
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 22 December 2018
GMT Time uploaded in London – 9-44 am
Post No. 5813
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
வாரத்தில் மூன்று நாட்களாவது லண்டனிலுள்ள பிரிட்டிஷ் லைப்ரரிக்கோ, லண்டன் யுனிவர்ஸிட்டி லைப்ரரிக்கோ சென்று புத்தக வேட்டை ஆடும்போது பல புதிய செய்திகள் கிடைக்கின்றன. சிறைச் சாலையில் இருக்கும்போது தினகரன் மொழிபெயர்த்த வங்காளி நாடகம் மூலம் தினகரன் பற்றியும், அதை எழுதிய வங்காளி மொழி ஆசிரியர் பாபு துவிஜேந்திர லால் ராய் பற்றியும், அதை வெளியிட்ட உத்தமபாளையம் பாரதி புத்தக நிலையம் பற்றியும் அறிந்தேன். இதோ சில சுவையான விஷயங்கள்.
பாபு துவிஜேந்திர லால் ராய் என்பவர் வங்காளி மொழியில் பல நாடககங்களை எழுதிப் புகழ்பெற்றவர். அவர் ஆங்கிலத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். மேல் படிப்புக்காக இங்கிலாந்து சென்றபோது ‘இந்திய கீதங்கள்’ Lyrics of Ind (லிரிக்ஸ் ஆஃப் இன்ட்) என்ற நூலை எழுதி வெளியிட்டார். அதைக் கண்டோர் அவரை மெச்சினர். Light of Asia (லைட் ஆஃப் ஏசியா) நூலின் புகழ்மிகு ஆசிரியர் ஸர் எட்வின் ஆர்னால்ட்வரை அனைவரும் அவரைப் புகழ்ந்தனர்.
அவருடைய தாய் மொழியான வங்காளியிலும் எழுத வேண்டும் என்று மக்கள் வேண்டிய பின்னர் 15 நூல்களை எழுதி வங்கத் தாயின் பாத கமலங்களில் சமர்ப்பித்தார். 1913-ம் ஆண்டில் உயிர்நீத்த அவரது கவிதைகளும் நாடகங்களும் இன்று வரை புகழ்மணம் பரப்பிக்கொண்டு இருக்கிறது. 500 பாடல்களுக்கு மேல் எழுதி இசைத் துறையில் தமக்குள்ள புலமையையும் நிலை நாட்டியவர்.
அவர் விவசாயத்தில் பட்டம் பெற்ற பின்னர் அரசாங்கத்தில் பல துறைகளில் அதிகாரியாகப் பணியாற்றினார். பெண்கள் விடுதலை, தேச விடுதலையில், குடியானவர் உரிமையில் ஆர்வம் காட்டினார்.

அவருடைய
மனைவி பெயர் பெயர் ஸுரபாலா தேவி
தந்தை பெயர் – கார்த்திகேய சந்திரவர்மா
பிறந்த தேதி — 19 ஜூலை 1863
இறந்த தேதி – 17 மே 1913
பிறந்த ஊர் – கிருஷ்ணா நகர்- மேற்கு வங்கம்
அவருடைய நாடகங்கள் ஒவ்வொன்றும் உயர்ந்த லட்சியத்தைப் போதித்தன. மனதில் தூய எண்ணங்களை உருவாக்கின. இயற்கையை வர்ணிப்பதில் அவர் வல்லவர். அவருடைய ‘பாஷாணி(அகல்யா) என்ற நாடகம் பிராமண தர்மங்கள் பற்றியது. ‘துர்காதாஸ்’ ஆண்மகனின் லக்ஷணங்கள் பற்றியது. ‘ராணா பிரதாப்’ க்ஷத்ரிய தர்மங்களைச் சிறப்பிக்கிறது .’சீதா’ நாடகம் பதி பக்தியையும், ‘மேவார் வீழ்ச்சி’,குடும்ப அன்பையும் விளக்கும். இவை அனைத்தும் மனதை ஒரு அபூர்வமான உலகிற்கு இட்டுச் செல்லும்.
குறைவான பெண் கதாபாத்திரங்களையே படைத்தபோதும், கிடைக்கும் போதெல்லாம், கதா பாத்திரங்கள் வாயிலாக பாரதப் பெண்களின் உயரிய லட்சியங்களைப் போற்றத் தவறியது இல்லை. 35 வயதிலேயே மனைவியை இழந்தார். எந்த நேயராவது நீங்கள் இரண்டாம் முறை ஏன் கல்யாணம் செய்து கொள்ளவில்லை? என்று கேட்டால் அவரது கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தோடும்; மனைவி மீது அவ்வளவு அன்பு; தனது தாயாருடன் மனைவி வசித்தபோது அவரிடம் கண்ட அற்புத குணங்கள், தியாகங்களை நாடகக் கதைகள் வாயிலாக வெளியிட்டு இருக்கிறார் என்று விமர்சகர்கள் கருதுகிறார்கள். இறுதிவரை மறுமணம் செய்யாது பிரம்மசர்யம் காத்தார்.
“இந்த மானிட மிருகங்களுடன் தெய்வீகப் பெண்களின் சம்பந்தம் எப்படி உண்டாயிற்று? நாற்றமெடுக்கும் சேற்றில் சந்திரப் பிரதிமை எப்படி தோன்றுகிறது? இந்த அடிமைகளிடம் விலைமதிக்க வொண்ணாத ரத்தினங்கள் எப்படி வந்தது?”— என்றெலாம் வசனம் எழுதி பெண்களை உச்சாணிக் கொம்பில் ஏற்றி வைப்பார்.
‘மேவார் வீழ்ச்சி’ என்னும் நாடகத்தில் தேச பக்தி, பதி பக்தி, தியாகம் முதலியன் கொழுந்துவிட்டு எரிவதைக் காணலாம்.
ஷாஜஹான் நாடகத்தில் பெண்களின் நிர்வாகத்திறமையைக் காட்டியுள்ளார்.
தமிழில், தினகரன் அவர்கள் மொழி பெயர்ப்பில் 1933ம் ஆண்டில் சில நாடகங்கள் வெளியாகின.
அவற்றை உத்தமபாளையம் பாரதிப் புத்தகாலயம் வெளியிட்டது.
துவிஜேந்தர்லால் ராயின் புதல்வர் திலீப் குமார் ராய் புதுச்சேரி அரவிந்த ஆஸ்ரமத்தில் தங்கி புகழ்பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
‘ராட்டூர் வீரன் துர்காதாஸ்’ முதலிய
நாடகங்களை தமிழில் மொழி பெயர்த்த தினகரன் சொல்லும் சுவையான செய்தி:-

“மனிதனுக்கு பால்யத்திலே விளையாட்டு, வாலிபத்தில் காதல், முதுமையிலே பகவதா பக்தி என்று பருவ ரஸனைகள் உண்டு. இது எல்லோருக்கும் எல்லாக் காலத்திலும் பொது விதி. ஆனால் ருஸிகரமான நூல்கள் தரும் இன்பத்தை எதற்கு ஈடு சொல்லலாம்?
‘சுக வெறியைப் பூரணமாக அனுபவிப்பதற்கு ஒரு கவள அன்னமும், ஒரு கலச மதுவும் (தேனும்), தலை சாய்க்க நிறிது நிழலும், ரஸமான காவியம் ஒன்றும், காலஹிதமான காந்தை ஒருத்தியும் இருந்தால் போதும் ; அப்போது வெறுமையான பாலைவனமும் ரமணீயமான உத்தியானம் ஆகிவிடுகிறது- என்று பாரசீக மஹா கவி உமர் கையம் தனது ரூபாயிற் கூறுகிறான்.
பாலைவனத்தைப் போல் வெறுமையும் வறுமையும் நிறைந்த சிறைக் கம்பிகளுக்கிடையே சிந்தை புழுங்க, உடல் ஒடுங்க, தனிமைத் துயரத்தாலும் உற்றாரைப் பிரிந்த ஹிருதய கிரந்தியாலும் சிறையில் , நிறம்பிய துக்கச் சுமையைச் சுமந்து கொண்டு இராஜ மகேந்திரம் மத்திய சிறையில் ஓர் அறையில் கிடந்தபோது ஒரு நாள் இரவு
என் பக்கத்து அறையில் இருந்த நண்பரின் நெடு மூச்சும், நெட்டுயிர்ப்பும் எனக்,, நன்றாய்க் கேட்டது. ஒரே கப்பலில் துக்கிகளான இரண்டு யாத்ரீகர்கள் சம்பாஷித்துக் கொள்ளுவது போல, நண்பரும் நானும் உரையாடிக் கொண்டிருந்தோம் .நண்பர் ஹிந்தியில் நல்ல பண்டிதர்; நல்ல பிரசாரகர். கதையாட்டிலேனும் கேட்டுக் களித்தும் கண்ணயரலாம் என்று அவரிடம் ஒரு கதை கேட்டேன். நண்பரும் கூறினார். ஹா! எவ்வளவு ருசியான கதை! எவ்வளவு புளஹிதமான ரஸனை! எத்தனை வெற்றி தரும் மயிர் சிலிர்க்கும் செயல்கள்! சிறைத் துயர் சென்ற இடம் காணேன்.
துர்காதாஸின் கதையைக் காதால் கேட்ட மாத்திரத்தில் அதை பாஷாந்தரத்திலேனும் (Translation) படிக்க வேண்டும் என்று ஹிந்தி பாஷையைப் படிக்க ஆரம்பித்தேன். ஏற்கனவே எனக்கு ஹிந்தி பாஷையில் பேசும் ஆற்றல் இருந்ததால் இரண்டொரு வாரத்தில் அட்சர சிட்சையும், அவற்றைக் கூட்டி வாசிக்கும் ஆற்றலும் எனக்கு ஏற்பட்டது. பின்னர் கோயமுத்தூர் சிறையில் அதை இன்னும் சிறிது வளர்க்க சந்தர்ப்பமும் ஸர்வ அவகாசமும் கிட்டியது. ஆனால் துர்காதசைப் படிக்கும் பாக்கியம் அல்லிப்புரம் சிறையிலேதான் பெற்றேன். படித்தேன் படித்தேன்; பன்முறை படித்தேன்; தெவிட்டவில்லை. எத்தனை முறை படித்தாலும் நூற்சுவை அதிகரித்ததேயன்றி குறைவு என்பது கிஞ்சிற்றும் கிடையாது. துவிஜேந்தர்லால் ராயின் நாடகப் பூங்காவிலே ‘மீவார் வீழ்ச்சீ’யைப் பார்த்தேன்; ராணா பிரதாபனை ரஸித்தேன்; நூர்ஜஹானை நுகர்ந்தேன்; ஷாஜஹானிற் சஞ்சரித்தேன்; ஸிம்ஹள விஜயத்தைச் சிந்திதேன்;எல்லாம் ஒன்றிற்கொன்று அதிகமான யாசனையையும் வாசனையயும் தந்தன.

தமிழ் நாடக பீடத்திலே இத்தகைய அபூர்வமான கதைகள் ஏன் அரங்கேற்றப்படலாகாது? வன்னியையும் அல்லியையும் நல்ல தங்காளையும் சதாரத்தையும் சாவித்திரியையும் அரிச்சந்திரனையும் கோவலனையும் சிறுத்தொண்டரையும் விட்டால் தமிழ் ஜாதிக்கு வேறு கெதி இல்லையா? காதல் பாகத்தை மற்றும்தானா தமிழன் ரஸிக்கக் கற்ற்றிருக்கிறான்? வேறு ரஸனைகள் அவனுக்குத் தெரியாதா? துர்காதாஸின் தேசாவேசத்தையும், பிரபு பக்தியையும் , யுத்த கௌசல்யத்தையும் மனிதத்துவத்தையும் குறிக்கின்ற ஒரு நாடகத்தைக் காண்பி! மஹா மாயாவின் துணிச்சலையும் சாரணத் திறமையையும் பிரசாரத் திறமையயும் காட்டும் ஒரு கதையாவது சொல்லு! திலேர் கானுடைய ஸ்நேகத்துவத்தையும், வீரத்தையும்,சம தர்மத்தையும் உருவகப்படுத்துகிறதான சரித்திரம் ஒன்றைத்தானும் குறிப்பிடு! காதல் ரஸம் நமது நாடகங்களில் நிறைய உண்டு; சோக ரசமும் இருக்கிறது; வீர ரஸம் இல்லை; மற்ற ரசங்களும் இல்லை; பூலோகம் போய்க்கொண்டிருக்கிற புரட்சி (மாறுதல்)ப் பிரக்ருதியில் இந்த தமிழ் நாடக அரங்கம் மாத்திரம் இன்னும் ஏனோ கர்நாடகத்திலேயே இருக்கிறது . ஜெகப்பிரியர் (ஷேக்ஸ்பியர்) செய்திருக்கிற நாடகங்களை ஒன்றுவிடாமற் பார்! கதேயயையும் ஷில்லரையும் நடி! பிளெச்சருடைய வீர விருந்தினனாய் இரு!மோலியரின் ஹாஸ்ட்ய ரசத்தைப் பாருங்கள். பெர்னாட்ஷாவின் பெருமையைப் படி! துவிஜேந்தர்லாலின் ஜீவ வேகத்தையும் சிந்தி! தமிழா! எனது பிரிய தமிழா! உனது தனிக் காதல் ருசியை நான் தடுக்கவில்லை. உனது பரமார்த்தீகமான நாடககக் கதைகளை நான் வெறுக்கவில்லை. ஆனால் அந்த ஒரே ரஸத்தாலே மாத்திரம் மனித மனது திருப்திகொண்டு விடாது. இதர ரசனைளையும் ரஸிப்பதற்காகத்தான் இவ்வளவையும் சொல்லுகிறேன் பார்!
நமது தமிழ் மன்னர்கள் காலத்திலே நிகழ்ந்ததான பல ரஸனைகளைப் புகுத்தி பல கதைகலை எழுதி நாடக மேடைக்குக் கொண்டுவரவேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. பிறநாட்டு நாடக ஆசிரியர்கள் செய்திருக்கிற நாடககங்களையும் தமிழில்
கொண்டு வரவேண்டும் என்கிற எண்ணமும் இருக்கிறது.எவரேனும் கற்பானாசிரியர்கள் தமிழ் ஜாதியில் இருக்கமாட்டார்களா? எழுத மாட்டார்களா? என்று எண்ணிக் கொண்டிருக்கும்போது, நீயேதான் ஏன் எழுதக் கூடாது? என்கிற கேள்வியை என் மனதுக்குள் ஏதோ ஒரு இயந்திரம் கேட்டது. முயன்று பார் என்று மனோதர்மமும் சொல்லிற்று. தமிழகம் ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையில் முயற்சித்திருக்கிறேன். அதன் முதல் தோற்றம் இது.
(இதற்குப் பின்னர் தினகரன் அக்காலத்திய நாடக அரங்குகளில் காணப்பட்ட விசித்திரங்களைக் கூறுகிறார்)
கடைசியாக அவர் சொல்லுவது
ஸ்வர்கீய த்விஜேந்தர்லால் செய்த ‘துர்காதாஸை’ நான் அப்படியே தமிழில் ஆக்கிவைக்கவில்லை. கதாசாரத்தில் ஒரு சிறு விஷயத்தையும் கூட மாற்றாமலுந் திருத்தாமலும் ஹிந்தி பாஷாந்தரத்தில் உள்ளவாறே கூறியிருக்கிறேன். ஆனால் கற்பனையிலும் வர்ணனையிலும் துவிஜேந்திரனை ஆங்காங்கு கடந்துவிட்டிருப்பதால் அநேகமாய் முதல் பார்வைக்கு இந் நூல் பாஷாந்திரமாகவே தோன்றாது; தழுவி எழுதப்பட்டிருப்பதாகத் தோன்றும்
சுத்தத் தமிழ் வளர்ப்பவர்கள் என் மீது ஒரு குறை கூறுவார்கள். எனது நடையிலே சம்ஸ்கிருத பதங்கள் விரவியிருப்பது அவர்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் பிற பாஷையே கூடாதென்கிற இப் பாஷாபிமானிகள் பாஷையை வளர்க்கிறவர்கள் ஆக மாட்டார்கள். சம்ஸ்கிருதப் பதங்களைப் பெரும்பாலாகக் கொண்டிருக்கிற ஹிந்தி இந்தியாவின் ராஷ்டிரப் (பொது) பாஷையாக ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பதே எனது வாசகத்தில் சம்ஸ்கிருத, ஹிந்தி, உர்து நான் சேர்த்திருப்பதற்கு மன்னிப்பாகும்.
அல்லிப்புறம் சிறை
15-12-1930 தினகரன்
TAGS– தினகரன், நாடகங்கள், துவிஜேந்திர லால் ராய்