
Post No. 9970
Date uploaded in London – 13 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இதாலியின் தலைநகரான ரோம் ROME நகரிலிருந்து பல கொடுங்கோல் மன்னர்கள் ஆட்சி புரிந்தனர் ; அதற்கு முன்னர் நல்லோரும் ஆண்டனர். ஆனால் கண்ணகி போல வெகுண்டெழுந்து பகிரங்கமாக மன்னர்களைக் குற்றம் சாட்டியோரும் உண்டு. பலர் கவிதைகளையும், சொற் பொழிவுகளையும், நாடகங்களையும் அரசுக்கு எதிரான ஆயுதங்களாகப் பயன்படுத்தினர் இரண்டு கொடுங்கோல் மன்னர்களை எதிர்த்துப் பாடி , அவர்களின் கோபத்துக்கு உள்ளான ஜுவெனால் Juvenal என்ற கவிஞரின் வரலாற்றைக் காண்போம்.
2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பா முழுதும் செல்வாக்கு பெற்று விளங்கியது ரோமானிய சாம்ராஜ்யம் (ROMAN EMPIRE). அதற்கு முந்தைய 500 ஆண்டுகளில் கிரேக்க சாம்ராஜ்யம் எப்படி கிரேக்க மொழி இலக்கியம் மூலம் ஐரோப்பிய சிந்தனையை வழிநடத்தியதோ அது போல அடுத்த 500 ஆண்டுகளுக்கு லத்தீன் மொழி இலக்கியம் வாயிலாக ஐரோப்பாவை செம்மைப்படுத்தியது லத்தீன் மொழி படைப்புகள். அந்த வரிசையில் சமுதாயத்தின் குற்றம் குறைகளை அச்சமின்றி உரைத்தவர் Juvenal ஜூவெனால் ; அதையும் அழகாக கேலி, பகடி, நக்கல், கிண்டல் , நையாண்டி மூலம் , நம்ம ஊர் சோ CHO ராமசாமி போல நையாண்டி செய்து பாடல்களாகப் பாடினார்.
புலவருடைய முழுப்பெயர் டெசிமஸ் ஜூனியஸ் ஜூவெனாலிஸ்DECIMUS JUNIUS JUVENALIS . அக்காலப் புலவர்களைப் போல அவரும் நல்ல பணக்கார குடும்பத்தில் பிறந்தார் .அதனால் நல்ல கல்வி வசதிகள் கிடைத்தன. தென் இத்தாலிய நகரான அக்வினத்தில் பிறந்தார் பின்னர் ரோமாபுரிக்குச் சென்று ‘பேசும் கலை’ பற்றிச் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் ஆனார்.ரோமானிய ராணுவத்தில் கொஞ்ச காலம் பணியாற்றியதாகவும் தெரிகிறது .அவருடைய இளமைக் காலத்தில் ரோமானிய சாம்ராஜ்யத்தை நீரோ NERO மன்னனும் டொமிடியன் DOMITIAN மன்னனும் ஆண்டனர்.
இருவரும் நல்லாட்சி புரியவில்லை. மக்கள் மீது கடுமையான சட்ட திட்டங்களைப் போட்டனர். இந்தக் கொடுங்கோல் ஆட்சி மக்களுக்குச் சொல்லொணாத் துயர் கொடுத்தது. டொமீடியன் ஆட்சிக் காலத்தில் புலவர் ஜுவெனலுக்கும் ஏதோ ஒரு குற்றத்துக்காக தண்டனை கிடைத்தது ஒருவேளை அவர் சொற்பொழிவு ஆற்றுகையில் மன்னரைக் கடிந்து பேசியிருக்கலாம். ஊழல் மலிந்த ஆட்சியும் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையும் புலவரின் சீற்றத்தைத் தூண்டிவிட்டன. எடுத்தார் பேனாவை; தொடுத்தார் கவிகளை. பழைய ரோமானிய பண்பாடு மறைந்து போய்விட்டது. பணக்கார ரோமானியர்கள் ஆடம்பர வாழ்க்கையில்தான் அக்கறை கொண்டுள்ளனர்; மக்களின் நலனில் அல்ல என்று சாடினார் ; கவி பாடினார்.
ஆயினும் மன்னர் டொமீடியன் இறக்கும்வரை அவர் தனது கவிதைகளை அச்சிடவில்லை. கி.பி 110 வாக்கில் ஐந்து கவிதைத் தொகுதிகள் வெளியாயின.அப்போது புலவருக்கு வயது 55.
அடுத்த 20 ஆண்டுகளில் ஜுவெனால் 16 அங்கதப் பாடல்களை இயற்றினார். பணக்கார ரோமானியர்கள், சொகுசு வாழ்க்கை நடத்திய உயர்குலப் பெண்கள், ரோமானிய ராணுவம் என்ற பல விஷயங்களை சாடினார் . அவருடைய பெரும்பாலான தாக்குதல் டொமீடியன் மன்னர் மற்றும் அவருடைய ஆதரவாளர் மேல்தான் பாய்ந்தது .
பிறந்த ஆண்டு – கிபி.65
இறந்த ஆண்டு – கி.பி.140
வாழ்ந்த ஆண்டுகள் 75
எழுதிய கவிதைகள் ( 5 நையாண்டிக் கவிதைத் தொகுப்புகள் )
CE 110 – BOOK I (SATIRES 1-5)
116- BOOK II (SATIRE 6)
120- BOOK III (SATIRES 7-9)
125 – BOOK IV (SATIRES 10-12)
127 – BOOK V (SATIRES 13-16)




-SUBHAM-
tags- ரோமானிய, நையாண்டி, புலவன், ஜுவெனால், Juvenal
You must be logged in to post a comment.