#WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,486
Date uploaded in London – – 25 DECEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great
சுமார் 60 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன; மதுரையில் நடந்த மதுரமான நிகழ்ச்சிகள் நினைவுக்கு வருகின்றன. இப்போதெல்லாம் அப்படி நடக்கின்றனவா என்று தெரியவில்லை. குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகமே சீன வைரஸ் தாக்குதலில் இருப்பதால் இப்போது நடக்கவும் வாய்ப்புகள் குறைவு.
மதுரையில் எங்கள் காலத்தில் இருந்த பல நிறுவனங்கள் அழிந்து விட்டன.
முதலில் திருப்பாவையில் துவங்குகிறேன் .
மதுரையில் இருவர் தங்கள் வாழ்க்கையையே திருப்பாவையைப் பரப்புவதற்கு அர்ப்பணித்து இருந்தனர். ஒருவர் திருமதி ராஜம்மாள் சுந்தரராஜன்; மற்றொருவர் திருமதி சீதாலெட்சுமி பாலகிருஷ்ண ஐயங்கார். .
ராஜம்மாள் சுந்தரராஜன் மறைவுக்குப் பின்னர் அவரது வலது கையாக விளங்கிய விசாலாக்ஷி பாவைப் பாடல்களைப் பரப்பினார். அதே போல திருமதி சீதாலெட்சுமிக்குப் பிறகு அவருடைய புதல்வி பத்மாசனி திருப்பாவையைப் பரப்பினார்.
ஒவ்வொரு ஆண்டும் காஞ்சி சங்கராச்சாரியார் , திருப்பாவை முப்பதையும் ஒப்பிப்போருக்கு வெள்ளிக் காசுகளைக் கொடுத்தனுப்புவார். மாயவரத்தைச் சேர்ந்த திரு ராமமூர்த்தி, மடத்தின் பிரதிநிதி. அவர் எங்கள் வீட்டில் உணவருந்திவிட்டு திருப்பாவைப் பள்ளிகளுக்குச் செல்லுவார். நாங்கள் அந்த வெள்ளிக்காசுகளைக் காட்டச் சொல்லி வியப்புடன் பார்ப்போம். என் தங்கையும் எதாவது ஒரு திருப்பாவைப் பள்ளிக்கு 30 நாட்களும் செல்லுவார்.
திருமதி ராஜம்மாள் சுந்தரராஜன் ஏராளமான கல்லூரி மாணவிகளையும் கவர்ந்து இழுத்தார். அவர் செய்த நாட்டிய நாடகங்கள் இதற்கு ஒரு கரணம். அந்தக்காலத்தில் வத்சலாபாய் என்ற பள்ளிக்கூட பஸ், பணக்கார வீட்டுப் பெண்களை பஸ்ஸில் ஏற்றிச் செல்லும். அந்த பஸ்ஸில் வார விடுமுறை நாட்களில் பல ஊர்களுக்குச் சென்று அடியார்களின் வாழ்க்கை வரலாறுகளை நாட்டிய நாடகமாக நடத்திக் காண்பித்தனர். எங்கள் குடும்பத்தினரையும் அழைத்துச் செல்லுவார்கள். அவர்களுடைய நாட்டிய நாடகங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பழனி, தாராபுரம், உடுமலைப் பேட்டை முதலிய இடங்களுக்குத் சென்ற பயணம் இன்றும் நினைவில் நிற்கிறது.
கட்டுரைக்குத் தலைப்பு “மார்கழித் திங்கள், மடி நிறையப் பொங்கல்” என்று கொடுத்தற்குக் காரணம் எல்லா நாட்களும் நெய் ஒழுகும் பொங்கல், தொன்னையில் கிடைக்கும். திருப்பா வைக்காக வராவிட்டாலும் பொங்கலுக்காக வரும் கூட்டம் கொஞ்சம் இருக்கும். கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா – பாடல் அன்று ‘நெய்யில் மிதக்கும்’ சர்க்கரைப் பொங்கலும் கிடைக்கும்.
மதுரை தானப்ப முதலீத் தெரு டிரஸ்ட் ஹவுஸில் பிரம்மாண்டமான அண்டாக்களில் பொங்கல் வடிப்பர்.
இது தவிர நாங்கள் வசித்த வடக்குமாசி வீதியில் யாதவர்கள் திறம்பட நிர்வகித்த கிருஷ்ணன் கோவில் இருந்தது. அதிகாலை 4-30 மணி முதல் திருப்பாவை மற்றும் பக்திப் பாடல்கள் ஒலி பெருக்கி மூலம் வரும். இந்தப் பாட்டு வந்தால் இத்தனை மணி என்று கடிகாரத்தைப் பார்க்காமலேயே தெரிந்து கொள்ளும் அளவுக்கு கண கச்சித ஒலிபரப்பு .
இது தவிர மீனாட்சி கோவிலில் திருவெம்பாவை, தேவாரப் பாடல்களை ஓதுவார்கள் பாடுவார்கள். நட ராஜர் முன்னிலையில் அதிகாலையில் ஞானப் பால் என்ற சுவைமிகு ஏலக்காய், கிராம்பு போட்ட பால் விநியோகிப்பர். ஆளுக்கு ஒரு உத்தரணி தான்; அதற்கு நீண்ட க்யூ வரிசை. ஆனால் என் தாய் தந்தையர் செய்த புண்ணியம் எங்களுக்கு மட்டும் கோவில் பேஷ்கார் ஒரு பாட்டிலில் தனியாகக் கொடுத்து விடுவார் . எனது தந்தை தினமணிப் பத்திரிகையில் விரிவான ஆன்மீகச் செய்திகளை வெளியிடுவதால் இந்த சிறப்புக் கவனிப்பு..
அந்தக் காலத்தில் ஆன்மீகச் செய்திகளை வெளியிட்டால் அது இளப்பமான விஷயம். ஹிந்து என்ற பெயர்கொண்ட பத்திரிகை கூட கடைசி பக்கத்தில் மூன்று அங்குலத்துக்கு செய்தி போடுவார்கள்; என் தந்தை வே. சந்தானம் அந்த மரபுகளை உடைத்து எறிந்து முதல் பக்கத்தில் தெய்வீக செய்தி வெளியிடுவார். தினமணியின் ‘இன்றைய நிகழ்ச்சி’யைப் பார்த்தால் அன்றைய தினம் மதுரையில் நடக்கும் அத்தனை நல்ல விஷயங்களும் கிடைத்துவிடும்.
இது தவிர மேலும் ஒரு நிகழ்ச்சி –அதி காலை 4 மணிக்கு பஜனைப் பாடல்களைப் பாடிக்கொண்டு 4 மாசி வீதிகளும் மார்கழி மாதம் முழுதும் அன்பர்கள் வீதி உலா வருவர் . இவ்வாறு இரண்டு மூன்று குழுக்கள் செய்ததாக ஞாபகம். அதில் சில நாட்கள் தந்தையுடன் நானும் சகோதரர்களும் கலந்து கொண்டோம்.
மாதத்தில் ஒரு முறை திருப்பாவை ஊர்வலம் பெரிய அளவில் நடத்தப்படும். இவை தவிர, ந. சீ. சுந்தரராமன் நடத்திய தேவாரப்பள்ளி , திருப்புகழ் தியாகராஜன் நடத்திய திருப்புகழ் சபை, வானமாமலை சகோதரர்கள் நடத்திய தெய்வ நெறிக் கழகம் , மொட்டைக் கோபுர பூசாரி யாழ்கீத சுந்தரம்பிள்ளை நடத்திய பூஜை, மற்றும் கார்த்திகை மாத சங்காபிஷேகம் ஆகியன மதுரையின் தெய்வீக மனத்தை அதிகரித்தன.
மதுரையில் இருந்த 3,4 வேத பாடசாலைகள், தமிழையுயும் ஸம்ஸ்க்ரு தத்தையும் இரு கண்களாகப் பரப்பி வந்த ராமேஸ்வரம் வேத பாடசாலை, வாரத்தில் இரு முறை திலகர் திடலில் நடந்த புகழ்மிகு பிரம்மாண்ட வார சந்தைகள் . புகழ் மிகு ‘பூ மார்க்கெட்’ ஆகியன எல்லாம் அரசியல்வாதிகளால் அழிக்கப்பட்டுவிட்டன. ‘பவதி பிட்சாம் தேஹி’ என்று வீட்டு வாசலில் உச்சுக் குடுமி தாங்கிய சிறுவர்கள் வந்து பிக்ஷை பெற் றதெல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விட்டன.
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழிய (ஆண்டாள்)
திருவெம்பாவை இருபதும் செப்பினார் வாழிய (மாணிக்க வாசகர்).
–subham–
tags- திருப்பாவை , திருவெம்பாவை, பொங்கல் , பஜனை, மதுரை, வெள்ளிக்காசு