காளிதாசன் நாடகத்தில் வியத்தகு விண்வெளி விஞ்ஞானம்!!

IndiaNameplate

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1286; தேதி: 13 செப்டம்பர் 2014

உலகப் புகழ்பெற்ற சம்ஸ்கிருதக் கவிஞனின் உலகப் புகழ்பெற்ற நாடகம் சாகுந்தலம். இயற்கைக் காட்சிகளின் வருணனை ஒரு புறம். மான்களையும் மாதவிப் பூங்கொடிகளையும் மனிதனுக்கு நிகராக நேசிக்கும் சகுந்தலையும் கண்வ மகரிஷியும் மறுபுறம்.

மனிதனின் சிந்தனையை இமயமலை அளவுக்கு உயர்த்தும் காளிதாசனின் உவமை நயம் ஒருபக்கம். அவனது சம்ஸ்கிருத மொழி நடை என்னும் அழகு மறுபக்கம். இப்படித் திரும்பிய இடமெல்லாம் சுவைதரும் காவியத்தில் ஒரு அரிய பெரிய விஞ்ஞான உண்மையையும் புதைத்து வைத்துள்ளான் கவி காளிதாசன்.

சாலைப் போக்குவரத்து

முதல் காட்சியில் சாலைப் போக்குவரத்து பற்றி ஒரு அரிய காட்சி வருகிறது. மன்னன் துஷ்யந்தனின் ரதம் செல்லும் வேகம் பற்றியது அந்தக் காட்சி. அதைப் படிக்கும்போது அந்தக் காலத்தில் ‘’சூப்பர் Fஆஸ்ட்’’ எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு நிகரான வேகத்தில் செல்லும் வண்டிகள் இருந்ததோ என்று எண்ண வைக்கிறான். எங்கள் பிரிட்டனின் மோட்டர்வேயில் கார்கள் செல்லும் வேகம் மணிக்கு 70 மைல். இங்கு ரயில்கள் 130 மைல் வேகம் வரை செல்ல முடியும். ஆகையால நமக்கு காளிதாசன் வருணிக்கும் காட்சி எதுவும் புதுமை இல்லை. ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன் இவ்வளவு வேகமாகச் செல்லும் ரதங்கள் இருந்ததா? அப்படிப்பட்ட வேகத்தில் செல்ல கான்க்ரீட் அல்லது ரப்பர் ரோடு அல்லவா வேண்டும். அப்படிப்பட்ட சிறந்த சாலைகள் இருந்தனவா?

இதோ அவனது ஸ்லோகம்

Yad aaloke suuksmam vrajati sahasaa tad vipulataam
Yad ardhe vicchinnam bhavati krtasamdhaanam iva tat
Prakrtyaa yad vakram tad api samarekham nayanayor
Name duure kimcit ksanam api na parsve rathajavaat
Sakuntalam Act 1—9

(வடமொழியில் ஸ்லோகம் கிடைத்தால் சரியான உச்சரிப்புடன் தமிழில் எழுதி இருப்பேன். கிடைக்காததால் எனது ஆங்கிலக் கட்டுரையில் இருந்ததை அப்படியே தருகிறேன்; பொறுத்தருள்க)

chandrayaan-1

விண்வெளிப் பயணம்
சாகுந்தலம் நாடகத்தின் ஏழாவது காட்சியில் விண்வெளிப் பயணம் பற்றி வரும் காட்சிதான் வியப்பானது. மஹாபாரத வன பர்வத்தில் வரும் அர்ஜுனனின் ஐந்து ஆண்டு விண்வெளிப் பயணம் குறித்து ஏற்கனவே எழுதி விட்டேன். அங்கு இந்திரனின் ரதத்தைச் செலுத்திய அதே டிரைவர் மாதலிதான் இங்கும் துஷ்யந்தனுக்கும் டிரைவர்.

இங்கு ரதம், டிரைவர் என்பதெல்லாம் சங்கேத மொழிச் சொற்கள் இந்திரன் ரதம் என்பது விண்வெளிக் கப்பல், டிரைவர்/சாரதி என்பது விண்வெளி வீரர். இப்போது அமெரிக்கா பயன்படுத்தும் கொலம்பியா, அட்லாண்டிஸ் முதலிய ‘’ஸ்பேஸ் ஷட்டில்’’ வாகனங்களைவிட அதி நவீன ‘’ஸ்பேஸ் ஷட்டில்’’ இந்திரனிடம் இருந்தது என்பது அதன் வருணனையில் இருந்து தெரிகிறது.
மன்னன் வாய் வழியாக காளிதாசன் கூறுகிறான்:

தூசி கிளப்பவில்லை
சத்தம் போடவில்லை
இறங்கிய இடத்தில் தடயம் ஏதும் விடவில்லை.

இப்போது ரஷ்யா, அமெரிக்காவிடம் உள்ள விண்வெளி ஓடங்கள் இதை மூன்றும் செய்தே தரை இறங்க முடியும். ஆனால் துஷ்யந்தன் வந்த விண்வெளி வாகனம் இதை மூன்றும் செய்யாதது துஷ்யந்தனுக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியது.

space_shuttle_4

காளிதாசன் சொல்லுவதைப் படிக்கையில் அவனே விண்வெளி வாகனத்தில் பயணம் செய்தானோ என்றே வியக்க வேண்டி இருக்கிறது. விமானி அறையில் (காக்பிட்) உட்கார்ந்திருப்போருக்கு அல்லது ராக்கெட்டில் பயணம் செய்வோருக்கு மட்டும் தெரியும் காட்சியை வருணிக்கும் ஸ்லோகம் இதோ:

Sailanaanaam avarohatiiva sikharaad unmajjataam medinii
Parnaabhyanataraliinataam vijahati skandhodayaat paadapaah
Samtaanais tanubhaavanastasalilaa vyaktim bhajanty aapaghaah
Kenaapy utksipateva pasya bhuvanam matpaarsvam aaniiyate

மாதலி: மன்னர் மன்னவா! இன்னும் ஒரு நொடியில் நாம் பூமியில் இறங்கப் போகிறோம்.

மன்னன்: (ரதத்தில் இருந்து கீழே பார்த்தவாறு): அம்மாடியோவ்! என்ன வேகத்தில் கீழ் நோகிச் செல்லுகிறோம். பூலோகவாசிகளின் தோற்றம் அற்புதமாக இருக்கிறதே!

மலைகளின் முகடுகள் மேல் நோக்கி எழுவது போலவும், பூமி கீழ் நோக்கி விழுவது போலவும் தெரிகிறதே.

இலைகள் போர்த்திய மரங்கள் எல்லாம் இப்போது அடிமரத்தோடு பெரிதாகத் தெரிகின்றன.

மேலேயிருந்து பார்க்கையில் மெல்லிய கோடாகப் பார்வையில் தெரிந்தும் தெரியாமலுமிருந்த நதிகள், பரந்த நீர்ப்பெருக்காகத் தோன்றுகின்றன.

அடடா, பூமியை யாரோ என்மீது எறிந்ததுபோல என்னருகே வருகிறதே (காட்சி 7-8)

shuttle3

மாதலி: மன்னவா! சரியாகச் சொன்னீர்கள் என்ன அற்புதமான பூமி இது!
இந்த சம்பாஷனைக்குப் பின் இருவரும் ஹேமகூட பர்வத ‘’கிம்புருஷர்கள்’’ பற்றி விவாதிக்கிறார்கள். ‘’கிம் புருஷன்’’ என்றால் “என்ன மனிதன்?” என்று பொருள். வெளி கிரக வாசிகளைப் பார்த்தாலோ, விண்வெளிவீரர் போல பூதாகார உடை (ஸ்பேஸ் ஸூட்) அணிந்து வந்தாலோ அவரைப் பார்த்து நாமும் கிம் புருஷ:? என்று வியப்போம். இப்படிப்பட்டவர்கள் ஹேமகூட பர்வதத்தில் வசிப்பதாக மதாலி கூறுகிறான்.

மன்னன் ( மிகவும் ஆச்சர்யம் கலந்த தொனியில்):
சக்கரங்கள் சத்தம் போடாமல் வழுக்கிச் செல்லுகின்றன!
சூறாவளித் தூசி எதுவும் எழும்பவில்லை!!
பூமியைத் தொடாமலேயே நிற்கிறது!!!
இறங்கிய இடத்தில் ஒரு தடயமுமே இல்லையே!!!!

மாதலி: மன்னர் மன்னா! இதுதான் உங்கள் இகலோக தேருக்கும் இந்திரனுடைய ரதத்துக்கும் உள்ள வித்தியாசம் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா?

இப்படி இருவரும் அற்புதமாக பேசியதைக் காளிதாசன் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதி இருக்கிறான். ஒரு காலத்தில் அமெரிக்காவோ ரஷ்யாவோ இந்திரனுடைய விண்வெளி ரதம் போல ஒரு ஷட்டிலைக் கண்டுபிடித்தால் அதற்கு ‘’இந்திர ரதம்’’ என்று பெயர் சூட்ட வேண்டும் ஏனெனில் இப்போதுள்ள எல்லா விண்வெளி வாகனங்களையும் விட மிக Advanced Technology “அட்வான்ஸ்டு டெக்னாலஜி” — பற்றி காளிதாசன் பேசுகிறான்!!!

shuttle 1

–சுபம்–

வீரத் தாயும் வீர மாதாவும்

 

படம்: ரஜபுதனப் பேரழகி சித்தூர் ராணி பத்மினி. அலாவுதீன் கில்ஜியின் கைகள் தன்மீது பட்டுவிடக் கூடாதென்பற்காக ஆயிரம் மங்கைகளுடன் தீயில் பாய்ந்த உத்தமி (இது கி.பி.1303 ஆம் ஆண்டில் நடந்தது)

English version of this article is already posted in the blog: London Swaminathan)

இந்தியா ஒரே நாடு! இந்திய சிந்தனை ஒரே சிந்தனை! “செப்பு மொழி பதினெட்டுடையாள், எனில் சிந்தனை ஒன்றுடையாள்!” என்று சும்மாவா சொன்னார் பாரதி? வீரத் தாய், வீர மாதா என்ற புகழுரையை உலகிலேயே மிகப் பழமையான ரிக்வேதத்திலும் காண முடிகிறது. அதற்கு ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்குப் பின் வந்த காளிதாசன், புறநானூற்றுப் புலவர் காவற்பெண்டு, பாரதி பாடல்களிலும் காண முடிகிறது.

புறநானூற்றில் ஒரு அழகான பாட்டு:

புறம் 86 (காவற்பெண்டு)

சிற்றில் நற்றூண் பற்றி, ‘நின் மகன்

யாண்டுள்ளனோ? என வினவுதி; என் மகன்

யாண்டு உளன் ஆயினும் அறியேன்;ஓரும்

புலி சேர்ந்து போகிய கல் அளை போல

ஈன்ற வயிறோ இதுவே;

தோன்றுவன் மாதோ, போர்க்களத்தானே!

பொருள்: என் மகன் எங்கே என்று கேட்கிறீர்களா? எனக்குத் தெரியாது. ஆனால் இந்த வயிறு புலிகளின் உறைவிடமான குகை போன்றது. ஆகவே அவன் போர்க்களத்தில்தான் இருப்பான்.

உலகில் எந்த ஒரு பெண்ணும் கோழையைப் பெற விரும்புவதில்லை. ஆனால் அதைக் கவிதையில் வடித்த பெருமை இந்தியர்களுக்கே உண்டு.

ரிக் வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் வரும் பாடல் (10-85-44), நீ வீரர்களைப் பெறுவாயாக என்று வாழ்த்துகிறது.

காளிதாசனின் காவியங்களில் எண்ணற்ற இடங்களில் வீரத் தாய் பற்றி வருகிறது. குமார சம்பவத்தில் (7-87) உமை அன்னையை வாழ்த்தும் பிரம்மா, நீ வீரர்களின் தாயாக விளங்கவேண்டும் (வீரப் ப்ரசவா பவேதி) என்று வாழ்த்துவதாகக் கூறுகிறான்.

ரகுவம்சத்தில் (2-64;14-4) வீர என்ற சப்ததைப் பெறும் முறைகளை விளக்குகிறார். தமிழ் இலக்கியம் போலவே மார்பில் விழுப்புண் தாங்குவதைப் போற்றுகிறார் (3-68).

உலகப் புகழ்பெற்ற சாகுந்தலம் காவியத்தில் சகுந்தலையை வாழ்த்தும் துறவிகளும் முனிவர்களும் வீரப்ரசவினீ பவ= வீரர்களின் தாயாக விளங்குவாயாக என்று வாழ்த்துகின்றனர்.

லலிதா சஹஸ்ரநாமத்தில் லலிதாம்பிகையைப் போற்றும் 1008 நாமங்களில் ஒன்று வீர மாதா என்னும் போற்றி ஆகும்:

“ப்ராணேச்வரி ப்ராணதாத்ரீ பஞ்சாசத்பீடரூபினி

விஸ்ருங்கலா விவிக்தஸ்தா வீரமாதா வியத்ப்ரஸூ:”

பாரதி இவர்களுக்கெல்லாம் ஒருபடி மேலே போய் ‘மலடி’ என்பதற்குப் புதிய விளக்கமே கொடுக்கிறார்:

“வீரரைப் பெறாத மேன்மைதீர் மங்கையை

ஊரவர் மலடி என்று உரைத்திடு நாடு”

படம்: ஜான்சி ராணி லெட்சுமிபாய், ஆங்கிலேயரால் கொல்லப்பட்டாள்.

போரில் இறந்தால் சொர்க்கம்

தமிழ், வட மொழி நூல்களில் காணப்படும் மற்றொரு ஒற்றுமை போரில் இறப்பவர்கள் சொர்க்க லோகத்துக்குப் போவார்கள் என்பதாகும். சங்கத் தமிழ் இலக்கியத்தில் மேல் உலகம், துறக்கம், தேவர் உலகம் பற்றிய குறிப்புகள் ஏராளம். ஆனால் போரில் இறந்தால் சொர்க்கத்துக்கு “நேரடி டிக்கெட்” கிடைக்கும் என்ற செய்தி சில பாடல்களில் தெளிவாகவே உள்ளது (புறம்.26, 62, 93, 287, 341, 362 பதிற்றுப் பத்து 52):

வாடாப் பூவின் இமையா நாட்டத்து

நாற்ற உணவினோரும் ஆற்ற

அரும்பெறல் உலகம் நிறைய

விருந்து பெற்றனரால்; (புறம்.62)

அவ்வையார் தரும் ஒரு சுவையான செய்தி இதோ:

அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்

திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி

மறம் கந்து ஆக நல்லமர் வீழ்ந்த

நீள்கழல் மறவர் செவ்வுழி செல்க என

வாழ் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ (புறம்.93)

பொருள்: போரில் இறக்காமல் வேறு காரணங்களால் இறந்த மன்னர்களை வேதம் படித்த பிராமணர்கள் வந்து, தர்ப்பைப் புல்லைப் பரப்பி, மன்னரின் சடலத்தை அதன் மீது வைத்து, வாளால் வெட்டி போரில் இறந்தவர்கள் செல்லும் வீர சுவர்க்கத்துக்கு நீயும் போவாயாக என்று மந்திரம் சொல்லுவர். (இதைப் போரில் விழுப்புண் தாங்கி இறக்கும் தருவாயில் இருக்கும் அதியமானிடம் அவ்வையார் கூறி ‘நீ அதிர்ஷ்டசாலி அப்பா! உன்னை இப்படி வாளால் வெட்டி சுவர்க்கத்து அனுப்ப வேண்டாமல் நீயே உன் வீரத்தால் வீர மரணத்தைத் தழுவிக்கொண்டாய்’  என்று பொருள்படப் பாடுகிறார்.)

பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு கண்ணன் சொல்லுவதும் இதுதான்:

குந்தியின் மகனே! கொல்லப்பட்டாலோ நீ ஸ்வர்க்கத்தை அடைவாய்;ஜெயித்தாலோ பூமியை அனுபவிப்பாய். ஆகையால் போருக்குத் துணிந்தவனாக எழுந்திரு! (கீதை 2-37)

படம்: கிட்டூர் ராணி சென்னம்மா

 

ரத்த கோஷம் !!

இப்போதெல்லாம் அரசியல் தலைவர்களின் தீவிர பக்தர்கள்/ தொண்டர்கள் அந்தத் தலைவர்களுக்கு ஆதரவாக இரத்தத்தில் கோஷங்களை எழுதுவதைப் பார்க்கிறோம். இது ஆதிகால வழக்கம் என்னும் சுவையான செய்தியை காளிதாசன் நமக்குச் சொல்லுகிறான் (ரகு.7-65):

அஜன், ரகு ஆகிய சூரியகுல மன்னர்கள் எதிரிகளை வென்ற பின்னர் அவர்கள் நாட்டு வீரர்களை இரக்க உணர்ச்சி காரணமாக கொல்லாமல் விட்டு விடுவார்களாம். ஆனால் மன்னர்களின் தீவிர விசுவாசிகள் அம்புகளை எடுத்து அவைகளை ரத்தத்தில் தோய்த்து கொடிகளில் கோஷங்களை எழுதுவார்களாம்: “இப்பொழுது ரகுவின் புத்ரன் அஜனால் உங்கள் கீர்த்தி/ புகழ் கவரப்பட்டுவிட்டது; ஆனால் தயை காரணமாக உங்கள் உயிர் கவரப்படவில்லை” என்ற கோஷம் எழுதப்படும்!

காளிதாசன் இன்னும் ஒரு சுவையான தகவலையும் தருகிறான். ராவணனே நேருக்கு நேர் சண்டை போட வந்தவுடன் நாமனுக்கு ஏகப்பட்ட சந்தோஷமாம் (ரகு 12-89). ராவணனை மஹா பராக்ரமசாலி என்று ராமன் மதிக்கிறான். ராமனைப் போன்ற வீரர்கள் பலம் குறைந்தவர்களுடனோ, கோழைகளுடனோ சண்டை போடமாட்டார்கள்.

சங்க இலக்கியப் புலவர்கள் வாழ்ந்த காலத்துக்கு முன் வாழ்ந்தவன் காளிதாசன் என்று ஆறு கட்டுரைகளில் எழுதினேன். இந்தத் தலைப்பின் கீழும் இதற்குப் பல உதாரணங்கள் கிடைத்தன. வீரம் பற்றி நாடு முழுதும் ஒரே கொள்கை நிலவிய காலத்தில் இப்புலவர்கள் வாழ்ந்தனர் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை.

*************