புத்திமானும் பலவானும் பேயை விரட்டிய கதை! (Post No.5069)

Written by London Swaminathan 

 

 

Date: 2 JUNE 2018

 

 

Time uploaded in London – 14-54

 

Post No. 5069

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

பல நாட்டுப்புறக் கதைகள் பழங்காலத் தமிழில் உள; அவைகளை நான் அவ்வப்பொழுது புதுத் தமிழில் செதுக்கிக் கொடுக்கிறேன்

ஒரு கிராமத்தில் ஒரு பயில்வான் இருந்தான்;  உடல் பலம் இருந்தும் அவனுக்கு புத்தி ‘மந்த புத்தி’தான்; ஒரு கேள்விக்குப் பதில் சொல்ல ஐந்து நிமிடமாவது ஆகும். ஆனால் வேறு எவரும் அசைக்கக்கூட முடியாத பாரத்தை மிக எளிதாகத் தூக்கி விடுவான். அவனை எல்லோரும் வல்லாள கண்டன் என்று அழைப்பர்.

 

அருகிலுள்ள மற்றொரு கிராமத்தில் உடல் பலம் இல்லாத, ஆனால் மஹா புத்திசாலியான ஒருவன் இருந்தான். அவனை வாய்ச்சொல் வீரன் என்று அழைப்பர். மிகவும் புத்திநுட்பம் உடையவன். மற்றவர்களுக்குத் தோன்றாத விஷயங்கள் அவனுக்கு எளிதில் புலப்படும் தட்டுத் தடங்கலின்றி பேசுவான். பதில்கள் அனைத்தும் அக்ஷர லக்ஷம் பெறும்.

வாய்ச்சொல் வீரனின் புகழ் எங்கும் பரவவே வல்லாள கண்டனுக்குப் பொறாமை ஏற்பட்டது. உடல் பலமின்றி வாய்ச் சொல் வீரம் இருந்து என்ன பயன் என்று கிண்டல் செய்தான். ‘பேச்சுக்கு ராவணன், பின்னர் பார்த்தால் கும்பகர்ணன் போல’ இருக்கிறதே என்பான். ‘சொல்லுதல் யார்க்கும் எளிதாம்; சொல்லியவாறு செய்தல் அல்லவோ கடினம்’ என்பான். இருவரும் சந்திப்பது நல்லது என்று இரண்டு கிராம மக்களும் முடிவு செய்தனர்.

 

இருவரும் வாய்ச்சொல் வீரனின் கிராமத்தில் சந்தித்தபோது வல்லாள கண்டன் சொன்னான்; ஒரு நாள் முழுதும் உன்னுடன் தங்கியிருந்து உடல் பலமே பெரிது என்பதைக் காட்டப்போகிறேன் பார்! என்று சவால் விடுத்தான்.

முதல் சோதனை

 

சரி அடுத்த கிராமத்திலுள்ள இடையன் நிறைய ஆடுகள் வைத்திருக்கிறான். அதை என் உடல் பலத்தால் களவாடி வருகிறேன். உன்னால் முடியுமா என்றும் யோசித்துப் பார் என்றான் வல்லாள கண்டன் . மாலையில் இருட்டத் துவங்கியது

 

இடையன் எப்போதும் சாப்பிடப் போகும்போது,  ஒரு ஆள் இருப்பது போலத் தெரியட்டும் என்று ஒரு கம்பளியைக் கம்பின்மீது போட்டுவிட்டுப் போவான்; யாரோ ஒருவர் கூடவே இருப்பது போல பாவனை செய்து பெரிதாச் சொல்வான்: . “தம்பி ஆடுகளைப் பார்த்துக்கொள்; இந்தப் பக்கம் திருடர்களும் பேய்களும், சிப்பாய்களும் அதிகம். ஆடுகளைத் தூக்கிச் செல்லாமல் பார்த்துக்கொள்” என்பான்; இது வழக்கமான பல்லவி.

 

இதை எல்லாம் கவனித்த மஹா புத்திசாலி வா, வா, போய் ஒரு ஆட்டை  எடுத்துக்கொண்டு ஓடி விடுவோம் என்றான். வல்லாளகண்டனுக்குப் புத்தி குறைவு என்பதால் அந்தக் கம்பின் மீது போட்ட கம்பளியை ஆள் என்றே நினத்துத் தயங்கினான். பின்னர் அது வெறும் கம்பளி அங்கு யாரும் இல்லை என்று காட்டவே வல்லாளகண்டனுக்கு ஒரே ஆச்சர்யம்!! ஒரு ஆட்டை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு நடந்தான்.

 

அந்தக் கிராமத்தில் உண்மையிலேயே பேய்கள் உண்டு;  அவைகளும் இடையனின் பேச்சை கேட்டு ‘’சிப்பாய்கள்’’ என்றால் என்ன என்று யோசித்துக் கொண்டிருந்தன. அப்போது ஆட்டைத் திருடிய வல்லாளகண்டனும்  வாய்ச்சொல் வீரனும் வந்தனர். இதுவரை இந்த மாதிரி ஆட்களைப் பார்த்ததே இல்லை. ஓ! இவர்கள்தான் சிப்பாய்கள் போல என்று நினைத்து ஆடுகள் உருவத்தில் போய் செடி கொடிகளை பேய்கள் மேய்ந்தன. அப்படிச் செய்தால் வெறும் ஆடுகள் என்று எண்ணி இருவரும் போய்விடுவர் என்று அவை எண்ணின

அவைகளைப் பார்த்துக் கொண்டு வந்த வல்லாள கண்டன் ஒரு பேய் ஆட்டைத் தொட்டுப் பார்த்து, அட, இது நாம் திருடிய ஆட்டை விடக் கொழுத்து இருக்கிறது என்று கருதி அதில் ஒன்றைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டான்.

பேய் ஆட்டுக்குப் பயம் வந்துவிட்டது. எப்படித் தப்பிக்கலாம் என்று யோசித்த போது, பின்னால் வாய்ச் சொல்வீரன் நடந்து வருவதைப் பார்த்து அவனும் ஒரு சிப்பாய் என்று பயந்தது. அந்த நேரத்தில் கொழுத்த ஆட்டின் எடை தாங்காமல் ‘ஏய், இதை ஒரு நிமிடம் உன் தோளில் வைத்திரு. கொஞ்சம் முதுகை நெளித்து வளைத்து உடலைச் சரி செய்கிறேன் என்று சொல்லி மஹா புத்திசாலியின் தோளில் வைத்தான். அவனுக்கு உடல் வலு இல்லாததால் அவன் அதை ‘தொபுக்’ என்று கீழே போட்டான். பேய் ஆடு தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி விட்டது பின்னர் மாயமாய் மறைந்தும் போனது.

 

ஏற்கனவே இடையன் பேச்சில் பேய்கள் பற்றிச் சொன்னதைக் கேட்டு இருந்ததால் அது பேய்தான் என்று பயந்து இருவரும் வேகமாக நடந்தனர்.

 

இதைப் பார்த்த சில பேய்கள் நம்மைத்தான் ‘சிப்பாய்கள்’ பிடிக்க வருகிறார்கள் என்று பேசிக்கொண்டு தலை தெறிக்க ஓடின. மற்ற பேய்கள் சிரித்துக் கொண்டே சிப்பாய்களும் இல்லை, குப்பாய்களும் இல்லை என்று நக்கல் அடித்தன.

இருவரும் வீட்டுக்குப் போய் தாங்கள் பார்த்த கொழுத்த ஆடு பேய்தான் என்று பேசிக்கொண்டே தூங்கிவிட்டார்கள். அந்த வீட்டில் அன்று எதேச்சையாக பேய்கள் போய் மதில் ஏறிக் குதித்தன. இதைப் பார்த்த வல்லாள கண்டன் அவனது நண்பன் வாய்ச்சொல் வீரனிடம் போய் பேய்கள் இங்கும் வந்து விட்டன. நாம் என்ன செய்வது? என்றான். உடனே மஹா புத்திசாலியான வாய்ச்சொல் வீரன் ‘’நீ ஒன்றும் தெரியாதது போல உருண்டு போய் உன்     இடத்திலேயே படுத்துக்கொள்’ என்று சொல்லிவிட்டு ரஹஸியமாக தாழ்ந்த குரலில் தனது பெண்டாட்டியிடம் சொன்னான்: நீ போய் இலை போட்டு, இருக்கும் சாப்பாட்டைப் பரிமாறு; என்ன இது? இன்று காலையில் நான் பிடித்து வந்த மூன்று பேய்களைச் சமைக்கவில்லையா? அவை எல்லாம் பழையதாய்ப் போனால் நன்றாக இராது என்பேன்; நீ உடனே  மூன்று பேய்களையும் உங்கள் மகன் பக்ஷணம் பண்ணிவிட்டு மேலும் வேண்டும் என்றான்; நான் இல்லை என்று சொன்னவுடன் கோபித்துக்கொண்டு பேய் பிடிக்கப் போய்விட்டன் என்று சொல்லு’’ என்றான். மனைவியும் சரி என்று சொல்லிவிட்டு அவன் சொன்ன படியெல்லாம் செய்தாள்.

 

இதைக் கேட்ட பேய்கள் நடுநடுங்கி ஓட்டம் பிடித்தன. ஏற்கனவே ஆடாக இருந்து தப்பித்த பேயிடம் அவை எல்லாம்,’ நீ சொன்னது உண்மைதான்; சிப்பாய்கள் பொல்லாதவர்கள்; அவன் மகனே மூன்று பேய்களைத் தின்றுவிட்டு நம்மையும் பிடிக்க அலைகிறானாம். நாம் வேறு காட்டுக்குப் போய்விடுவோம் என்று ஓடி விட்டன. அப்போதுதான் வல்லாளகண்டனுக்குப் புரிந்தது: உடல் பலத்தை விட புத்தி பலமே பெரிதென்று.

 

இருவரும் மறு நாளைக்கு வேறு ஒரு கிராமத்துக்குப் போவோம் என்று புறப்பட்டனர். பேய்கள் போன புதுக் காட்டின் வழியே திரும்பி வந்து கொண்டிருந்தனர். மாலை நேரம் ஆகி இருட்டத் துவங்கியது. வல்லாள கண்டனுக்கு ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயா’கத் தென்பட்டது. ஆகையால் நாம் ஒரு அரச மரத்தின் மீது ஏறி இரவைக் கழிப்போம்; பொழுது விடிந்ததும் புறப்படுவோம் என்றான். அதற்கு இணங்கிய மஹா புத்தி சாலியும் இரவு முழுதும் பல கதைகளைச் சொல்லிப் பொழுதைக் கழித்தான். அதே மரத்துக்கு அடியில் நள்ளிரவில் பேய்கள் வந்து குழுமி கூட்டம் போட்டன. அதைப் பார்த்த வல்லாள கண்டன் பயந்து நடுங்கி பேய்கள் மீது தொபுக் என்று விழுந்தான். அவன் வாய் குளறிப் போய் ஏதோதோ பிதற்றத் துவங்கினான்.

அவைகளைக் அதைக் கேட்ட மஹா புத்தி சாலி, அட நீ ஏன் இந்தப் பேய்களையும் தின்ன வேண்டும் என்று துடிக்கிறாய்? இன்றுதான் ஐந்தாறு பேய்களை அடித்துக் கொன்று தின்னோமே; இவைகளை நாளை இரவுச் சாப்பாட்டுக்கு வைத்துக் கொள்வோம். சூடாகச் சாப்பிடுவோம்’’ என்று மரத்தின் மீதிருந்து சொன்னான்.

 

இதைக் கேட்ட அவை அனைத்தும் அடக்கடவுளே! இவன் மூன்று பேய்களை பக்ஷணம் பண்ணியவனின் தகப்பன் அல்லாவா? என்று பயந்து நடுங்கி ஓட்டம் பிடித்தன.

 

மறு நாள் காலையில் வல்லாள கண்டன் சொன்னான்: “புத்திமான் பலவான் ஆவான்; உடல் பலம் இருந்தும் என்னால் பேய்களை விரட்ட முடியவில்லை; நீ உன் புத்திசாலித் தனத்தால் விரட்டிவிட்டாய் என்று புகழ்ந்துவிட்டு தனது கிராமத்துக்கே சென்றான்.

 

–சுபம்–

யானையை மார்பில் நிற்க வைத்த சாண்டோ ராமமூர்த்தி!

360px-Kodi_Ramamurthy1
Kodi Ramamurthy

கட்டுரையை எழுதியவர் :– S Nagarajan
கட்டுரை எண்- 1493; தேதி 17 டிசம்பர், 2014.

“தங்கத்திற்குச் சோதனை அக்னியில்; வலிமை வாய்ந்தவர்களுக்குச் சோதனையோ ஆபத்துக்களை எதிர்கொள்வது தான்!” – மார்த்தா க்ரஹாம்

சாதாரணமாக உள்ள மனித ஆற்றலையும் மிஞ்சி அபூர்வமான ஆற்றலைக் கொண்ட பல பேரை இதுவரை பார்த்தோம். அறிவியல் ஒப்புக் கொள்ளும் இவர்களைப் போன்ற சூப்பர் பவர் மனிதர்கள் காலம் காலமாக இருந்து வந்திருக்கின்றனர். அவர்களுள் ஒருவர் இந்திய ஹெர்குலிஸ் என்ற புகழ் பெற்ற கோடி ராமமூர்த்தி நாயுடு ஆவார். சாண்டோ ராமமூர்த்தி அல்லது புரபஸர் ராமமூர்த்தி என்ற பெயரால் பரவலாக அறியப்பட்டவர் இவர்.

1882ஆம் ஆண்டு ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள வீரகட்டம் என்ற ஊரில் பிறந்த இவர் விஜயநகர கல்லூரியில் உடற்பயிற்சி ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு அபூர்வ கலையான வாயு ஸ்தம்பனம் மற்றும் ஜல ஸ்தம்பனம் ஆகிய கலைகளில் மிகுந்த தேர்ச்சி உண்டு. மல்யுத்தத்தில் மகாவீரர். பிரிட்டிஷ் அரசரான ஐந்தாம் ஜார்ஜ் இவருக்கு கலியுக பீமன் என்ற பட்டத்தை வழங்கி இவரைச் சிறப்பித்தார்.

1911 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்து இவர் தன் நிகழ்ச்சிகளை நடத்திக் காண்பித்து அனைவரையும் அயர வைத்தார். இரும்புச் சங்கிலிகளை உடைப்பது, தோள்களில் இரும்புச் சங்கிலிகள் இணைக்கப்பட மறு முனையில் ஓடுகின்ற கார்கள் இணைக்கப்பட அவற்றை அப்படியே ஓடாமல் நிறுத்துவது போன்ற இவரது சாகஸ செயல்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின. இது போதாது என்று ஒரு யானையைத் தன் மார்பின் மீது ஏறி நடக்கச் செய்தார். ஐந்து நிமிட நேரம் யானையைத் தன் மார்பின் மீது நிற்கச் செய்து அதைத் தாங்கிக் காண்பித்தார்.

இந்தியாவில் வைசிராயாக இருந்த லார்ட் மிண்டோ தன் காரை ஓட்டுவதற்கு முயல, சங்கிலியால் கட்டப்பட்டிருந்த காரின் மறுமுனையைப் பிடித்து அப்படியே நிற்க வைத்தார் இவர். இந்தச் சம்பவத்தால் இவர் புகழ் உலகம் முழுவதும் பரவியது. அலகாபாத்தில் நடந்த காங்கிரஸ் மகாநாட்டில் இவரைப் பார்த்த பண்டிட் மதன்மோகன் மாளவியா இவரை வெகுவாகப் பாராட்டி லண்டனுக்கு அனுப்பினார்.
பக்கிங்ஹாம் அரண்மனையில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரும் ராணி மேரியும் இவரது சாகஸங்களைப் பார்த்து வியப்பில் ஆழ்ந்தனர் கலியுக பீமன் என்ற பட்டத்தையும் வழங்கினர்.
eugene sandow
Eugene Sandow

ஸ்பெயினுக்குச் சென்ற இவர் அங்கு நடந்த புல்-ஃபைட்டிங் (Bull Fighting) எனப்படும் காளைமாடுகளை அடக்கும் நிகழ்ச்சியைப் பார்த்தார். அந்த வீர்ர்களின் வீரம் இவரை அவ்வளவாகக் கவரவில்லை. தானே களத்தில் குதித்தார். ஒரு பெரிய காளைமாட்டின் இரு கொம்புகளையும் பிடித்து அலாக்காகத் தூக்கி அதைச் சுழற்றி வீசி எறிந்தார். அனைவரும் ஆஹா. ஆஹா என்று கூவினர். பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், ஸ்பெயின், பிரிட்டன் என அனைத்து நாடுகளிலும் இவர் நிகழ்ச்சிகளைப் பார்த்தவர்கள் இவரது சூப்பர் பவரைக் கண்டு ஆச்சரியமுற்றனர்.

இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் இவர் தீவிர பங்காற்றினார்.
ஒரு சர்க்கஸ் கம்பெனியை நிறுவி எல்லா ஊர்களிலும் பல நிகழ்ச்சிகளைச் செய்து காட்டி பெரும் புகழ் பெற்ற இவர் 1942ஆம் ஆண்டு மறைந்தார். ஸ்ரீகாகுளத்தில் இவர் நினைவாக நிறுவப்பட்ட சிலை இன்றும் இருக்கிறது!

john hutlum
John Hutlum

பீரங்கிக் குண்டை ஏந்திய ஜான் ஹாட்லம்

இதே போன்ற அபாயகரமான அதிசய செயல்களைத் தன் வலிமையைக் காண்பிப்பதற்காக உலகில் பல வீர்ர்களும் செய்து காட்டி வந்துள்ளனர்.

ஜான் ஹாட்லம் (John Hotlum) (தோற்றம்1845- மறைவு 1919) என்பவர் டென்மார்க்கைச் சேர்ந்த ஒரு வீரர். இவர் மேடையின் ஒரு பக்கத்தில் திறந்த மார்புடன் நிற்க மறுபுறம் பீரங்கியிலிருந்து குண்டு பாய்ந்து வரும். அதை க்ளவ்ஸ் மட்டுமே போட்டுக் கொண்ட கைகளால் இவர் தடுத்துப் பிடிப்பார். இது ஏமாற்று வித்தை என்று சந்தேகப்பட்டவர்களை ஸ்டேஜிலேயே அழைத்து நிறுத்தி வைத்து 50 பவுண்டு எடையுள்ள பாய்ந்து வரும் பீரங்கிக் குண்டை இவர் பிடித்துக் காட்டிய போது அவர்கள் திகைத்தே போனார்கள்.

18 பேர் நிற்கும் மேடையைத் தூக்கிய லூயிஸ் சிர்

க்யூபெக் நகரில் பிறந்த லூயிஸ் சிர் (தோற்றம் 1863 – மறைவு 1912) 12ஆம் வயதிலிருந்தே சூப்பர் பவர் கொண்டவர் என்று புகழ் பெற்றவர். போஸ்டனில் திரளாகக் குழுமியிருந்த மக்களின் முன்னே ஒரு குதிரையை அலாக்காகத் தூக்கிக் காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். ஒரு முறை 18 பேர் ஒரு மேடையில் நிற்க அந்த மேடையைத் தன் முதுகின் மேல் தூக்கி வைத்துக் கொண்டு காண்பித்தார். மாண்ட்ரீலில் ஒரு பெரும் போலீஸ் அதிகாரி பதவி இவருக்குப் பின்னர் தரப்பட்டது!
louis statue
Louis Cyr

இருவரைக் கூடையில் வைத்துத் தூக்கிய யூஜென் சாண்டோ

யூஜென் சாண்டோ (Eugen Sandow ) தோற்றம் 1867 மறைவு 1925) ப்ரஷ்யாவில் பிறந்தவர். இப்போது ஜெர்மனியில் இணைந்துள்ளது இந்தப் பகுதி. தனது வலிமையை அனைவருக்கும் காண்பிப்பதற்காக இரு மனிதர்களை இரு கூடைகளில் வலது பக்கமும் இடது பக்கமும் வைத்துத் தன் தோள்களுக்கு மேலே தூக்கிக் காட்டுவது இவர் வழக்கம்.

‘என்ன, நீ பெரிய சாண்டோவா’ என்று கேட்பது இவரை கௌரவப்படுத்தும் விதமாகத் தான்!

இப்படி நூற்றுக்கணக்கான சூப்பர் மேன்கள் காலம் காலமாக எல்லா நாடுகளிலும் பிறந்து தங்களின் அபார வலிமையைக் காட்டி வந்துள்ளனர்.
மனிதனின் வலிமைக்கு எல்லையே கிடையாதோ, என்னவோ!அறிவியல் தன் ஆய்வுகளில் இவர்களின் வலிமையைப் பதிவு செய்து வருகிறது!

hutlum
John Hutlum

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

1933ஆம் ஆண்டு தனது 31ஆம் வயதிலேயே நோபல் பரிசு பெற்ற பெரும் விஞ்ஞானி பால் டிராக் (Paul Dirac). அதிகமாகப் பேசாதவர். கேம்பிரிட்ஜில் அவருடன் படித்த சகாக்கள் ‘டிராக்’ என்ற ஒரு அளவீட்டையே உருவாக்கினர். அதாவது ஒரு மணி நேரத்திற்கு ஒரு வார்த்தை என்று டிராக் என்னும் இந்த அளவீடு குறிக்கும். ஒரு முறை பிரபல விஞ்ஞானி நீல்ஸ் பொர் டிராக்கிடம், ‘ஆரம்பித்த வாக்கியத்தை எப்படி முடிப்பதென்று தெரியவில்லை’ என்று சொன்ன போது டிராக் ‘என்னுடைய பள்ளியில் முடிக்கத் தெரியாத வாக்கியத்தை ஆரம்பிக்கவே ஆரம்பிக்காதே என்று சொல்லித் தந்திருக்கிறார்கள்’, என்று பதில் கூறினார்.

இயற்பியல் விஞ்ஞானியான ராபர்ட் ஓப்பன்ஹீமருக்கு கவிதை என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் டிராக்கோ, ”எந்த கஷ்டமான விஷயத்தையும் எளிதாக அனைவருக்கும் புரியும்படி செய்வது விஞ்ஞானம்; ஆனால் எந்த சுலபமாகப் புரியக் கூடிய விஷயத்தையும் கஷ்டமாகப் புரியாமல் செய்வது கவிதை” என்று ஓப்பன்ஹீமரின் கவிதை ஆர்வத்தை விமரிசித்தார்.

Louis_Cyr
Louis cyr

ஒருமுறை அமெரிக்க கல்வியாளர் ஒருவர் இவர் அருகில் உட்காருவதை ஒரு பெரும் பாக்கியமாக நினைத்து இவரிடம் வந்து கல்லூரி உணவு நேரத்தில் அருகில் அமர்ந்தார். ஆனால் உணவு வகைகள் வந்து கொண்டே இருந்தன. டிராக் மௌனமாகச் சாப்பிட்டாரே தவிர பேசவில்லை. பொறுமை இழந்த அமெரிக்கர், டிராக்கிடம்,” இந்த வருடம் விடுமுறைப் பயணமாக எங்காவது செல்ல உத்தேசம் உண்டா” என்று பேச்சை ஆரம்பிக்கும் விதமாகக் கேட்டார். 35 நிமிட மௌனத்திற்குப் பிறகு டிராக்,”இதை எதற்காகக் கேட்கிறீர்கள்?” என்று அவரிடம் திருப்பி ஒரு கேள்வியைக் கேட்டார்.

அவரது நண்பர்கள் அவரைப் பற்றிக் கூறுகையில் மௌனமாக இருப்பதிலேயே அவர் மகிழ்ச்சி காண்பவர் என்று கூறுவர். பிரின்ஸ்டனில் வாழ்ந்த போது அனைத்து நண்பர்களையும் விருந்திற்கு டிராக் அழைப்பார். ஆனால் விருந்து முழுவதும் ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டாராம்.

மிகவும் கூச்ச சுபாவம் உடைய டிராக் விஞ்ஞானிகளிலேயே மிகவும் வித்தியாசமான ஒருவர்.

Pictures are taken from various websites;thanks

contact swami_48@yahoo.com
********************