பசுவின் வால் வேண்டுமா? நாயின் வால் வேண்டுமா? (Post No. 4359)

Written by London Swaminathan

 

Date: 2 NOVEMBER 2017

 

Time uploaded in London- 11-26 AM

 

 

Post No. 4359

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

சொல்ல வரும் ஒரு கருத்தை மனதில் பதியுமாறு சொல்ல வல்லவர்கள் நம் தமிழ்ப் புலவர்கள்; வீட்டில் கிளிபோல ஒருத்தி இருக்க வெளியே காகம் போன்ற ஒருத்தி வேண்டுமா? பசுவின் வாலைப் பிடித்துக் கொண்டு ஆற்றைக் கடக்க விரும்புகிறீர்களா அல்லது நாயின் வாலைப் பிடித்துக் கொண்டு ஆற்றைக் கடக்க விரும்புகிறீர்களா? என்று நீதி வெண்பாப் புலவர் கேட்கிறார்.

 

நீதி வெண்பாப் பாடல்களை எழுதியவர் யார் என்பது யாருக்கும் தெரியாது. அதனால் என்ன? பாடல் புரிந்தால் போதுமே!

உற்றபெருஞ் சுற்ற முறநன் மனைவியுடன்

பற்றிமிக வாழ்க பசுவின் வால் — பற்றி

நதிகடத்த லன்றியே நாயின் வால் பற்றி

நதிகடத்த லுண்டோ நவில்

 

பசு மாட்டின் வலைப் பிடித்துக்கொண்டு நீர் நிரம்பிய ஆற்று வெள்ளத்தை கடப்பதல்லாமல், ஒரு சிறு நாயின் வாலைப் பிடித்துகொண்டு ஆற்றைக் கடந்து செல்லல் முடியுமோ, நீயே சொல். அதுபோல பெருமையான நல்ல உறவினர்கள் தன்னைச் சூழ்ந்திருப்ப ஒருவன் தனக்கு வாய்த்த நல்ல மனைவியுடன் அன்புகொண்டு வாழக் கடவன்.

 

வியாக்கியானம்: நல்ல சுற்றத்தார் வினைவகையால் நேர்வராதலின் உற்ற பெருஞ் சுற்றம் என்றார் அஃதாவது நாமே இப்பிறவி முயற்சியால்  சேர்த்துக்கொள்ளல் இயலாதென்பது. பெருஞ்சு ற்றமென்றது, நல்ல தன்மைகளிற் பெருமை மிக்க உறவினரை; ஏனென்றால் அவருடைய பண்புகளே வாழ்க்கையாற்றைக் கடக்க உதவுமாதலின், வாழ்க்கையை இப்பாட்டில் ஆறாக உருவகப்படுத்தினார்.

 

நல்ல மனைவி

 

கடினமான வாழ்க்கையை கடந்து செல்ல துணையாக இருப்பவள் மனைவி; அவள் தன் கணவனின் விருப்பு, வெறுப்புகளை, நெருங்கிப் பழகுவதால் அறிந்து கொண்டு, அவன் இயல்புக்கும் ஆற்றலுக்கும் ஏற்ப இடனறிந்து, இடுக்கண் களைந்து, துணை புரிபவள் ‘நன்மனைவி’ .

 

மனைவியும் நெஞ்சொத்தவளாயிருத்தல் வேண்டுமென்பதால் நல்ல மனைவி என்ற அடையொடு சேர்த்துக் கூறினார். கணவனும் மனைவியும் தமக்குள்ள ஒருமைப் பாட்டினாலேயே எடுத்த வேலையை முடிக்கப் பெறுதல் வேண்டுமென்பது,

காதன் மனையாளுங் காதலனும் மாறின்றித்

தீதிலொருகருமம் செய்பவே

என்னும் நன்னெறிச் செய்யுளாலுந் தெளியப்படும்; மனைவி கணவனைப் பாதுகாக்கும் கடமையுடையவள் என்பது,

 

தற்கத்துத் தற்கொண்டாள் பேணித் தகை சான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண் (56)

 

-என்னும் திருக்குறளிற் கண்டுகொள்க

 

பொருள்:– கற்பு நெறி தவறாமல் தன்னைக்காத்து, தன் கணவனையும் பேணி, தகுதி வாய்ந்த குடிப்பெருமையையும் போற்றிப்  பாதுகாத்து, எக்காலத்தும் மனச் சோர்விலாமல் வாழ்ப்பவளே பெண் எனப் போற்றுதலுக்குரியவள்.

நாலடியார், திருக்குறள் ஆகியவற்றில் பிறர் மனை நயவாமை குறித்துள்ள செய்யுட்களையும் படித்து ஒப்பிடுக.

 

சுபம், சுபம்–