Date: 17 FEBRUARY 2018
Time uploaded in London- 6-23 am
WRITTEN by S NAGARAJAN
Post No. 4754
PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
ஸ்ரீ ஜோஸியம் பிப்ரவரி 2018 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
ஸ்ரீ ராமரின் ஜோதிட அறிவு
ச.நாகராஜன்
ஹிந்து வாழ்க்கை முறையில் ஜோதிடம் எவ்வளவு பழமையானது என்பதைச் சுட்டிக் காட்ட வால்மீகி ராமாயணம் ஒரு சரியான சான்று. ஆதி காவியம் என்று அறிஞர்களால் புகழப்படும் உலகின் முதல் காவியமும் பெரும் காவியமுமான ராமாயணத்தில் வால்மீகி முனிவர் ஜோதிடக் குறிப்புகளைத் தவறாமல் முக்கியமான இடங்களில் சொல்லிக் கொண்டே போகிறார்.
சில முக்கியக் குறிப்புகளை மட்டும் இங்கு பார்ப்போம்.
ராமரின் ஜோதிட, ஹோரா அறிவு
முதலில் ராமர் ஒரு காரியத்தைத் தொடங்கும் முன்னர் நல்ல நேரத்தைத் தானே பார்த்துத் தொடங்குபவர் என்பதற்கு அவர் சீதையை நோக்கி இலங்கை செல்லப் புறப்பட நிர்ணயித்த தினமே ஒரு சான்று.
ஹனுமார் இலங்கையை நோக்கிச் செல்ல ராமரே ஒரு நல்ல வேளையைக் குறிப்பிட வேண்டும் என்று வேண்டிக் கொள்ள ராமர் கூறுவது:
“இப்போதே நல்ல வேளையாக இருக்கிறது. சூரியன் வானத்தின் நடுவில் வந்து விட்டார். இந்த விஜய முகூர்த்தமே சிலாக்கியமானது. இன்று உத்தர பல்குனி (உத்தரம்) நட்சத்திரம். நாளை ஹஸ்தம். (அது எனது நட்சத்திரமான புனர்வசுவிற்கு ஏழாம் நட்சத்திரமாக ஆவதால் சுபமில்லை. அதாவது ஜன்ம நட்சத்திரத்திற்கு வத தாரை; உத்தர நட்சத்திரம் சாதக தாராபலம்) என்று இவ்வாறு ராமர் சுக்ரீவனிடம் கூறுகிறார்.
பகலில் உள்ள 30 நாழிகைகளில் 20 நாழிகைக்கு மேல் 22 நாழிகை முடிய உள்ள நேரம் விஜய முகூர்த்தம் எனப்படும். வெற்றி பெறுவதற்கான சரியான வேளை அது என்று ராமர் நிர்ணயிக்கிறார்.
ஆக இப்படி ஜோதிடத்தின் துணை கொண்டு நல்ல வேளை நிர்ணயித்த ராமர் வெற்றி பெற்றதில் வியப்பேதும் இல்லை.
ராமரின் ஜாதகம்
அடுத்து ராமரின் ஜனனம் முதல் பட்டாபிஷேகம் வரை வால்மீகி முனிவர் தரும் ஜோதிடத் தகவல்கள் பிரமிக்க வைப்பவை.
ராமர் சித்திரை மாதம் நவமி திதி, புனர்வசு நட்சத்திரத்தில் அவதரிக்கிறார். சந்திரன், சூரியன்,குரு, சுக்ரன்,செவ்வாய், சனி ஆகிய ஐந்து கிரகங்கள் உச்சத்தில் இருக்க சந்திரனுடன் குரு சேர்ந்திருக்கும் போது கடக லக்னத்தில் அவர் அவதரிப்பைதை பால காண்டம் சித்தரிக்கிறது.
பட்டாபிஷேக நாள்
ராவணனை வதம் செய்து அயோத்தி திரும்பிய ராமர் சுக்ல ஸப்தமி, புஷ்ய (பூசம்) நட்சத்திரத்தில் வசிஷ்டரால் சீதையுடன் ரத்ன சிம்மாசனத்தில் அமர வைக்கப்பட்டு பட்டாபிஷேகம் நடக்கிறது.
ராமர் காட்டிற்கு கிளம்பியது புஷ்ய நட்சத்திரத்திலேயே. ஆக பதினான்கு வருடங்கள் முடிந்து அவர் மீண்டும் அயோத்திக்கு வருகிறார். அவர் சைத்ர (சித்திரை மாதம்) சுக்ல பக்ஷத்தில் கிளம்பியவர். பால்குன (பங்குனி மாதம்) கிருஷ்ண பட்சம் முடிந்த போதே வருடக் கணக்கில் 14 வருடங்கள் பூர்த்தியாகி விட்டன.
ஆகவே புஷ்பக விமானத்தில் ஏறிச் சென்றவர் பாரத்வாஜ ரிஷியின் உத்தரவின் பேரில் அவர் ஆசிரமத்தில் ஒரு இரவு கழிக்கிறார்.,முன்னதாக ஹனுமாரை அனுப்பித் தான் வரும் செய்தியை பரதனுக்குத் தெரிவிக்க உத்தரவிடுகிறார்.
பிறகென்ன! அயோத்தி மாநகரமே குதூகலத்துடன் தயாராகிறது.
சகுன சாஸ்திரம்
இங்கு நாம் பார்த்தவை ஒரு சில குறிப்புகளை மட்டும் தான்!
ராமாயணத்தை முழுவதுமாக ஜோதிட ரீதியில் படிக்க ஆரம்பித்தால் ஜோதிட சாஸ்திரம், சகுன சாஸ்திரம், ஹோரா சாஸ்திரம் ஆகியவை பற்றிய பல முக்கிய குறிப்புகளைப் பெறலாம். (சீதை பெற்ற சுப சகுனங்களை வால்மீகி ராமாயணம், சுந்தர காண்டம் 29ஆம் அத்தியாயம் விவரிக்கிறது.)
வேதாங்கங்களின், ஆறு அங்கங்களில் ஒன்றான ஜோதிடத்தின் பெருமை ஆதி காலத்திலிருந்தே ஹிந்துத்வ வாழ்க்கை முறையில் இருந்து வந்திருக்கிறது என்பதை அறிந்து மகிழலாம்!
***
குறிப்பு: வால்மீகி ராமாயணத்தில் வரும் விரிவான ஜோதிடக் குறிப்புகள் பலவற்றை ஸ்ரீ ஞானானந்த பாரதி ஸ்வாமிகள் எழுதிய 432 பக்கங்கள் உள்ள ஸ்ரீ வால்மீகி ஹ்ருதயம் என்ற நூலில் காணலாம்.
–Subham–