போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோட! (Post No 2853)

 

 

books picture

Article written by london swaminathan

 

Date: 30 May 2016

 

Post No. 2853

 

Time uploaded in London :– 8-41 AM

 

(Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact : swami_48@yahoo.com

 

 

Devi_Bhagavata_S_4f3ca6ead5de8

மதுரையை விட்டு லண்டனுக்கு வந்து முப்பது வருடங்கள் உருண்டோடிவிட்டன. ஆனால் மதுரை நினைவுகள் மறைவதில்லை. குளிக்கும் போதும், சாப்பிடும்போதும் வரும் பழைய நினைவுகள் திடீரென்று சிரிப்பை உண்டாக்கும். என் மனைவி , ஏதோ அவளைப் பார்த்துதான் சிரிக்கிறேன் என்று நினைத்து என்ன சிரிப்பு? என்பாள். ஒன்றுமல்ல 30, 40 ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையில் நடந்ததை எண்ணி சிரிக்கிறேன் என்பேன். உங்களுக்கு என்ன பைத்தியமா? என்பாள்.

இதோ ஒரு பழைய, சுவையான சம்பவம்:–

 

எனது தந்தை வெ. சந்தானம் மதுரை தினமணிப் பதிப்பு துவங்கிய காலத்திலிருந்து மதுரை தினமணிப் பத்திரிக்கையின் செய்தி ஆசிரியராக இருந்தார். சுதந்திரப் போராட்ட தியாகி; காமரஜருடன் சிறையிலிருந்தவர். ஆகையால் அந்தக் கால மனிதரைப் போலவே கதர் ஜிப்பா அணிவார். பணம், புகழ் முதலிய ஆசைகள் கிடையாது. அவருக்குப் பொழுது போக்கு புத்தகம் சேகரித்தல், படித்தல், உரையாற்றுதல்; குறிப்பாக ஆன்மீக விஷயங்களில்.

 

வீட்டிற்கு நா. பார்த்தசாரதி, கி.வா.ஜ. ஏ.கே. செட்டியார், குன்றக்குடி அடிகளார், சாலமன் பாப்பையா போன்றோர், பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர்கள் எனப் பலரும் வருவர். அவர்கள் அமரும் முதல் அறையில் இரண்டு ‘காத்ரேஜ்’ பீரோக்கள் உண்டு. பேச்சு வாக்கில் ஏதேனும் புத்தகத்தை எடுக்க அந்த இரும்பு/எஃகு பீரோவைத் திறப்பார். அதில் பழுப்பேறிய புத்தகங்கள் இருப்பதைப் பார்த்து வந்தவர்கள் ‘கொல்.லென்று சிரித்து விடுவர்!

 

“என்ன சார்! இது? அவனவன் காத்ரேஜ் பீரோவுக்குள் தங்க நகை, பணப்பெட்டி, பட்டுப்புடவை என்று வைத்திருப்பான். நீங்கள் பழுப்பேறிய புத்தகங்களை வைத்திருக்கிறீர்கள்? என்பார்கள். என் தந்தையோ பதில் சொல்லாமல் புன்சிரிப்பை மட்டும் உதிர்ப்பார். அவர் விட்டுச் சென்ற 6000 புத்தகங்களை, நாங்கள் சகோதர்கள் பிரித்தெடுத்துக் கொண்டு இன்றும் அனுபவித்து வருகிறோம்.

 

ஒரு நாள், என் தந்தையின் சகா (தினமணி உதவி ஆசிரியர்) ஒருவர் வீட்டிற்கு வந்தார். வழக்கம் போல இலக்கிய, தெய்வீக, தேசீய தலைப்புகளில் சம்பாஷணை நீடித்தது. தேவி பாகவதம் பற்றிப் பேச்சு வந்தவுடன் வந்தவர் சொன்னார், “எனக்கும் படிக்க ஆசை. நல்ல புத்தகம் எங்கே கிடைக்கும் “ என்றார்.

 

உடனே பீரோவைத் திறந்து, இது நல்ல பதிப்பு. இதைப் படி” என்று சொல்லிக் கொடுத்துவிட்டார். அவர் நல்ல மனிதர். ஒரு சத்திய சந்தர். ஆனால் அவரது சகோதரர் அப்படியில்லை. “கெட்ட மனிதர்”; அதாவது சிகரெட் குடிப்பார். அந்தக் காலத்தில் பிராமணர்கள் மீசை வைத்துக் கொண்டாலோ, சிகரெட் குடித்தாலோ, பெண் கூட கொடுக்க மாட்டார்கள்!!!!!

 

தேவி பாகவதம் இரவல் கொடுத்து பல மாதங்கள் கழிந்தன. நாங்கள் எங்கள் தந்தையுடன் வழக்கம்போல ‘புத்தக வேட்டை’யாட பழைய புத்தகக்கடைக்குச் என்றோம். மதுரை தெற்குச் சித்திரை வீதியில் அக்காலத்தில் இருந்த பழைய புத்தகக்கடைகளில் என் தந்தைக்கு தனி மதிப்பு. என் தந்தை வரும் நாட்களில் அவர்களுக்கு நல்ல வரும்படி உண்டு. ஒரு ரிக்க்ஷா வண்டி நிறைய புத்தகங்கள் வாங்கி வருவார். பழைய புத்தகக் கடைக்குள் நுழைய எங்களுக்கு முழு அனுமதி உண்டு. நாங்களும் நேரத்தை வீணடிக்காமல், அங்கே படியில் அமர்ந்து, அம்புலி மாமா பிரதிகளை எடுத்துக் கொண்டு, மூன்று மந்திரவாதிகள், டனால் கோட்டை, வால் நட்சத்திரம் முதலிய தொடர்கதைகளைப் படிப்போம்.

இவ்வாறு புத்தகங்களைப் புரட்டும்போது திடீரெனக் கண்ணில்பட்டது தேவி பாகவதம். அது என் தந்தை கையெழுத்துடன், அவர் ரப்பர் ஸ்டாம்புடன் இருந்தது. பழைய புத்தகக்கடைக்காரரிடம் இது என்ன விலை? என்று சிரித்துக் கொண்டே விலையைக் கேட்டார். அவன் சொன்ன விலையைக் கொடுத்து அதை வீட்டுக்கும் கொண்டுவந்தார். பழைய புத்தகக் கடைக்காரருக்குத் தெரியாது எங்கள் வீட்டுப் புத்தகம்தான் இரவல் கொடுக்கப்பட்டு, வட துருவம், தென் துருவம் எல்லாம் பயணம் செய்து, பின்னர் அங்கே விற்கப்பட்டது என்பது.

 

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை? யார் இரவல் வாங்கினாரோ அவரது ‘கெட்ட’ சகோதரர், சிகரெட்டுக்கு காசு வேண்டி அந்தப் புத்தகத்தை அங்கே விற்றிருக்கலாம் என்று நாங்கள் பேசிக்கொண்டோம்.

 

போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோட என்று சொல்லுவதைவிட,

“போன புத்தகம் திரும்பி வந்தது புது மணத்தோட” என்று சொல்லுவது சாலப் பொருந்தும்.

–சுபம்–

திருடர்கள் இரண்டு வகை! ஞானம் இரண்டு வகை (Post No.2790)

obbery324-600

Compiled by london swaminathan

Date: 7 May 2016

Post No. 2790

Time uploaded in London :– 12-56

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
திருடர்களைப் பற்றி ஒரு சம்ஸ்கிருத பழமொழியைப் படித்தேன். உடனே இந்திய அரசியல்வாதிகள், குறிப்பாக தமிழ்நாட்டுக் கட்சிகளின் அரசியல்வாதிகளின் படம் என் மனக் கண் முன்னால் ஓடியது. நீங்களும் படியுங்கள்; பகற்கொள்ளையர்களின் படங்கள் உங்கள் கண்களுக்கு முன்னால் தெரியும்:–

“ப்ரகாசாஸ்ச அப்ரகாசாஸ்ச த்வி வித அஸ்தி தஸ்கரா: ஸ்ம்ருதா:” (திருடர்கள் இரண்டு வகை என்று சொல்லப்படுகிறது; தெரிந்தும், தெரியாமலும் (ஒளிந்து) திருடுபவர்கள்)

பகல் ஒளியில் பகிரங்கமாகத் திருடுபவர்கள் (ப்ரகாச), இருட்டில் யாருக்கும் தெரியாமல் திருருடுபவர்கள் (அப்ரகாச) என்று இரண்டு வகை! திருடர்களைக் கூட அக்காலத்திலேயே வகைப்படுத்தியது மட்டுமின்றி திருடர்கள், திருட்டுத்தொழில் பற்றி ஒரு சம்ஸ்கிருத நூலும் உள்ளது!

 

1900 வேதபாடசாலை

ஞானம் இரண்டு வகை
ஞானம் து த்வி விதம் ப்ரோக்தம் சாப்திகம் ப்ரதமம் ஸ்ம்ருதம்
அனுபவாக்யம் த்விதீயந்து ஞானம் தத் துர்லபம் ந்ருப
–தேவீ பாகவதம் 15-52
ஞானம் இரண்டு வகையாகச் சொல்லப்படுகிறது: 1. முதலாவது, வேத சாஸ்திரம் மூலம் கிடைக்கும் அறிவு (சாப்திகம்= சப்தம்/ஒலி மூல அறிவு) 2.இரண்டாவது, அனுபவ அறிவு, அதாவது பட்டறிவு. அரசனே! இவை இரண்டும் அரிதானவை.

என்னதான் படித்தாலும் அனுபவ அறிவுக்கு ஈடாகாது. அதனால்தான் ‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது’ என்றனர். ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்ற பழமொழியும், மருத்துவம், ஜோதிடம் போன்ற தொழில்களில் அனுபவ அறிவே முக்கியம் என்பதைக் காட்டுகிறது.

 

படிப்பறிவு மூலம் மட்டும் ஒருவன் ஞானியாவதல்ல. விட்டகுறை தொட்ட குறையாக – பூர்வ ஜன்ம புண்ணியம் காரணமாக—ஞான வேட்கை இருப்பவனே ஆன்மீகப் பாதையில் அடிவைக்கிறான். பின்னர் குரு மூலம் சந்தேகம் தெளிகிறான்.அப்போது மேலும் மேலும் பல நூல்களைக் கற்கிறான் அல்லது கேட்டு அறிகிறான்.

asceticww2

–Subham–

18 புராணங்களையும் நினைவில் கொள்ள ஒரு ஸ்லோகம்

bhajan sippla

Written By S.Nagarajan
Post No.1145; Dated 3rd July 2014.

This is from the book Purana Thulikal (Honey Drops from the Puranas)- Part 2 written by my brother S Nagarajan. Part 1 and Part 2 are already published by nilacharal in e book formats for sale:- swami.

18 புராணங்களின் பெயர்களையும் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள ஒரு ஸ்லோகம் உள்ளது.

மத்வயம் பத்வயம் சைவ ப்ரத்ரயம் வசதுஷ்டயம் I
அனாபலிங்ககூஸ்கானி புராணானி ப்ருதக் ப்ருதக் II

இந்த ஸ்லோகத்தின் பொருள் :- இரண்டு ‘ம’, இரண்டு ‘ப’, மூன்று ‘ப்ர’, நான்கு ‘வ’ மற்றும் ‘அ’,’நா’.’ப’, ‘லிங்’, ‘க’, ‘கூ’,’ஸ்கா’ ஆகியவையே புராணங்களாகும்.

இரண்டு ‘ம’ என்பது மகாரத்தில் ஆரம்பிக்கும் மத்ஸ்ய மற்றும் மார்க்கண்டேய புராணத்தைக் குறிக்கும்.
இரண்டு ‘ப’ என்பது பகாரத்தில் ஆரம்பிக்கும் பவிஷ்ய மற்றும் பாகவத புராணத்தைக் குறிக்கும்.
மூன்று ‘ப்ர’ என்பது ப்ர-வில் ஆரம்பிக்கும் ப்ரஹ்ம, ப்ரஹ்மாண்ட மற்றும் ப்ரம்மவைவர்த புராணத்தைக் குறிக்கும்.
நான்கு ‘வ’ என்பது வகாரத்தில் ஆரம்பிக்கும் வராஹ, விஷ்ணு, வாயு, மற்றும் வாமன புராணத்தைக் குறிக்கும்.
‘அ’ என்பது அக்னி புராணத்தைக் குறிக்கும்.
நா’ என்பது நாரதீய புராணத்தைக் குறிக்கும்.
‘ப’ என்பது பத்ம புராணத்தைக் குறிக்கும்.
‘லிங்’ என்பது லிங்க புராணத்தைக் குறிக்கும்.
‘க’ என்பது கருட புராணத்தைக் குறிக்கும்.
‘கூ என்பது கூர்ம புராணத்தைக் குறிக்கும்.
‘ஸ்கா’ என்பது ஸ்கந்த புராணத்தைக் குறிக்கும்.

ஆக இப்படி 18 புராணங்களையும் நினைவில் கொள்ள ஒரு சிறிய ஸ்லோகத்தை நினைவில் வைத்திருந்தால் போதும்.
காலம் காலமாக வழங்கப்பட்டு வரும் ஸ்லோகம் இது.

தேவி பாகவதத்தில் முதல் ஸ்கந்தத்தில் மூன்றாம் அத்தியாயத்தில் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் இந்தக் குறிப்பு இடம் பெறுகிறது.

***********

pbaaea095_sage_ved_vyasa

இரண்டாம் பகுதி
புராணத் துளிகள்

பல லட்சம் ஸ்லோகங்கள் அடங்கிய 18 புராணங்களையும் , உப புராணங்களையும் சம்ஸ்கிருத மொழியில் படிப்பதற்கு ஒரு ஆயுள் போதாது. அதை முறையாக விளக்குவதற்கு போதிய பண்டிதர்கள் இல்லை. வாய்ப்புகள் குறைந்து விட்ட இந்த நாட்களில் முக்கிய சில பகுதிகளையாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பலருக்கும் உண்டு. அவர்களின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் முதல் பாகம் நிலா பப்ளிஷர்ஸ் மூலம் வெளியானது. இதோ இரண்டாம் பாகம்!

பிரம்மாவின் வம்சம்

மரீசி,நாரதர்,அத்திரி,புலஸ்தியர்,புலகர்,கிருது,தக்‌ஷன், வசிஷ்டர் ஆகிய அனைவரும் பிரம்மாவின் பிரசித்தரான புத்திரர் ஆவர்.இவருள் மரீசி காஸ்யபரைப் பெற்றார்.தக்ஷனுடைய பதிந்மூன்று பெண்கள் அவருக்கு மனைவியர் ஆவர்.அப்பெண்கள் வழியாக தேவாசுரர் உண்டாயினர்.ஏனைய மானுடர்,மிருகங்கள், சரபங்கள் முதலில பலவகை சாதி பேதங்களாயுள்ள உயிர்கள் எல்லாம் உண்டாயின.பிரம்மனுடைய சரீரத்தில் வலப்பாதியில் “ஸ்வாயம்பு மநுவும்” இடப்பாதியில் “சதரூபி” என்கிற பெண்ணும் உண்டாயினர். சதரூபி என்பவளுக்குப் பிரியவிரதன், உத்தானபாதன் என்கிற இரண்டு பிள்ளைகளும், அதிக சுந்தரிகளாக உள்ள மூன்று பெண்களும் பிறந்தார்கள்.இவ்வண்ணம் பிரம்ம வம்சம் விருத்தியானது.
-ஜனமேஜய மஹாராஜனிடம் வியாஸர் கூறியது
தேவி பாகவதம் மூன்றாம் ஸ்கந்தம் அத்தியாயம் 13

chaitanyam

சுகம் எது, துக்கம் எது? சத்ரு எவர், நண்பர் எவர்?

சுக முனிவர் மிதிலை நகருக்கு வந்த போது துவாரபாலகன் ஒருவன் அவரிடம் சுகம் எது, துக்கம் எது, சத்ரு எவர், நண்பர் எவர், சுபத்தை வேண்டுபவனால் செய்யத் தக்கது என்ன, இவற்றை நன்றாகச் சொல்ல வேண்டும் என்று கேட்க சுகர் இப்படி பதில் கூறுகிறார்:-

எல்லா உலகத்திலும் இரண்டு விதமிருக்கிறது. அதிலிருக்கும் பிரஜைகளும் ராகி, விராகி என்று இரண்டு விதமாக இருக்கின்றனர்.
அவர்களுதைய சித்தமும் இரண்டு விதம்.

இவைகளுள் விராகி என்பவர் அறிந்தவர், அறியாதவர்,அறிந்தும் அறியாதவர் என மூன்று விதமாய் இருப்பர்.

ராகி என்பவர் மூர்க்கர், சதுரர் என இரண்டு விதமாயிருப்பர்.
அந்தச் சதுர்ப்பாடு சாஸ்திர விசாரத்தால் வருவதாகிய சாமர்த்தியம், புத்தி சூக்ஷ்மத்தால் வருவதாகிய சாமர்த்தியம் என இரு வகைப்படும்.

அந்த புத்தியானது யுக்தம், அயுக்தம் என இரு வகைப்படும்.

இதைக் கேட்ட துவாரபாலகன், தான் அர்த்த ஞானமுடையவன் இல்லை என்று கூறி சுகர் கூறிய சொற்களுக்குப் பொருளை விளக்குமாறு வேண்டுகிறான். உடனே சுகர் விளக்கத்தை அளிக்கிறார் இப்படி:-

“எவனுக்கு சம்சாரத்தில் விருப்பம் இருக்கிறதோ அவன் ராகி எனப்படுவான். அவனே எல்லாவற்றிலும் மோகம் அடைகின்ற மூர்க்கன். அவனுக்குச் சுக துக்கங்கள் அநேக விதமாய் இருக்கின்றன. என்னவென்றால், தனம், புத்திரன்,செல்வம், மனைவி,மானம், விஜயம் முதலியவற்றையும் காரிய சாதனத்தையும் பெறுவதனால் சுகமும், அதைப் பெறாததால் துக்கமும், நிமிஷம் தோறும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கின்றன. அவனது செய்கை எல்லாம் சுகத்தை அடைய வேண்டுமென்கிற விருப்பத்தை உடைத்தாய் இருக்கிறது.

அச் செய்கைகளுக்கு மாறான செய்கைகளைச் செய்து தடைப்படுத்துகிறவன் சத்ருவாகின்றான். அச்செய்கைக்குச் சாதகனாய் இருக்கிறவன் நண்பனாகிறான்.

விராகி, விஷய சுகங்களொன்றிலும் ஆசை வைக்காமல் ஏகாந்தத்தில் வேதாந்த விசாரம் செய்து ஆத்ம சுகத்தை அநுபவித்துக் கொண்டிருப்பான். அவனே மோகம் அடையாத பண்டிதன். அவனுக்கு சம்சார வாழ்க்கையின் சுகம் எல்லாம் துக்ககரமாகவே இருக்கும்.

ஆயினும் அப்படி ஆத்ம சுகத்தை நாடுகின்றவனுக்குக் காம குரோத லோப மத மாச்சரியம் முதலிய கொடிய சத்துருக்கள் பலருண்டு. இப்படிப்பட்ட சத்துருக்களால் பீடிக்கப்பட்டிருப்பவனுக்கு பந்து, சந்தோஷம் என்பவன் ஒருவனே! அவனைத் தவிர வேறொருவரும் மூன்று உலகிலும் இல்லை.”

இப்படி சுகர் கூறியதைக் கேட்ட துவாரபாலகன் அவர் ஞானி என்று எண்ணி அவரை நகருக்குள் செல்ல அனுமதி அளிக்கிறான்.

தேவி பாகவதம் முதல் ஸ்கந்தம் அத்தியாயம்

To be continued………………….

வேதத்தில் கபிஞ்ஜலா பறவை மர்மம்!

kapinjala2

Written by London Swaminathan
Post No 1061; Dated 24th May 2014.
(This article is posted in English already)

“ரிக் வேதத்தில் ஒரு பறவைப் பாட்டு” என்ற கட்டுரையை நேற்று வெளியிட்டேன். அதனுடைய இரண்டாவது பகுதி இது.

கபிஞ்ஜலா என்ற பறவையை சாதகப் பட்சி என்று பிற்கால இலக்கியங்கள் வருணித்தன. தமிழர்கள் இதை ‘துளி நசைப் புள்’ –(மழைத் துளிகளுக்காக ஏங்கும் பறவை)– என்று புறநானூற்றிலும் ஏனைய சங்க இலக்கிய நூல்களிலும் வருணித்து இருப்பதை முதல் பகுதியில் கண்டோம்.
இந்தப் பறவை பற்றி இரண்டு சுவையான கதைகள் பிற்கால இலக்கியத்தில் உள்ளன. அவைகளை அறிந்தால், உலகின் மிகப் பழைய மதப் புத்தகமான ரிக் வேதத்தில் இதை ஏன் இந்திரனுக்கு ஒப்பிட்டனர் என்பது விளங்கும்.

2400 ஆண்டுகளுக்கு முன்னர் பௌத்தர்கள் 547 ஜாதகக் கதைகளைத் தொகுத்தனர். இவை ஒவ்வொன்றிலும் போதிசத்வர் (புத்தர்) முன் ஜன்மத்தில்என்ன மிருகமாக, பறவையாக, அரசனாக, தொழிலாளியாகப் பிறந்தார் என்று கதை ரூபத்தில் இருக்கும். ஆனால் உண்மையில் இவை எல்லாம் இந்து மதக் கதைகள். பௌத்த மதத்தைப் பரப்புவதற்காக பஞ்ச தந்திரக் கதைகள், ராமாயண, மஹாபாரத, புராணக் கதைகள் முதலியவற்றை ‘’பவுத்தமயமாக்கி’’ வெளியிட்டனர். அதாவது கதையை கொஞ்சம் மாற்றி தந்திரமாக வெளியிட்டனர். அகத்தியர் வரலாற்றைக் கூட இதில் ‘’அகித்தி’’ என்று பெயரை மற்றி எழுதி வைத்துள்ளனர். இந்த ஜாதகக் கதைகளில் மேலும் கொஞ்சம் மாற்றம் செய்து திபெத்தியர்கள் வெளியிட்டனர்.

பூர்வ ஜாதகக் கதைகளில் தித்திரி ஜாதகம் என்று உள்ளதை திபெத்தியர்கள் கபிஞ்ஜலா ஜாதகம் என்பர். தித்திரி என்பதை தமிழில் தத்தை (கிளி) என்பர். கபிஞ்ஜலா என்பது சாதகப் பட்சி என்று நான் எழுதியுள்ளேன். இதற்கு காளிதாசன் படைத்த மேகதூதக் காவியத்தில் இருந்து சகுனம் (புள் நிமித்தம்) பற்றிய நம்பிக்கைகளை ரிக் வேதக் கவிதையுடன் (ரிக் 2-42, 2-43) ஒப்பிட்டும் காட்டினேன்.

இனி சுவையான திபெத்திய ஜாதகக் கதையைக் காண்போம்:
kapinjala

புத்த ஜாதகக் கதை

முன்னொரு காலத்தில் ஒரு காட்டில் பெரிய ஆலமரம் இருந்தது. ஒரு யானை வந்து அதன் இலைகளைத் தின்றுகொண்டு அதன் நிழலில் வசித்தது. அதற்குப் பின் அங்கே ஒரு குரங்கு வந்து தங்கியது. உடனே யானை எதிர்ப்பு தெரிவித்தது. நான் தான் முதலில் வந்தேன் என்று அதற்குக் காரணமும் சொன்னது. குரங்கு கேட்டது, ’இந்த மரத்தின் பழங்களை நீ பார்த்து இருக்கிறாயா?’. யானை நான் பார்த்ததில்லை என்று சொன்னது. அப்படியானால் நான் உனக்கு முன்னால் வந்தேன். அந்த பழங்களை எல்லாம் சாப்பிட்டேன். இப்போது இலை மட்டுமே எஞ்சியிருக்கிறது. உடனே யானை. ‘’குரங்காரே நீரே மூத்தவர். நாம் இருவரும் சேர்ந்து வாழ்வோம்’’ என்று சொன்னது.

கொஞ்ச நாள் கழித்து ஒரு முயல் வந்து அங்கே உட்கார்ந்தது. யானையும் குரங்கும் ஆட்சேபம் தெரிவித்தன. முயல் கேட்டது, ‘’நீங்கள் இந்த மரத்தின் கன்றைப் பார்த்தது உண்டா?’’ என்று. அவை இரண்டும் இல்லை என்று சொன்னவுடன், ‘’நான் வந்த போது மரக் கன்றுதான் இருந்தது. என் உயரம்தான் மரமே வளர்ந்து இருந்தது. ஆகையால் இந்த மரம் எனக்கே உரியது’’ என்றது. யானையும் குரங்கும் அதனை நண்பனாக ஏற்று நீயே, ‘சீனியர்’. நாங்கள் உன்னுடன் வாழ்கிறோம் என்றன.

இவர்கள் இப்படிப் பேசி முடிப்பதற்குள் மரத்தின் உச்சியில் இருந்து கபிஞ்ஜலா பறவை கூச்சல் போட்டது. ‘’நிறுத்துங்கள், உங்கள் பேச்சை. நான் பழம் தின்று ஒரு கொட்டையைத் துப்பினேன் அதுதான் இந்த மரமாக வளர்ந்தது’’ என்றவுடன் யானை, குரங்கு, முயல் ஆகிய மூன்றும் அந்தப் பறவையின் தலைமையை ஏற்றுக் கொண்டு சுகமாக நண்பர்களாக வாழ்ந்தன. ‘’இந்த நாலு பேரில் கபிஞ்ஜல பறவை என்பது புத்தரின் முந்தைய பிறப்பில் போதிசத்துவர்’’ — என்று கதை முடிகிறது.
ஆக கபிஞ்ஜல என்பது புத்தர். இப்படிப் பறவையை ஆன்மாவுக்கு ஒப்பிடுவது புத்தருக்கும் முந்தைய உபநிஷத்துகளிலேயே இருக்கிறது வள்ளுவனும் ஆத்மாவை பறவைக்கு ஒப்பிடுவான்:
குடம்பை தனித்து ஒழியப் புள் பறந்தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு (338)
(குடம்பை= கூடு, புள்=பறவை).

paint kapinjala

தேவிபாகவதக் கதை

தேவிபாகவதத்தில் ஆறாவது பகுதியில் விருத்ராசுரனை இந்திரன் வதை செய்த கதை உள்ளது. மூன்று தலைகளை உடைய விஸ்வரூபனை இந்திரன் கொன்றபோது ஒரு தலையில் இருந்து கபிஞ்ஜலப் பறவையும், மற்றொன்றிலிருந்து குருவிகளும், மூன்றாவது தலையில் இருந்து கிளிகளும் வந்ததாக தேவி பாகவதம் கூறும். இவைகள் சோம பானம், சுராபானம், அன்னம் ஆகியவற்றைச் சாப்பிட்ட மூன்று தலைகள் என்றும் அவை முறையே தேவர், அசுரர், மனிதர் ஆகியோரைக் குறிப்பதாகும் என்றும் அறிஞர்கள் விளக்கம் தருவர். இதற்குப் பின்னர் விருத்திராசுரனை அவனது தந்தை யாகத் தீயில் இருந்து உருவாக்கவே, விருத்திரனையும் இந்திரன் கொல்கிறான்.

ஆக இந்த இரண்டு கதைகளிலும் ஒரு ஒற்றுமையைக் காணலாம். கபிஞ்ஜல பறவை என்பது தேவர் (கடவுள்). அதுதான் உயர்ந்தது. இது க்ருத்சமடர் பாடிய ரிக்வேதப் பாடலில் உள்ள கருத்து. இந்த வேதக் கதையையே பிற்காலத்தில் பர்த்ருஹரி, காளிதாசன், சங்ககால தமிழ்ப் புலவர்கள், பௌத்தர்கள், தேவிபாகவதம், ஆதிசங்கரர், ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆகியோர் சாதகப் பட்சி என்ற பெயரில் பயன்படுத்தினர்.

ஆன்மீகத்தின் உச்சநிலையை நாடும் ஞானியைக் குறிக்கவோ, கடவுளைக் குறிக்கவோ கபிஞ்ஜல பறவையை உவமையாகப் பயன்படுத்தினர். இந்த நோக்கில் ரிக் வேதப் பாடலைப் பார்த்தோமானால் உண்மை புலப்படும். மேலோட்டமாகப் படித்தால் அது ஒரு அழகான பறவைப் பாட்டு!
பெரிய தத்துவங்களைப் போதிக்க இயற்கையில் உள்ள பறவைகள், மிருகங்கள், ஆறு, மலை முதலியவற்றைப் பயன்படுத்துவதை உபநிஷத காலத்தில் இருந்தே காண முடியும்.

இது தொடர்பாக முன்னர் வெளியான கட்டுரைகளையும் படிக்கவும்:
1.இயற்கை போதிக்கும் 13 பாடங்கள், 2.காடுகள் பற்றி கேள்வி- பதில், 3.சிந்துசமவெளியில் அரச மரம், 4. சோம பானமும் சுரா பானமும் 5. காளை வாகனம் எப்படிக் கிடைத்தது? 6.கா கா! கா கா!! 7.கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசனை 8.சிந்து சமவெளியில் ஒரு புலிப் பெண் 9.தேள் தெய்வம் 10. எந்தக் கடவுளுக்கு என்ன வாகனம் 11. சங்க இலக்கியத்தில் வாகனங்கள் 12. உலகம் முழுதும் இந்து வாகனங்கள் 13. வாகனங்கள் தோன்றியது எங்கே? 14. நீண்டகாலம் வாழும் ரகசியம் 15.சுமேரியாவில் தமிழ் பறவை 16.அதிசய பறவைத் தமிழன் 17.மழை அற்புதங்கள் 18.பாம்புராணி 19.அருகம்புல் ரகசியங்கள் 20.சிட்டுக் குருவியிடம் பாரதி அற்ற பாடங்கள் 21.இளநீர் மகிமையும் தென்னையின் பெருமையும் 22.நாலு கடல் நீரில் ஒரே நாளில் குளிக்கமுடியுமா? 23.யானை பற்றி நூறு பழமொழிகள் 24.நல்லோர் அவைபுக்க நாகமும் சாகா 25.கிணற்றுத் தவளை: அப்பரும் விவேகாநந்தரும் சொன்ன கதைகள் 26.கொக்கைப்போல இருப்பான், கோழிபோல இருப்பான் 27. திருமூலர் சொன்ன யானைக் கதை 28. வேதத்தில் வெள்ளரிக்காய் 29.சப்தம் கேட்டால் இறந்துவிடும் அசுணமா
3 proportions

ஆங்கிலக் கட்டுரைகள்:
The connection between William Wordsworth and Dattatreya (posted 10 November 2011), 13 saints in nature (posted on 7 November 2013)
The Mysterious Vedic Homa Bird: Does it Exist? (posted on 10 December 2011), Can Birds Predict your Future?, Hindu Eagle Mystery Deepens (Posted on 16-2-2013), A Tamil bird in Sumerian Double headed Eagle in Sumeria, Double Headed Eagle: Sumerian- Indian Connection, Karikal Choza and Eagle Shaped Fire Altar, Bird Migration in Kalidasa and Tamil Lterature, Friends of Birds, Four Birds in One Sloka, Can Parrots recite Vedas?, Gods and Birds