WRITTEN BY S NAGARAJAN
Post No. 9998
Date uploaded in London – 20 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வைணவ அமுதம்
பக்திப் பெருக்கால் தம்மை மறந்து ஆடுவோரே உண்மை பக்தர்கள்!
ச.நாகராஜன்
எம்பெருமானின்மீது அளவிலா பக்தியும் அன்பும் உண்மையாகக் கொண்டிருப்பார் எனில் அவர்கள் பைத்தியக்காரன் போல வேறு எதையும் எண்ணாமல் வீதிகளில் ஆட வேண்டும். அப்படி இல்லை எனில் அவர்கள் இறை அன்பைக் கொண்டிருக்கவில்லை என்றே அர்த்தம் என்கிறார் நம்மாழ்வார்.
இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவத்தைக் கூறலாம். ராமானுஜரின் சீடர் கூரத்தாழ்வான். அவர் வாழ்ந்த காலத்தில் அரசாண்ட மன்னனுக்கு வைஷ்ணவம் என்றாலே பிடிக்காது. அவன் ஒரு சமயம் ஏழைகளுக்காகப் பல வீடுகளைக் கட்டினான்.
கூரத்தாழ்வான் அரசனிடம் சென்றார்: “அரசே! நீங்கள் கட்டிய வீடுகளில் எனக்கு ஒன்றைத் தாருங்கள்” என்று கேட்டார்.
அரசன், “உனக்கு ஒன்றும் தர முடியாது” என்றான்.
ஆழ்வான் : “ஏன், மன்னா! எனக்கு வேத சாஸ்திரம் தெரியாது என்று எண்ணி விட்டீர்களா? அப்படி நினைத்தீர்கள் என்றால் என்னை சோதித்துப் பாருங்கள்”
அரசன் : அது காரணமில்லை. அந்த வேத சாஸ்திரங்களில் எல்லாம் நீர் வலல்வரே. ஆனால் உமக்குத் தர முடியாது என்று சொன்னதற்கான காரணம் நீர் ஒரு வைஷ்ணவர் என்பதால் தான்!
ஆழ்வான் : ஆஹா! அப்படியா விஷயம்?! எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது இதைக் கேட்க! நான் என்னை ஒரு வைஷ்ணவன் என்று கூறிக் கொள்ளும் தகுதி இல்லாதவன் என்றல்லவா இது வரை நினைத்து வந்தேன். ஆனால் அரசனாகிய நீங்களே என்னை ஒரு வைஷ்ணவன் தான் என்று உங்கள் வாயாலேயே கூறி விட்டீர்களே
இப்படிச் சொல்லியவாறே கூரத்தாழ்வான் தன் உத்தரீயத்தை உயரே தூக்கி எறிந்தார். அங்கேயே ஆனந்தமாக நடனமாட ஆரம்பித்தார்.
சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு
ஆதியஞ் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த
வேத முதல்வனைப் பாடி வீதிகள் தோறும் துள்ளாதார்
ஓதி உணர்வர் முன்னா என்சவிப்பார் மனிசரே
என்பது நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் 3-5இல் வரும் பாடலாகும்.
வேத முதல்வனைப் பாடி வீதிகள் தோறும் நடனமாடித் துள்ளாதார் எப்படி ஒரு வைணவனாக இருக்க முடியும்!
அவனை நினைக்கும் போதே ஆனந்தம் தான் ; துள்ளல் தான்!
இதை இப்படி பகவத் விஷயம் நூல் விவரிக்கிறது.
ஆதாரம் : பகவத் விஷயம் பாகம் 3 – சாது சனம் (||| – 5-5)
***
INDEX
நம்மாழ்வார் திருவாய்மொழி – சாது சனத்தைப் பாசுரம்
பகவத் விஷயம் விளக்கம்
கூரத்தாழ்வான், அரசனிடம் வீடு கேட்டல்
அரசன் அவனை வைஷ்ணவன் என்று கூறி வீடு தர மறுத்தல்
ஆழ்வானின் ஆனந்தம்
tags- பக்தி, ஆடுவோர் , உண்மை, பக்தர்கள்,