9. ஒரு போதும் இதை நீ அவிழ்க்கக் கூடாது!

Metal_Buddha_Head__66092

by ச.நாகராஜன்

சோகோவை தன் அருகில் அழைத்த ரோஷி,”இதோ பார், குருவாக இருக்கப் பயிற்சி பெறும் ஒருவர் தனியாக இருத்தல் கூடாது. மக்களோடு மக்களாக இணைந்து அவர்களுடன் பழக வேண்டும்.ஒரு குருவிடம் சிஷ்யனாக இருப்பது சரி தான், ஆனால் இப்போது நீ ஒரு புத்த மடாலயத்தில் சேர்ந்து அனைவருடன் பழக வேண்டும்” என்றார்.

ஜென் குருவாக ஆக வேண்டுமானால் ஒரு புத்த மடாலயத்தில் சேர்வது இன்றியமையாதது. ஜென் மடாலயங்களிலேயே மிகவும் பெரியதான டைடோகுஜி மடாலயத்தில் சோகோ சேர வேண்டும் என்று முடிவானது. அது க்யோடோ என்னும் இடத்தில் இருந்தது. அது இருந்த இடம் சோகோ நடந்து சென்றால் ஒரு மணி நேரத்தில் அடையக் கூடிய தூரம் தான்!

ஒரு புத்த மடாலயத்திற்குக் கிளம்ப வேண்டுமென்றால் துறவி அணியும் ஆடை அடங்கிய புங்கோ என்ற பெட்டியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
உண்ணுவதற்கான கப்பரை, க்ஷவரம் செய்ய கத்தி, அதை தீட்டுவதற்கான சாணைக்கல், சூத்ரா புனித நூல்கள்,உள்ளாடைகள், மழைக்காலத்தில் அணியும் தொப்பி இத்யாதிகள் அடங்கிய இரண்டு மூட்டைகள் தோளிலிருந்து தொங்க பாரம்பரிய உடைகளை அணிந்து, சந்தனக் கட்டையால் ஆன காலணிகள், ஒரு தொப்பி ஆகியவற்றை அணிந்து நடந்து செல்வது துறவிகளின் வழக்கம்.

எல்லாவற்றையும் சோகோ சேகரித்தார். ரோஷி சோகோவின் அருகில் வந்து, “என்ன, எல்லாம் தயாரா.புங்கோ ரெடியா?” என்று கேட்டார்.
“இல்லை. அதைத் தான் தயார் செய்து கொண்டிருக்கிறேன்” என்றார் சோகோ.
“சரி,உன்னுடைய புங்கோ மூடியை என்னுடைய அறைக்குக் கொண்டு வா” என்று உத்தரவிட்டார் ரோஷி.

சோகோ புங்கோ மூடியை ரோஷியிடம் தந்த போது அதில் மூன்று ஆயிரம் யென் நோட்டுக்களை அதில் போட்டார் அவர். ஆயிரம் யென் என்பது அந்தக் காலத்தில் மிகவும் பெரிய தொகை!
”இது எதற்காகத் தெரியுமா?” ரோஷி கேட்டார்.

சோகோ அவரிடம் அடைக்கலம் ஆன சமயம் அவரிடம் தன்னிடம் அப்பா கொடுத்த பணம் கொஞ்சம் இருக்கிறது என்று சொல்லி இருந்தார். அதனால் இதுவரை கைச்செலவுக்கான பாக்கட் மணி அவருக்கு தரப்படவில்லை. ஆனால் இப்போதோ ஒரு மடாலயத்தில் சேரப் போகிறார். ஆகவே தான் அவர் இப்போது செலவுக்காக ரோஷி பணம் தருகிறார் என்று எண்ணினார் சோகோ. ஆனால் ரோஷி அடுத்தாற் போலச் சொன்ன சொற்கள் அவரைத் தூக்கிவாரிப் போட வைத்தது.

“இது உன் நிர்வாணப் பணம். உனது சவத்தை அடக்கம் செய்வதற்காக! நீ மடாலயத்தில் பயிற்சி பெறுவதற்காகச் செல்கிறாய். அதில் உன் உயிரையே கூட இழக்கக் கூடும்! பயிற்சி காலத்தில் ஒருவேளை வழியில் இருக்கும் சாக்கடையில் நீ இறக்க நேரிட்டால் உன்னிடம் இருக்கும் இந்தப் பணம் அடுத்தவருக்குத் தொந்தரவு தராமல் உன் சவத்தை அடக்கம் செய்ய உதவும்!” அவரது கூரிய பார்வை சோகோவின் உறுதியை அதிகரித்தது.

உலகப்போரின் போது சோகோவின் சகாக்கள் போர்க்களம் சென்ற போது சாவு என்றால் என்ன என்பதைப் பற்றி சோகோ நன்கு சிந்திப்பார். ஆனால் இப்போது ரோஷி, ‘இது உன் சவத்தை அடக்கம் செய்வதற்காக’ என்று கூறிய போது சாவு என்பது இப்போது ஒரு புதிய அர்த்தத்தை சோகோவிற்குத் தந்தது.

ivory 3

அது அவரது உடல் அடையும் மரணத்தைக் குறிக்கவில்லை “நான்” என்ற அகங்கார எண்ணத்தின் சாவையே ரோஷி குறிப்பிட்டிருந்தார்.
என்னதான் பேசினாலும், எவ்வளவு தான் பேசினாலும் “நான்”என்பது ஒவ்வொருவருக்கும் எவ்வளவு இனிமையான ஒரு விஷயம்! நம்மைச் சுற்றியுள்ள தளைகளைத் தீவிரப் பயிற்சியினால் அகற்றினாலன்றி நமது அறிவை மேகமூட்டம் சூழ்ந்து நமது உ::ள்ளார்ந்த தயை எனும் பண்பு அடைக்கப்படுகிறது.ஆகவே நான் என்ற அகங்காரத்தை அழிக்க வேண்டும்! சோகோ மனமார்ந்து உறுதி பூண்டார்.

இந்தக் காலத்தில் சோகோ தனது சிஷ்யர்களை ஒரு மடாலயத்திற்கு அனுப்பும் போது அவர்களின் சவங்களை அடக்கம் செய்வதற்காக பல ஆயிரம் யென்களைத் தர வேண்டியதாயிருக்கிறது. மறு நாள் அதிகாலை நேரத்தில் ரோஷியின் அறைக்குச் சோகோ சென்றார்.
“உங்கள் அனுமதியுடன் நான் விடைபெற்றுச் செல்கிறேன்” என்றார் பணிவுடன் சோகோ.

சமையலறைப் பக்கமாகச் சென்று அங்கிருந்த வாயிலின் வழியே அழுக்குப் படிந்த தரையை மிதித்தார் சோகோ. கற்றுக்குட்டியாகப் பயிற்சியில் இருப்பவர் முன் வாயில் வழியாகச் செல்ல எப்பொழுதுமே அனுமதி இல்லை!

தனது சந்தனக் காலணிகளை சோகோ எடுத்த போது ரோஷி தன் பின்னால் வந்திருப்பதை அறிந்து சோகோ திடுக்கிட்டார். ஒரு கற்றுக்குட்டியை வழியனுப்ப வருபவர் அல்ல அவர். அவரது உயரிய நிலை மிக மிக மேலானது.

ஆனால் அவரோ சோகோவின் முன்னால் வந்து கீழே அமர்ந்து சோகோவின் காலணிகளில் இருந்த கயிறுகளைக் கட்டலானார்.திகைத்துப் போன சோகோ,” வேண்டாம் வேண்டாம், நானே செய்து கொள்கிறேன்” என்று அலறிவாறே கால்களைப் பின்னால் இழுத்துக் கொண்டார்.

ஆனால் அவரோ,”வா, இந்தப் பக்கம்” என்று சோகோவை அழைத்துக் காலணிக் கயிறை நன்கு முடிச்சுப் போட்டு, “ஓரு போதும் இதை நீ அவிழ்க்கக் கூடாது” என்றார்.போய்ச் சேரப் போகும் மடாலயத்தின் வாயிலில் காலணிகளைக் கழற்றி வைக்க அந்த முடிச்சை அவிழ்த்துத் தான் ஆக வேண்டும். ரோஷி சொன்னதன் பொருள் அது அல்ல, ஆழ்ந்த அர்த்தத்தைக் கொண்ட ஒன்று. ஜென் துறவியாக வேண்டும் என்ற உறுதியை என்றுமே அவிழ்த்து விடாதே என்பதைக் பூடகமாக ரோஷி அப்படிச் சொன்னார்.
மனமெல்லாம் நிறைய, உறுதி கெட்டிப்பட ரோஷியைக் குனிந்து தலை வணங்கி அந்த புலர்காலை இருளில் சோகோ மெல்ல நடக்கலானார்.

சின்ன உண்மை
புத்த மதம் தோன்றிய தாயகமான பாரதத்தில் இன்று 772 புத்த தலங்கள் உள்ளன. பீஹாரில் 250, ஆந்திராவில் 200, ஒரிஸாவில் 100, மத்ய பிரதேசத்தில் 53, ஜம்மு-காஷ்மீரில் 30, மஹராஷ்டிரத்தில் 28, குஜராத்தில் 20, ஆகிய இவற்றோடு ஏனைய மாநிலங்களில் மீதமுள்ள 91 தலங்கள் உள்ளன.

-தொடரும்

8.ஆலயத்தை விட்டு வெளியே போ!

ivory buddha2

ஜென் பிரிவு பற்றி எஸ்.நாகராஜன் எழுதும் தொடரில் எட்டாவது பகுதி.

ச.நாகராஜன்

குரு-சிஷ்ய பரம்பரையில் சோகோ கடைசியாக இருந்தார். முதல் குரு இமாகிடோ கோஸென் (1816-1892) அடுத்தது ஷாகு சோயென் (1859-1919), அடுத்து டெட்சுவோ சோகாட்ஸு.(870-1954), அடுத்து கோடோ ஜுய்கன் (1879-1965), அடுத்து ஒடா செஸொ (1901-1966) அவருக்கு அடுத்தபடியாக கடைசியில் சோகோ.

இந்த வரிசையை இன்னும் தொடர்ந்து வரலாற்று ரீதியாக பார்த்துக் கொண்டே போனால் அது முதலாவதாக இருந்த சாக்யமுனி புத்தரில் முடியும்.சாக்யமுனி புத்தரின் போதனைகளின் பெயர் இங்கா. அது பிரபஞ்சம் முழுமைக்கும் பொதுவானது. இந்த இங்கா முத்திரையை குருவிடம் முறையாகப் பெற்றவர்களே உள்ளொளி பெற்றதற்கான அங்கீகாரத்தை குருவிடம் பெற்றவர்களாவர். ஜென் பிரிவில் ரின்டாய் உட்பிரிவில் இப்படிப்பட்ட அதிகாரபூர்வமான குருமார்களை ரோஷி என்று அழைப்பர்.

முதல்குருவாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள இமாகிடோ கோஸென் பிரம்மாண்டமான குரு. இவரது சிஷ்யராக மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஷாகு சோயென் தான் ஜப்பானிலிருந்து அமெரிக்காவிற்கு ஜென் புத்தமதப் பிரிவை அறிமுகப்படுத்திய பெரிய மாஸ்டர்.

ஒரு நாள் காலை மிஸ் ஒகோமோடோ ரோஷியிடம் வந்து அமர்ந்தார். “ரோஷி! குருவில் யார் பெரியவர் கோஸெனா அல்லது அவர் சிஷ்யர் ஷாகு சோயெனா?” என்று அவர் கேட்டார்.எப்போதுமே விஷயங்களை ஜோக் அடிக்காமல் தீவிரமாகப் பேசும் ரோஷி, “கோஸென் தான் பெரியவர்” என்று பதிலிறுத்தார். பிறகு மிஸ் ஒகோமோடோ,” ஷாகு சோயென் பெரியவரா அல்லது அவர் சிஷ்யர் சோகாட்ஸுவா?” என்று கேட்டார்.

”மாஸ்டர் சோயென் தான் பெரியவர்!” என்றார் ரோஷி.இதைக் கேட்ட மிஸ் ஒகோமோடோ,” நீங்கள் சொல்வதைப் பார்த்தால் குரு-சிஷ்ய பரம்பரையில் ஒவ்வொரு சிஷ்யரும் சற்று கீழான தரத்தைக் கொண்டிருப்பது போல இருக்கிறதே! அப்படியானால் இந்த பரம்பரை கொஞ்சம் கொஞ்சமாக பலம் இழந்து வருவது போல இருக்கிறதே!” என்றார்.

“சரி,இப்போது சொல்லுங்கள், உங்கள் குரு சோகாட்ஸு பெரியவரா அல்லது நீங்களா? என்று மெதுவாகக் கேட்டார் மிஸ் ஒகோமோடோ. மின்னல் போலப் பளீரென்று,” இருவரில் நான் தான் பெரியவன்” என்றார் ரோஷி. மிஸ் ஒகோமோடோவுக்கு இந்த பதிலைக் கேட்டு ஒரே சந்தோஷம்! உடனே மிஸ் ஒகோமோடோ மெதுவாக,” ரோஷி! இன்னும் ஒரு கேள்வி. நீங்கள் பெரியவரா அல்லது உங்களின் சிஷ்யரான செஸோ பெரியவரா?” என்று கேட்டார்.

அருகிலிருந்து இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த சோகோவுக்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை.வாய்விட்டு ஹா,ஹா என்று சிரித்தார். ரோஷியோ ஜென் உலகின் முடி சூடா மன்னராக பிரம்மாண்டமான நிலையில் குருவாக இருக்கிறார். ஆனால் செஸோவோ எந்த ஒரு அதிகார பதவியிலும் இல்லை. அவரைப் பெரிய மாஸ்டரான ரோஷியுடன் ஒப்பிடுவதா! சோகோவுக்கு சிரிப்பு தான் வந்தது. உண்மையில் உள்ளொளியின் அடிப்படையில் மனிதனைத் தரம் பிரிக்க வேண்டும் என்றே சோகோவுக்குத் தெரியவில்லை. சமூக அந்தஸ்தை வைத்தே மனிதனின் அந்தஸ்தை இனம் காண வேண்டும் என்று அவர் நினைத்துக் கொண்டிருந்தார். ஆகவே தான் அந்தச் சிரிப்பு!

ஆனால் ஒரு நொடி கூடத் தாமதிக்காமல், ”அது இன்னும் தெரியவில்லை!” என்று பதில்சொன்னார் ரோஷி! சோகோவின் சிரிப்பு இதைக் கேட்டுச் சட்டென அடங்கியது.அவர் கண்களில் வெள்ளமென கண்ணீர் பொங்கியது.எப்படிப்பட்ட அற்புதமான குருவைத் தான் கொண்டிருக்கிறோம்!” “அவன் இன்னும் பல பேர் மத்தியில் பேசவே அருகதை அற்றவன்” என்று அவர் சொல்வதற்கு எத்தனை விநாடிகள் வேண்டும்!

அந்த அற்புத மனிதர் தன் சிஷ்யர்களின் மேம்பாட்டிலேயே எப்போதும் கண்ணும் கருத்துமாக இருந்தார். இன்னும் ஒன்று,ஐந்து அல்லது பத்து வருடங்களில் தன் சிஷ்யன் தன்னை வென்று பெரியவனாகி விடுவான் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. ஆகவே தான், ”அது இன்னும் தெரியவில்லை” என்ற பதிலை அவர் அளித்தார்! அப்படிப்பட்ட பெரிய மகான் சோகோவுக்கு குருவாக வாய்த்திருந்தது எவ்வளவு பெரிய பாக்கியம்!

ivory buddha

பயிற்சிக் காலத்தில் ஒரு சமயம் சோகோ தப்பு ஒன்றைச் செய்து விட்டார். உடனே ரோஷி சம்பிரதாய வழக்கப்படி சோகோவை டைஷுயின் ஆலயத்திலிருந்து உடனடியாக வெளியே செல்லுமாறு “ஆலயத்தை விட்டு வெளியே போ” என்ற கட்டளையைப் பிறப்பித்தார். மனம் வருந்திய சோகோ சாஷ்டாங்கமாக அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட போதும் அவர் மனம் இரங்கவில்லை. கெஞ்சிக் கெஞ்சி முழு உடலையும் கீழே கிடத்தி சோகோ நமஸ்காரம் செய்து மன்னிப்புக் கேட்ட போதும், ‘முடியாது’, என்ற பதிலையே ரோஷி சொல்லிக் கொண்டிருந்தார்.

கடைசியில் தன் தலையை மட்டும் தூக்கி அழுது வீங்கி இருந்த கண்களுடன் ரோஷியைப் பார்த்தார் சோகோ!
அவரது தீவிரமான பார்வையைக் கண்ட சோகோவுக்கு தொண்டை அடைந்த்தது.

இதயத்தின் ஆழத்திலிருந்து வந்த குரலை எழுப்பி,” என்ன நடந்தாலும் சரி,நீங்கள் என்ன சொன்னாலும் சரி,எப்படி என்னை வெளியேற்ற நீங்கள் முயன்றாலும் சரி, நான் உங்களை விட்டுப் போக மாட்டேன்.போகவே மாட்டேன்.போகவே மாட்டேன்”என்றார் சோகோ.
அப்போது ரோஷியின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியெனப் பொங்கி அவர் கன்னம் வழியே வழிந்தது. அதைப் பார்த்த சோகோவின் மெய் சிலிர்த்தது. சோகோ எப்பொழுதுமே ரோஷியின் சிஷ்யர் தான்! அவருக்கும் தன் சிஷ்யன் எப்படிப்பட்டவன் என்பது புரிந்துவிட்டது.

சோகோவுக்கும் ரோஷிக்கும் இருந்த குரு-சிஷ்ய அன்புப் பிணைப்பு வலுவாக இருந்தது. ஜென் பிரிவில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இருக்கும் அன்புப் பிணைப்பின் இடையில் ஒரு சிறு மயிரிழை கூட நுழைய முடியாது. அப்படி ஒரு பிணைப்பு இருக்கும்!!
முந்நூறு பவுண்டு உள்ள இரண்டு மல்யுத்த வீர்ர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கட்டி உருண்டு புரண்டு அலாக்காகத் தூக்கி கீழே போடும் போது தாங்கள் சண்டையிடும் மல்யுத்த மேடை நிச்சயம் உடைந்து போகாது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தானே அவர்கள் சண்டை போடுகிறார்கள் அந்த அடிப்படையான நம்பிக்கை ஜென் பயிற்சிக்கு அவசியம்!

ஜென் பிரிவில் “நான்” என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும்.இந்த நான் என்ற எண்ணம் லேசில் அழியாது.’வெளியே போ’ என்ற அச்சுறுத்தல், திட்டல் இவற்றிற்கெல்லாம் பயந்தால் ஜென் பயிற்சி பூர்த்தி பெறாது!

ஒரு வருட காலம் ரோஷியின் கீழ் பயிற்சி பெற்ற சோகோவுக்கு ஒரு நாள் அந்தப் பயிற்சி முடிவுக்கு வந்தது.
ஒரு நாள் ரோஷி சோகோவை அன்புடன் தன் அருகில் அழைத்தார்.

சின்ன உண்மை
இன்று ஜப்பானில் ஜென் மடாலயங்கள் சுமார் 72 உள்ளன! சாதாரண சிறிய ஜென் ஆலயங்கள் சுமார் இருபதினாயிரம் உள்ளன. ஆனால் மடாலயங்களில் ஜென் குருமார்களுக்கான பயிற்சியில் இருப்போர் ஆயிரத்தை என்றுமே தாண்டியதில்லை!

-தொடரும்

5. உலகப் போரின் போது அனைத்தையும் இழந்த துறவி சோகோ!

Soko-Morinaga

by ச.நாகராஜன்

மோரினாகா சோகோ (1925-1995) ஜென் பிரிவைச் சேர்ந்த துறவி. அவர் புத்த மடாலயத்தில் சேர்வதற்கு எத்தனை பாடு பட வேண்டியிருந்தது என்பதை அவரே விளக்கி எழுதியுள்ளார். அதன் சுருக்கத்தைப் பார்க்கலாம்.

மோரினாகா சோகோ ஜப்பான் நாட்டில் ஓட்ஸு என்ற இடத்தில் 1925ஆம் ஆண்டு பிறந்தார். இரண்டாம் உலகப் போர் உச்ச கட்டத்தை எட்டியிருந்த தருணம்.டோயாமா உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார் சோகோ. பள்ளியில் படிக்கும் மாணவர்கள் போர் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்ற நிலை முதலில் இருந்தது. ஆனால் போர் உக்கிரமாக ஆக அனைவரும் போர் நடக்கும் முன்னணிப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது, அதற்கான அரசாங்க உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

விஞ்ஞானப் படிப்பு அல்லாத கலை,பொருளாதாரப் பாடங்களைப் படிப்போர் ராணுவத்தில் சேர வேண்டும் என்று உத்தரவு தெரிவித்தது. விஞ்ஞானம் படிக்கும் மாணவர்கள் எதிர்காலத்தில் மருத்துவம் மற்றும் இதர அறிவியல் துறைகளில் போருக்கு உதவக்கூடிய தேவையான அனைத்தையும் செய்யக்கூடும் என்பதால் அவர்களை போர்க்களத்திற்கு நேரடியாக அனுப்ப அரசாங்கம் முன்வரவில்லை.

எல்லோரும் ஒரு நாள் இறக்க வேண்டியவர்களே. இன்றோ இருபது வருடங்கள் கழித்தோ, ஒரு நாள் இறந்து தானே ஆக வேண்டும். சோகோவும் தனது உத்தரவை எதிர்பார்த்தவாறு காத்திருந்தார்.அவரது நண்பர்களோ விமானங்களில் ஏறி திரும்பி வர முடியாத ஒரு வழிப் பயணத்தை ஏற்றுக் கொண்டு பயணிக்கலாயினர். வெகு காலமாக மேலை நாடுகள் ஜப்பானைச் சுரண்டி வருவதாக ஜப்பானில் அனைவரும் நம்பி வந்தனர். ஆகவே அந்தச் சுரண்டலிலிருந்து விடுதலை வேண்டி மாபெரும் போர் தொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அவர்கள் நம்பினர்.

விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. சோகோவின் நண்பர்களில் பலர் கொல்லப்பட்டனர். ஒரு வழியாக யுத்தம் கோரமான அணுகுண்டால் ஒரு முடிவுக்கு வந்தது.இப்போது ஜப்பானிய மக்கள் அவர்கள் தேவையற்ற தீங்கு பயக்கும் கோரமான ஒரு போரில் அனாவசியமாக ஈடுபடுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டனர். நல்ல வேளையாக இந்த கோரத்தின் மரணப்பிடியிலிருந்து சோகோ தப்பித்து உயிரோடு இருந்தார்.அவரிடம் ஒரு சிறிய ரேடியோ இருந்தது. அதில் ஜெர்மனியைச் சேர்ந்தவர்களைப்பற்றிய போர்க் குற்ற விசாரணைகள் ஒலி பரப்பப்பட்டன. அதை அவர் கேட்டவண்ணம் இருந்தார். விசாரணையின் முடிவில் வழக்கமாக வரும் வார்த்தைகள் -“…. ஆகவே அவர் தூக்கிலிடப்பட வேண்டும்” என்பது தான்!

Novice to Master_1

அமெரிக்க நியூஸ் ரீல்கள் ஆங்காங்கே காண்பிக்கப்பட்டன.ஜெர்மானிய தளபதிகள் பொது மக்கள் கூடும் சதுக்கத்தில் பகிரங்கமாக தூக்கில் இடப்படும் காட்சிகள் காண்பிக்கப்பட்டன.இத்தாலிய சர்வாதிகாரியான முஸோலினியையும் அவர் காதலியையும் கழுத்தில் ஒரு கயிறால் கட்டி தெருத் தெருவாக மக்கள் இழுத்துச் செல்வதையும் ஆங்காங்கே குழுமி இருந்த மக்கள் கல்லால் அவர்களை அடித்தவாறு இருப்பதையும் சோகோ பார்த்தார்.

ஒரு வழியாக மாணவர்கள் ஒவ்வொருவராகப் பள்ளிக்குத் திரும்பினர்.ஆனால் சோகோவுக்கு ஒன்று மட்டும் புரியாத புதிராக இருந்தது. நன்மை எது தீமை எது அவற்றை எப்படி இனம்காண்பது என்பது தான் அவருக்குள் பிறந்த கேள்வி! மாணவர்கள் ஒருவருக்கொருவர் இதைப் பற்றியே விவாதித்துக்கொண்டிருந்தனர். போரின் முடிவில் ஜப்பானியரின் அறநெறிப் பண்புகள் மிகவும் தாழ்ந்திருந்தன.

போர் முடிவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பு சோகோ ஒரே அடியில் தனது தாயையும் தந்தையும் இழந்தார். ஏற்கனவே அவர் தந்தை நோய்வாய்ப்பட்டிருந்தார். இதில் அவர் தன் மனைவியை – சோகோவின் தாயை- இழக்கவே அதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சோகோவின் தாய் இறந்த மறுநாள் காலை அவர் கோமாவில் மயங்கி உணர்வற்று இருந்தார்.அப்படியே இறந்தும் போனார். இந்த நேரம் பார்த்துத் தான் சோகோவிற்கு போரில் உடனே சேருமாறு அரசாங்க ஆணை வந்திருந்தது. இரண்டு நாட்களில் சேர வேண்டும்! அதற்குள்ளாக தாயாருக்கும் தந்தைக்கும் உரிய அடக்க காரியங்களை அவர் கவனித்தாக வேண்டும்.

பரம்பரை பரம்பரையாக சோகோவின் குடும்பம் நிலங்களைக் கொண்டிருந்த குடும்பம். அந்த நிலங்களை விவசாயிகளுக்குக் குத்தகைக்கு விட்டிருந்தனர். சோகோவின் அப்பா அடிக்கடி சோகோவிடம் கூறுவது இது தான்:” நிலத்தைப் போல நிலையான சொத்து எதுவும் இல்லை. தீ அதை எரிக்காது. வெள்ளம் அதை அழிக்காது. திருடர்கள் அதைத் திருட முடியாது. ஆகவே நீ என்ன செய்தாலும் சரி, நிலத்தை மட்டும் விற்கவே விற்காதே!”

ஆனால் போர் முடிந்தவுடன் வந்த நிலச்சீர்திருத்தத் திட்டங்களினால் குடும்பத்தின் நிலம் முழுவதும் பறி போனது. உள்ளங்கையளவு நிலம் கூட மீதி இருக்கவில்லை. எது எப்போதும் சாசுவதமாக இருக்கும் என்று சோகோ நம்பினாரோ அது மாயையாகப் போனது.

morinaga book

போரின் பிறகு ஏற்பட்ட புனருத்தாரணக் கொள்கைகளின் படி வங்கிகளும் அதிரடிக் கொள்கை மாற்றத்திற்கு உள்ளாயின. தனது குழந்தைகளைப் பாதுகாக்க அவரது தந்தையார் எடுத்திருந்த இன்ஷூரன்ஸ் மூலம் ஒரு யென் கூட அவருக்குக் கிடைக்கவில்லை! ஆனால் இந்தச் சீர்திருத்த நடவடிக்கைகளினால் வாழ்க்கைத் தரம் ஒன்றும் உயரவில்லை. விலைவாசி ஏறிக் கொண்டே போனது.இன்று ஒரு யென்னுக்குக் கிடைக்கும் ஒரு பொருள் மறு நாள் பத்து யென்னுக்குத் தான் கிடைக்கும்.அதற்குச் சில நாட்களுக்குப் பின் அது நூறு யென் ஆகி விடும்!. சோகோவோ மாணவர். இரண்டு கைகள் இருக்கின்றன ஆனால் எப்படிப் பிழைப்பது? நல்லவேளை கிரிமினல்களுடன் சேர்ந்து கொள்ளை அடிக்கும் தொழிலில் அவர் ஈடுபடவில்லை. பள்ளிப்படிப்பு முடிந்தது. ஆனால் மேலே படிக்க சோகோவுக்கு மனமில்லை.

யோசித்துப் பார்த்தார். வாழ்க்கையில் என்ன செய்வதென்று அவருக்குத் தெரியவில்லை. வெறும் புத்தகப் படிப்பு. கொள்கைகள் பற்றிய வெற்று அறிவு! தன் மீதான சுயக் கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை!
விதியின் விசித்திரமான வழிகள் தான் இருக்கின்றனவே! ஒரு நாள் விசித்திரமான சூழ்நிலையில் பல ஜென் ஆலயங்களுக்கு அவர் செல்ல ஆரம்பித்தார்.

சின்ன உண்மை
ஜென் பிரிவு ஏழாம் நூற்றாண்டில் ஜப்பானில் பரவியது. ஜென் குருமார்கள் 16ஆம் நூற்றாண்டில் ராஜ தந்திரிகளாகவும் ராஜாங்க தூதுவர்களாகவும் பணியாற்றினர்.

தொடரும்