Written by London swaminathan
Research Article No.1849; Date: 6 May 2015
Uploaded at London time: 21-25
வென்றி வேந்தரை வருக என்று உவணம் வீற்றிருந்த
பொன் திணிந்த தோட்டு அரும்பெறல் இலச்சினை போக்கி
நன்று சித்திர நளிர் முடி கவித்தற்கு நல்லோய்
சென்று வேண்டுவ வரன்முறை அமைக்க எனச்செப்ப
–அயோத்தியா காண்டம், மந்திரப் படலம்
பொருள்: அரண்மனையை அடைந்த தசரதன், வெற்றி வேந்தர்களை இங்கே வாருங்கள் என்று அழைக்கும் பொன்னால் அமைந்த ஓலைகளை, கருடன் திகழும் முத்திரையை இட்டு அனுப்பினான். இன்பு வசிட்டனை நோக்கி, உத்தமரே, நீர் சென்று, சித்திர வேலைப்பாடு அமைந்த பெருமை பொருந்திய மகுடத்தைச் செம்மையாக ராமனுக்குச் சூட்டுவதற்கு வேண்டிய செயல்களை முறைப்படி கவனிப்பீர்களாக என்று கூறினான்.
சிந்து சமவெளியில் கிடைத்த முத்திரைகளில் பல கருட முத்திரைகள் கிடைத்திருக்கின்றன. வேத கால, புராண கால , இதிஹாச கால இலக்கியங்கள் முழுவதிலும் பருந்து, கருடன், கழுகு உருவங்களே அதிகம் காணப்படுகின்றன.
வேதத்தில் சொன்னது போல கரிகால் சோழன் பருந்துவடிவ யாகம் செய்ததை சங்க இலக்கியப் பாடலில் முன்னரே கண்டோம். கிரேக்க அரசன் வடமேற்கு இந்தியாவில் வைத்த கருட ஸ்தம்பம் (கருடன் தாங்கிய தூண்) பற்றியும் அவன் தன்னை பரம பாகவதன் (பகவான் விஷ்ணுவின் மஹா பக்தன்) என்று அழைத்துக் கொண்டது பற்றியும் முன்னரே எழுதி விட்டேன். விஷ்ணுவின் வாஹனம் கருடன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
ராமாயணத்துக்கும் சிந்து சமவெளிக்கும் உள்ள பல தொடர்புகளையும் எழுதிவிட்டேன். கந்தர்வர்கள் சிந்து சமவெளியை ஆண்ட பொழுது ராமனின் மகன்களும், சகோதரர்களும் அப்பகுதியில் அவர்களுடன் சண்டையிட்டு வென்றதை ராமாயணம் பகர, கந்தர்வர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடந்த சண்டையை மஹாபாரதம் செப்புகிறது. சிந்து சமவெளியை ஆண்ட ஜயத்ரதன், அம்பரீசன் ஆகிய மன்னர்கள் பெயர்களையும் சம்ஸ்கிருத இலக்கியங்கள் நுவலும்.
சங்க இலக்கியத்தில் சிந்து நதி பற்றியோ அந்தச் சமவெளிப் பகுதி பற்றியோ குறிப்புகள் எதுவும் இல. ஆனால் சம்ஸ்கிருத இலக்கியத்திலோ ஏராளமான குறிப்புகள் உள.
இந்தப் பின்னணியில் கருட முத்திரைகள் சிந்து வெளியில் கிடைத்திருப்பதும் அதை ராமாயணம் உரைப்பதும் எனது ஊகங்கள உறுதிப்படுத்துகின்றன.
நான் கூறுவது:–
சிந்து சமவெளி நாகரீகம் வேத கால இந்துக்களுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடையது. அது இன்றைய இந்துமதம் போலவே பலதரப்பட்ட இந்துக்களை உடைத்தாயிருந்தது. அதில் கந்தர்வர்கள் உள்பட பலர் ஆட்சி செய்த்ருக்க வாய்ப்பு இருந்தது. நமக்குக் கிடைத்த இதிஹாசம் அதை அதிகமாக கந்தர்வர்களுடன் தொடர்பு படுத்துகிறது. 18 கணங்களில் ஒரு பிரிவினரே கந்தர்வர். அவர்களைத் தவிர மேலும் 17 பிரிவுகள் இருந்ததை புராணங்களும் சங்கத் தமிழ் புறநானூற்று உரையும் உறுதிப்படுத்துகிறது.
சிந்து வெளி முத்திரைகளில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம வடிகட்டி, சோமரஸ வடிகட்டி என்பதை பல ஆராய்ச்சியாளர் ஒப்புக் கொள்ளத் துவங்கிவிட்டனர். ஆரிய—திராவிட இனவெறி வாதம் பேசி பகச் சொல்லி கேளிர் பிரிக்கும் பறங்கித்தலையன் (வெள்ளைக் காரர்) மனப்பான்மையால் சிந்து சமவெளி ஆய்வு தடம்புரண்டு போனது. இப்பொழுது அதை மேலும் தண்டவாளத்தில் ஏற்றிவைக்க கருடன் முத்திரை – ராமாயணத் தொடர்பு உதவும்!
வேதத்தில் கருடன்
வேதத்தில் அதிகமாகப் புகழப்படும் பறவை பருந்து,கருடன்,கழுகு வகைப் பறவைகளே.சுபர்ண, ஸ்யேன, க்ருத்ர, பலாக முதலிய பறவைகள் ஏராளாமான இடங்அளில் வருகின்றன. பருந்து வடிவ யாக குண்டம், சோம லதையை (சோமக் கொடி வகைத் தாவரம்) கருடன் கொண்டுவந்தது முதலிய இடங்களில் அதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப் படுகிறது. ராமாயணத்தில் ஜடாயு-சம்பாதி என்ற கருட இன மக்கள் குறிப்பிடப்படுவது போலவே ரிக்வேதத்தில் கருடன் -சோமக் கொடி சம்பவமும் கருடன் இன மக்களைக் குறிப்பதாகவே நான் எண்ணுகிறேன்.
வாழ்க ரகுகுல கருட முத்திரை! வளர்க சிந்துவெளி ஆய்வு!! தகர்க ஆரிய-திராவிட இனவெளியாளர்; மலர்க ஏக பாரதம்!
சிந்து/ சரஸ்வதி சமவெளி பற்றிய எனது முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ், ஆங்கிலக் கட்டுரைகளில் இதுவரை எவரும் சொல்லாத பல புதிய கருத்துக்களைச் சொல்லியிருக்கிறேன். படிக்க! சிந்திக்க!