31 நாலடியார் பொன் மொழிகள் (Post No.4785)

 

31 நாலடியார் பொன் மொழிகள் (Post No.4785)

Written by London Swaminathan 

 

Date: 25 FEBRUARY 2018

 

Time uploaded in London – 17-40

 

Post No. 4785

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

மார்ச் 2018  ‘நற்சிந்தனை’ காலண்டர்

(ஹேவிளம்பி- மாசி/ பங்குனி மாதம்)

இந்த மாத காலண்டரில் நாலடியார் நானூறு என்னும் நீதி நூலில் இருந்து 31 பொன்மொழிகளைத் தந்துள்ளேன். படித்து இன்புறுக.

 

முக்கிய விழாக்கள் – மார்ச் 1 ஹோலி, மாசி மகம் ;  14-காரடையான் நோன்பு; 18- யுகாதி/ தெலுங்கு வருஷப் பிறப்பு, வஸந்த பஞ்சமி ஆரம்பம்; 22- வஸந்த பஞ்சமி; 25- வஸந்த பஞ்சமி முடிவு, ஸ்ரீ இராமநவமி, ஷீர்டி சாய் பாபா பிறந்த தினம்; 29- மஹாவீர் ஜயந்தி’;  30- புனிதவெள்ளி, பங்குனி உத்திரம்.

பௌர்ணமி– 1, 31; அமாவாசை– 17  ; ஏகாதஸி விரதம்-13, 27;

சுப முகூர்த்த தினங்கள்:- 4, 5, 26, 30

 

 

 

மார்ச் 1 வியாழக்கிழமை

 

பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க,அகடுற யார் மாட்டு நில்லாது செல்வம் சகடக்கால் போல வரும் (காளை உழுது பெற்ற உண்வை பகுத்து உண்க; செல்வமானது, நடு நிலையுடன், வண்டிச் சக்கரம் போல மாறி மாறி வரும்)

மார்ச் 2 வெள்ளிக்கிழமை

 

நின்றன நின்றன நில்லாவென உணர்ந்து

ஒன்றின ஒன்றின வல்லே செயிற் செய்க (நிலையாக இருக்கும் என்று எண்ணப்பட்டவை நிற்காது; ஆகையால் உங்களுக்குப் பொருந்திய அறப்பணிகளை உடனே செய்க)

 

மார்ச் 3 சனிக்கிழமை

அறம் செய்து அருளுடையீர் ஆகுமின், யாரும் பிறந்தும் பிறவாதாரில் (தர்மம் செய்து கருணை உடையவராக இருங்கள்; அப்படி செய்யாவிடில் பிறந்தும் பிறவாதவரே)

மார்ச் 4 ஞாயிற்றுக்கிழமை

ஒருநன்றி செய்தவர்க் கொன்றி யெழுந்த

பிழை நூறுஞ் சான்றோர் பொறுப்பர் (ஒரு நன்மை செய்தாலும் கூட அதற்காக சான்றோர் 100 பிழைகளையும் பொறுப்பர்)

 

மார்ச் 5 திங்கள் கிழமை

வழும்பில்சீர் நூல்கற்றக் கண்ணு நுணுக்கமொன் றில்லாதார் தேர்கிற்கும் பெற்றி யரிது (குற்றமில்லாத நூல்களைக் கற்றும், அதன் உட்கருத்தை அறியமாட்டார் புத்தி இல்லாதவர்)

மார்ச் 6 செவ்வாய்க் கிழமை

மைதீர் பசும்பொன்மேன் மாண்ட மணியழுத்திச்

செய்ததெனினுஞ் செருப்பும்தன் காற்கேயா

மெய்திய செல்வத்த ராயினுங் கீழ்களைச்

செய்தொழிலாற் காணப்படும் (தங்க, ரத்ன செருப்பானாலும் காலில்தான் பயன்படும். கீழ்களுக்குச் செல்வம் இருந்தாலும் அவர்களின் செயல்களே அவர்களைக் காட்டிவிடும்)

 

மார்ச் 7  புதன் கிழமை

 

தினையனைத்தே யாயினுஞ் செய்தநன் றுண்டால்

பனையனைத்தா வுள்ளுவர் சான்றோர் (கொஞ்சம் உதவி செய்தாலும் உயர்ந்தோர் அதைப் பெரிதாகப் பாராட்டுவர்)

 

மார்ச் 8 வியாழக்கிழமை

 

முந்திரிமேற் காணி மிகுவதேற் கீழ்தன்னை

யிந்திரனா வெண்ணி விடும் ( முந்திரி என்னும் சிறு தொகைக்கும் சற்று மாகாணி செல்வம் அதிகரித்தவுடன் கீழ்மட்ட மக்கள் தங்களை இந்திரன் என்று எண்ணுவர்)

 

மார்ச் 9 வெள்ளிக்கிழமை

நுண்ணர்வினாரொடு கூடி நுகர்வுடைமை

விண்ணுலகே யொக்கும் ( நுட்பமான அறிவு உடையோருடன் அமர்ந்து புசிப்பது தேவ லோகம் போல இன்பம் தரும்)

 

மார்ச் 10 சனிக்கிழமை

காம நெறி படரும் கண்ணினாற்கு இல்லையே

ஏம நெறி படருமாறு (வயதான காலத்திலும் காமம் உடையோருக்கு

நிலையான இன்பம்/ பாதுகாப்பு இல்லை)

 

மார்ச் 11 ஞாயிற்றுக்கிழமை

 

பாய்திரைசூழ் வையம் பயப்பினு மின்னாதே

ஆய்நல மில்லாதார் பாட்டு (உலகமே கிடைப்பதானாலும் நல்ல குணம் இல்லாதார் நட்பினை விரும்பமாட்டார்கள் சான்றோர்)

 

மார்ச் 12 திங்கள் கிழமை

கொடாஅ ரெனினு முடையாரைப் பற்றி

விடாஅ ருலகத் தவர் ( செல்வம் உடையோர் ஒரு காசு தராதபோதிலும், மக்கள் அவரைச் சுற்றி வட்டம் இடுவர்)

 

மார்ச் 13  செவ்வாய்க் கிழமை

 

அருளினற முரைக்கு மன்புடையார் வாய்ச்சொற்

பொருளாகக் கொள்வர் புலவர் (பெரியோர் சொல்லும் புத்திமதியை நல்லோர் பெரும்பேறாக கொள்வர்)

மார்ச் 14  புதன் கிழமை

நாப்பாடஞ்சொல்லி நயமுணர்வார் போற்செறிக்குந்த்

தீப்புலவர் சேரார் செறிவுடையார் (வாய்க்கு வந்தபடி பாடம் சொல்லும் நேர்மையற்ற புலவருடன் அடக்கமுடைய நற்புலவர் சேர மாட்டார்கள்.)

 

மார்ச் 15 வியாழக்கிழமை

 

தம்மை மருண்ட மனத்தார்பின் செல்பவோ தாமுந்

தெருண்ட வறிவினவர் (தானே பெரியவன் என்று கருதும் செல்வரிடத்து, தெளிந்த அறிவுடையார் செல்ல மாட்டார்கள்)

 

மார்ச் 16 வெள்ளிக்கிழமை

 

வானகங் கையுறினும் வேண்டார் விழுமியோர்

மான மழுங்க வரின் (சுவர்க்கமே கிடைப்பதாயினும் , மானம் கெட்டுப்போக நேரிட்டால் , மானமுள்ள பெரியோர் அதை நாட மாட்டார்கள்)

 

மார்ச் 17 சனிக்கிழமை

கடையெலாங் காய்பசி யஞ்சுமற்றேனை

இடயெலா மின்னாமை யஞ்சும்….தலையெல்லாம் சொற்பழி யஞ்சிவிடும் (பயத்தின் வகை: கடைத்தரத்தில் உள்ளோர் பசிக்கு பயப்படுவர்; இடைத் தரத்தில் உள்ளோர் துன்பத்துக்கு பயப்படுவர் ; முதல் தரத்தில் உள்ளோர் சொல்லால் வரும் பழிக்கு பயப்படுவர் )

 

மார்ச் 18 ஞாயிற்றுக்கிழமை

 

புறங்கடை வைத்தீவர் சோறு மதனால்

மறந்திடுக செல்வர் தொடர்பு (செல்வந்தர் நம் வீட்டுக்கு வந்தால் மனைவியை அறிமுகம் செய்து, சோறு படைப்போம்; நாம் அவர்கள் வீட்டுக்குப் போனால் மனைவியின் கற்பழிந்துவிடுவது போல நம்மை வாசலில் வைத்தே சோறு போடுவர்; அவர்களை மறப்பதே நலம்)

 

மார்ச் 19 திங்கள் கிழமை

 

உள்ளூர்

இருந்துயிர் கொன்னே கழியாது தான்போய்

விருந்தினனா நாதலே நன்று (ஒருவர்க்கு சோறு போட முடியாவிட்டால், உள்ளூரில் இருந்து காலத்தைக் கழிக்காமல் நாமே பிச்சை எடுத்தல் நன்று)

 

மார்ச் 20  செவ்வாய்க் கிழமை

வாழாதார்க்கில்லை தமர் ( பொருள் இல்லாமல் வாழ்வோருக்கு சுற்றத்தார் இல்லை)

 

மார்ச் 21 புதன் கிழமை

கலா அற் கிளிகடியுங் கானக நாட

இலாஅ அர்க் கில்லைத் தமர் ( கல் கொண்டு கிளி ஓட்டும் காடுகளைக் கொண்ட மன்னவா! செல்வம் இல்லாதவர்களுக்கு உறவினர் இல்லை)

மார்ச் 22 வியாழக்கிழமை

 

இரப்பிடும்பை யாளன் புகுமே புகையும்

புகற்கரிய பூழை நுழைந்து (பிச்சை எடுக்கும் துன்பம் உள்ளவன், புகை போக முடியாத இடத்திலும் புகுந்துவிடுவான்)

மார்ச் 23 வெள்ளிக்கிழமை

 

இரவலர் கன்றாக வீவார வாக

விரகிற் சுரப்பதாம் வண்மை (பிச்சை எடுப்போர் கன்று; பிச்சை இடுவோர் பசு; இப்படி, தானே அன்புடன் சுரப்பதே கொடுக்கும் குணம்)

 

 

மார்ச் 24 சனிக்கிழமை

அட்டதடைத்  திருந்துண்டொழுகு  மாவதின் மாக்கட்

கடைக்குமா மாண்டைக் கதவு (சமைத்ததைத் தாமே சாப்பிடும் குணமில்லாத மனிதருக்கு மேலுலகத்தின் கதவானது மூடப்படும்)

 

 

மார்ச் 25 ஞாயிற்றுக்கிழமை

ஓதியுமோதா ருணர்விலா ரோதாதும்

ஓதியனையா ருணர்வுடையார் (பகுத்தறிவு இல்லாதவர்கள் படித்தும் படியாதவர்களே; பகுத்தறிவு உடையோர், ஓதாமலும் படித்தவர்களுக்குச் சமமானவர்கள் ஆவர்;பகுத்தறிவு = விவேகம்)

 

மார்ச் 26 திங்கள் கிழமை

வலவைகளல்லாதார் காலாறு சென்று

கலவைகளுண்டு கழிப்பர் (பேய்த்தனம் இல்லாத நல்லோர் தூர இடங்களுக்குச் சென்று பல விதமான உணவு வகைகளை உண்டு மகிழ்வர்; வலவை= இடாகினி, காளி ஆகியோருக்கு ஊழியம் செய்யும் பேய்கள்)

 

மார்ச் 27 செவ்வாய்க் கிழமை

செல்வம் பெரிதுடையாராயினுங் கீழ்களை

நள்ளா ரறிவுடையார் ( மிகுந்த செல்வம் படைத்திருந்தாலும் கீழ் மக்களாக இருந்தால், அவர்களை அறிவுள்ளவர்கள் விரும்ப மாட்டார்கள்; கீழ்கள்= குணத்தினால் கீழானவர்கள்)

மார்ச் 28 புதன் கிழமை

 

கோலாற் கடாஅய்க் குறினும் புகலொல்லா

நோலா வுடம்பிற் கறிவு ( கோல் கொண்டு அடித்துச் சொன்னாலும்  புண்ணியம் செய்யாத உடம்புக்கு ஞானம் புக மாட்டாது/ வராது)

மார்ச் 29 வியாழக்கிழமை

 

கடாஅயினுஞ் சான்றவர் சொல்லார் பொருண்மேற்

படாஅ விடுபாகறிந்து (கேட்டால் கூட, எங்கு தன் சொல் எடுபடாதோ, அங்கே அறிஞர்கள் பதில் சொல்ல மாட்டார்கள்; மூடர்கள் சபையில் பேசார்)

 

மார்ச் 30 வெள்ளிக்கிழமை

 

நாவின் கிழத்தி யுறைதலாற் சேராளே

பூவின் கிழத்தி புலந்து (சரஸ்வதி தேவி உறைவதால், அவ்விடத்தில் பிணங்கி, லெட்சுமி தேவி சேர மாட்டாள்; பணமுள்ள இடத்தில் அறிவு இராது)

மார்ச் 31 சனிக்கிழமை

 

உணர வுணரு முணர்வுடை யாரைப்

புணரப் புணருமா மின்பம்

(நம்மை நன்கு அறிந்த, நம் குணத்தைப் பாராட்டும் விவேகம் உள்ளவர்களை சந்தித்து அளாவும்போது இன்பம் ஏற்படும்)

 

(தமிழை வளர்க்க விரும்புபவர்கள், தன் மனைவி, மகன்கள், கணவர்கள் , ஆளும் அரசாங்கத்தினர் ஆகியோர் தன்னிடம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவோர் என் எழுத்துக்களைத் திருட மாட்டார்கள். எழுதியவர் பெயருடன் பகிர்வார்கள்; பிளாக் பெயரை நீக்க மாட்டார்கள்)

 

–SUBHAM–

 

பிறர் மனதில் உள்ளதை அறிபவன் கடவுள்–வள்ளுவர் வாக்கு (Post No.4319)

Written by London Swaminathan

 

Date: 20 October 2017

 

Time uploaded in London- 11-00 am

 

 

Post No. 4319

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

தமிழ் மொழியில் ‘குறிப்பறிதல்’ Divining or Sensing from Appearances)  என்பது ஒரு சிறப்பு அம்சம். ஏனைய நாடுகளில் இதை ஒரு நல்ல விரும்பத்தக்க குணமாகப் போற்றவில்லை. ‘மந்திரிக்கழகு வரும்பொருளுரைத்தல்’ என்பது தமிழில் உள்ளதை அறிவோம். அவர் எப்படி வரும் பொருள் — நிகழப் போவனவற்றை — உரைப்பார்? அவருக்கு பிறர் மனதில் உள்ளதை அறியும் ஆற்றல் இருக்க வேண்டும். இதனால்தானோ என்னவோ வள்ளுவப் பெருமான் ‘குறிப்பறிதல்’ என்று அமைச்சியலில் ஒரு அதிகாரத்தை உருவாக்கி பத்துக் குறள்களில் கருத்து மழை பொழிந்துள்ளார். அது மட்டும் அல்ல; அத்தகைய ஆற்றல் உடையோரை கடவுள் நிலைக்கு உயர்த்திவிட்டார்! நாலடியார் என்னும் நூலிலும் இப்படி ஒரு கருத்து பாடப் படுகிறது.

 

முதலில் திருவள்ளுவர் அளித்த, தமிழ் வேதம் ஆகிய, திருக்குறளில் உள்ள கருத்துகளைக் காண்போம்:–

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்

தெய்வத்தோ டொப்பக் கொளல் (702)

 

பொருள்:–

 

சந்தேகத்திற்கு இடங் கொடுக்காமல், பிறர் மனத்தில் உள்ளதைக் குறிப்பால் உணர வல்லவனைத் தெய்வத்துக்கு சமமாக வைக்க வேண்டும்.

 

இது கொஞ்சம் மிகைப் படுத்தப்பட்ட தாகவே என்று தோன்றும். “வையத்துள் வாழ்வாங்கு  வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” — என்று வள்ளுவன் சொன்னபோது அதை ராமன், கிருஷ்ணன், சம்பந்தர்  ஆகியோரை மனதில் வைத்து நாம் ஏற்றுக் கொண்டோம். ஆனால் அடுத்தவர் எதற்காக வந்திருக்கிறார்? அவர் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிபவரை தெய்வ நிலைக்கு உயர்த்தியது வியப்பைத் தரும்.

 

அத்தோடு நிற்காமல், அத்தகைய ஒருவரை எப்படியாகிலும், எவ்விலை கொடுத்தும் மந்திரிசபையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார்:-

 

குறிப்பிற் குறிப்புணர்  வாரை உறுப்பினுள்

யாது கொடுத்தும் கொளல் (703) என்று பகர்வார்.

 

நம்மிடம் ஒருவர் திடீரென்று வந்து நம்மை இந்திரனே சந்திரனே, பாரியே, வா னில் இருந்து பொழியும் மாரியே என்று புகழ்ந்தால் நாம் சிரித்து மகிழ்வோம்; ஆனால் உள் மனது, எதற்காக இந்த ஆள் இப்படி, என்றும் இல்லாத் திருநாளாக இன்று மட்டும் புகழ்கிறான் என்று யோசிப்போம்; சோழியன் குடுமி சும்மா ஆடாது; ஆதாயம் இல்லாமல் செட்டியார் ஆத்தோடு போக மாட்டார்; இதில் ஏதோ சூட்சுமம் இருக்கிறது என்று புரிந்து கொள்வோம்.

 

ஆயினும் அவர் எதற்காக இப்படிப் புகழ்ந்தார் என்பதை அவர் வாயில் இருந்து வரும் வரை அறிய முடியாது. ஆனால் பிறர் மனதில் உள்ளதை முகக்குறிப்பின் மூலமும், நடை உடை பாவனை மூலமும் அறிபவர் மனிதரில் அரிதிலும் அரிது; ஆகையால் அத்தகையவர் கிடைத்தால் இரண்டு கைகளாலும் ‘சலாம்’ போட்டு அவரை அமைச்சர் ஆக்கி விடு என்று அரசர்களுக்கு அறிவுரை பகர்கிறார் வள்ளுவர்.

 

அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம் (706) – என்பதும் நமக்குத் தெரியும்.

 

ஒருவர் முகம் ‘கடுகடு, சிடு சிடு’ என்று இருந்தால் அவருக்கு நம் மீது ஏதோ கடுப்பு என்பதும், அன்றலர்ந்த செந்தாமரை போலச் சிரித்தால் மகிழ்ச்சி என்றும் அறிவோம். ஆனால் அப்படி முகக் குறிப்பால் உணர்த்தாவிடினும் அறிபவன் அறிஞன்.

 

‘’கண்களே மனதில் உள்ளதைச் சொல்லிவிடும்’’– என்று சம்ஸ்கிருதத்தில் ஒரு பொன்மொழி உண்டு. சிசரோ என்ற அறிஞர் ‘’ஆத்மாவின் சித்திரமே ஒருவரின் முகம்’’ என்று சொல்லுவார். பரத நாட்டியத்திலும் முக பாவம் மூலம், குறிப்பாக கண் அசைவு மூலம், உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் காட்டுவதையும் அறிவோம். ஆயினும் இப்படி வெளிப்படையாக இல்லாமல் ஆள் வந்தவுடனே, இவன் எதற்காக வந்திருக்கிறான், என்ன செய்யப் போகிறான், என்ன எதிர் பார்க்கிறான் என்று அறிபவன் சிறப்பிடம் பெருவான்.

 

 

இதை எதிரொலிக்கும் பாடல் நாலடியாரிலும் உள்ளது:–

 

ஆற்றும் துணையும் அறிவினை உள்ளடக்கி

ஊக்கம் உரையார் உணர்வுடையார் — ஊக்கம்

உறுப்பினால் ஆராயும் ஒண்மையுடையார்

குறிப்பின் கீழ்ப்பட்ட துலகு — நாலடியார்

 

பொருள்:-

தாம் மேற்கொண்ட செயலை, அது முடியும் வரை, மனத்தில் வைத்துக் கொண்டு, வெளிப்படையாக சொல்லாதவன் அறிஞன்; பிறர் முயற்சியினை அவர்தம் அ ங்கங்களின் குறிப்பினால் ஆராய்ந்து அறிவர் அறிஞர்; அத்தகையோரின் கீழ் உலகமே அடங்கிக் கிடக்கும்.

 

–சுபம்–

 

 

டொண்டொண்டொடென்னும் பறை!

குரல்

வாழ்வியல் அங்கம்

டொண்டொண்டொடென்னும் பறை!

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

WRIITEN BY  ச.நாகராஜன்

Date : 12 September  2015

Post No. 2149

Time uploaded in London: –   காலை 6-37

(Thanks  for the pictures)

 

.நாகராஜன்

வழக்கம் போல திருக்குறளைப் புரட்டினேன். பார்வைக்கு வந்த குறள்:

நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்து இவ் வுலகு (குறள் 336)

நேற்று இருந்தவன் இன்றில்லை என்று சொல்லும் பெருமையைக் கொண்டது இவ்வுலகு.

என்ன இவர், உலகிற்குப் பெருமையாக இதைத்தானா சொல்வது? ஒரு ஐஸ்வர்யா ராயை அல்லது க்ளியோபாட்ரா அல்லது சித்தூர் ராணி பத்மினி போன்ற பிரமாதமான அழகியைப் பெற்றது இவ்வுலகு என்று சொல்லக் கூடாதா, அல்லது நிலவில் கால் பதித்த ஆர்ம்ஸ்ட்ராங் போன்ற ‘மனிதனைக்’ கொண்டது இவ்வுலகு என்றாவது சொல்லக் கூடாதா, காலத்தால் முற்பட்டவர் தான், புரிகிறது! இது போல எதையாவது சொல்லி இருக்கலாமில்லையா,

நாலயிர2

சரி, போகட்டும், பார்வை மேலே போக கண்ணில் பட்ட அடுத்த குறளைப் பார்த்தேன்.

நாளென ஒன்று போல் காட்டி உயிர் ஈரும்

வாளது உணர்வார்ப் பெறின்   (குறள் 334)
நாள் என்பது கால அளவையைப் போலக் காட்டி உங்கள் உயிரின் வாழ்நாளை அறுக்கும் வாள்!

என்ன ஒரு நெகடிவ் திங்கிங் (Negative thinking) எத்தனை கோர்ஸ்களிலும் செமினார்களிலும் இளைஞர்களையும் இளைஞிகளையும் சந்தித்து, “இன்றைய நாள் பொன்னாள். இது ஒரு வாய்ப்பு! நேர மேலாண்மை – அது தான் டைம் மானேஜ்மெண்ட் கற்றுக் கொண்டு சரியாக அதைப் பயன்படுத்துங்கள் என்று வாய் கிழியப் பேசி இருக்கிறேன்.

இவரோ நாள் என்பதை உயிரைப் போக்கும் வாள் என்று நினை என்கிறார்.

குறளை மூடினேன். பட்டினத்தாரை எடுத்து புரட்டினேன். வந்த பாடல்:

கட்டி அணைத்திடும் பெண்டிரும் மக்களும் காலத்தச்சன்

வெட்டி முறிக்கும் மரம் போல் சரீரத்தை வீழ்த்தி விட்டால்

கொட்டி முழக்கி அழுவார் – மயானம் குறுகி அப்பால்

எட்டி அடி வைப்பரோ? இறைவா, கச்சி ஏகம்பனே!

இதென்னடா சங்கடம் என்று இன்னொரு பக்கத்தைப் புரட்டினால் அங்கு கண்ட பாடல்:

பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்து பட்டாடை சுற்றி

முத்தும் பவளமும் பூண்டோடி ஆடி முடிந்த பின்பு

செத்துக் கிடக்கும் பிணத்தருகே இனி சாம் பிணங்கள்

கத்தும் கணக்கென்ன காண் கயிலா புரிக் காளத்தியே!

அட, வார்த்தைகள் பிரமாதம் தான்!

காலத் தச்சன் வெட்டி முறிக்கும் மரம் போல் சரீரத்தை வீழ்த்தி விட்டால் …

செத்துக் கிடக்கும் பிணத்தருகே இனி சாகப் போகும் பிணங்கள் கத்தும் கணக்கு, என்ன கணக்கு!!!!

பின்னால் டி.வியில் வேறு கண்ணதாசன் பாடல் கனமாக, “வீடு வரை உறவு வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ என்று ஒலித்தது.

divyasprabandam1

ஒன்றும் சரிப்படவில்லை?!

பஜகோவிந்தம் நூலில் எடுத்த பாடல்:  புனரபி ஜனனம் புனரபி மரணம் புனரபி ஜனனீ ஜடரே சயனம் (மீளவும் பிறப்பு; மீளவும் இறப்பு மீளவும் தாயின் குடரிடைப் படுப்பு என்ற அழகிய தமிழ் மொழி பெயர்ப்பு வேறு) என்று வர அதையும் மூடினேன்.

இன்று நேரம் சரியில்லை நமக்கு.

நாலடியாரையாவது ஒரு புரட்டு புரட்டி வைப்போம் என்று அதை எடுத்தால்!!

கணம் கொண்டு சுற்றத்தார் கல்லென்றலறப்

பிணம் கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் –

மனம் கொண்டீண்டு  உண்டுண்டுன் டென்னும் உணர்வினால் சாற்றுமே

டொண்டொண்டொ டென்னும் பறை  (நாலடியார் பாடல் 25)

தூக்கி வாரிப் போட்டது. எங்கோ ஒரு ஓசை கேட்பது போல இருந்தது.

நாலடியார்

டொண் . டொண்.. டொண்..

உண்டுண்டுன்டென்னும் உணர்வினால் சாற்றுமே டொண் டொண் டொண்.. பறைச் சத்தம்!

எங்கேயாவது பறை அடிக்கப்படுகிறதா? இல்லை, இல்லை!

‘மனப்பிரமை தான்!

பறையும் பாடையும் போன நவீன காலம் இது. பாம் பாம் என்று ஹார்ன் அடிக்க ஆம்புலன்ஸே அமரர் ஊர்தி ஆகிச் செல்ல, ஐந்து நிமிடத்தில் எலக்ட்ரிக் க்ரிமடோரியத்தில் சில நொடிகளில் உடலே பிடி சாம்பலாகும் ‘ஒளிமயமான’ காலம்!

பாட்டிகளே பாடையிலே போக என்ற வசவை வாபஸ் வாங்கி, பல்லாயிரம் வாட்ஸில் சாம்பலாகிப் போக என்று மாடர்னாகச் சொல்லும் காலம் அல்லவா இது!

என்ன செய்வது, என்று நெஞ்சம் கொஞ்சம் அஞ்சியது!

எல்லா புத்தகங்களையும் மூட்டை கட்டி மூடினேன். நாலாயிர திவ்ய பிரபந்தம் தொப்பென்று விழுந்தது.

விழுந்த பக்கத்தில் இருந்த பெரியாழ்வாரின் பாடல் இது:-

துப்புடையாரை அடைவ தெல்லாம் சோர்விடத் துத்துணை யாவரென்றே

ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால்

எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன்

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்தரவணைப் பள்ளியானே

கஜேந்திரனுக்கு மோட்சம் கொடுத்த கருணையாளன். எய்ப்பு வந்து பேச முடியாமல் இருக்கும் போது அப்போது உன்னை நினைக்க மாட்டேன். அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் – கொஞ்சம் பார்த்து செய்யப்பா!

ஆழ்வாரின் அற்புதப் பாடல் மின்னலென உள்ளத்தில் பளிச்சிட்டது. மூளையில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் பளிச்சென எரிந்தது!

AZHWARGROUP

நெகடிவ் திங்கிங் இல்லையடா, முட்டாளே, திருவள்ளுவருக்கு! அப்போதைக்கு இப்போதே சொல்லி வை என்று சொல்ல அல்லவா அவர் அப்படிச் சொல்லி இருக்கிறார்.

எல்லாப் பெரியோரும் சொல்ல வந்தது ஒரே ஒரு கருத்தைத் தான்:-

கையும் காலும் கண்ணும் செவியும், மெய்யும் செயல்பாட்டுடன் இருக்கும் போதே நினைக்க வேண்டிய ஒன்றை நினை!!

டொண் டொண் டொண். அப்போதைக்கு இப்போதே! செத்த பிணத்தை இனி சாம் பிணங்கள், காலத் தச்சன் வெட்டி விட்ட மரம் போல!

அட, ஒரு மாதிரியாக நெஞ்சைப் பிசைகிறதே. குரல் எழும்பவில்லை.

அ.. ர..ங்க மாநகருள் ளா ஆ ஆ ஆ …..?!

*****************