
Written by London Swaminathan
Date: 5 May 2018
Time uploaded in London – 5-36 am (British Summer Time)
Post No. 4979
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
முன்னொரு காலத்தில் மதுரையில் ஆர்.எஸ்.எஸ். பிரசாரக்காக இருந்தவர் இல. கணேசன்; அவர் இப்பொழுது பாரதீய ஜனதா எம்.பி. இந்திரா காந்தி (Emergency) எமர்ஜென்ஸி பிரகடனம் செய்த காலத்தில் நாங்கள் எல்லோரும் தலைமறைவு இயக்கத்தில் வேலை செய்தோம். எமர்ஜென்ஸிக்கு முன்னரும் பின்னரும் மதுரையில் வீட்டிற்கு சாப்பிட வருவார். அவர் தஞ்சாவூர்காரர். ஆகையால் பேச்சில் நிறைய நகைச் சுவை இருக்கும். அவர் என்ன சொன்னாலும் நான் தலை அசைப்பேன்
‘நான் இப்பொழுது என்ன சொன்னேன் தெரியுமா? உங்களை ஒரு குரங்கு என்று சொன்னேன் அதற்கும் தலை அசைத்து ஆமாம், ஆமாம் என்கிறீர்களே’ என்பார்.
ஜீ! நீங்கள் சொன்னால் எல்லாம் சரிதான் என்று சொல்லி நான் சிரித்து (அசடு வழிய) மழுப்பி விடுவேன்.
வீட்டிற்கு சாப்பிட வந்த போது, வழக்கமாக பிராமணர்கள் சொல்லுவது போல, அவரிடம் என் அம்மாவும்
“சங்கோஜப்படாமல் சாப்பிடுங்கள்” என்றார்.
கணேஷ்ஜி, தடால் அடியாக ஒரு போடு போட்டார்.
“நான் கொஞ்சம் அதிகமாகவே சாப்பிடுவேன்; நீங்கள் சங்கோஜம் இல்லாமல் தாராளமாகப் போடுங்கள்” என்றார்.
என் அப்பா, அம்மா எல்லோரும் தஞ்சை ஜில்லாக்காரர்கள்தான். ஆகவே அவர் ‘ஜோக்’கைப் புரிந்து கொண்டு சிரித்தார்கள்.
xxxx

தமிழ்நாட்டு எம்.பிக்கள் வழக்கம் போல பார்லிமெண்டில் கூட்டம் நடக்கும் போது தூங்கிக் கொண்டிருந்தார்களாம். அப்போது காரசார விவாதத்தில் வடக்கத்திய எம்.பி.க்கள் “எங்களுக்கு இரண்டு வேண்டும், மூன்று வேண்டும்; அந்த மாநிலத்துக்கு எங்கள் மாநிலம் என்ன இளைத்தவர்களா?” என்று சண்டை போட்டனராம்.
திடீரென விழித்துக் கொண்ட தமிழ் நாட்டு எம்.பிக்கள், “நீங்கள் எப்போதுமே இப்படித்தான் ‘ வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது. எங்களுக்கும் மூன்று வேண்டும்” என்று கூச்சல் போட்டார்களாம்.
அது சரி, நீங்கள் எந்த மிருகக் காட்சிசாலைக்காக கேட்கிறீர்கள் என்பதையும் சேர்த்துச் சொல்லுங்கள்; சபைக் குறிப்பேட்டில் அது பதிவாகட்டும் என்றார் அவைத் தலைவர்.
தமிழ்நாட்டு எம்.பிக்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு பேசா மடந்தைகளாக நின்றனராம்.
கரசாரமாக விவாதித்தது வெளி நாட்டில் இருந்து வந்த குரங்குகளை எங்கு அனுப்புவது என்பதாகும்; குரங்கு பற்றிய விவாதம் என்பதே புரியாமல் இவர்கள் எங்களுக்கும் “மூன்று தா” என்று கூச்சல் போட்டனராம்!! அது போல நான் சொன்னது என்ன என்றே தெரியாமல் நீங்களும் ஆமாம் என்றீர்களே என்று என்னை இடித்துரைப்பார்.
xxx

என் மனைவி ஒரு செவிடு!
எங்கள் வீட்டுக்கு நிறைய உபந்யாசகர்கள், சாமியார்கள், சாது, சந்யாஸிகள் சாப்பிட வருவர். என் தந்தை வெ.சந்தானம் திருக்கருகாவூர்க்காரர். தஞ்சாவூர்காரர்கள் பேச்சில் நிறைய நகைச் சுவை இருக்கும்—- ஒரு முறை ஒரு சொற்பொழிவாளர் சாப்பிடுகையில் ஏதோ கேட்டார். என் அம்மா வேறு வேலை செய்து கொண்டிருந்ததால் கொஞ்சம் தாமதாமக அதைக் கொண்டு வந்தார்.
என் அப்பா சொன்னார்,
“என் பெண்டாட்டி ஒரு செவிடு; கொஞ்சம் பொறுங்கள்; நான் சொல்கிறேன்” என்று ஜோக் அடித்தார்.
அதற்குள் அவர் கேட்ட பொருளும் வந்தது.
அடுத்த முறை அவருக்கு மோர் தேவைப்பட்டது. சமையல் ரூம் முழுக்க எதிரொலிக்குமாறு உரத்த குரலில் மோர் கொண்டு வாருங்கள் என்று இடி முழக்கம் செய்தார். எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை; பெரிதாகச் சிரித்து விட்டோம். அவருக்கு ஒன்றும் புரியவில்லை.
பின்னர் எங்கள் சஹோதரர்களில் ஒருவர் “அம்மாவுக்குக் காது கேட்கும்; அப்பா ஜோக் அடித்தார்; அதை நீங்கள் உண்மை என்று நம்பிவிட்டீர்களே” என்றார்.அவருக்கு தர்ம சங்கடமாகிப்போனது.
விருந்தாளியின் முகம் வாடக்கூடாதே என்பதற்காக நாங்கள் பேச்சை மாற்றி, அவருடைய முந்திய நாள் உபந்யாசத்தைப் புகழ்ந்தோம்.
xxxx

சிங்கார சுப்ரமண்ய சாஸ்திரிகள்
கூத்தனூர் சிங்கார சுப்ரமண்ய சாஸ்திரிகள் மதுரைக்கு வந்தால் எங்கள் வீட்டில்தான் தங்குவார். பெரிய வேத பண்டிதர்; ரிக் வேதத்தின் ஒரு ஷாகையை மனப்பாடம் செய்து (அத்யயனம் செய்து) காஞ்சி பரமாசார்ய சுவாமிகளிடம் தங்கக் காசு, சால்வை, பசு மாடு, ஒரு வீடு ஆகியன பெற்றவர்.
எப்போது சாப்பிட உட்கார்ந்தாலும், எங்கள் தாயார் உங்களுக்கு இது வேண்டுமா. அது வேண்டுமா என்று கேட்டுப் பரிமாறுவார். அவரோ இன்னும் கொஞ்சம் ரஸம் வேண்டுமா? என்று கேட்டால்” நீங்கள் எல்லோரும் க்ஷேமமாக (நன்றாக) இருக்க வேண்டும்” என்பார். இன்னும் கொஞ்சம் பாயஸம் வேண்டுமா? என்று கேட்டாலும் ‘நீங்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்’ என்பார். அவ்வளவு நல்ல உள்ளம்; சதா ஸர்வ காலமும் உப்பிட்டவரை உள்ளளவும் நினைப்பவர்; நன்றி பாராட்டுவர். “அன்ன தாதா ஸுகீ பவ” என்று ஆஸீர்வதிப்பவர்.
அதிலிருந்து அவர் சொன்ன வாசகம் எங்கள் வீட்டில் ஒரு IDIOM AND PHRASE ‘இடியம் அண்ட் ப்ரேஸாக’ மாறிவிட்டது. எங்கள் அம்மா ஏதாவது வேண்டுமா என்று கேட்டாலோ வேறு யாராவது ஏதாவது வேண்டுமா என்று கேட்டாலோ நீங்கள் எல்லோரும் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்போம். சிரித்து மகிழ்வதற்கு ஒரு சான்ஸ் கிடைத்தால் விடலாமா?
ஆனால் அந்தப் பெரியவர் வந்தால் வழக்கம் போல நமஸ்கரித்து ஆஸி பெறுவோம். ‘ஜோக்’ வேறு; மரியாதை வேறு.
xxxx Subham xxxxx