Picture of sand storm in Sudan
லண்டன் சுவாமிநாதன்
முனிவர்களோ புலவரோ சீறினால் சாம்ராஜ்யங்கள் சரிந்துவிடும். நகரங்கள் தீக்கிரையாகும். வெள்ளத்தில் தீயோர் அடித்துச் செல்லப்படுவர். திருவள்ளுவரும் இதைத்தெளிவாகவே கூறுகிறார் (894, 898, 899). பெரியாரைப் பகைப்பது எமதர்ம ராஜனை, “வாடா சண்டைக்கு என்று கை தட்டிக் கூப்பிடுவதற்குச் சமம்”– என்று அழகாக உவமிக்கிறார்.
ஒரு முனிவரின் கோபத்தால் உறையூர் அழிந்தது. ஒரு புலவர் கோபத்தால் திருமலைராயன் பட்டிணம் அழிந்தது. இதற்கு முன் நான் எழுதிய கட்டுரைகளில் ஆண்டாள், சம்பந்தர், வள்ளலார், திருப்பாண் ஆழ்வார், நந்தனார் முதலிய பல இந்து சாது, சன்யாசிகள் ஜோதியில் மாயமாய் மறைந்தது எப்படி? என்று விவரித்தேன். உளம் கடந்த செயல்கள் துறை விஞ்ஞானமும் இது முடியும் என்று ஒப்புக்கொள்கிறது. கண்ணகி மதுரையை அழித்ததையும், ஆதி சங்கரரும் பட்டினத்தடிகளும் அற்புதமாக அன்னையரின் சிதைக்குத் தீ மூட்டியதையும், தான்சேன் தீயை உண்டாக்கும் ராகத்தைப் பாடியதையும், முத்துசுவாமி தீட்சிதர் மழையை உண்டாக்கும் ராகத்தைப் பாடியதையும் தனித் தனி கட்டுரைகளில் எழுதிவிட்டேன்.
Picture of a sand storm in Australia
இதோ மணல் புயல் உண்டாக்கிய இரண்டு சம்பவங்கள்:
உறையூர் என்பது தற்கால திருச்சியின் பகுதி. 2000 ஆண்டுகளுக்கு முன் கரிகாலன் முதலிய சக்தி வாய்ந்த சோழ மன்னர்களின் தலைநகரம். அங்கிருந்த நீதி மன்றத்தால் ‘அறம் துஞ்சும் உறந்தை’ எனப் புகழ் பெற்றது. கரிகால வளவனைப் பின் பற்றி பிரிட்டிஷ் நீதிபதிகள் இன்றும் வெள்ளை முடி அணிந்து தீர்ப்புக் கூறுவதை ஏற்கனவே கட்டுரையாக எழுதிவிட்டேன். இந்த உறையூர் பற்றி சிலப்பதிகாரமும் சங்கத் தமிழ் நூல்களும் வேறு ஒரு அதிசயத் தகவலையும் தருகின்றன.
ஒரு சோழ மன்னன் யானையில் வருகையில் பட்டத்து யானையை ஒரு சேவற் கோழி யானையின் கண்களில் கொத்தி அதை அடித்து விரட்டியதையும் அதனால் இந்த ஊருக்கு கோழியூர் என்று பெயர் ஏற்பட்டதையும் அவை எடுத்துக் காட்டுகின்றன. அதன் பின்னர் அந்த வீர மண்ணில் ஒரு நகரம் உதயமாகி சோழ சாம்ராஜ்யத்தின் தலை நகர் என்னும் சிறப்பை அடைந்தது.
இப்படிப் புகழ் வாய்ந்த உறையூரில் பராந்தகன் என்னும் சோழன் ஆளுகையில் சாரமா முனிவர் என்பவர் ஒரு நந்தவனத்தை உருவாக்கி சிவபெருமானுக்காக செவ்வந்தி மலர்ச் செடிககளை வளர்த்து வந்தார். மிக அழகான அந்த செவ்வந்தி மலர்களை ஒரு ராஜாங்க ஊழியன் திருடிக் கொண்டுபோய் அரசனுக்குத் தந்தான். அவனும் அதை விரும்பவே இந்தத் திருட்டு, வாடிக்கையாக நடக்கத் துவங்கியது.
திருட்டுப் பொருள் என்று தெரிந்துமே அரசன் இப்படி வாங்கியது முனிவருக்குப் பெருங்கோபத்தை உண்டாகியது. பெரியார் சீறினால் சிறியார் பிழைப்பரோ? பெரும் மணல் புயல் உண்டாகி உறையூரை மணலுக்குள் மன்னனோடு புதைத்தது என்பது செவி வழிக் கதையாகும்.
Picture of a sand storm in Texas,USA
தற்காலத்தில் உறையூரில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டபோதும் இந்த சம்பவத்துக்கான தெளிவான சான்று கிடைத்ததாகத் தெரியவில்லை. ‘பராந்தகன்’ என்ற சம்ஸ்கிருத விருதைப் பல மன்னர்களும் சூடி இருப்பதால் எந்த பராந்தகன் என்பதும் தெரியவில்லை. எது எப்படியாகிலும் தீ இல்லாமல் புகையுமா? ஒரு காரணம் இருப்பதால்தானே இந்தக் கதைகள் இன்றுவரை உலவுகின்றன.
காளமேகம் அழித்த பட்டினம்
கவி காளமேகத்தை அறியாதோர் இல்லை. சிலேடைக் கவி சக்ரவர்த்தி; ஆசு கவி மன்னன். மழை போல் கவி பொழிபவன்; ஒரு முறை திருமலைராயன் பட்டினம் சென்றபோது அரசவையில் கவிபாடினார். பொறாமை கொண்ட ஆஸ்தான கவிஞர்கள் பல தடைகளை எழுப்பவே இவர் அத்தனைக்கும் விடை பகன்றார். ஆயினும் மன்னர் ஓரச் சார்பாக நடந்துகொண்டு தனது அவைக்கள புலவர்களே வென்றதாகக் கூறினான். அவமானம் தாளாத ஆசுகவி காளமேகம் அறம் பாடினார்.
வடமொழியில் மந்திரங்கள் உள்ளது போலவே தமிழிலும் ‘அறம் பாடுதல்’ என்ற வழக்கம் உண்டு. உள்ளத்தால் பொய்யாது ஒழுகும் உத்தம புலவர்களுக்கும் சாது சன்யாசிகளுக்கும் இந்த அபூர்வ சக்தி கிடைக்கும். அவர்கள் கரு நாக்கில் விழுந்தவர்கள் பிழைக்க முடியாது. கருப்பு நிற ராஜ நாகத்தைவிடக் கொடியது அவர்களின் சொல்லாற்றல்.
காளமேகம் பாடி முடித்தவுடன் மணல் புயல் வீசி ஊரையே அழித்தது!
இதோ அவர் பாடிய பாடல்கள்:
“செய்யாத செய்த திருமலை ராயன் வரையில்
அய்யா அரனே அரை நொடியில்—வெய்ய தழற்
கண்மாரியால் மதனைக் கட்டழித்தாற் போற்றீயோர்
மண்மாரியால் அழியவாட்டு”
“கோளர் இருக்குமூர் கோள்கரவு கற்ற ஊர்
களைகளாய் நின்று கதறும் ஊர்— நாளையே
விண்மாரியற்று வெளுத்து மிகக் கறுத்து
மண்மாரி பெய்கவிந்த வான்”
Picture os a sand storm in Arizona, USA
காளமேகம் ஆகட்டும், கண்ணகி ஆகட்டும் தீயோரை மட்டுமே அழிக்கும்படி பாடியது குறிப்பிடத்தக்கது. சாபங்களும் வரங்களும் என்ற எனது ஆங்கிலக் கட்டுரையிலும் பெரியோர்கள் மரணம் பற்றிய உண்மைகள் என்ற தமிழ்க் கட்டுரையிலும் மேலும் பல அதிசய விசயங்களை எழுதியுள்ளேன்.
கல்மாரி, மண்மாரி கதைகள் இன்னும் பல உள்ளன. மீண்டும் எழுதுவேன். எகிப்திய பாரோவுக்கு எதிராக மோசஸ் செய்த அற்புதங்கள் பைபிளின் பழைய ஏற்பாட்டில் உள்ளன. அற்புதங்கள் என்பவை எல்லா மதங்களுக்கும் பொதுவானவை.
contact swami_48@yahoo.com