Prime Minister Modi in Japan trying to play on drums
கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1386; தேதி நவம்பர் 3, 2014.
((கட்டுரையின் மற்றொரு பகுதியில் ரிக் வேதத்தில் வரும் அதிசய வாத்தியம் ‘’பூமி துந்துபி’’, ரிக்வேத கால ‘’ஆர்க்கெஸ்ட்ரா’’, தமிழில் உள்ள ‘’ஆடம்பரம்’’ என்னும் சொல்லின் பொருள், பல ஆங்கிலச் சொற்களின் தோற்றம் ஆகியவற்றைக் கூறுவேன்.))
தமிழில் முரசு, பணை, முழவு, பறை பற்றிய பல சுவையான செய்திகள் இருக்கின்றன. முதலில் 2000 ஆண்டுப் பழமையான சங்க இலக்கியச் செய்திகளைக் காண்போம்.
1.அரசனுக்குப் பத்து அடையாளச் சின்னங்கள் உண்டு. அதில் ஒன்று முரசு. சங்கத் தமிழ் நூல்களில் முரசுடை மூவேந்தர் என்று சேர சோழ பாண்டியர் பாராட்டப்படுவர். மாணிக்கவாசகப் பெருமான் சிவபெருமானை அரசனாக வைத்துப் பாடிய திருத் தசாங்கத்திலும் பாரதியார், பாரத மாதாவை ராணியாக வைத்துப் பாடிய திருத் தசாங்கத்திலும் முரசு பற்றிய பாடல்களைக் காணலாம் (தச + அங்கம் = தசாங்கம்)
இன்பான் மொழிக் கிள்ளாய் எங்கள் பெருந்துறைக்கோன்
முன்பான் முழங்கு முரசு இயம்பாய் — அன்பாற்
பிறவிப் பகை கலங்கப் பேரின்பத் தோங்கும்
பருமிக்க நாதப் பறை (திருத் தசாங்கம், திருவாசகம்)
2.கோட்டை வாயில் கொத்தளங்களில் முரசுகள் வைக்கப்படிருந்தன. கம்ப ராமாயண பால காண்ட, திரு அவதாரப்படலத்தில் கம்பனும் அயோத்தி மாநகர கோட்டையின் மேல் முரசுகள் முழங்கியதைப் பாடினன்.
3.முரசுகள் மூவகைப்படும்: கொடை முரசு, படை முரசு, மண முரசு என்னும் மூவகை முரங்களும் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டிருக்கு மாகலின் முரசு முழங்கு நெடுநகர் எனப்பட்டது என்று பதிற்றுப்பத்து பாடலுக்கு (2-7) உரை எழுதிய மி.பொன். இராமநாதன் செட்டியார் கூறுவர்.
4.போரில் முழக்கப்படும் வெற்றி முரசினைத் தெய்வமாகவே கருதி வீரர்கள் வழிபட்டதை சங்க இலக்கிய நூல்களில் பரக்கக் காணலாம். வீரர்கள் தாம் பெற்ற வெற்றி மகிழ்ச்சியில் ஆடிக் கொண்டே சென்று முரசை வழிபாட்டனர் என்று பதிற்றுப்பத்து (2-17-5/10) கூறும்
5.முரசில் உறையும் தெய்வத்துக்கு மாமிசம், ரத்தம், சோறு கலந்த பிண்டம் பலியாகத் தரப்பட்டது. இது பற்றி பதிற்றுப்பத்து (3- வரி30/39) உரையில் செட்டியார் அவர்கள் கூறுவதாவது:- தன் படை வீரர்கட்கு கடிய சினம் தோன்றுமாறு பேரொலியுடன் உச்சரிக்கப்படும் மந்திரத்தால் அரிய வெற்றியினைத் தரும் மரபுடைய முரசுறைக் கடவுளை வணங்கும் பொருட்டு, அக்கடவுளை வழிபடுவோன் பெறுதற்கரிய பிண்டத்தினைத் தன்கையில் ஏந்தி நின்றான். அப்பிண்டத்தைக் கண்டு கொடிய கண்களையுடைய பேய்ப் பெண் கைபுடைத்து நடுங்கினாள். அப் பிண்டம் போன்றே இரத்தம் கலந்த, நிறைந்த கள்ளினையுடைய பெரிய பலியினை எறும்பும் மொய்க்காது. பருந்தும் காக்கையும் மட்டுமே உண்ணும்.
Nagara drum, Rajasthan
6.முரசு வைக்கப்படும் கட்டில் புனிதமானது. மோசிகீரனார் என்ற சங்கப் புலவர் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்ற சேர அரசனைப் பாடி பரிசில் பெற வந்தார். வந்த களைப்பில் முரசுக் கட்டிலில் படுத்து உறங்கிவிடார். இந்தக் குற்றத்துக்கு மரண தண்டனை கிடைத்திருக்கும். ஆயினும் புலவரின் நிலைமை கண்ட மன்னன் அவருக்கு கவரி வீசி மேலும் நன்றாகத் தூங்க உதவினான். வறுமை கண்டு மனம் இறங்கி அவருக்குப் பரிசு கொடுத்தான் என்று சங்க இலக்கியம் (புறம்.50) மூலம் அறிகிறோம்.
7. முரசுக்குப் போர்த்தும் தோல் வீரம் மிகுந்த காளை மாட்டின் தோலாக இருக்க வேண்டும் என்பது தமிழர் கொள்கை புலியைக் கொன்ற காளை மாட்டின் தோலை வைத்து முரசு தயாரிப்பர். புனை மருபு அழுந்தக் குத்திப் புலியொடு பொழுது வென்ற கனை குரல் உருமுச் சீற்றக் கதழ் விடை (காளை) உரிவை (தோல்) போர்த்த துனை குரன் முரசத் தானை (படை) – என்று சிந்தாமணிச் செய்யுள் கூறும்.
8.இனி ஆ.சிங்காரவேலு முதலியார் அபிதான சிந்தாமணி எனப்படும் தமிழ் என்சைக்ளோபீடியாவில் (கலைக்களஞ்சியம்) சொல்லும் சுவையான செய்திகளைக் காண்போம்: வீர முரசு, நியாய முரசு, தியாக முரசு என்று முரசு, மூன்று வகைப்படும். இதனை ‘’இமிழ் குரல் முரசு மூன்றுடனாளும் தமிழ் கெழு கூடல்’’ என்பதால் அறிக. இதனுள் வீர முரசினை நீராட்டிக் கடலேற்றி ஒலி நெடும் பீலியும், ஒண் பொறி மணித்தாரும் (மயில் தோகை + மாலை ), பொலங் குழை உழிஞையும் பொலியச் சூட்டி ( உழிஞைப் பூ) குருதிப் பலியீந்து (ரத்தம் கலந்த சோறு) பூசித்தல் பண்டைய வழக்கு (புறநானூறு பாடல் 50).
9. புறப் பொருள் வெண்பா மாலையில் முரசவாகை என்னும் துறை — பலியைப் பெறும் முரசு பற்றிக் கூறும் துறை என்றும் —பொன்னால் செய்த உழிஞை அணிந்து ஆடு வெட்டி பலி கொடுக்கும் முரசின் தன்மையைக் கூறும் துறை முரச உழிஞை என்றும் சொல்லப்பட்டுள்ளது.
.
வள்ளுவர் யார்:–
10.வள்ளுவர் யார்:– திருக்குறளை யாத்து உலகப் புகழ்பெற்ற — தமிழுக்கு உலகப் புகழ் பெற்றுத் தந்த — வள்ளுவர், பறை அறிவிக்கும் ஜாதியைச் சேர்ந்தவர் என்று பழைய நூல்கள் பகரும். இது பற்றி சிங்கார வேலு முதலியார் (அபிதான சிந்தாமணி) கூறுவதாவது: பழங்குடியினரில் பாணரை அடுத்து திராவிடரால் மதிக்கப்படவர் இவ்வகுப்பினர். இவர் அரசர் பால் கருமத் தலைவராயும், யானை மேலிருந்து முரசு அறைந்து அரசாணை சாற்றுவோராயும் (அதாவது அரசரின் உத்தரவுகளை யானை மீது ஏறிச் சென்று அறிவிப்போர்) விளங்கினர். இக்குடியினர் இன்றும் உளர்.
இவர் பறையில் சற்று உயர்ந்தவர். இவர்கள் பறையர்களுக்குப் புரோகிதர்கள்— இவர்கள் பிராமணர்கள் புரோகிதர் ஆகாமுன் பல்லவ அரசர்களுக்குப் புரோகிதம் செய்திருந்தவர்கள். இவர்களில் சிலர் புரோகிதம் செய்தும் சோசியம் சொல்லியும் வாழ்கிறார்கள். இவர்களிர் சிலர் தாசிரியராகவும் பூணூல் தரிப்பவராகவும் இருப்பர். இவர்களில் லிங்கதாரிகளும் உண்டு. இவர்களில் இரண்டு பிரிவுகள்: -அறுபது கக்ஷி, நாற்பது கக்ஷி. முதல் கூறியவன் நந்திக்குருக்களின் சந்ததியான்; மற்றவன் சிதம்பர சாயுச்சிய ஐயங்கார் வகையினன்; திருப்பணாழ்வார் குலம் என்பர். இவர்கள் திருவள்ளுவரைத் தங்களினத்தவர் என்பர் (தர்ஸ்டன்)
(அதாவது தர்ஸ்டன் என்பவர் ஜாதிகள் பற்றிச் சேகரித்து ஆங்கிலத்தில் ஏராளமான தொகுதிகளாக வெளியீட்டதில் இருந்து முதலியார் மொழி பெயர்த்தது)
Valluvar from English book
11.தோல் இசைக் கருவிகள் என்ற தலைப்பில் தமிழ்ச் சொற்றொடர் அகராதி (வீ ஜெ செல்வராசு) தரும் தகவல்:–
முழவு:- குளிர், குடமுழா, முழவம், முழா
முழவு:– பேரிகை, படகம், இடக்கை, மத்தளம், தேசி, சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பரை, தமருகம், தண்ணுமை, தவில், தடாரி, அந்தரி, முழவொடு, சந்திர வளையம்,மொந்தை, முரசு, கண்விடு தூம்பு, நிசாலம், துடுமை, சிறுபறை, அடக்கம், ஆசில், தகுணிச்சம், விரலேறு, பாகம், தொக்க உபாங்கி, துடி, பெரும்பறை,
முழவுக்கான மரங்கள்:- கருங்காலி, செங்காலி, வேம்பு, பலா, கஞ்சம், குரவம், மண்; முழவுக்கான தோல்: இளம் பசுவின் வயிற்றுத் தோல்.
தமிழ்க் கள்ளர் தாக்குதல்கள்
12. ஆப்பிரிக்க நாடுகளில் டமாரம் மூலம் செய்திப் பரிவர்த்தனை செய்வர். — பழங்குடி மக்கள் முரசு ஒலி மூலமே பேசிக்கொள்வர். இது போன்ற செய்தி, இரண்டு சங்கப் பாடல்களிலும் வருகிறது. பாலைவனம் வழியாக அல்லது காடு வழியாக வணிகர்கள் செல்வர். கொள்ளையர் தாக்குவர் என்பதாலும், ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும் என்பதாலும் வண்டிகளில் தொடர்ச்சியாகச் செல்லுவர். இவர்களை மரம் அல்லது குன்று உச்சியில் இருந்து உளவு பார்க்கும் கள்ளர்கள் தண்ணுமை என்னும் பறையை முழக்கிக்கொண்டு வந்து தாக்குவர். இது பற்றி குறுந்தொகை (390) அகநானூறு (63) ஆகிய பாடல்களில் கருவூர்க் கண்ணம்புல்லனாரும், உறையூர் முதுகொற்றனும் சில செய்திகளைத் தருவர்:–
காதலனும் காதலியும் பாலைவனம் வழியே போவதைக் கண்ட பெரியோர், “சூரியன் மறைந்து விட்டான், பொழுது சாய்ந்துவிட்டது, ஆறலைக் கள்வரின் தண்ணுமை ஒலி கேட்கத் துவங்கும். போகாதீர்கள்”.
ஒரு தாய் தன் மகளிடம் கூறுகிறாள்:
Bangalore Temple drum operated by machine
காதலனுடன் அவள் போய்விட்டாள் என்பதற்கு நான் வருந்தவில்லை. களவுத் தொழிலை உடைய எயின மறவர் இசைக்கும் தண்ணுமை ஒலி கேட்டு இவள் பயப்படுவாளே என்றுதான் வருந்துகிறேன்.
இது பழைய தமிழகத்தின் நிலையைப் படம்பிடித்துக் காட்டும். இரவுநேரத்தில் வறண்ட பாலை வழியாகச் செல்வோரை கள்ளர்கள் பறை ஒலி எழுப்பிக் கொண்டு வந்து தாக்குவர். அவர்கள் ஒலி கொடுப்பது மற்றவர்களை நடுங்கச் செய்யவும், தனது கூட்டத்தினருக்கு செய்தி கொடுக்கவும் என்று சொல்லலாம்.
Pictures are taken from other websites;thanks.
You must be logged in to post a comment.