
Research Article WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 9806
Date uploaded in London –2 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நட்புறவு பற்றியும், விருந்தோம்பல் பற்றியும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு எவரேனும் பாட்டு பாடியிருப்பார்களா, அதுவும் ரிக்வேதமும் தமிழ் வேதமும் பாடிய அளவுக்குப் படியிருப்பார்களா என்பது சந்தேகமே . நட்பு பற்றி திருக்குறளில் திருவள்ளுவர் பல அதிகாரங்கள் பாடி இருக்கிறார். ரிக் வேதத்திலோ துதிக்கு துதி நண்பன், நட்புறவு (Friend and Friendship) என்ற சொற்கள் வருகின்றன. அதே போல விருந்தோம்பல் (Hospitality) பற்றியும் இந்தியாவில் மட்டுமே பாடல்கள் இருக்கும். 2300 ஆண்டுகளுக்கு முன்னரே அசோகன் கல்வெட்டுகள் மூலம் நெடுஞ் சாலை நெடுகிலும் சத்திரங்களும் சாப்பாட்டு (Boarding and Lodging) வசதிகளும் இருந்ததை அறிகிறோம்.
ரிக் வேதத்தில் பத்து மண்டலங்களில் ஆயிரத்துக்கும் மேலான துதிகள் உள்ளன. அவற்றில் 10,000 மந்திரங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு குறள் போல வரிகள் உள்ளவை. சில குறள்களையும் மந்திரங்களையும் ஒப்பிட்டுப் பார்ப்போம்
சம்ஸ்க்ருதத்தில் வேதம் இருந்தது. அது தமிழில் இல்லையே என்ற குறையை தமிழ் மறை, தமிழ் வேதம் நீக்கிவிட்டது என்று திருவள்ளுவ மாலையில் ஒருவர் தமிழ் வேதத்தைப் புகழ்ந்துரைத்துள்ளார்
ரிக்.1-5-1
ரிஷி மதுச் சந்திர வைச்வாமித்திரன் தன்னுடைய சகாக்களை நண்பர்களே! (Comrades) இங்கே வாருங்கள், உட்காருங்கள் இந்திரனைப் பாடுங்கள் என்று அழைக்கிறார்.
1-6-9
அதே ரிஷி வானுறையும் தெய்வங்கள் என்கிறார். நாம் வள்ளுவர் குறளி ல் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்கிறார்
இந்திரனின் தோழர்களான மருத் தேவர்களை அழைக்கும் பொழுது “வானிலிருந்து அல்லது சொர்க்கத்திலிருந்து வாருங்கள்) என்கிறார் .
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
(அதிகாரம்: இல்வாழ்க்கை குறள் எண்:50 )
xxx
1-8-8
மற்றவர்களுக்கு உதவுவோரை ஊரின் நடுவிலுள்ள பழுத்த மரத்துடன் ஒப்பிடுகிறார் வள்ளுவர் . ரிஷி மதுச் சந்தஸும் அதையே சொல்கிறார்.
“தொழுபவனுக்கு இந்திரனுடைய மொழிகள் சத்தியமாகின்றன . அவை பலவித நன்மைகளைத் தரும்.பழுத்த
பழங்களைத் தாங்கும் மரங்கள் போல இருக்கின்றன.”
இதைச் சொல்லும் கவிஞரின் பெயரை தமிழில் மொழி பெயர்த்தால் தேன் கவி (Mr Honey Poem) என்று அமையும்! என்ன பொருத்தம் பாருங்கள்!!
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின் (குறள் 216)
[அறத்துப்பால், இல்லறவியல், ஒப்புரவறிதல்]
xxxx
1-9-8
தோன்றிற் புகழொடு தோன்றுக என்கிறார் வள்ளுவர். அதாவது புகழ் தரும் செய்கைகளைச் செய்து, உலகை விட்டு நீங்கிய பின்னரும் புகழ் தாங்கிய பெயரை விட்டுச் செல்ல வேண்டும் என்பது வள்ளுவனின் கொள்கை.
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று. ( குறள் எண் – 236)
ரிஷி மதுச் சந்தஸும் அதையே விரும்புகிறார்.
“இந்திரனே , சகடங்களில் ஏந்தி வரப்படும் உணவுகளையும் ஆயிரம் வழிகளால் வரும் புகழையும் எங்களுக்கு அளிக்கவும்”.
xxx
1-10-9
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.(குறள் 788)
என்கிறார் வள்ளுவர்.
மதுச்சந்தஸ் சொல்கிறார்
“அனைத்தையும் கேட்பவனே, என் அழைப்புக்கு உடனே செவிகொடுக்கவும். என்னுடைய இந்த துதியை நண்பனின் மொழிகளைப் போல அருகில் வைத்துக்கொள்”.
Xxx
1-16-5
மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் என்று ஒரு குறளில் வள்ளுவர் பாடுகிறார். இப்படி மயிரை இழந்தவுடன் இறக்கும் பிராணி இப்போது எதுவும் இல்லை. இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்போர் சடை எருமை எனப் பொருள்படும் YAK யாக் என்னும் மிருகத்தை குறிப்பிடுகின்றனர்.
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்
(அதிகாரம்:மானம் குறள் எண்:969)
இதே பொருளும், குழப்பமும் ரிக் வேதத்திலும் உளது
இதை பாடியவர் மேதாதிதி காண்வர் .
அவரும் கெளரா (கவரி) என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.
இதை மொழி பெயர்ப்போர் ‘தாகம் கொண்ட மான்போல’, ‘எருமை போல’ என்று மொழிபெயர்ப்பார்கள்.
கவரி வீசுதல் என்போம். அதிலுள்ள முடி வெண்மையாக இருக்கும். கெளரா என்றாலும் வெண்மையே.
கவரி முடி என்பதில் இருந்துதான் பெண்கள் அணியும் சவுரி முடியும் வந்ததோ?
Xxx
1-20-8
மனிதன் தெய்வமாகலாம் என்ற கருத்தை வள்ளுவர் ஒப்புக்கொள்கிறார்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். (குறள் 50)
ரிஷி மேதாதிதி காண்வன் ரிபுக்கள் என்னும் தேவர்களை போற்றிப் பாடுகையில் சொல்கிறார்
“வேள்வியைத் தங்கும் ரிபுக்கள் (Rhbus) மானிட வடிவங்களில் இருந்தார்கள் அவர்கள் தங்கள் நற் செயல்களால் உயர்ந்து தேவர்களோடு கிடைப்பதை பகிர்ந்து கொண்டார்கள்”.
xxx
1-23-19
நீர் = அமிர்தம்
“நீரில் அமிர்தம் உண்டு. நீரில் மருந்து இருக்கிறது. ஆகையால் அதை போற்றுங்கள்” — ரிஷி மேதாதிதி காண்வன்
1-23-20
“நீரே, நான் நீண்ட காலம் சூரியனைக் காண, என் உடலில் எல்லா நோய் நீக்கும் மருந்துகளையும் நிரப்புங்கள் “–ரிஷி மேதாதிதி காண்வன்
இவ்வாறு ரிக் வேதம் ஆறு மந்திரங்களில் நீரைப் போற்றுவதைக் கண்டு, படித்துத்தான் திருவள்ளுவரும் 10 குறள்களை வான் சிறப்பு என்ற அ திகாரத்தில் பாடினாரோ என்று எண்ண வேண்டியிருக்கிறது.
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்
(அதிகாரம்:வான் சிறப்பு குறள் எண்:19)
வான் நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. (குறள் எண்:11)
ஒரு குறளில் வேதம் பயன்படுத்தும் அமிர்தம் என்ற சொல் வருவதும், பகவத் கீதையில் வரும் தானம், தவம் என்ற மேலும் இரண்டு ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இன்னொரு குறளில் வருவதும் என் கருத்துக்குச் சான்று பகரும்.
–தொடரும் ………………………………

tags- ரிக் வேதம், தமிழ்வேதம், திருக்குறள் , ரிஷி, மதுச்சந்தஸ் , மேதாதிதி காண்வன்