தீர்கதமஸ் பற்றிய சுவையான கதைகள் (Post No.4455)

Written by London Swaminathan 

 

Date: 3 DECEMBER 2017 

 

Time uploaded in London-  13-25

 

 

Post No. 4455

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

தீர்கதமஸ் ஒரு ரிக்வேத கால ரிஷி. கண் பார்வையற்றவர். குருட்டுக் கவிஞர்களில் புகழ் பெற்றவர் இலியட், ஆடிஸி காவியங்களை எழுதிய கிரேக்க மஹாகவி ஹோமர். ஆனால் ஹோமருக்கும் முன்னால் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த தீர்கதமஸ் ஹோமர் முதலிய அந்தகக் கவிகளைப் பந்தாடிவிட்டார். தீர்கதமஸின் கவிதைகள் ரிக் வேதத்தின் — உலகின் பழமையான நூலின் — முதல் மண்டலத்தில் உள. அவர் ‘கண்டுபிடித்த’ மிக நீண்ட கவி ரிக் வேதப் பாடல் எண் 1-164.  ரிஷிகள் மந்திரங்களை இயற்றுவதில்லை கவிகளைப் புனைவதில்லை. அவர்கள் வானத்தில் மிதக்கும் ஒலிகளைக் கிரஹித்து நமக்கு வழங்குவதால் அவர்களை ‘மந்த்ர த்ருஷ்டா’ என்பார்கள். அதாவது மந்திரத்தைப் பார்த்தவர்கள்; ஞானக் கண்களல் கண்டுபிடித்தவர்கள்; காதால் கேட்டவர்கள்; இதனால்தான் திருவள்ளுவரும் அவருக்கு முந்தைய சங்கத் தமிழ்ப் புலவர்களும் “கேள்வி” என்பர்; காதால் கேட்டது ‘ச்ருதி’= ‘கேள்வி’. நிற்க

இவருடைய பெயரின் பொருள்- நீண்ட இருள்

இவர் தாயின் பெயர் மமதா

தந்தையின் பெயர் உசத்யா

ஆனால் இவர் சத்யகாம ஜாபாலா போல தாயின் பெயர் கொண்டு ‘தீர்கதமஸ் மாமதேய’ என்றே அழைக்கபட்டார். அதுவும் புதிரானதே.

சில நேரங்களில் தந்தையின் பெயரால் ‘தீர்கதமஸ் ஔசத்ய’ என்றும் அழைக்கப்பட்டார்.

இவர் பற்றிய செய்திகள் ரிக் வேதத்திலும் சாங்காயன ஆரண்யகத்திலும் காணப்படும். இவர் நூறு ஆண்டுகள்  வாழ்ந்ததாக அவை செப்பும்.

 

 

 

தீர்கதமஸின் 1-164 கவி அறிஞர்களைத் திணறடித்துவிட்டது. 52 கண்ணிகளில் எண்களை வைத்து விளையாடிவிட்டார். இவருக்குச் சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் அவதரித்த திருமூலர், சிவ வாக்கியர், திருமழிசை ஆழ்வார் ஆகியோரும் எண்களைக் கொண்டு கவிபாடினர். இதற்குப் பலவிதமான பொருள்களைக் கற்பிக்க முடியுமாதலால் அவை  சுவை உடைத்து.

 

இந்தியாவுக்குப் பெயர் கொடுத்த – ‘பாரதம்’ என்று பெயர் கொடுத்த – பரத மாமன்னனுக்கு இவர் புரோஹிதர் என்றும் ஐதரேய பிராம ணம் பகரும்.

பிருஹத் தேவதா என்னும் நூல் இவர் பற்றிய செய்திகளை மொழியும். இவர் கண் பார்வையில்லாமல் பிறந்து பிற்காலத்தில் பார்வை பெற்றாராம்.

வயது முதிர்ந்த காலத்தில் இவரை த்ரைதன என்பவன் தாக்கினானாம். ஆனால் அவன் தற்கொலை செய்து கொண்டான். இவரை ஆற்றில் தூக்கி எறிந்துவிட்டனர். அங்க தேசத்தில் இவரை ஆற்றிலிருந்து வெளியே எடுத்துக் காப்பாற்றினர். அங்கு ஒரு அடிமைப் பெண்ணை மணம் புரிந்தார். கக்ஷிவந்த் என்ற மகனை ஈன்றெடுத்தார். அவனும் மாபெரும் கவிஞன் ஆனான்.

 

இனி மஹாபரதத்தில் இவர் பற்றி  காணப்படும் செய்திகளைக் காண்போம்.

 

ஆதி பர்வத்தில் இவர் முற்காலத்திய ரிஷி என்று சொல்லப்படுவதால் இவர் மஹாபாரதத்துக்கு மிகவும் முன்னால் வாழ்ந்தவர் என்பது தெளியப்படும்.

 

பிராமணர்களான மமதாவுக்கும் உதத்யனுக்கும் பிறந்தவர் இவர் என மஹாபாரதம் உரைக்கும்.

ஒரு விநோதக் கதை இதோ:-

மமதா கர்ப்பிணியாக இருந்தபோது உதத்யனின் தம்பி பிருஹஸ்பதி அவளைப் பலவந்தப்படுத்தினார். உள்ளே இருந்த குழந்தை இன்னும் ஒரு வித்துக்கு கர்ப்பப்பையில் இடமிலை என்று அறிவித்தது. அப்படியும் பிருஹஸ்பதி பலவந்தம் செய்யவே புதிய விதையை, மமதாவின் உள்ளே இருந்த குழந்தை வெளியே தள்ளியது. உடனே சிற்றப்பன் பிருஹஸ்பதி ஒரு சாபம் போட்டார். மமதாவின் கர்ப்பத்தில் உள்ள குழந்தை குருடாகப் பிறக்கட்டும் என்று சபித்தார். இதுவே தீர்க தமஸ் கண் பார்வை இழந்த கதை.

 

(என் கருத்து: ஒரு கர்ப்பிணிப் பெண்ணை ஒருவர் பலவந்தப்படுத்தினால் அந்த அதிர்ச்சியால், குழந்தை ஊனமாகப் பிறக்க வாய்ப்பு உண்டு என்பதை நவீன அறிவியலும் ஏற்கிறது)

 

காலப்போக்கில் அவர் கவி புனையும் ஆற்றலைப் பெற்றார். பிரத்வேஷி என்ற பெண்ணைக் கல்யாணம் செய்தார். ஐந்து குழந்தைகளைப் பெற்றார்.மூத்த மகனுக்கு கவுதமன் என்பது திரு நாமம். சில முனிவர்களுக்குக் குருட்டுக் கவிஞன் தங்களிடையே இருப்பது பிடிக்காததால் மனைவி பிரத்வேஷியையும் மகன்களையும் தூண்டிவிட்டனர். பிரத்வேஷியும் இந்த வயதான கிழவரைக் கவனிக்க என்னால் இனிமேல் முடியாது என்று அவரை ஒரு படகில் கட்டி கங்கை ஆற்றில் மிதக்கவிட்டனர்.

 

பலிராஜன் என்ற மன்னன் கங்கை நதியில் குளிக்க வந்தபோது படகில் ஒரு கண் பார்வையற்றவர் இருப்பதைக் கண்டு அவரை விடுவித்து அரண்மனைக்கு அழைத்துச் சென்றான்.

 

அவருடைய பூர்வ கதைகளைக் கேட்ட மன்னன் தன் மனைவி சுதேஷ்னாவுடன் படுத்டு ஒரு குழந்தையைப் பெற்றுத் தரும்படி வேண்டுகிறான். ஒரு மன்னனுக்கு வாரிசு இல்லாவிடில் பிராமண முனிவர்களை அணுகி குழந்தைப் பெற்றுக் கொடுக்கும்படி வேண்டுவது அக்கால வழக்கம்.

ஆனால் இவரிடம் படுக்க மனம் இல்லாத மஹாராணி, தனது தோழிகளில் ஒருவரை அனுப்பி வைத்தார். 11 குழந்தைகள் பிறந்ததாகவும் அவர்களில் ஒருவர்தான் கக்ஷிவன ரிஷி என்றும் மஹாபாரதம் இயம்பும். அவர்கள் அனைவரும் தன்னுடைய குழந்தைகளா என்று மன்னன் வினவ, தீர்க தமஸ் உண்மையைச் சொன்னார். பின்னர் மன்னன் தனது மனைவியிடம் வலியுறுத்த அவர் தீர்க தமஸுடன் கூடி ஐந்து பிள்ளைகளைப் பெற்றாள். அவர்கள்: அங்க, வங்க, கலிங்க, பன்ற, சுஹ்ய. என்ற பெபயருடைய ஒவ்வொருவரும் வெவ்வேறு வம்சத்தை ஸ்தாபித்து, நாட்டின் வெவ்வேறு பகுதிகளை ஆண்டனர்.

 

இதை சத்யவதியிடம் பீஷ்மர் கூறினார்.  விசித்ர வீர்யனுக்குக் குழந்தைகள் இல்லாததால் அவ்னுடைய மனைவியிடத்தில் பிராமணர்களைக் கொண்டு குழந்தைகளைப் பெறுவதே முறை என்று பீஷ்மர் வலியுறுத்தினார்.

 

மொத்தத்தில் பல கதைகள் சொன்னாலும் அதில் இழையோடும் கருத்துக்களை எவரும் பிடித்துக்கொள்ள முடியும்.

 

தீர்கதஸுக்குப் புகழ் அவர் சொன்ன வேத மந்திரங்களிலிருந்து வந்தது என்பதைக் கட்டுரையின் முதல் பகுதியில் விளக்கியுள்ளேன்.

 

TAGS:- தீர்கதமஸ், கதை, சுவையான

–சுபம்–