுகிறான்:-

அன்னது கண்ட வீரர் அதிசயம் அளவின்றி எய்தி

 

இந்த அதிசயத்தகவலை நமக்குக் கொடுத்த கம்பனுக்கும் வால்மீகிக்கும் நாமும் நன்றி சொல்வோம்.

 

–subham–