ராமனிடம் வருணன் சொன்ன நொண்டிச் சாக்கு! கம்பன் நகைச் சுவை? (Post No.4480)

ராமனிடம் வருணன் சொன்ன நொண்டிச் சாக்கு! கம்பன் நகைச் சுவை? (Post No.4480)

 

WRITTEN by London Swaminathan 

 

Date: 11 DECEMBER 2017 

 

Time uploaded in London-  12-28

 

 

Post No. 4480

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

கம்ப ராமாயணத்தின் யுத்த காண்டத்தில் ‘வருணனை வழிவேண்டு படல’த்தில் இரண்டு பாடல்களில் உள்ள நொண்டிச் சாக்குகள் நமக்கு நகைச் சுவையை ஏற்படுத்தும். வருணன் தாமதமாக வந்ததற்குச் சொல்லும் சாக்குகள் இவை. அதுவும் பிரம்மாஸ்திரத்தை ராமன் ஏவப் போகிறான் என்பதை அறிந்த பின்னர் சொன்ன சாக்குகள் இவை. கம்பன் இதை நகைச் சுவையாக சேர்த்தானா அல்லது உண்மைக் கதையாக சேர்த்தானா என்பது விவாதத்திற்குரியது.

 

இலங்கை செல்வதற்கு கடல் வழிவிட வேண்டும் என்று கடற்கரையில் நின்று கொண்டு ராமன் வேண்டுகிறான். நீண்ட நேரம் ஆகியும் கடல் தெய்வமான வருணன் வரவில்லை. ராமனுக்கு கோபம் வந்து விடுகிறது. பிரம்மாஸ்திரத்தை ஏவுவதற்கு ராமன் தயாராகிறான். உடனே வருணன் பயந்து கொண்டு ஓடி வந்து அவன் முன் தோன்றுகிறான்.

 

தாமதமாக வந்ததற்கு வருணன் சொல்லும் இரண்டு சாக்குகளும் விநோதமானவையே!

 

நீ எனை நினைந்த தன்மை நெடுங்கடல் முடிவில் நின்றேன்

ஆயினேன் அறிந்திலேன்   என்று அண்ணலுக்கயிர்ப்பு நீங்க

காய் எரிப் படலை சூழ்ந்த கருங்கடல் தரங்கத்தூடே

தீயிடை நடப்பான் போலச் செறிபுனற்கு இறைவன் சென்றான்.

 

பொருள்:

நீ என்னை அழைத்தது எனக்குத் தெரியாது. ஏனெனில் நான் கடலின் ஒரு கோடியில் நின்று கொண்டிருந்ததால் அறியவில்லை. இவ்வாறு சொல்லிக்கொண்டு தீ பரவியுள்ள கடலின் அலைகளுக்கு இடையே தீயின் மீது நடப்பவனைப் போல நடந்து வந்தான் வருணன்.

 

இது ஒரு நொண்டிச் சாக்கு ! கடலுக்கே தெய்வமானவன், மிகப் பெரிய கணைகளை ராமன் தொடுத்தபோது கூட அறிய வில்லை என்பது உண்மைச் சாக்காக இருக்க முடியாது. இன்னும் பல பாடல்களுக்குப் பின்னர் அவன் சொல்லும் ஒரு சாக்கைப் பார்த்தால் முதலில் சொன்ன பொய் வெட்ட வெளிச்சத்துக்கு வந்து விடும்!

 

சுறாமீன் சண்டை!

பார்த்தனில் பொறையின் மிக்க பத்தினிக்கு உற்ற பண்பு

வார்த்தையின் அறிந்ததல்லால் தேவர்பால் வந்திலேன் நான்

தீர்த்த நின் ஆணை ஏழாம் செறி திரைக் கடலில் மீனின்

போர்த்தொழில் விலக்கப்போனேன் அறிந்திலேன் புகுந்தது ஒன்றும்

 

பொருள்:-

பூமியைவிடப் பொறுமை மிகுந்த உன் கற்பரசியான சீதைக்கு நேர்ந்துள்ள கஷ்டத்தை நின் சொல்லால் அறிந்தேன் அன்றி, தேவர்கள் மூலம் அறியவில்லை. தூயவனே! நெருங்கிய அலைகளையுடைய ஏழாம் கடலில் சுறாமீன்கள்   சண்டை நடந்து கொண்டிருந்தது. அதை விலக்கிவிடப் போயிருந்தேன். நின் கட்டளையை அறியாதவனாய் இயல்பாகவே இங்கு வந்தேன்!- என்று வருணன் உரைத்தான்.

 

இது கட்டாயம் நொண்டிச் சாக்குதான்.

சுறாமீன் சண்டயை விலக்கி, சமாதானம் செய்யப் போனதாக வருணன் கூறுவது விநோதமானதே.

 

–சுபம்–