
Post No. 9141
Date uploaded in London – –14 January 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
14-1-2021 பொங்கல் திருநாள்!
சூரியனைப் போற்றித் துதிப்போம்; புகழும் வளமும் பெறுவோம்!
ச.நாகராஜன்
1
அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
தமிழ் வாழ்க! தமிழ் மக்கள் வாழ்க!! தமிழ்நாட்டின் புகழ் ஓங்குக!
பாரதம் பாருக்குள்ளே சிறந்த நாடாகச் சிறந்து விளங்குக!!
2
சூரியனைத் தொன்று தொட்டு இருந்த அனைத்து நாகரிகங்களும் தொழுது போற்றியுள்ளன.
வேத நாகரிகம் சூரியனுக்குத் தனி ஒரு இடத்தைத் தந்து சிறப்பிக்கிறது.
இதை ராமாயண மஹாபாரத இதிஹாஸங்கள் மூலமாகவும் 18 புராணங்கள், 18 உப புராணங்கள் மற்றும் இதர தர்ம சாஸ்திரங்கள், ஆகமங்கள் மூலமாகவும் அறிய முடிகிறது.
நமது கோவில்களில் சூரியனுக்கு உரிய வழிபாடு சிறப்பாக உண்டு.
நமது அனைத்து மொழி இலக்கியங்களிலும் சூரியனைப் போற்றாத இலக்கியமே இல்லை.
3
மஹாகவி பாரதியார் ஞாயிறு – ஸூர்ய ஸ்துதி என்றும் ஞானபானு – ஸூர்ய ஸ்தோமம் என்றும் இரு கவிதைகள் புனைந்துள்ளார்.
“என்றன் உள்ளம் கடலினைப் போலே
எந்த நேரமும் நின்னடிக் கீழே
நின்று தன் அகத்து ஒவ்வோர் அணுவும்
நின்றன் ஜோதி நிறைந்ததுவாகி
நன்று வாழ்ந்திடச் செய்குவை ஐயா
ஞாயிற்றின் கண் ஒளி தரும் தேவா”
என்று இப்படி ஞாயிறு – ஸூர்ய ஸ்துதியில் வேண்டுகிறார்.
ஞானபானு பத்திரிகையை வாழ்த்தி அவர் புனைந்த செய்யுள் ஞானபானு – ஸூர்ய ஸ்தோமம் என்னும் கவிதையாகும்.
“அனைத்தையும் தேவர்க்காக்கி அறத்தொழில் செய்யும் தெய்வம்
மனத்திலே சக்தி ஆக வளர்வது நெருப்புத் தெய்வம்
தினத்தொளி ஞானம் கண்டீர்; இரண்டுமே சேர்ந்தால் வானோர்
இனத்திலே கூடி வாழ்வர் மனிதர் என்று உரைக்கும் வேதம்”
என்று இப்படிக் கூறி வேத பிரமாணத்தைத் தன் கவிதையிலே சுட்டிக் காட்டுகிறார்.
அவரது வசன கவிதையிலே அவர் போற்றும் ‘ஞாயிறு’ போற்றிப் படிக்க வேண்டிய ஒரு அற்புதமான பகுதி!

4
மயூர கவி இயற்றிய சூர்ய சதகம் நூறு பாடல்களைக் கொண்டது. சூர்ய வழிபாடு அவரது தொழு நோயைத் தீர்த்தது. அது மந்த்ர பூர்வமானது. அனைவரும் படிக்க வேண்டியதாகும்.
5
சூர்ய அஷ்டோத்திரம் மஹாபாரதத்தில் இடம் பெறும் அற்புதமான 108 சூரிய ஸ்துதி ஆகும். பாண்டவர்கள் வன வாசம் செய்த போது அவர்களின் குருவான தௌம்யர், யுதிஷ்டிரருக்கு உபதேசம் செய்த ஸ்தோத்திரம் இது.
இதைத் துதித்ததன் பயனாக என்றும் உணவுக்கு குறை இல்லாமல் உணவை வழங்கும் அக்ஷயபாத்திரத்தை அவர் பெற்றார். அதன் பயனாக அவர்களும் உணவைப் பெற்றனர்; வந்த அதிதிகளையும் உபசரித்தனர்.
6
சூர்யோபநிஷத்து சூர்ய மந்திரங்களைத் தருகிறது; பீஜ அக்ஷரங்கள் கொண்டது.
‘ஆதித்யாய வித்மஹே சஹஸ்ர தீரணாய தீ மஹி; தந்ந: ஸூர்ய ப்ரசோதயாத்’ என்பது சூர்ய காயத்ரி ஆகும்.

7
சூர்யாஷ்டகம் சிவபிரான் கூறி அருளிய எட்டு ஸ்லோகங்களைக் கொண்டது.
தம் ஸூர்யம் ஜகதாம் நாதம் ஞான விஞ்ஞான மோக்ஷதம் |
மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம் ||
என்பது எட்டாவது ஸ்லோகம்.
உலகின் தலைவரும் அறிவையும் அறிவின் சுய அனுபவத்தையும் மோக்ஷத்தையும் அளிப்பவரும் எல்லாப் பாவங்களையும் போக்குபவருமான சூரிய பகவானை நமஸ்கரிக்கிறேன் என்பது இதன் பொருள்.
8
ரிக் வேதம் சூரியனை ஸாவித்ரி, ஸவிதா என பலவாறாக அழைத்துப் போற்றுகிறது.
ஓ! ஜோதியே
சூரியனை, அழிவிலா அந்த நட்சத்திரத்தை
வானம் ஏற வைத்து மனித குலத்துக்கு
வெளிச்சத்தை அருளினாய்!
ஓ! தேவனே!!
மனித இனத்தின் ஒளிச் சின்னமே!!!
பூமியின் அன்பே, எழுந்திரு,
இந்தப் பாடலைப் பாடுகிறவனுக்குப் பலன் அளிப்பாய்!
என அருமையாக இப்படி வேதம் துதிக்கிறது.

9
சூரிய நமஸ்காரம் உடல் பயிற்சிகளில் எல்லாம் சிறந்த உடல் பயிற்சி.
மந்திர பூர்வமாக இதைச் சொல்லி இதில் உள்ள 12 ஆசனங்களைச் செய்யும் ஒருவன் ஆரோக்கியத்துடன் பூரண ஆயுள் வாழ்வதை இது உறுதிப் படுத்துகிறது.
10
சூரியனுக்கான தனிக் கோவில்கள் பல பாரத தேசத்தில் உண்டு.
தமிழகத்தில் உள்ள சூரியனார் கோவில் சூரியனுக்கான தனித் தலம் ஆகும்.உஷா தேவி, ப்ரத்யுஷா தேவியுடன் கூடிய சூரியன் இருக்க நின்ற கோலத்தில் குரு பகவான் எதிரில் இருக்கப் பெற்ற அற்புத ஆலயம் சூரியனார் கோவில்.
ஒரிஸாவில் கொனார்க்கில் உள்ள சூரியனின் கோவில் வரலாற்றுப் புகழ் பெற்றது.
குஜராத் மாநிலத்தில் உள்ள மொதேராவில் உள்ள சூரியனின் கோவில் சூரியனின் அஸ்தமன காலத்தைக் குறிக்கும் தலமாக அமைந்துள்ளது.
11
ராவணனை வதம் செய்ய ராமருக்கு அகஸ்திய மா முனிவர் அருளியது ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம்.
வால்மீகி ராமாயணத்தில் இடம் பெறுவது இது.
இதைச் சொல்வோர் அனைத்து நலங்களையும் பெறுவது உறுதி.
ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசனம் |
ஜயாவஹம் ஜபேந் நித்யம் அக்ஷய்யம் பரமம் சிவம் ||
ஸர்வ மங்கள் மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரணாசனம் |
சிந்தா சோகப்ரசமநம் ஆயுர்வர்த்தநமுத்தமம் ||
என்பதால் இதைச் சொல்வதால் புண்ணியம் சேரும்; அனைத்து எதிரிகளும் அழிந்து போவர்; எப்போதும் எதிலும் வெற்றியைப் பெறுவர்; தினமும் இதைச் சொல்லுதல் வேண்டும்; அழியாதது; பரம மங்களத்தைத் தருவது; சிந்தையில் ஏற்படும் சோகத்தைத் போக்குவது; ஆயுளைத் தருவது; சிறந்தது என்பது பெறப்படுகிறது.

12
எல்லையற்ற ஆதித்தனின் புகழ் சொற்களுக்கு அப்பாற்பட்டது.
மற்ற தெய்வங்களை பிரத்யக்ஷமாகக் காண்பது அரிது;
ஆனால் பிரத்யக்ஷமாக ஒவ்வொருவரும் காணக் கூடிய தெய்வம் ஸூர்யன்.
இவனை வணங்கி வழிபடுவோமாக!
அனைத்து நலமும் பெறுவோமாக!!
***
tags -சூரியன் , துதி,
You must be logged in to post a comment.