நரகக் காட்சிகள்
Written by London swaminathan
Date: 22 FEBRUARY 2017
Time uploaded in London:- 9-02 am
Post No. 3659
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
புறநானூற்றில் பாபம்
ஆன்முலை அறுத்த அறனிலோர்க்கும்
மாண் இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும்
பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்கும்
வழுவாய் மருங்கில் கழுவாயும் உள என
நிலம் புடை பெயர்வது ஆயினும், ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என
அறம் பாடின்றே — ஆயிழை கணவ!
—புறநானூறு 34, ஆலத்துர்ர் கிழார் பாடியது
இது வால்மீகி சொன்ன விஷயம் (4-34-12); தமிழில் ஆலத்தூர் கிழார் தந்துள்ளார்.
இதன் பொருள்:
ஆராய்ந்து எடுத்த அணிகளை அணிந்த மஹாராணியின் கணவனான சோழன் ((குளமுற்றத்துத் துஞ்சிய)) கிள்ளிவளவனே!
பசுவில் பாலைப் பெறாதபடி அதைக் கொன்று தின்பது பாவம்;
பெண்கணிளின் கருவை அழித்தல் பாவம்;
அந்தணர்களுக்குத் தீங்கு செய்வது பாவம்;
இதற்கெல்லாம் கூட பரிகாரம் உண்டு; நீ தப்பிக்கலாம்;
ஆனால் பெரிய பூகம்பமே ஏற்பட்டு உன் சோழ நாடே அழிந்தாலும்
ஒருவன் செய்த உதவியை மறந்து அவனுக்குத் தீங்கு செய்தால் அதற்குப் பரிகாரமே இல்லை; கட்டாயம் நரகத்தில் விழுவாய் என்று தர்ம சாஸ்திரங்கள் சொல்லுகின்றன (புறம்.34)
வள்ளுவனும் இதையே சொன்னான்:
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு ( திருக்குறள் 110)
பிராமணர்களுக்குத் தீங்கு செய்யாதே ; உன் முன்னோர்கள் யாரும் செய்ததில்லை என்று சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானை தாமப்பல் கண்ணனாரும் (புறம்.43) எச்சரிக்கிறார்.
நரகக் காட்சிகள்
பாவமும் அஜீர்ணமும்
ஒரு பாவத்தின் பலன், பசுவின் பால் போல உடனே கிடைக்காது; ஒருவன் வாழ்க்கையிலேயே அது தெரியும்; அப்படியில்லாவிடில் அது அவனுடைய பிள்ளைகள், பேரக்குழந்தைகளிடம் காணப்படும்; அதிகம் சாப்பிட்டவனின் வயிற்றில் உணவு அஜீரணமாகாமல் உட்கார்ந்துகொண்டு, எப்படித் தொல்லை கொடுக்குமோ அப்படி அதன் விளைவுகள் கட்டாயமாகத் தெரியும் (மஹாபாரதம் 1-75-2)
நா தர்மஸ் சரிதோ ராஜன் சத்ய: பலதி கௌர் இவ
புத்ரேஷு வா நப்த்ர்ஷு வா ந சேத் ஆத்மனி பஸ்யதி
பலதி ஏவ த்ருவம் பாபம் குருபுக்தம் இவோதரே
திருக்குறளில் பாபம்
திருவள்ளுவர் பாப, புண்ணியத்துக்காக ஒரு அதிகாரமே (வினைத் தூய்மை) ஒதுக்கிவிட்டார். அதிலிருந்து சில குறள்கள்:
ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை (குறள் 656)
அம்மாவே பசிக்கொடுமையில் வாடினாலும் பணம் சேர்க்க பாபத் தொழில்களைச் செய்யாதே
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயன் நற்பாலவை (659)
பிறரை அழவைத்து பிடுங்கிய பணம் எல்லாம், உன்னை அழ அழச் செய்துவிட்டு ஓடிப்போகும். உனக்கு பொருளே நஷ்டமானாலும், புண்ணியம் செய்தால் அது பிற்காலத்தில் பலன் தரும்
இடுக்கட் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சியவர் (654)
தனக்குத் துன்பமே வந்தாலும், அறிவுள்ளவர்கள், பாப காரியங்களைச் செய்யமாட்டார்கள்
எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று (655)
ஐயோ, இப்படிச் செய்துவிட்டேனே என்று பின்னர் வருத்தப்படும் செயல்களைச் செய்யாதே; அப்படியே செய்துவிட்டாலும் மீண்டும் அதே பாபத்தைச் செய்யாதே
கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும் (658)
பெரியோர்கள், செய்யக்கூடாது என்று ஒதுக்கிய செயல்களைச் செய்யக்கூடாது; அப்படியே செய்தாலும் அது முடிவு பெறாது; முடிந்தாலும் துன்பத்தையே தரும்.
சுவர்க்கக் காட்சிகள்
பகவத் கீதையில் பாபம்
பகவத் கீதையில் பாபம் பற்றி பல இடங்களில் கண்ணன் கூறுகிறார். வால்மீகி ராமாயணத்திலும் வால்மீகி பேசுகிறார். அவற்றைத் தனியாகக் காண்போம்.
பொதுவாகப், பெண்களைக் கொல்லுதல் பாபம்; புறமுதுகு காட்டுபவனைக் கொல்வது பாவம்; செய்நன்றி மறப்பது பாவம் என்ற கருத்துக்கள் இமயம் முதல் குமரி வரை உள்ளன.
from my earlier post of 5 March 2016:—
பஞ்ச மாபாதகம்
அக்னிதோ கரதஸ்சைவ சஸ்த்ரபாணி: தனாபஹ:
க்ஷேத்ரதாராபர்ஹதா ச பஞ்சைதே ஆததாயின:
அக்னிதா- மற்றவன் சொத்துக்கு தீ வைப்பவன்
கரத-மற்றவர்களுக்கு விஷம் வைப்பவன்
சஸ்த்ரபாணி- ஆயுதமில்லாதவனைக் கொல்பவன்
தனாபஹ:- மற்றவன் பணத்தைத் திருடுபவன்
க்ஷேத்ரதராபஹர்தா- மற்றவன் மனைவியை அபஹரிப்பவன்
மனுவும் (11-54) இது பற்றிக் கூறுகிறார்:-
பிரமஹத்யா சுராபானம் அஸ்தேயம் குர்வங்கனாகம:
மஹந்தி பாதகான்யாஹுஸ்த சம்சர்கி ச பஞ்சம:
பிரம்மஹத்ய- பிராமணனைக் கொல்லுதல்
சுராபானம்- மது பானம் அருந்தல்
ஸ்தேயம்- திருடல்
குர்வங்க நாகம:- குருவின் மனையிடம் தவறாக நடத்தல்
சம்சர்கி- மெற்கண்ட நாலு பேருடன் சஹவாசம்
பஞ்ச கர்ம சண்டாளர்கள்
(செய்கையினால் சண்டாளன் நிலையை அடைபவன்)
நாஸ்திக: பிசுனஸ்சைவ க்ருதக்னோ தீர்கதோஷ:
சத்வார:கர்மசண்டாளா ஜன்மஸ்சாபி பஞ்சம:
நாஸ்திக: – கடவுள் நம்பிக்கையற்றவன்
பிசுன: – பிசிநாரி/கெட்டவன்
க்ருதக்ன: – நன்றிகெட்டவன்
தீர்க தோஷக: -பாபி (பாவாத்மா)
ஜன்மத: – பிறப்பினால் சண்டாளன்
–subham–
You must be logged in to post a comment.