சேக்கிழார்! – 2 (Post No.10,320)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,320

Date uploaded in London – –   10 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சேக்கிழார்! – 2

இப்படிப்பட்ட பெரும்  நூலை இயற்றுவதற்காக பல்வேறு தலங்களுக்கும் யாத்திரை சென்று அனைத்துத் தகவல்களையும் திரட்டினார் சேக்கிழார். நூலில் ஆழ்ந்த கவனம் செலுத்தி இயற்ற வேண்டும் என்பதற்காகத் தனது முதல் மந்திரிப் பதவியையும் துறந்தார். நேராகச் சிதம்பரம் சென்றார். அங்கு தியானத்தில் ஆழ்ந்தார் சேக்கிழார். எப்படி இப்புராணத்தை இயற்றுவது என்று அவர் சிந்தித்து இறைவனை வேண்டிக் கொண்ட போதில்,

“உலகெலாம்” என்ற ஒலி ஆகாயத்திலிருந்து அசரீரியாக ஒலித்தது.

உடனே பிறந்தது திருத்தொண்டர் புராணம்.

உலகெலாமுணர்ந் தோதற் கரியவன்
நிலவு வாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்

என்ற கடவுள் வாழ்த்துடன் தொடங்கிய பெரிய புராணம்  நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது.

முதல் பாடலிலேயே தான் சொல்ல வந்த நாயன்மார்கள் எண்ணிக்கையைச் சுட்டிக் காட்டி விடுகிறார் சேக்கிழார் பெருமான். ஆம் இந்தப் பாடலில் 63 எழுத்துக்கள் உள்ளன. அவர் பாட எடுத்துக் கொண்ட நாயன்மாரும் 63 பேர் தானே! உலகெலாம் என்பதில் உகாரமும் அலகில் என்பதில் அகாரமும் வணங்குவாம் என்பதில் மகாரமும் வருவது ஒரு தனிச் சிறப்பல்லவா! பிரணவ மந்திரத்தையே நூல் விண்டுரைக்கிறது என்று ஆகிறதல்லவா!! இப்படி இந்த முதல் பாடலுக்கே ஒரு பெரிய விரிவுரையைக் காணலாம்.

    இப்படிப்பட்ட அபூர்வமான புராணம் நன்கு வளர்ந்து வருகிறதா, எப்போது முடியும் என்றெல்லாம் அக்கறையுடன் அவ்வப்பொழுது தூதர் மூலமும்  ஒற்றர் மூலமும்  சோழ மன்னன் விசாரித்துத் தெரிந்து கொண்டு வந்தான். புராணம் முடிவுற்ற செய்தி அவனுக்கு முறையாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால் சோழன் பெரிதும் மகிழ்ந்தான்; பெருமையுற்றான்.

நேராக சிதம்பரம் வந்து சேர்ந்து நடராஜரையும் நூலாசிரியரையும் முறைப்படி வணங்கினான். அங்கு நடராஜரின் அருள் ஆணையின் படி ஆயிரங்கால் மண்டபத்தில் நூலைப் படித்து பொருளை விரித்துரைக்கச் செய்தான். பல இடங்களுக்கும் ஓலை அனுப்ப, சிற்றரசர்கள், மந்திரிகள், மடாதிபதிகள், தில்லை வாழ் அந்தணர் உள்ளிட்ட ஏராளமானோர் திரளாக வந்திருந்து நூலைக் கேட்டு இன்புற்றனர்.

சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திர நாளன்று திருத்தொண்டர் புராணம் ஆரம்பிக்கப்பட்டு சரியாக ஒரு வருடம் கழித்து அதே சித்திரை மாதம் திருவாதிரை நாளில்முடிக்கப்பட்டது. நூல் நிறைவு பெற்ற நாளன்று நூலையும் நூலாசிரியரையும் யானை மேல் ஏற்றி பின்னால் நின்று சாமரம் வீசியவாறே நகர் வலம் வந்தான் மன்னன். ஊர் மக்களும் சான்றோரும் அறிஞரும் பெரிதும் மகிழ்ந்தனர். தொண்டர் பெருமையை விளக்கிய சேக்கிழாருக்கு தொண்டர் சீர் பரவுவார் என்ற பெயரைச் சூட்டியதோடு இதுவரை நம்பி ஆண்டார் நம்பிகள் கோவை செய்த பதினொரு திருமுறையோடு இதைப் பன்னிரெண்டாம் திருமுறையாக ஆக்கி அதைச் செப்பேட்டில் பதிவு செய்தான் அநபாயன். அது மட்டுமின்றி சேக்கிழாரின் தம்பியான பாலறாவாயரை அழைத்து அவருக்குத் தொண்டைமான் என்ற பட்டத்தை அளித்து அவரைத் தனது மந்திரியாக நியமித்துக் கொண்டான்.

 அறுபத்துமூன்று நாயன்மார்களின் வரலாற்றை அழகுறச் சொல்லும் இதைப் பற்றிச் சோழ மண்டல சதகம் பெருமையுறத் தன் 79ஆம் பாடலில் கூறிச் சிறப்பிக்கிறது இப்படி:-

காக்கு நீதி இரவிகுலக்  கழற்கால் வளவன் கனிந்தேவ

சேக்கிழார் தம் திருவாயில் தெளிந்த முதல் நூல் செழுக்கதையின்

மேக்கு யாவும் திருவேட மெய்யே பொருளா வீடு பெற்றோர்

வாய்க்கு யாவும் புகழ்வேளாண் மரபோர் சோழ மண்டலமே 

                     (சோழ மண்டல சதகம் பாடல் 79)

சேக்கிழார் தொண்டைமண்டலத்தில் பிறந்தார் என்ற காரணத்தால் தொண்டை மண்டல சதகம் அவரைப் புகழ்ந்து 16ஆம் பாடலில் அவரைப் போற்றிப் புகழ்கிறது இப்படி:-

விண்ணிற் பிறக்கும் புகழ்க்குன்றநாடன் விளங்குதமிழ்ப்

பண்ணிற் பிறக்கும் பெரியபுராணம் பகர்ந்த பிரா

ளெண்ணிற் பிறக்கும் பததூளியென்றலை யெய்த வந்த

மண்ணிற் பிறக்கவும் வைக்குங் கொலோ தொண்டை மண்டலமே

                            (தொண்டைமண்டல சதகம் – பாடல் 16)

இப்படி சோழ மண்டல சதகம் மற்றும் தொண்டை மண்டல சதகம் ஆகிய இரு சதகங்களும் போற்றிப் புகழும் பெருமை கொண்டவர் சேக்கிழார்.

சேக்கிழாரின் இந்த நுண்ணறிவை மகாகவி கம்பனும் கூட தனது ஏர் எழுபது என்ற நூலில்

“மண்ணில் கடலில் மலையில் பெரிதென் என

எண்ணி எழுதிக் கொடுத்த ஏற்றக்கை” என்று கூறி சேக்கிழாரைப் பாராட்டுகிறான்.

மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் சேக்கிழார் பிள்ளைத் தமிழ் என்னும் அரிய நூலை சேக்கிழாரின் பெருமையைப் போற்றி இயற்றியுள்ளது குறிப்பிடத்தகுந்தது.

முதலாவதாக நாயன்மார்களின் சரிதத்தை உலகெலாம் என்று ஆரம்பித்து உலகெலாம் என்று முடித்து பெரியபுராணத்தை இயற்றி அருளிய சேக்கிழார் பெருமானுக்கு அதை இயற்ற வழி வகுத்துக் கொடுத்தவர் திருத்தொண்டத் தொகையை அருளிய சுந்தரரே. அதுமட்டுமல்ல, 4286 பாடல்களைக் கொண்ட அந்தப் புராணத்தின் காப்பியத் தலைவராக சுந்தரரையே சேக்கிழார் பிரான் சித்தரிக்கிறார். அவர் திருத்தொண்டத்தொகையில் சுந்தரர் கூறிய 60 நாயன்மார்களோடு அவரையும் அவரது தாயார் இசைஞானியார் தந்தையார் சடையனார் ஆகிய மூவரையும் சேர்த்து 63 நாயன்மார் கொண்ட சரித நூலாக அதைப் படைத்தார். ஆக மற்ற நாயன்மார்களுக்கு இல்லாத தனி நாயகச் சிறப்பு சுந்தரமூர்த்தி நாயனாருக்குக் கிடைத்துள்ளது.

  • தொடரும்
  •  

tags- சேக்கிழார்,  பிள்ளைத் தமிழ், பெரிய புராணம், உலகெலாம்

சேக்கிழார்! – 1 (Post No.10,315)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,315

Date uploaded in London – –   9 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 8-11-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.

எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். இந்த உரை மூ பகுதிகளாகத் தரப்படுகிறது.

சேக்கிழார்! – 1

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்!

    தமிழ்க் கவிஞர்களுள் தனிப் பெருமை வாய்ந்த மாபெரும் கவிஞராகத் திகழ்பவர் சேக்கிழார் பெருமான். பல கவிஞர்களும் இறைவனைப் பாடித் தொழுது பக்தி இலக்கியத்தை வளர்த்த நாளில் அடியார்க்கு அடியானாக தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே என்பதை உணர்ந்து 63 நாயன்மார்களின் வரலாறை அற்புதமாகச் செந்தமிழில் திருத்தொண்டர் புராணம் என்ற நூலைச் சுவை படப் பாடிப் படைத்துள்ளார் சேக்கிழார். திருத்தொண்டர் புராணம் என்று பெயரைக் கொண்டிருந்த போதும் பல்வேறு பெருமைகளைக் கொண்டதால் இது வழக்கில் பெரிய புராணம் என்றே வழங்கப்படலாயிற்று. அத்துணை பெருமை கொண்ட நூல் இது.

சான்றோருடைத்த தொண்டை நாட்டில் 12ஆம் நூற்றாண்டில் புலியூர்க் கோட்டம் பகுதியில் குன்றத்தூர் என்ற ஊரில் சைவ மரபில் தழைத்தூறிய வேளாண் பெருமக்கள் வாழ்ந்து வந்தனர். அத்தகைய ஒரு உயரிய குடும்பத்தில் வெள்ளியங்கிரி-அழகாம்பிகை தம்பதியினருக்கு மகனாய் அவதரித்தார் சேக்கிழார். இவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் அருண்மொழித்தேவர். ஆனால் குடிப்பெயரான சேக்கிழார் என்ற பெயரையே உலகம் போற்றி வழங்கலாயிற்று. இவருக்கு ஒரு தம்பி உண்டு. பெயர் பாலறாவாயர். குன்றத்தூர் சென்னையை அடுத்து உள்ளது.

கல்வி கேள்விகளில் இளம் வயதிலேயே சிறந்து விளங்கிய இவரின் பெருமை உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாயிற்று. இவரது தந்தையார் தொண்டை நாட்டு மன்னனிடம் பணி புரிந்து வந்தார்.

அந்நாளில் சோழ நாட்டை ஆண்டு வந்த மன்னன் மிகவும் புகழ் பெற்ற அநபாயன் என்பவன்.

ஒரு நாள் சோழ மன்னனான அநபாயன் என்னும் இரண்டாம் குலோத்துங்கனிடமிருந்து தொண்டை நாட்டு மன்னனுக்கு ஒரு ஓலை வந்தது. “கல்வி கேள்விகளில் மிக்கார் தொண்டைமண்டலத்தில் உள்ளோர் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். பூமியை விட, மலையை விட, கடலை விடப் பெரியது எது? விடை அறிய ஆவலாய் உள்ளோம்” என்ற அந்த ஓலையைப் பார்த்த மன்னன் தன் அவையில் உள்ள அறிவில் மிக்காரும், புலவர் பெருமக்களுமான அனைவர் முன்னிலையும் இதைப் படிக்கச் செய்தான். தக்க விடையை உடனே தருமாறு ஆணையிட்டான். கல்வி கேள்விகளில் சிறந்த சேக்கிழாரின் தந்தையார் மன்னனின் ஆணையை சிரமேற் கொண்டார். ஆனால் தக்க பதில் தான் அவருக்குத் தெரியவில்லை. வீடு சென்ற அவர் கவலையில் ஆழ்ந்தார். உண்ணவும் பிடிக்கவில்லை. இதைக் கண்ட அவரது புதல்வர் அருள்மொழித்தேவர் காரணத்தை வினவ மன்னனுக்கு வந்த ஓலை பற்றி அறிந்தார்.

“பூ, இவ்வளவு தானா! இதற்கு விடைகள் இதோ, என்று ஒலை நறுக்கில் பதிலை எழுதிக் கொடுத்தார்.”

அதைக் கண்ட தந்தையார் மனம் மிக மகிழ்ந்து அடுத்த நாள் அரசனிடம் அதைத் தந்தார்.       பதில் இது தான்:

காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது  (குறள் எண் 102)

பயன் தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

நன்மை கடலிற் பெரிது (குறள் எண் 103 )

நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்

மலையினும் மாணப் பெரிது (குறள் எண் 124)

உதவி செய்யப்பட்ட காலத்தை நினைத்துப் பார்த்தால், தப்பாமல் செய்யப்பட்ட அந்த உதவி சிறிது தான் எனினும் அது பூவுலகை விட மிகப் பெரியதாகும்.

எந்த விதப் பயனையும் எதிர்பார்க்காமல் ஒருவரால் செய்யப்பட்ட உதவியின் பெருமையினை சீர்தூக்கிப் பார்த்தால் அதன் நன்மை கடலை விட பெரியதாகும்.

எந்த ஒரு சூழ்நிலையிலும் கூட தன் நிலை மாறுபடாது அடங்கி இருப்பவனின் உயர்வானது  மலையின் உயர்ச்சியை விடப் பெரியதாகும்.

     தொண்டை மண்டல அரசன் இதை சோழனுக்கு அனுப்ப, இந்த விடையைக் கண்ணுற்ற அநபாய சோழன் பெரிதும் மகிழ்ச்சியுற்று இதைக் கூறிய பெருமகனை கௌரவிக்க பல்லக்கு வரிசையை அனுப்பினான்.

அருள் மொழித்தேவர் சோழனிடம் சென்றார். அவரது கல்வி கேள்வி மேன்மையைக் கண்ட சோழன் அவரைத் தனது அமைச்சராக நியமித்தான். சேக்கிழார் என்ற பெருமைக்குரிய பெயரால் சிறப்பிக்கப்பட்டு அப்படியே அவர் அழைக்கப்பட்டார். (சே- காளை; கிழார் – காளையை வாகனமாகக்கொண்ட சிவனின் பக்தர் – சேக்கிழார் என்பது குடிப்பெயரும் கூட). அவருக்கு உத்தம சோழப் பல்லவராயன் என்ற பட்டத்தை அநபாயன்  அளித்து கௌரவித்தான்.

சோழ நாட்டில் அமைந்திருக்கும் திருநாகேஸ்வரம் தலத்தின் பால் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் சேக்கிழார். சிவபிரான் மீது காதலாகிக் கசிந்து க்ண்ணீர் மல்கும் பக்தியும் சிவனடியார் மீது அடங்கா ஆர்வமும் மதிப்பும் மரியாதையும் பக்தியும் கொண்டவர் அவர்.

 ஒரு நாள் சமண சமய நூலான சீவக சிந்தாமணியை அரசவையில் விளக்கும்படி சோழன் ஆணையிட அந்த உரை ஆரம்பித்தது. அநபாயன் அதில் ஆழ்ந்து ஈடுபட்டு அதை ரசிக்கத் தொடங்கினான்.  சமண மதக் கொள்கையை விளக்கி சமணரால் செய்யப்பட்ட சிந்தாமணியை அருள்மொழிவர்மர் ரசிக்கவில்லை. அந்த நூல் படிக்க ஆரம்பித்தவுடன் அவர் எழுந்து செல்லலானார். இதைக் கண்ணுற்ற மன்னன் காரணத்தை வினவ இதை விட பெருமை மிக்க அடியார்கள் வாழ்ந்த பூமி இது என்று பதில் கூறினார் சேக்கிழார். அப்படியானால் அந்த அடியார்கள் சரித்திரத்தைக் கூறுங்கள் என்று மன்னன் கேட்க சேக்கிழாரும் அவர் தம் பெருமையை விளக்கிக் கூறினார். இதனால் வியப்புற்ற மன்னன் உலக மக்கள் அனைவரும் பயன் பெறும் வகையில் அதை நூலாக்குமாறு  வேண்டினான்.

               *                    தொடரும்

tags – சேக்கிழார்! – 1

மனத்தினுள் கறுப்பு வைத்துப் புகுந்தனன் முத்தநாதன் (Post. 10099)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,099

Date uploaded in London – 16 September   2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மனத்தினுள் கறுப்பு வைத்துப் புகுந்தனன் முத்தநாதன்!

ச.நாகராஜன்

அற்புதமான நாயன்மார்களின் வரலாற்றை அரும் சொற்களால் தமிழ்ப் பாக்களாகப் புனைந்தவர் சேக்கிழார். அதில் மெய்ப்பொருள் நாயனார் புராணம் தமிழகத்தின் இன்றைய அவல நிலையை விளக்குகிறது.

தொண்டை நாட்டுக்கும் சோழநாட்டுக்கும் நடுவில் உள்ள நடு நாட்டை ஆண்டு வந்தார் மெய்ப்பொருளார்.

எப்படி ஆண்டு வந்தார்?

“வேத நன்னெறியின் வாய்மை விளங்கிட மேன்மை பூண்டு

காதலால் ஈசர்க்கு அன்பர் கருந்தறிந்தே ஏவல் செய்வார்.”

வேத நெறி வழுவாமல் ஆகமங்கள் பால் பெரும் பற்றுக் கொண்டு சிவனடியார்களைப் போற்றி அவர்கள் இட்ட வேலைகளைச் செய்து திருக்கோவலூரைத் தலை நகராகக் கொண்டு அறம் பிறழாது ஆண்டு வந்தார் அவர்.

“மங்கையைப் பாகமாக வைத்தவர் மன்னுங் கோயில்

எங்கணும் பூசை நீடி ஏழிசைப் பாடலாடல்

பொங்கிய சிறப்பின் மல்கப் போற்றுதல் புரிந்து வாழ்வார்

தங்கள் நாயகருக் கன்பர் தாளலால் சார்பொன்றில்லார்”

உமையம்மையை தன் உடலில் ஒரு பாகமாகக் கொண்ட சிவபெருமானின் திருக்கோயில் அனைத்திலும் நாள் வழிபாடு, சிறப்பு வழிபாடு ஆகிய அனைத்தையும் குறைவின்றி அவர் நடத்தி வந்தார்.

மெய்ப்பொருளாரை வெல்லக் கருதிய பகைவன் ஒருவனால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை.

என்ன செய்தான் அவன்? நேருக்கு நேர் நின்று வெல்ல முடியாத அவன் அவரது கோயில் பற்றையும் சிவப் பற்றையும் ஆகம விதிகளின் மீது அவர் கொண்ட பக்தியையும் கண்டான்; சதித் திட்டம் தீட்டினான்.பின்னர் என்ன நடந்தது?

சேக்கிழார் அற்புதமாகக் கூறுகிறார் இப்படி:-

“மெய்யெலாம் நீறு பூசி வேணிகள் முடித்துக் கட்டிக்

கையினில் படைகரந்த புத்தகக் கவளி ஏந்தி

மைபொதி விளக்கே யென்ன மனத்தினுட் கறுப்பு வைத்துப்

பொய்த்தவ வேடங் கொண்டு புகுந்தனன் முத்த நாதன்”

அற்புதமாக விவரிக்கிறார் இப்படி சேக்கிழார் பெருமான்! வஞ்சகனான அவன் மனத்தினுள் கறுப்பு வைத்துப் புகுந்தனன். அவன் பெயர் முத்த நாதன்.

தத்தன் என்ற அரசனின் மெய்க்காவலனையும் சிவனடியார் என்ற பொய்வேடத்தால் தள்ளி விட்டு அரசனின் அந்தரங்கப் படுக்கை அறைக்குள் நுழைந்தான் அந்த கபட வேஷதாரி.

படுக்கையில் மன்றலங் குழல் மென் சாயல் மாதேவியான அரசியைக் கண்ட பின்னும் முத்தநாதன் வெளியே போகவில்லை.

அரசனும் எழுந்தான். அவனிடம் ஆகப் பெரிய பொய் ஒன்றைச் சொன்னான் முத்தநாதன். உலகில் வேறெங்குமே இல்லாத ஆகமம் என்னிடம் இருக்கிறது என்றான்.

ஆகமம் வழுவாது அறநெறியுடன் கோவில் பூஜைகளை நடத்தும் மெய்ப்பொருளார் மிகவும் மகிழ்ந்து அவனை தவிசின் மேல் – அதாவது மிகப்பெரிய ஆசனத்தில் – அமர்த்தி அருள் செய்க என்றார்.

அந்த நயவஞ்ககப் பாவி புத்தகத்தை எடுத்துத் திறப்பது போல அதன் உள்ளிருந்த வாளை எடுத்து மெய்ப்பொருளார் மீது தான் செய்ய நினைத்த வேலையைச் செய்து முடித்தான்.

அந்த நயவஞ்சக வேலையைக் கூட அருளாளர் சேக்கிழார் பிரானால் கூற முடியவில்லை. “தான் முன் நினைந்த அப்பரிசே செய்ய” என்கிறார்.

மன்னன் வீழ்ந்தான். நயவஞ்சக முத்தநாதனை ஒரு நொடிப்பொழுதில் புரிந்து கொண்ட தத்தன் ஓடி வர அவனை  மெய்ப்பொருளார் தடுக்கிறார்.”அவன் சிவ வேடம் பூண்டதால் அவனை ஒன்றும் செய்யாதே; அவனைப் பத்திரமாக வெளியே கொண்டு விடு” என்றார்.

அரச ஆணை! தத்தன் அப்படியே செய்தான்.

பொய்த்தவ வேடம் கொண்டு புகுந்த முத்தநாதன் தப்பித்தான் அரசனிடமிருந்து.

தெய்வத்திடமிருந்து அவன் தப்ப முடியுமா?

24 பாடல்களில் மெய்ப்பொருள் நாயனார் புராணத்தை வார்த்தை வார்த்தையாக அனுபவித்து பக்தியுடன் அனைவரும் படிக்க வேண்டும்.

இன்று கோவிலில் பொய்த்தவ வேடம் கொண்டு நுழைந்திருக்கும்,  இன்னும் புக நினைக்கும், முத்தநாதன்களை எளிதில் அடையாளம் காணலாம்.

தத்தனாக உள்ளே பாய்ந்து முத்தநாதன்களை மொத்தமாக மொத்தி அனுப்ப முயலலாம்.

கோவில்களையே கொள்ளையிடத் துடிக்கும் இந்த முத்தநாதன்களை மெய்ப்பொருளார் இன்று இருந்தால் மன்னிக்கவே மாட்டார் இல்லையா?

முத்தநாதன்களை இனம் காண வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம்!

சிலை திருட்டு, கோவில் நகைத் திருட்டு என்று இன்ன பிற கொள்ளைகளைச் செய்யும் திருடர்களை சிறந்த காவல்துறையான தமிழகக் காவல் துறையிடம் இனம் காட்ட வேண்டுவதும் நம் கடமை; அதே போல சிவ வேடம் தரித்து புதிய ஆகமம் இருப்பதாகக் கூறி உள்ளே வரும் முத்தநாதன்களையும் போலீஸிடம் தான் சொல்ல வேண்டும்!

பக்தர்கள் செய்வார்களா?

***

INDEX

சேக்கிழார் பெருமான், மெய்ப்பொருள் நாயனார் புராணம், ஆகமம் பால் மதிப்புக் கொண்ட அரசனை முத்தநாதன் பொய் வேடம் பூண்டு ஏமாற்றுதல், புதிய ஆகமம் இருப்பதாகக் கூறு கொலை செய்யல், ஆலயம் பாதுகாக்க சிலைத் திருட்டுக்காரர்களை போலீஸிடம் சொல்ல வேண்டும்.

முக்கியக் குறிப்பு:-பகுத்தறிவுகளுக்கு ஒரு வார்த்தை சொல்ல வேண்டும். மெய்ப்பொருள் நாயனாரும் பிராமணர் இல்லை; இச்சரிதத்தை அழகுத் தமிழில் சொல்லும் சேக்கிழார் பிரானும் பிராமணர் இல்லை! எதையும் தவறாகத் திசை திருப்பும் பல தமிழக ஊடகங்களுக்காகத் தான் இந்த குறிப்பு

EARLIER POST ON MEYPPORUL NAYANAR

பயங்கரவாதிகள் பற்றி வள்ளுவன், சேக்கிழார் (Post …

https://tamilandvedas.com › பயங்…

13 Dec 2018 — மெய்ப்பொருள் நாயனார் சரிதம் மிகவும் உருக்கமானது. … கொண்டிருந்ததால், அவர் பெயரே மெய்ப் பொருள் நாயனார் என்று ஆயிற்று.

–SUBHAM–

tags – மனத்தினுள் கறுப்பு, முத்தநாதன், சேக்கிழார் , மெய்ப்பொருள் நாயனார்

சேக்கிழாரின் சிறப்பு! தொண்டை மண்டல, சோழ மண்டல சதகம் (Post.9494)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9494

Date uploaded in London – –  –15 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

சோழ மண்டல சதகம், தொண்டை மண்டல சதகம்!

சேக்கிழாரின் சிறப்பு!

ச.நாகராஜன்

இறைவன் ஒரு நூலுக்கு அடி எடுத்துக் கொடுத்த ஒரு பெரும் சிவ பக்தர், ஒரு பெரும் தமிழ்ப் புலவர், ஒரு பெரும் அரசியல் அமைச்சர் சேக்கிழார்.தமிழ் செய்த தவப்பயனாய்த் தோன்றிய இவர் அவதரித்தது தொண்டை நாட்டில் புலியூர்க் கோட்டத்தில் குன்றத்தூர் என்ற

Tags- பெரிய,  புராணம், சேக்கிழார், உலகெலாம் , சதகம், திருத்தொண்டர்

‘ரொம்ப நாளாக எனக்கு ஒரு ஆசை’

‘ரொம்ப நாளாக எனக்கு ஒரு ஆசை’ (கற்பனைப் படைப்பு- ச.சுவாமிநாதன்)

புலவர்கள் மாநாட்டுக்கு வருகை தந்த அனைவருக்கும் வணக்கம். என் பெயர் நக்கீரன். ‘நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று சிவ பெருமானையே கண்டித்தவன் நான். ‘சங்கு அறுப்பது எங்கள் குலம், சங்கரனார்க்கு ஏது குலம்?’ என்று சிவனையே தட்டிக் கேட்டவன் நான். கவனமாக உண்மையை மட்டும் பேசுங்கள். இன்றைய தலைப்பு:

“ ரொம்ப நாளாக எனக்கு ஒரு ஆசை ”:

 

1.சேக்கிழார்: என் பெயர் சேக்கிழார். நான் முதலில் பேசிவிடுகிறேன். நான் எழுதிய பெரிய புராணத்திலிருந்து ஒரு சில வரிகள்:

அளவு கூட உரைப்பரிதாயினும்

அளவிலாசை துரப்ப அறைகுவேன்

Though impossible to reach its limits

Insatiable love(desire) drives me to the task

 

2.கம்பன்: என் பெயர் கம்பன். நான் எழுதிய ராமாயணத்தில் சேக்கிழார் அய்யா சொன்னதையே சொல்லி இருக்கிறேன்:

ஆசைபற்றி அறையலுற்றேன் மற்றிக்

காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ!

 

3.அப்பர் பெருமான் எழுந்தார். கருவில் இருந்தபோதே எனக்கு ஒரு ஆசை:

“கருவுற்ற நாள் முதலாக உன் பாதமே காண்பதற்கு

உருகிற்றென் உள்ளமும்…………………….”

 

4.என் பெயர் அருணகிரிநாதன். சுமார் 550 ஆண்டுகளுக்கு முன் திருவண்ணாமலையில் தறுதலைக் காலியாகத் திரிந்தேன். வாழ்க்கையே வெறுத்து தற்கொலை செய்ய கோபுரத்தில் இருந்து குதித்தபோது முருகன் அருள் பெற்று திருப்புகழ் பாடினேன். இதோ ஆசை பற்றி:

புலையனான மாவீனன் வினையிலேகு மாபாதன்

பொறை இலாத கோபீகனந்———- முழு மூடன்

புகழிலாத தாமீகன் அறிவிலாத காபோதி

பொறிகளோடி போய்வீழு————- மதி சூதன்

நிலையிலாத கோமாளி கொடையிலாத ஊதாரி

நெறியிலாத வேமாளி—————-  குலபாதன்

நினது தாளை நாடோறு மனதில் ஆசை வீடாமல்

நினயுமாறு நீமேவி—- யருள்வாயே

4444444

 

சீத தொங்கலழ காவணிந்து மணம்

வீச மங்கையர்கள் ஆட வெண்கரி

சீற கொம்பு குழல் ஊத தண்டிகயில் ——– அந்தமாகச்

சேர்கனம் பெரிய வாழ்வு கொண்டுழலும்

ஆசை வெந்திட உன் ஆசை மிஞ்சி சிவ

சேவை கண்டுனது பாத தொண்டன் என—— அன்புதாராய்.

5555555

 

5.என் பெயர் திருமூலர், ஆசையே துன்பத்துக்கு காரணம் என்று புத்தர் மட்டுமா சொன்னார். நானும்தான் பாடி இருக்கிறேன்:

‘ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்

ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்

ஆசைப்படப்பட ஆய்வரும் துன்பங்கள்

ஆசை விடவிட ஆனதம் ஆமே’ (திருமந்திரம் 2615)

 

6.என் பெயர் திருவள்ளுவர். இதே கருத்தை நான் இவருக்கும் முன்னரே சொல்லிவிட்டேன். ஆசை என்ற சம்ஸ்கிருத சொல்லுக்குப் பதிலாக பற்று என்ற தூய தமிழ் சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறேன்:

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு (திருக்குறள்)

 

7.என் பெயர் சுப்பிரமணிய பாரதி.இதோ பாருங்கள், நான் பாஞ்சாலி சபதத்துக்கு எழுதிய முன்னுரை: “ காரியம் மிகப் பெரிது; எனது திறமை சிறிது. ஆசையால் இதனை எழுதி வெளியிடுகின்றேன், பிறர்க்கு ஆதர்சமாக அன்று, வழிகாட்டியாக”.

இது மட்டுமா: நான் பாடிய

“ஆசை முகம் மறந்து போச்சே—இதை

ஆரிடம் சொல்வேனடி தோழி?

நேச மறக்கவில்லை நெஞ்சம்—எனில்

நினைவு முகம் மறக்கலாமோ?” என்ற பாடல் மிகவும் கீர்த்தி பெற்றுவிட்டது.

 

நன்று நன்று, வேறு யாராவது ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?

8.என் பெயர் கண்ணதாசன். நான் ஒரு கவிஞன். திரைப் படங்களுக்கும் பாடல் எழுதுபவன். என் கருத்தையும் சொல்லிவிடுகிறேன்:

ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே,
ஓடம் போலே ஆடிடுவொமே வாழ் நாளிலே
பருவம் என்னும் காற்றிலே, பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வர் , சுகம் பெறுவர் – அதிசயம் காண்பார்
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவர்?

English 
With passions as waves
we dance like the boat
in our passage of life
With the wind of youth,
by flying in the chariot of love,
man and woman make merry, enjoy
and surprise themselves
but who can guess tomorrow’s path
today itself?

 

நன்று நன்று. இன்னும் ஒருவர் பேசலாம். அத்தோடு கூட்டம் முடிவடையும்.

 

9.என் பெயர் வைரமுத்து. என் பாட்டுகளும் தமிழ் கூறு நல்லுலகத்தில் பிரசித்தம். இதோ சாம்பிளுக்கு ஒன்று:

சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை

முத்து முத்து ஆசை முடிந்துவிட ஆசை

வெண்ணிலவுதொட்டு முத்தமிட ஆசை

என்னையிந்த பூமி சுற்றிவர ஆசை.

 

இன்றைய கூட்டம் இத்தோடு நிறைவடைந்தது. அடுத்த வார தலைப்பு: “கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு”.

எல்லா புலவர்களும் பலத்த கரகோஷம் செய்தனர். கூட்டம் இனிதே முடிந்தது.

(முந்தைய கட்டுரை மன்னிக்க வேண்டுகிறேன். அதனையும் படித்து மகிழ்க)