ஜோதிட மேதை பாஸ்கராசார்யர்

Picture: Postage Stamps issued by Hong Kong

ச.நாகராஜன் 

கலைகளின் தலைநகரம் உஜ்ஜயினி 

ஜோதிடம், வானவியல் மற்றும் கணிதம் ஆகிய கலைகளுக்கு தாயகமாகவும் தலைநகரகமாகவும் திகழ்ந்த உஜ்ஜயினிக்கு மேலும் புகழ் சேர்த்த ஒரு பெரிய ஜோதிடமேதை பாஸ்கராசார்யர். இவரது காலம் 1114 முதல் 1185 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பீஜப்பூரில் (விஜயபுரம் என்னும் ஊரில்) அந்தணர் குலத்தில் அவதரித்தவர்.இவரது தந்தையார் மஹேஸ்வரர் ஒரு பெரிய ஜோதிட மேதை. உஜ்ஜயினியில் இவர் வாழ்ந்த காலம் முழுவதும் ஜோதிடம் வானவியல் கணிதம் ஆகிய கலைகளுக்குத் தன்னை அர்ப்பணித்து பிரமிக்க வைக்கும் கண்டுபிடிப்புகளைக் கண்டு உலகினரை வியக்க வைத்தார்.

சித்தாந்த சிரோமணி என்ற இவரது நூல் உலகப் பிரசித்தி பெற்றது. கோள அத்யாயம் மற்றும் க்ரஹகணிதம் ஆகிய இரு பாகங்களைக் கொண்டுள்ள இதில் பூமி சூரியனைச் சுற்றி வரும் காலத்தை 9 தசமஸ்தான சுத்தமாக, 365.258756484 என்று கண்டுபிடித்துள்ளது பிரமிக்க வைக்கும் ஒரு கண்டுபிடிப்பு.

 

லீலாவதியின் கதை

இவர் எழுதிய லீலாவதி என்ற நூலைப் பற்றிய சோகமான நிகழ்வு ஒன்று உண்டு! இந்த நூலை பின்னால் 1587ம் ஆண்டில் பாரசீக மொழியில் மொழி பெயர்த்த பைஜி என்பவர் இந்தக் கதையை விரிவாக எழுதியுள்ளார்.

லீலாவதி பாஸ்கராசார்யரின் அன்புக்கு உகந்த புத்திரி.அவள் ஜாதகத்தை கணித்த பாஸ்கராசார்யர் திடுக்கிட்டார். அவளுக்கு ஒரு குறிப்பிட்ட முகூர்த்தத்தில் கல்யாணம் நடந்தால் மட்டுமே அவளால் தீர்க்க சுமங்கலியாக வாழ்க்கை நடத்த முடியுமே தவிர அது தவறி விட்டால் அவள் வாழ்க்கை சிறக்க வாய்ப்பே இல்லை என்பதை அவர் ஜாதக மூலம் கண்டார்.

உரிய காலத்தில் திருமணத்தை நிச்சயித்த பாஸ்கராசார்யர் குறிப்பிட்ட முகூர்த்தம் தவறி விடக் கூடாதே என்ற எண்ணத்தில் ஒரு புதிய சாதனத்தை அமைத்தார்.ஒரு சிறிய கோப்பையில் துவாரம் ஒன்றைச் செய்து அதை ஒரு பெரிய பாத்திரத்தில் மிதக்க விட்டார்.சரியான முகூர்த்த நேரத்தில் அந்த கோப்பை பெரிய பாத்திர நீரில் மூழ்கி விடும். அந்த நேரத்தில் திருமணத்தை நடத்தி விடலாம் என்பது அவரது எண்ணம். எல்லாம் சரியான படி அமைக்கப்பட்டது.

ஆனால் திருமண நாளன்று (ஆறு வயதே ஆன) லீலாவதி அந்த கோப்பையில் என்ன இருக்கிறது என்று ஆவல் மீதூற  பார்க்கக் குனிந்த போது அவள் அணிந்திருந்த முத்து மாலையில் இருந்த ஒரு சிறிய முத்து நழுவி அவளை அறியாமல் அந்த கோப்பையில் விழுந்தது. அது சரியாக  கோப்பையிலிருந்த துவாரத்தை அடைத்து விட்டது. நேரம் சென்று கொண்டே இருந்ததைக் கவனித்த பாஸ்கராசார்யர் ஏன் கோப்பை மூழ்கவில்லை என்று ஆராயப் போனார். துவாரத்தை ஒரு சிறிய முத்து அடைத்திருந்ததையும் அதனால் நல்ல நேரம் கடந்து விட்டதையும் அறிந்து விசனித்தார். திருமணம் செய்து கொண்ட லீலாவதி சிறிது காலத்தில் கணவனை இழந்து விதவையானாள். அவளுக்கு ஆறுதல் தரும் விதத்தில் அவள் பெயரில் லீலாவதி என்ற புகழ் பெற்ற நூலை அவர் தனது 30வது வயதில் எழுதினார்!

லீலாவதி நூலின் புகழ்

லீலாவதி ஒரு அபூர்வமான நூல் இதில் 13 அத்தியாயங்களில் கணிதம் ஜியோமிதி சூத்திரங்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் அடங்கி உள்ளன.டிபரன்ஷியல் கால்குலஸ், ட்ரிக்னாமெட்ரி உள்ளிட்ட கணிதத் துறைகளில் அவரது கண்டுபிடிப்புகள் மேலை நாட்டினரை வியக்க வைக்கின்றன. லீலாவதியைப் படிப்பவர்களுக்கு சந்தோஷமும், உற்சாகமும் அதிகரித்துக் கொண்டே போகும் என்று பாஸ்கராசார்யரே கூறி இருப்பது உண்மை என்பதை இந்த நூலைக் கற்பவர்களுக்கு நன்கு புரியும். பொது மக்கள்  லீலாவதியைப் பற்றி, “லீலாவதியை நன்கு கற்றவர்கள் ஒரு மரத்தில் எத்தனை இலைகள் இருக்கிறது என்று நிச்சயமாகக்  கூறி விடுவர்” என்று கூறி அதைப் புகழ்ந்தனர்.

லீலாவதியைத் தவிர பீஜ கணிதம்,சித்தாந்த சிரோமணி, வசனபாஷ்யம்,கரணகுதூகலம்,ப்ரஹ்மதுல்யா ஆகிய நூல்களையும் இவர் எழுதியுள்ளார். பாஸ்கராசார்யர் தனக்கு முன் வாழ்ந்த வானவியல் நிபுணரான பிரம்மகுப்தரின் கண்டுபிடிப்புகளை மேம்படுத்தினார். இவரது மகனான லோக்சமுத்ரரும் ஒரு பிரபல ஜோதிடராகத் திகழ்ந்தார்.லோக்சமுத்ரரின் மகன் பாஸ்கராசார்யரின் நூல்களைக் கற்பிக்க 1207ம் ஆண்டில் ஒரு பள்ளியை ஆரம்பித்தார்.

ஜோதிட சாஸ்திரத்தில் கிரக சஞ்சாரங்கள் மிக முக்கியமானவை. அவை குறிப்பிட்ட நாளில் எந்த இடத்தில் இருக்கின்றன என்பதைப் பொறுத்தே பலன்களைக் கூற முடியும். இந்த வகையில் கிரகங்களின் இருப்பிடத்தைத் துல்லியமாகக் கணிக்கும் விதத்தைத் தன் நூல்களில் பாஸ்கராசார்யர் விளக்கியுள்ளார் என்பதே இவரது தனிச் சிறப்பு.

 

மயிலின் உச்சி எனத் திகழும் மாமேதை

 இந்திய கோவில் ஒன்றில் உள்ள மத்தியகால கல்வெட்டு பாஸ்கராசார்யரைப் பற்றிக் கூறுவது  அவரைப் பற்றிய சரியான கணிப்பாக அமைகிறது. அது இது தான்:                            ‘‘அறிஞர்களாலும் மேதைகளாலும் மதிக்கப்படும் அபூர்வ திறமைகள் கொண்ட ஒப்பற்ற பாஸ்கராசார்யருக்கு வெற்றி! புகழ் கொண்டு ஆன்மீகத்தில் சிகரம் ஏறிய அந்தக் கவிஞர் மயிலின்  உச்சி போலத் திகழ்கிறார்! ‘’

 

**********************

அதிசய ஜோதிட மேதை வராஹமிஹிரர் – (1)

அதிசய ஜோதிட மேதை வராஹமிஹிரர் – (1) by ச.நாகராஜன்

 

Picture: Sun Dial at Ujjain Observatory

This is part of S Nagarajan’s Series on Ancient Astrologers of India. Please read his earlier posts on Astronomers, Astrologers,Stars and Astrology.

 

காலம் பிறக்கும் நகரமான உஜ்ஜயினியின் ரகசியம்

 

புகழோங்கிய பண்டைய பாரதத்தில் அபூர்வ நகரமாக விளங்கியது உஜ்ஜயினி. இந்த நகரைப் பற்றிய ஏராளமான அதிசயக்கத்தக்க உண்மைகள் உள்ளன. காலம் பிறப்பது இங்கே தான் என்பது முதல் ரகசியம். சூரிய பாதையில் தீர்க்கரேகை செல்லும் ஒரு முக்கிய கேந்திரமாகத் திகழ்கிறது உஜ்ஜயினி. இந்த முக்கிய கேந்திரத்தின் முக்கிய புள்ளியைக் கண்டு பிடித்த நம் முன்னோர்  சரியாக அந்தப் புள்ளியில் மகா காலேஸ்வரரின்  லிங்கத்தை ஸ்தாபித்தனர். ஸ்ரீ லங்காவிலிருந்து புராணம் விவரிக்கும் மேருவிற்கு செல்லும் தீர்க்க ரேகை உஜ்ஜயினியை ஊடுருவிச் செல்கிறது.ஹிந்து வானவியல் நிபுணர்களின் க்ரீன்விச் உஜ்ஜயினி நகரம் தான்! கலைகள் அனைத்தையும் கற்பிக்கும் கலை பூமியாகத் திகழ்ந்த இந்த நகரத்தில் தான் உஜ்ஜயினி மஹாகாளியின் அருள் பெற்ற விக்கிரமாதித்தன் அரசோச்சி வந்தான்.இங்கே உள்ள வானவியல் கட்டிடங்கள், மஹாகாலேஸ்வரர் ஆலயம், நவகிரஹ ஆலயம் முதலிய இடங்களை விளக்கத் தனி நூல் தான் எழுதப்படவேண்டும்!

ஏழு மோட்சபுரிகளுள் ஒன்று

 

‘அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா புரீ த்வாராவதீசைவ சப்தைதா: மோக்ஷதாயிகா’ என்ற சுலோக கூற்றின் படி அவந்தி ஏழு மோட்சம் தரும் இடங்களில் ஒன்று என்பது அடுத்த ரகசியம். 12 ஜோதிர்லிங்கங்களில் முக்கியமான லிங்கம் அவந்தியிலேயே அமைந்துள்ளது. இதன் தலை நகரமான உஜ்ஜயினி கிறிஸ்து பிறப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பேயே அனைவரையும் தன் பக்கம் ஈர்த்த புண்ணிய பூமி!  இந்த அபூர்வ பூமியின் வரலாறில் புதைந்துள்ள இன்னொரு ரகசியம் தான் அதிசய ஜோதிட மேதை வராஹமிஹிரரின் வரலாறு!உஜ்ஜயினியில் தான் வராஹமிஹிரர் வளர்ந்தார்;வாழ்ந்தார்; அந்த நகருக்கு ஒரு புதிய அந்தஸ்தையும் தன் ஜோதிட ஆற்றலினால் தந்தார்!

Picture: Ancient Ujjain Observatory

வராஹமிஹிரர் என்ற பெயர் வரக் காரணம்

     வராஹமிஹிரர் என்ற பெயர் அவருக்கு வந்ததற்கு காரணமே ஒரு சுவாரஸ்யமான ஜோதிட நிகழ்வு தான்! உஜ்ஜயினியில் ஆதித்ய தாஸர் என்ற அந்தணருக்கு மகனாகப் பிறந்தவர் வராஹமிஹிரர். சூரியனை நன்கு வழிபட்டு வந்த தந்தையிடமிருந்து ஜோதிடத்தை நன்கு கற்றுணர்ந்தார் அவர்.

விக்கிரமாதித்தன் அரசவையில் நவரத்தினங்களாக பெரும் அறிஞர்கள் ஜொலித்தனர். அந்த நவரத்தினங்களுள் ஒருவர் வராஹமிஹிரர். ஒரு சமயம் மன்னனுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அரசன் வராஹமிஹிரரை அழைத்து ராஜகுமாரனின் ஜாதகத்தைக் கணித்துப் பலன்களைக் கூறுமாறு வேண்டினான்.மிக கவனமாக ஜாதகத்தைக் கணித்து அந்த ஜாதகத்திற்குரிய பலனை வராஹமிஹிரர் சிந்தித்து உணர்ந்தார்.மன்னனை நோக்கிய அவர், “அரசே! இந்த ராஜகுமாரனுக்கு  அற்ப ஆயுளே உள்ளது. இவனது பதினெட்டாம் ஆண்டில் இவனுக்கு ஒரு பன்றியால் மரணம் ஏற்படும். அதை யாராலும் தடுக்க முடியாது” என்று வருத்தத்துடன் கூறி அவன் இறக்கவிருக்கும் நாள் மற்றும் மாலை நேரத்தில் எந்த மணியில் அது சம்பவிக்கும் என்பதையும் குறிப்பிட்டுக் கூறினார்.

 

அரசன் திடுக்கிட்டான். தனது அருமை மந்திரி பட்டியை அழைத்து ஆலோசித்தான். பட்டியின் ஆலோசனையின் பேரில் ராஜகுமாரனுக்காக 80 அடி மதில் சுவர் உள்ள ஒரு பிரத்யேகமான அரண்மனை கட்டப்பட்டது. அதைச் சுற்றி ஆயிரக்கணக்கான வீரர்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டனர். பன்றி என்ற மிருகமே தொலை தூரத்திற்கும் இல்லாதபடி பன்றிகள் அழிக்கப்பட்டன. ராஜகுமாரனுக்கு அனைத்துப் பயிற்சிகளும் அரண்மனைக்குள்ளேயே அளிக்கப்பட்டதால் அவனுக்கு வெளியில் செல்ல வாய்ப்பே இல்லை ஆண்டுகள் உருண்டோடின. மன்னன் ராஜகுமாரனின் பதினெட்டாம் ஆண்டில் வராஹமிஹிரர் குறிப்பிட்ட மாதத்தில் குறிப்பிட்ட நாளில் அவரை அழைத்தான். “கடந்த ஆண்டுகளில் நான் செய்த காவல் திட்டத்தைக் கவனித்திருப்பீர்கள். இப்போது சொல்லுங்கள். என் பையனுக்கு ஒன்றும் நேராது அல்லவா?” வராஹமிஹிரர் வருத்தத்துடன். “அரசே! விதியை யாராலும் வெல்ல முடியாது. இன்று மாலை ராஜகுமாரனுக்கு பன்றியின் மூலம் மரணம் நிச்சயம் “ என்று கூறினார்.

 

மன்னன் உடனே தன் மெய்காவலர்களை அழைத்து ஒவ்வொரு மணி நேரமும் ராஜகுமாரனின் நிலை பற்றி எனக்கு அறிவியுங்கள்” என்று ஆணையிட்டான். மாலையும் கடந்தது. கடைசியாக மன்னனுக்கு வந்த செய்தியின் படி அவன் தனது அறையில் மற்ற சகாக்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். மன்னன் வராஹமிஹிரரை அழைத்து. “உங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளுங்கள்” என்றான். வராஹமிஹிரரோ துக்கத்துடன் ராஜகுமாரன் இறந்து சிறிது நேரம் ஆகி விட்டது. வாருங்கள். அவன் அரண்மனைக்குப் போகலாம்” என மன்னனை துரிதப் படுத்தினார். கலங்கிய மன்னன் அரண்மனைக்கு விரைந்தான். அங்கே ராஜகுமாரனின் அறையில் அவனைக் காணோம்.

 

அனைவரும் பரபரப்புடன் தேடினர். கடைசியில் அரண்மனையின் ஏழாவது  மாடியில் ரத்த வெள்ளத்தில் ராஜ குமாரன் இறந்து கிடந்ததைப் பார்த்து மன்னன் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். நடந்தது இது தான்: நெடுநேரம் தன் அறையில் இருந்த ராஜகுமாரன் விதி ஆணையிட்ட அந்த சமயத்தில் மேல்மாடிக்குச் சென்றிருக்கிறான். அரண்மனை கோபுரத்தின் உச்சியில் ராஜ இலச்சினையான பன்றி இலச்சினை  கொடிக்கம்பத்தில் இணைக்கப்பட்டிருந்தது. அங்கு  அது வரை கண்டிராத பலத்த காற்று வீசவே அது  ஆடி ராஜகுமாரன் மீது விழவே அதனால் வெட்டுண்டு ராஜகுமாரன் மரணமடைந்தான்.

 

எண்பது வயது வாழ்ந்த ஜோதிட மேதை

வராஹத்தின் மூலம் அதாவது பன்றியின் மூலம் மரணம் வருவதைச் சொன்ன இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் வராஹமிஹிரர் என அழைக்கப்படலானார்! அவர் வாழ்ந்த 80 ஆண்டுகளும் உலகினரால் அவர் பெரிதும் மதிக்கப்பட்டார்.

 

வராஹமிஹிரர் ஜோதிடக் கலையை தனது கூரிய அறிவின் மூலமாக ஒரு உன்னதமான ஸ்தானத்தில் ஏற்றி வைத்தார்.அவர் இயற்றிய பல நூல்கள் இன்றும் ஆச்சரியத்தை விளைவிக்கும் அபூர்வ நூல்களாக இலங்குகின்றன. நவீன விஞ்ஞானிகளே மலைக்கும் அவரது கணித அறிவும், வானியல் அறிவும் பிரமிக்க வைப்பவை! இத்தோடு ஜோதிட அறிவையும் . உலகியல் அறிவையும் மனித குலம் மீது அவருக்குள்ள பரந்துபட்ட மனிதாபிமானத்தையும்  அவரது நூல்கள் மூலம் காண முடியும்.

 

-வராஹமிஹிரர் வரலாறு தொடரும்