Post No. 10,343
Date uploaded in London – – 16 NOVEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
“மர்மத் தவளைகள் ; ரிக், அதர்வ வேதம் தரும் அதிசயத் தகவல்கள்” (Post.10,337) -என்ற தலைப்பில் வெளியான கட்டுரையின் இரண்டாவது பகுதி இது.
ரிக் வேதத்திலும் அதர்வ வேதத்திலும் இதுவரை நான் 5 அதிசயங்களைக் கண்டுள்ளேன். அதர்வண வேதம் முழுதும் மாய , மந்திர, இந்திர ஜால (Magic) வித்தைச் செய்திகளாக உள்ளன. யஜுர் வேதத்திலும் மேலும் அதிசயச் செய்திகள் உள்ளன. ஆகவே தவளைகள் பற்றி மேலும் அதிசயச் செய்திகள் கிடை க்கலாம் .
இதுவரை நாம் கண்ட அதிசயங்கள் 4; அவையாவன
1. ரிக் வேதத்தில் வசிஷ்டர் பாடிய நகைச் சுவை மிகுந்த தவளைப் பாட்டு (RV 7-103). இதை அப்படியே கிரேக்க நாடக ஆசிரியர் அரிஸ்டோபனீஸ் காப்பி அடித்து கிரேக்க மொழியில் ஒரு நாடகம் செய்தார். இது உலக அறிஞர்கள் அனைவருக்கும் தெரிந்த செய்தி ; கம்பனும் இதே பாணியில் தவளை பற்றிப் பாடினான் (எனது முந்தைய கட்டுரைகளில் காண்க).
இரண்டாவது அதிசயம்- ரிக் வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் தகனக் கிரியைப் பாடல்கள் உள்ளன. அதில் ஒரு பாடலில் சடலத்தை எரித்த பின்னர் அங்கே பெண் தவளை ஒன்றை வைக்க வேண்டும் என்பதாகும் .
மூன்றாவது அதிசயம் – அதர்வண வேதத்தில் இருக்கிறது; சிவப்பு -நீல நிற நூலைக் கட்டி தங்கத்துடனும் ‘அவகா’ என்ற நீர்த் தாவரத்துடனும் கால் வாய் திறப்பு விழாவில் ஒரு தவளையை விட வேண்டும் என்று சொல்லி இருப்பதைக் கண்டோம்..
நாலாவது அதிசயம் — அதர்வண வேதத்தில் கண்வக்கா , கைமுக்கா , தஹூரி என்றெல்லாம் தவளைக்குப் பெயர் சூட்டும் மந்திரம் உள்ளது. இதை வெள்ளைக்காரர்கள் , ஒலி நயம் காரணமாக ரிஷிகள் பாடி மகிழ்ந்தனர் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டனர். ஆனால் நான் அது தவறு என்பதை அலிகி , விளிகி பாம்பு விஷயங்களைக் காட்டி விளக்கினேன்.
XXXX
இப்போது புதிய அதிசயத்துக்கு வருவோம்.
ஐந்தாவது அதிசயம்
மொழி இயல் (Linguistic researchers) பற்றி ஆராய்வோருக்கு சில விஷயங்கள் கண்களில் ‘சட்’டென்று பட்டு விடும்
ரிக் வேதத்தில் ‘ஸபா’ என்ற சொல் உள்ளது. அதை ‘அவை’ என்று மாற்றி தமிழர்கள் இன்றும் பயன்படுத்துகின்றனர். லோக் ஸபா, ராஜ்ய ஸபா என்பன தெயாத இந்தியர்கள் இருக்க முடியாது. அங்கே ‘ப’ என்பது தமிழில் ‘வ’ என்று மாறுகிறது. இன்றும் நாம் ‘பெங்கால்’ என்பதை ‘வங்கம்’ என்கிறோம் . இந்த மாற்றங்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே நடந்து இருக்கிறது!
இதே போல நாம் ‘ச’ என்று சொன்னால் கிரேக்க பாரசீக மொழிகளில் ‘ச’ கிடையாது; அதை அவர்கள் ‘ஹ’ என்பர். இதனால்தான் சிந்து நதிக்கரையில்’ அதற்கு அப்பாலும் வசித்த நம் எல்லோரையும் அவர்கள் ‘ஹி’ந்துக்கள் என்று எழுதிவிட்டனர் .
இந்துக்கள் ‘சக்தி’ என்றால் அவர்கள் ‘ஹக்தி’ என்பார்கள் . இதே பெயரில் எகிப்திலும் , கிரேக்க நாட்டிலும் சில தெய்வங்கள் உள்ளன. அவற்றில் கிரேக்க நாட்டு ‘ஹெகதி’க்கு நாம் ‘சக்தி’ பற்றி சொல்லிய வருணனைகள் பொருந்துகின்றன.
எகிப்து நாட்டில் ‘ஹெகதி’ Heqet, Heket என்ற தேவதைக்கு தவளை உருவம் கற்பித்துள்ளனர். அவளை குழந்தை பிறப்பதில் உதவவும் தேவதையாகவும் மகப்பேறு மருத்துவச்சி என்றும் பழைய எகிப்திய நூல்கள் வருணிக்கின்றன.
இப்போது நாம் பழைய விஷயங்களை ஒப்பிடுவோம் . சுடுகாட்டில் ஏன் இந்துக்கள், பெண் தவளையை வைத்தனர்? கால்வாயில் ஏன் இந்துக்கள் நீர் தாவரத்துடன் தவளையை விட்டு திறப்பு விழா நடத்தினர்?
இதற்கு விடை: மறு பிறப்பு, மறு மலர்ச்சி, (Rebirth, Reincarnation, Resurgence) புத்தெழுச்சி ஆகும் அதாவது தவளை முட்டையாக தோன்றி மீன் போல உருமாறி (தலைப் பிரட்டை Tadpole) நான்கு கால் தவளையாக உருமாறுகிறது. இது மறு பிறப்பைக் குறிக்கும். அது மட்டுமல்ல தவளைக்குள்ள அபூர்வ குணம் நீரிலும் வசிக்கும், நிலத்திலும் வசிக்கும். (Amphibian) கல்லுக்குள் தேரையாகவும் வசிக்கும் .அத்தோடு இந்துக்கள் நீர்த் தாவரத்தையும் கால்வாயில் விட்டனர். அந்த ‘அவகா’ தாவரத்தை இன்று லண்டன் முதலிய இடங்களில் அக்வேரியம் aquarium எனப்படும் மீன் காட்சி சாலைகளில் தண்ணீர் தொட்டிக்குள் காணலாம். இதன் அபூர்வ குணம் தண்ணீருக்குள் வளர்ந்து அதை சுத்தப்படுத்தும் . இதை அறிந்த வேத கால ரிஷிகள் இதையும் சேர்த்து கால்வாயில் விடச் சொன்னார்கள்.
தவளையின் இனப்பெருக்கத்தையும் (fertility) , அதன் உரு மாற்ற (Metamorphosis) குணத்தையும் கண்ட எகிப்தியர் இந்துக் கடவுளுக்கான ‘சக்தி’க்கு தவளை உருவத்தைக் கொடுத்து அதை ‘ஹெகதி’ (சக்தி என்றனர்)
இப்போதும் மேற்கு வங்கம் பீஹார் போன்ற இடங்களில் இந்துக்கள் ‘ஷஷ்டி’ Shasthi என்ற தேவதையாக வணங்கி வருகின்றனர். காலப்போக்கில் சஷ்டியில் (ஆறு என்பதன் சம்ஸ்கிருதம்) முருகன் வழிபாடு இருப்பதாலும், முருகனை 6 கிருத்திகைப் பெண்கள் வள ர்த்தத்தாலும் அதை ஸ்கந்தனுடனும் தொடர்பு படுத்தினர்.
தவளை உருமாற்றம் செய்வது போலவே இந்து தெய்வங்கள் உருமாற்றம் அடைவதையும் காணலாம் (Metamorphosis of Hindu Gods) . ஒரே பார்வதி தேவியை – ஒரே சக்தி அன்னையை- மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு பெயரில் அழைப்பதைக் காணலாம் – 51 சக்தி பீடங்களின் தேவி பெயர்களின் பட்டியலைப் பார்த்தால் இது உங்களுக்குத் புரியும். அத்தோடு local லோக்கல் கதைகளை இணைத்து தலபுராணமும் சொல்லுவார்கள். “கடவுள் ஒருவரே; அவரை பல குணங்களில் , பல ரூபங்களில் வணங்கலாம்”– என்பது இந்துக்கள் உலகிற்குக் கற்பித்த பாடம்.
இந்துக் கடவுளை வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்றோர், அதற்கு மொழி மாற்றம் காரணமாக புதிய உச்சகரிப்பை – புதிய நாமத்தை — புதிய கதைகளை உருவாக்கி லோக்கல்/ உள்ளூர் மக்களை கவர்கின்றனர் .
இதுதான் சக்தி – ஷஷ்டி ஆகி கிரேக்க நாட்டில் ஹெகதி ஆகிக் – எகிப்தில் தவளை ரூபா ஹெக்தி ஆக உரு மாறிய கதை.
அதர்வண வேத மந்திரம் ஒவ்வொன்றும் அற்புத விஷயங்களைச் சொல்கிறது. நம்முடைய முதல் கடமை வேதம் படித்தவர்களைப் பார்த்தால் அவர்கள் காலில் விழுந்து, தயவு செய்து இதை ஒலி மாறாமல் சொல்லி வாருங்கள்; நாங்கள் பிற் காலத்தில் அர்த்தம் சொல்கிறோம் என்று சொல்ல வேண்டும்!!
இன்று காலை நான் படித்த அதர்வண வேத ஐந்தாவது காண்டத்தின் முன்னுரையிலேயே, இதிலுள்ள 30 பாடல்களுக்கும் சாயனர் உரை எழுதவில்லை என்று எழுதி இருக்கிறார்கள். 700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சாயனருக்கே அர்த்தம் புரியவில்லையா? ஆராய்ச்சிகளைத் தொடர்வோம் .
–subham–
TAGS- எகிப்து, தவளை, தேவதை, கிரேக்க, ஹெகதி , சக்தி , அதர்வண வேதம், அதிசயங்கள்