
Post No. 10,056
Date uploaded in London – 5 September 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சர்ச்சிலும் மசூதியிலும் குறள்? ஒத வேண்டுகோள் விடுக்குமா தமிழக அரசு?!!
ச.நாகராஜன்

நாத்திக அரசுக்கு சந்தோஷம் – தன் கையில் கோவில் அகப்பட்டுக் கொண்டிருப்பதை நினைத்து!
கோவிலில் குறள் ஓத ஏற்பாடு செய்யப்போகிறதாம்!
நல்லது, அனைத்து ஹிந்துக்களுக்கும் சந்தோஷமே.
புதிதாக ஒன்றையும் செய்து விடவில்லை. மதுரை மீனாட்சிஅம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்தில் தான் தெய்வப் புலவர் திருவள்ளுவர் திருக்குறளை அரங்கேற்றினார். மற்ற நூல்கள் கவிழ்ந்து விழ திருக்குறள் மேலே எப்போதும் இருந்தது; உலகப் பொதுமறையானது.
1330 குறள் பாக்களையும் பொற்றாமரைக் குளம் சுற்றி வருகையில் தென்புறச் சுவரில் காணலாம்; படித்து மகிழலாம்!
சில “பகுத்தறிவுகளுக்கு” ஒரு சந்தேகம். அது சந்தோஷம் தரும் சந்தேகம் அவர்களுக்கு
4310 திருக்குறள் சொற்களிலே – 1330 அரும் குறள் பாக்களிலே – கடவுள் என்ற வார்த்தையையே திருவள்ளுவர் சொல்லவில்லையே என்று!
என்னிடம் கேட்ட ஒரு “பகுத்தறிவுக்கு” நான் சொன்ன பதில் இது தான் : “நண்பரே, இப்படி எல்லாம் “பகுத்தறிவு மூளை” பின்னால் ஒரு நாளில் கேட்கும் என்று தான் 133 அதிகாரங்களை வகைப்படுத்தி தொகைப்படுத்தி முறைப்படுத்தி பெயரையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறார் திருவள்ளுவர்.
முதல் அதிகாரத்தின் பெயரையே கடவுள் வாழ்த்து என்று வைத்திருக்கிறார். கடவுள் என்று சொல்லாமல் திருக்குறளையே ஆரம்பிக்க முடியாது, நண்பரே”
கடவுளை வாழ்த்தினால் தான் திருக்குறள் உள்ளேயே நுழைய முடியும்.
நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறியவர்க்கு திருக்குறள் சரிப்படாது!
ஈ.வெ.ராமசாமி நாயக்கரைப் போற்றிப் புகழ்ந்து ‘தமிழ் ஒரு காட்டுமிராண்டி பாஷை’ என்பதை ஏற்பவர்கள் தமிழையும் புகழ வேண்டாம், தமிழ்த் திருக்குறள் பக்கமும் வர வேண்டாம்.
கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று சொல்லும் ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் “பக்தர்களுக்கு” கோவில் தான் எதற்கு, சிலைகள் தான் எதற்கு, ஆகமம் தான் எதற்கு, தேவார, திருவாசகம் தான் எதற்கு? கடவுள் வாழ்த்து என்று ஆரம்பிக்கும் திருக்குறள் தான் எதற்கு!
பேசாமல் விட்டு விட்டுப் போய் விடலாமே!
ஊஹூம், அது எப்படி விட முடியும், கோவிலை!
அங்கே உ.பி.களுக்கு “வேண்டியதெல்லாம்” இருக்கிறது. விடமாட்டார்கள் கோவிலை.

சரி, உலகப் பொதுமறையாம் திருக்குறளை ஓதச் சொல்லிய பகுத்தறிவுகள் தங்கள் அன்பு உபிக்களை – உடன்பிறப்புகளை – அணுகி சர்ச்சிலும், மசூதியிலும் இதை ஓத ஏற்பாடு செய்வார்களா? அங்கு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பொற்றாமரைக் குளத்தைச் சுற்றி 1330 அரும் குறளும் பொறிக்கப்பட்டிருப்பது போல பொறிக்கச் செய்வார்களா?
அவர்கள் மறுத்து விட்டால், அது தங்கள் மதத்திற்கு ஏற்புடையதல்ல என்று அவர்கள் கூறினால் விட்டு விடலாம் – அவர்களைப் புரிந்து கொண்டு.
போகட்டும், ஹிந்துப் பொதுமறையாகவே திருக்குறள் இருந்து விட்டுப் போகட்டும். குறை ஒன்றும் இல்லை! தெய்வப்புலவர் தெய்வப்புலவர் தான். திருக்குறள் ‘திரு’ வாசம் செய்யும் திருக்குறள் தான்!
ஈவெராவின் நெஞ்சில் குத்திய முள் எது என்று ஆராய்ச்சி செய்து, கடவுள் இருக்கிறாரா என்று தினமும் வாதம் செய்து இல்லை என்று சொல்லும் தொலைக்காட்சி மற அரக்கர்களுக்கு (பாப ராக்ஷஸனைத் தமிழ்ப் படுத்தி இருக்கிறேன், அவ்வளவு தான்) திருக்குறளும் வேண்டாம், கடவுளைத் தொழும் கோவில்களும் வேண்டாம். விட்டு விடுங்களேன்!
திருக்குறளில் கடவுள் வாழ்த்த்து என்பதில் தொடங்கி ஏராளமான சொற்களால் கடவுளைச் சுட்டிக் காட்டுகிறார் தெய்வப்புலவர்.
கடவுள், ஆதி பகவன் (குறள் 1) வாலறிவன் (குறள் 2), மலர்மிசை ஏகினான் (குறள் 3), வேண்டுதல் வேண்டாமை இலான் (குறள் 4), இறைவன் (குறள் 5), பொறிவாயில் ஐந்தவித்தான் (குறள் 6), தனக்குவமை இல்லாதான் (குறள் 7), அறவாழி அந்தணன் (குறள் 8) எண்குணத்தான் (குறள் 9), இறைவன் (குறள் 10), உலகு இயற்றியான் (1062) என்று இப்படி எல்லாம் கடவுளைச் சுட்டிக் காட்டி கடவுளின் சொல்ல முடியா குணங்களை எல்லாம் விவரிக்கிறார் அவர்.
பைபிளையும், குரானையும் ஏற்றுக் கொள்கிறேன், கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் ஹிந்துக் கடவுள்களை ஏற்றுக் கொள்வார்களா, திருநீறு பூசிக் கொள்வார்களா என்று மதுரை ஆதீனத்தின் புது ஆதீனகர்த்தர் கேட்ட அர்த்தமுள்ள கேள்வியை “மடைமாற்றம்” செய்து ஒரு டிவி, மதுரை ஆதீனகர்த்தர் பைபிளையும், குரானையும் ஏற்றுக் கொள்கிறார் என்று பொய்ச் செய்தி வெளியிட்டது.
தமிழகம் அல்லாத இதர மாநிலங்களிலும் பாரதம் அல்லாத பிற நாடுகளிலும் இந்தப் பொய் செய்தி வெளியீட்டைக் கேட்டோர் அல்லது இதைப் பற்றித் தெரிந்து கொண்டோர் வியந்து பிரமிக்கிறார்கள், இப்படி எல்லாம் கேடு கெட்ட அளவில் ஒரு ஊடகம் இயங்க முடியுமா, இது தமிழர்க்கும் தமிழுக்கும் செய்யும் மிகப் பெரிய துரோகம் அல்லவா, அவமானம் அல்லவா, இந்து மதத்திற்கு ஒரு மாபெரும் அவமானத்தை ஏற்படுத்தும் சதி அல்லவா என்று கேட்கின்றனர்.
“இது ஒரு சின்ன சாம்பிள் தான்” என்று தான் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது.
ஹிந்துக்களுக்கே உள்ள மிகப் பெரிய குணமான பெருந்தன்மையையும், கருணையையும், பொறுத்துப் போகும் தனமையையும் அளவுக்கு மீறிச் சோதித்தால்..
சோதித்தால்…?
சிவபிரானின் நெற்றிக்கண் திறந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை!

***
tags- tags — சர்ச், மசூதி, குறள்,